“கமலா, கனலோட குழந்தய போய் பாத்தீங்களா?”

cosmetic_270“அத ஏன் கேக்குறே போ, கொள்ளை அழகு.. அமலாவப் பாத்தியா.. ரதி கூட தோத்துடுவா” என்றெல்லாம் கூறி, பிரமித்துப் போகிறோம். மனிதர்கள் மத்தியில் அழகாக இருந்தாலே, தனிப் பெருமைதான். நாம் அழகை மதிக்கிறோம், ரசிக்கிறோம், பாரட்டுகிறோம். எல்லாம் இந்த செவத்த தோலுக்குத்தாங்க.. அழகாகத் திகழ, பல முயற்சிகள் எடுக்கிறோம். அதனால் இயற்கை, செயற்கையாக மூலிகைப் பொருட்கள் என்ற பெயரில் பல வேடங்களில் நம்மிடையே உலவி வருகின்றன. 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் அழகுபடுத்த பல பொருள்களை முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். எகிப்தியர்கள், கி.மு. 4,000 ஆண்டுகளுக்கு முன்பே முகப்பூச்சில் காரியபொடி கலந்தும், உடல், தலை, கை, கால் என பல்வேறு உறுப்புகளில் பல வகை வாசனைப்பொடி, வாசனை திரவியங்கள், வாசனை எண்ணெய் பயன்படுத்தியும் இருக்கின்றனர். ஐரோப்பியர்கள் கி.பி.1100களிலிருந்து அழகுப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், 1900லிருந்துதான் ஷாம்புவும், முகப்பவுடரும் அதிகமாக புழக்கத்திற்கு வந்தன.

அமெரிக்க சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று சுமார் 8,000 அழகு சாதனப் பொருட்களில் உள்ள 10,500 மூலப்பொருட்களை மட்டும், சுமார் 6 மாத ஆய்வும், மதிப்பீடும் செய்தன. அவைகளில் மூழ்கியுள்ள உண்மைகள் நம் நெஞ்சை பதற வைக்கின்றன. நாம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம். அவைகளில் பல்வேறு தனிமங்கள் உள்ளன. எந்தத் தீங்கும் விளைவிக்காது என நாம் எண்ணும் சோடியம் குளோரைடு முதல் அதாங்க, நம்ம சோத்து உப்பு.. புற்றுநோயை உண்டுபண்ணும் காரணிகள் வரை ஏராளமான வேதிப்பொருட்கள் உள்ளன. 

ஆண்டுக்கு, சுமார் 35,000,000 டாலர் (16,450 கோடி ரூ) சம்பாதிக்கும் அழகுப் பொருட்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய் வெறும் 28 பொருட்கள் மட்டுமே முழுமையாய் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மீதமுள்ள 99.9 % பொருட்களின் மூலப்பொருட்கள் பற்றி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையா என்று எவ்வித பரிசோதனையும் செய்வதில்லை. இவை உடல் நலப் பொருட்களின் கீழும் வருவதில்லை, உண்ணும் பொருட்களின் கீழும் வருவதில்லை என்பதே இதன் காரணம். உங்கள் கைகளில் தவழும் பொருட்களில் 100 பொருட்களுக்கு ஒன்றிலாவது, புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் இருப்பதை தரச் சான்றுகள் நிரூபித்து உள்ளன. இருந்தும் அரசுகளும் பாராமுகமாக உள்ளதுதானே வேதனை..! அழகு சாதனப்பொருட்களில் காணப்படும் நிலக்கரிதார், பென்சைல் ஊதா, பார்மால்டிஹைடு, காரிய அசிடேட், புரோஜெஸ்டிரான், செலினியம் சல்ஃபைடு, நைட்ரோஃப்ளூரோசான் சிலிகா போன்றவை புற்றுநோய்க் காரணிகளாகும். நம் உடல் மேல் தடவும் பொருட்களில் 51% தோலுக்குள் நுழைந்து, இரத்தில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. நகப்பூச்சில் உள்ள டை பியூடைல் ஃப்தாலேட் என்ற வேதிப்பொருள் ஆண் இனப்பெருக்க உறுப்புகளைத தாக்குகிறது. ஐரோப்பியா இதனை தடை செய்துள்ளது.

ஹேர் டை, முகம் வழுவழுப்பாக்கும் மாஸ்டரைசர், வயதானவர்களுக்கு சுருக்கம் நீக்கும் கிரீம் , பரு சிகிச்சைப் பொருள், முகச் சவரப் பொருள், நக சிகிச்சை, ஷாம்பூ, முடி உதிர்வு கிரீம், ஒப்பனைக்கு அடியில் தடவும் பொருள், முக சுத்திகரிப்புப் பொருள் என 10 பொருட்கள், டாப் 10 உயிர் குடிக்கும் பொருட்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. பருவமடைந்த ஒவ்வொருவரும், மேலே குறிப்பிட்ட பொருட்களில் குறைந்தது 5 பொருட்களையாவது பயன்படுத்துகின்றனர். மேலே சொல்லப்பட்டது, புற்றுநோய்க் காரணிகள் மட்டுமே. மற்ற ஒவ்வாமை, கண் குருடு, கொப்புளம், எரிச்சல், வீக்கம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் அழகுப் பொருட்கள் பற்றிய மதிப்பீடோ, கணக்கெடுப்போ காணப்படவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்தான். அரசுக்கு அம்புட்டுதான், வோட்டுப்போடும் குடிமகன்கள் மீது அக்கறை..!

 - பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It