பல ஆயிரம் வருடங்களாக மாறாமல் அழுகிக் கிடந்த ஒரு சமுதாயப் போக்கை முற்றிலும் அழித்து தரைமட்டமாக்கி புதிதாக சிறப்பாக கட்டியமைக்கப் போராடியவர் பெரியார். திருமணம், பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு, காதல், உணவு முறை, கல்வி, விவசாயம், அரசியல், பொருளாதாரம், சொத்துரிமை, குடும்ப அமைப்பு ஆகிய அனைத்தைப் பற்றியும் ஒரு அறிவியல்பூர்வமான பார்வையைச் செலுத்தி ஆய்வுகளை நடத்தி முடிவுகளைக் கண்டுபிடித்து அந்த ஆய்வின் முடிவுகளை தன் காலத்திலேயே நடைமுறைப்படுத்தி சமுதாயத்தை வளர்ச்சி நோக்கில் மாற்றியவர் பெரியார்.

1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டு அழைப்பில், “தனிப்பட்ட பெண்களும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களும் அவசியம் வர வேண்டும்” என அழைப்பு விடுக்கிறார்.

1929 லேயே ”இன்பத்திற்காக கல்யாணம் என்றால் அதற்கேற்ற முறையில் கல்யாணத்திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலென பிள்ளைகளைப் பெறுவதற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதானால், அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்” என பெண்கள் தனித்து வாழ்வதை ஆதரித்து எழுதுகிறார்.

திருமணங்களைப் பற்றி மிகக்கூர்மையாக “சம சுதந்திரத்தில் இயற்கை உணர்ச்சியில் சமசந்தர்ப்பம் அளிக்கப் படாத முறையைக் கொண்ட கல்யாணங்களை நாம் விபசார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.

“ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு ‘திருமணம்’ என்ற ஏற்பாடுதான் நிரந்தரமானது என்று கருத வேண்டிய தில்லை. உலக விஷயங்கள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுவது போல திருமண முறையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது திருமண முறையே மறைந்து போகக்கூடும்” என்று குடி அரசில் எழுதுகிறார்.

1930 இல் “பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாக இருப்பதால் சாதாரணமாகப் பெண்கள் பிள்ளை பெறுவதையே அடியோடு நிறுத்திவிட வேண்டும்” என குடி அரசில் எழுதியுள்ளார்.

“ஒருவன் தான் இறந்தபிறகு தன் பெயரைச் சொல்லி தனக்காக கருமம் செய்ய பிள்ளையைப் பெற்றுவிட்டுச் செல்வது அவசியம் என்றும் பிள்ளைப் பேறு இல்லாதவர்களால் மோட்ச லோகத்துக்கும் போக இயலாது என்றும் கூறி பிள்ளைப் பேற்றை மிகவும் அவசியமாக்கிவிட்டனர். லௌகீகத்திற்காக சொத்துரிமைக்காக ஒரு பிள்ளை பெறுவது அவசியமாகக் காட்டப்பட்டதைவிட - வைதீகத்திற்காக, தனக்கென்று பார்ப்பனனிடம் அரிசி பருப்பு அழ ஒரு பிள்ளை பெற வேண்டிய அவசியம் அதிகமாக வற்புறுத்தப்பட்டது”

குழந்தைப் பேறு இல்லாமல் போனால் நரகத்தில்தான் இடம் கிடைக்கும் என்பதால் ஒருவன் தனது மனைவி மற்றொருவனுடன்கூடி பிள்ளை பெற்றுக்கொள்வதையும்கூட ஏற்றுக்கொண்டிருந்த காலத்தில், அதற்கென சில சாஸ்திரங்களைக்கூட உருவாக்கி வைத்திருந்த சமுதாயத்தில் “ பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட வேண்டும்” எனப் போர்க்குரல் எழுப்புகிறார்.

5 வயதிலும் 6 வயதிலும் ஆயிரக்கணக்கான விதவைகள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், 4 அல்லது 5 வயதிலேயே பெண்களுக்கு திருமணத்தை நடத்திவிடும் சமுதாயத்தில் பெண்கள் தனித்து வாழ்வதை வலியுறுத்தி கலகக்குரல் எழுப்புகிறார்.

