மனிதனின் குடலுக்குள் எவ்வளவு பாக்டீரியா இனங்கள் வாழ்கின்றன தெரியுமா? சொன்னால் ஆச்சரியத்தில் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்! சுமார் 1,000-1,500 இனங்கள் மனிதனின் குடலில் கூட்டமாய் வாழ்கின்றனவாம். மனிதனின் உடலில் சுமார் 100,000௦௦௦,000௦௦௦,௦௦௦000,000 செல்கள் உள்ளன. ஆனால் அதைப்போல் 10௦ மடங்குக்கும் மேலாக பாக்டீரியாக்கள் வீடுகட்டி குழந்தை குட்டிகளுடன் ஜாம் ஜாம் என்று குடித்தனம் நடத்துகின்றன. இவைகளில் 60% பாக்டீரியாக்கள் உலர்ந்த மலத்தில் காணப்படுகின்றன. இவைகளில் 99% காற்று இன்றியே சுவாசிக்கின்றன.

குழந்தை கருவாக‌ தாயின் கருவறையில் இருக்கும்போது பாக்ட்டிரியா அதன் குடலில் இருக்காது. குழந்தை பிறந்த பின்பே, தாயிடமிருந்தும், சுற்றுச் சூழலிலிருந்தும் அவை குழந்தையின் குடலுக்குள் நுழைகின்றன. இங்கே வசிக்கும் பாக்டீரியக்கள் குறைந்த நீளமுள்ள கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் செல்களின் வகைகளையும், பரவுதலையும் கட்டுப்படுத்துகின்றன. வேறு சில வளர்சிதை மாற்ற செயல்பாடுகள், உருவாக்கம் போன்றவைகளுக்கும், பயோடின் (Biotin) மற்றும் போலேட் (Folate) போன்ற வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகின்றன. மேலும் மக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவைகளின் அயனிகளை உட்கிரகிக்கவும் பயன்படுகின்றன. முக்கியமாக, இவை ஒவ்வாமை ஏற்படாமல் நம்மை காக்கின்றன. தற்காப்புத் திறன் தடாலடியாக ரொம்ப மிகைப்படுத்தி செயல்படாமல் அவற்றை கட்டுக்குள் வைத்து நம்மை காப்பதுவும் இவைகளே. பாக்டீரியாக்கள் நமது மலக்குடல் மற்றும் மலப்புழை வியாதிகளை தடுக்கின்றன. வீக்கத்தை குறைக்கின்றன. ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் எதிர் உயரி மருந்துகள், இந்த பாக்டீரியாக்களை அப்படியே வழித்து எடுத்துவிட்டு நம்மை நிர்க்கதியாக்கி விடுகின்றன.

இங்கே பலப்பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. நாம் பாக்டீரியாவின் காலனி மேலதான் நடக்கிறோம் என பேராசிரியர் ஜெரோன் ராஸ் சொல்லுகிறார், இந்த மார்ச் மாத இயற்கை இதழில். மேலும் மனித உடலில் இருப்பதைப் போல 100 மடங்கு மரபணுக்களின் எண்ணிக்கை பாக்டீரியாவில் உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் சுமார் 124 ஐரோப்பியர்களின் மலத்தின் மாதிரிகளை சோதனை செய்தனர். பின் அதிலுள்ள பாக்டீரியாக்களின் ஆயிரக்கணக்கான மரபணுக்களைப் பிரித்து மேய்ந்தனர். மரபணுவின் DNAக்களிலுள்ள வரிசைகளையும் கண்டறிந்தனர். அவை மனிதனின் மலத்திலும், குடலிலும் அவை ஒரு சூழல் மண்டலத்தையே உருவாக்கி வாழ்கின்றன என்ற தகவல் சமீபத்தில்தான், மார்ச் 4 ம் நாள், "இயற்கை" பத்திரிக்கையில் வெளியானது. இதிலுள்ள சுவையான, ஆச்சரியப்படும்படியான தகவல் என்னவென்றால், உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் குடலிலும், கிட்டத்தட்ட ஒரே வகை நுண்ணுயிரிகள்தான், அதாவது பாக்டீரியாக்கள்தான் வசிக்கின்றன. இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது என அறிவியல் உலகம் கருதுகின்றது. உலகின் அனைத்து மனிதர்களின் குடல், மலத்தை பாக்டீரியாக்கள் பாலமாக இருந்து இணைக்கின்றன என்பதுதான்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It