1929லேயே பெரியார் தனது இல்லத்தில் பெண்களுக்கான ஒரு முறைசாரா அமைப்பொன்றை ஏற்படுத்தியிருந்ததார். பெண்கள் தங்கள் சொந்தப் பிரச்சனைகள், சமூகப்பிரச்சனைகள் ஆகியவற்றை விவாதிப்பதற்காக அவரைச் சந்திக்க வந்து கொண்டிருந்தனர். 1935 இல் வீட்டை விட்டு வெளியேறிய அநாதரவான பெண்களுக்கு பெரியார் ஒரு விடுதியையும் நடத்தி வந்தார்.

15.05.1935 அன்று பெரியார் தலைமையில் நீலாவதி அம்மையார், அ.இராகவன் போன்றோர் பங்கேற்று நடை பெற்ற கூட்டத்தில் ‘தமிழ்நாடு பெண்கள் முன்னேற்ற சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்துவது என்றும் அதன் சார்பில் பெண்கள் நிலையமும், குழந்தைகள் பராமரிப்பு மையமும் ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

“குடும்ப எல்லைகளைக் கடந்தும், சமுதாயம் பெண்களுக்கென்றே விதித்துள்ள பாத்திரங்களை மறுத்தும் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ விரும்பிய பெண்களுக்கான ஒரு இடமாக பெண்கள் நிலையம் என்பது சிந்திக்கப்பட்டது.” காதல் திருமணம், கலப்புத் திருமணத்தைப் பிரச்சாரம் செய்தலும் ஊக்குவித்தலும் பெண்கள் நிலையத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த பெண்கள் நிலையம் ஏட்டளவுக்குத்தான் இருந்தது. பெரியாரின் கனவாக இருந்தது. உருவாகவில்லை.

புரட்சிகரமான பெரியார் கருத்தியலை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்லத் துடித்த ஆயிரக்கணக்கான போராளிகள் முதலில் தத்தம் வாழ்க்கையிலும் அவற்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள், தாலி சடங்குகள் மறுப்புத் திருமணங்கள், மறுமணங்கள், தாசிகளைத் திருமணம் செய்தல், குழந்தைகளோடு இருக்கும் பெண்களைத் திருமணம் செய்தல், தனித்து வாழ்தல், பிள்ளைபெற்றுக்கொள்ளாமல் வாழ்தல் என பல்வேறு முற்போக்கு வாழ்வியல் முறைகளுக்கு பெரியார் இயக்கம் ஒரு அங்கீகாரத்தை வழங்கியது.

அந்த சுயமரியாதைக் காலம் அதே வீச்சில் தொடராமல் போய்விட்டது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் பெரியார் தொண்டர்கள்கூட தமது இறுதிக்காலங்களில் இருவரில் ஏதோ ஒருவரது ஜாதிக்காரர்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கணவன் ஜாதியோடு அனுசரிப்பது என்றால் மனைவியின் சுயமரியாதையும், மனைவியின் ஜாதியாரோடு அனுசரிப்பதென்றால் கணவனின் சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த ஜாதி மறுப்பு இணையர்களுடைய வாரிசுகளின் திருமணத்தின் போதும் சிக்கல் வருகிறது. அதைக் காரணங் காட்டி ஜாதிமறுப்புத் திருமணங்களே தடுக்கப்படுகிறது.

‘கடைசிக்காலத்தில் சொந்த ஜாதிக்காரனின் தயவு வேண்டும்’ என்பதற்காக வாழ்நாளெல்லாம் தாம் பேசிவந்த கருத்துக்களுக்கு மாற்றான காரியங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெரியார் தொண்டர்கள் ஆளாகிறார்கள். பெரியார் இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றும் தோழர்கள்கூட தமது வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி பயந்து தம் இல்லங்களில் காதுகுத்து, கருமாதி, பூப்புனித நீராட்டுவிழா, தாய்மாமன் சீர், பங்காளிச்சீர், மொய் முறைகளை செய்திட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

‘கடைசிக் காலத்தில் தண்ணி மோண்டு குடுக்கவாவது ஒரு பிள்ளை வேண்டும்’ என்ற சமுதாய மிரட்டலுக்குப் பயந்து பிள்ளைபெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். திருமணம் வேண்டாம் என்று தனித்து வாழும் ஆண்களும் பெண்களும் சமுதாயத்தால் மிகக் கடுமையாக கேவலப்படுத்தப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். கணவனை இழந்த பெண்கள், திருமண முறிவு ஆன பெண்கள் தமது சுயமரியாதையை சுதந்திரத்தை முற்றிலும் இழந்து வாழ்கிறார்கள்.

எண்ணற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் தமது இறுதிக் காலத்தில் உணவின்றி, மருத்துவம் இன்றி, கவனிப்பாரற்று மறைந்துள்ளனர். இறுதிக்காலங்களில் கொள்கைக்காகப் பணியாற்ற முடியாமலும் தன் வாழ்க்கையில்கூட கொள்கையைப் பின்பற்ற முடியாமலும் மனம் வெந்து மறைந்துள்ளனர்.

மேலத்தஞ்சை பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்களின் விடியலுக்காக உழைத்த திருமங்கலக்குடி கோவிந்தராசன் அவர்களின் மறைவு நாளில் ஒரு கருப்புச்சட்டைகூட உடன் இல்லை.

1958 இல் பெரியாருக்கு கடுங்காவல் தண்டணை வழங்கப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த பார்ப்பனர் மீது ஆசிட் அடித்து கத்தியாலும் குத்திய போராளி - பெரியார் படத்தை செருப்பால் அடிக்க முயன்ற விபூதி வீரமுத்தின் மண்டையை உடைத்த தோழன் - வெளிப்படையாக இயங்காமல் பெரியாரின் தற்கொலைப்படையாகவே வாழ்ந்த தோழர் ஆசிட் தியாகராசன் இப்போது ஆந்திரா எல்லையில் உள்ள தடா என்ற கிராமத்தில் தேவாலயம் ஒன்றில் மணி அடித்து ஊழியராகப் பணியாற்றி காலத்தைக் கடத்துகிறார்.

ஆசிட் தியாகராசனின் மிக நெருங்கிய தோழர். அவரது அனைத்து செயல்களிலும் தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழர் சின்னச்சாமி தஞ்சை அரசு மருத்துவமனையில் 1000 ரூபாய் பணமில்லாமல் மருந்து வாங்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.

அந்த தோழர் சின்னச்சாமியின் துணைவியார் இரு மாதங்களுக்கு முன்பு பெரியாரின் வாரிசுப் பட்டத்தை தூக்கிச் சுமக்கும் வேந்தரை, தமிழர் தலைவரை நேரில் காணச் சென்றார். ஏன் உள்ளே வந்தாய்? யார் இவரை உள்ளே விட்டது? என விரட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தக் கொடுமையைச் சொல்லி அழக்கூட ஆளில்லாத அவருக்கு ஆசிட் தியாகராசன் சென்றுதான் ஆறுதல் வழங்கி வந்திருக்கிறார்.

திருச்சியில் 1957 சட்டஎரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றதால் தான் நடத்தி வந்த உணவு விடுதி தொழிலை முழுமையாக இழந்த தோழர் மாரியப்பன் இன்றும் அதே திருச்சியில் கழிவறையை சுத்தம் செய்து அந்த வருமானத்தில் அதே கழிவறையில் வசித்து வருகிறார்.

இதுபோன்ற மோசமான மறுபக்கங்களின் பட்டியல் நீளமானது. இவையெல்லாம் பெரியாரியலை ஏற்றுக் கொண்டு உழைத்த தோழர்கள் சிலரின் நிலை. இந்த நிலையை மாற்ற வேண்டும். முதலில் பெரியார் கருத்துக்களை பின்பற்றுபவர்களுக்காவது ஒரு பாதுகாப்பு அரண் தேவை.

ஒரு இந்து கடைசிவரை இந்துவாகவே வாழமுடிகிறது. தனது வாரிசுகளை இந்துவாகவே உருவாக்க முடிகிறது. ஒரு கிறிஸ்துவராலும், இஸ்லாமியராலும் தனது மதத்தை இறுதிவரைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் ஒரு பெரியாரியல்வாதி இறுதிக்காலங்களில் இந்துவாக ஜாதிக்காரனாக மாற வேண்டிய அவலம் உள்ளது.

ஒரு ஆரியன் தான் தனது பண்பாட்டைக் கட்டிக்காப்பது மட்டுமல்லாமல் நமது திராவிடர் பேரினத்தையும் அவனது ஆரியப் பண்பாட்டை பின்பற்றச் செய்து விட்டான். அந்த ஆரியத்துக்கு எதிரான களத்தில் நிற்கும் பெரியார் தொண்டர்களாவது தமது வாழ்விலாவது ஆரியத்துக்கு எதிரான அறிவியல் பண்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கி.பி. 1925 முதல் 1938 வரையிலான சுயமரியாதைக் காலம் அதே வேகத்தில் அதே பார்வையில் அதே வீச்சில் மீண்டும் உருவாக வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என திணை வழிப்பட்ட பண்பாடுகளை அறிந்த தமிழினம் - தான் அவசியம் பின்பற்றியிருக்க வேண்டிய பண்பாடான சுயமரியாதைக்காலப் பண்பாட்டை மீண்டும் கையிலெடுக்க வேண்டும் என்ற பேராவலில் ஒருங்கிணைந்த தோழர்களின் கூடல்தான் கருந்திணை.

முதுபெரும் பெரியார் தொண்டர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது இறுதிக்காலம் வரை கொள்கைப்படி வாழ்வதற்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப கொள்கைப்பிரச்சாரத்திற்கு அவர்களைப் பயன்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். தனித்து வாழ விரும்பும் ஆண்கள், தனித்து வாழ விரும்பும் பெண்கள், மணமுறிவுக்குப் பிறகோ அல்லது துணையை இழந்ததற்குப் பிறகோ மறுமணம் வேண்டாம் என வாழும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் இறுதிவரை சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ பாதுகாப்பான இடம் வேண்டும். ஜாதி, மத, தாலி மறுப்பு இணையர்கள், விதவை மணம் புரிந்தோர், மறுமணம் புரிந்தோர் இறுதிவரை கொள்கை வழிப்படி வாழ வேண்டும்.

மேற்கண்ட அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகக் கூடி வாழ ஓர் இடம் வேண்டும். அதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் அடி எடுத்து வைக்கும் நோக்கில் திண்டுக்கல்லில் அறிவியல் வாழ்வியல் இல்லமாக முதல் கருந்திணை விடுதியை உருவாக்க உள்ளோம். திண்டுக்கல்லிருந்து தேனி செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ள கும்மம்பட்டி என்ற கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு மாந்தோப்பில் அது உருவாக உள்ளது. கருந்திணை விடுதிக்கான முதல் ஆலோசனைக் கூட்டம் 09.01.2010 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. 29.01.2010 அன்று கருந்திணை என்ற பெயரில் திண்டுக்கல்லில் ஒரு அறக்கட்டளையும் பதிவு செய்யப்பட்டு விட்டது. எந்த ஒரு இயக்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் பெரியார் தொண்டர்களுக்கான பொதுவான இல்லமாக கருந்திணை இயங்கும். இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் காதலர் தினமான 14.02.2010 அன்று செம்பட்டியில் நடைபெறும். எமது இந்த முயற்சி குறித்த உங்களது கருத்துக்களையும், முயற்சி சரியானது என்றால் ஆதரவையும், உதவியையும், ஒத்துழைப்பையும் வழங்குங்கள்.

அதிஅசுரன்

முகவரி : கருந்திணை, 1 / 810 முத்தமிழ் நகர், அடியனூத்து. அஞ்சல், திண்டுக்கல் . 624003

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It