20 செப்டம்பர் சனிக்கிழமை | மாலை 5 மணி -
இக்சா அரங்கம் (4வது தளம்) கன்னிமாரா நூலகம் எதிரே, எழும்பூர், சென்னை
பெரியார் தோன்றி 136 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க. வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கடைபிடித்த அதே பொருளியல் கொள்கைகளைத்தான் பா.ச.க முழு வீச்சில் நடைமுறைப்படுத்துகிறது. இன்னொரு புறம் பா.ச.க. வால் முன்னெடுக்கப்படும் பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கமென்பது அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு பெரியாரின் கருத்துகள் மாபெரும் கருவியாக இருக்கிறதென்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
2009 இல் ஈழப் போரில் ஏற்பட்ட தமிழினப்பேரழிவும் அதை தடுக்க முடியாமல் தமிழ்நாடு கையறு நிலையில் இருந்ததும் அமுங்கிக் கிடந்த தமிழ்த் தேசிய உணர்வை உசுப்பிவிட்டது. புதிய புதிய இயக்கங்கள், பேரியக்கங்கள், கட்சிகள் பிறப்பெடுத்துள்ளன. இளந்தலைமுறையொன்றும் அரசியல் களத்திற்குள் புகுந்துள்ளது. எனவே, முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்த் தேசியக் கருத்தியல் விவாதிக்கப்படுகிறது. அந்த விவாதங்களில் பெரியாரைத் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவராகக் காட்சிப்படுத்தும் போக்கும் பெருகி வருகிறது. இவற்றை மறுத்து பல்வேறு முனைகளில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கருத்து மோதல்கள் நமக்கு புதிது அல்ல. வரலாற்றில் வாழ்ந்து மறைந்த ஆளுமைகளின் பங்களிப்பைத் திறனாய்வுக்கு உட்படுத்துவது வளர்ச்சிக்கே துணை செய்யும். ஆனால் வரலாற்றை அறிவியல் வழிநின்று புரிந்து கொள்வதில் இருந்துதான் அத்திறனாய்வு வளர்ச்சிக்கு துணை செய்வதாக அமைய கூடும். எனவே தான், ”பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கை ஒழுங்கமைத்துள்ளோம்.
இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றுவோர் :
தோழர். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர். தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தோழர். தமிழேந்தி, செயற்குழு உறுப்பினர், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
தோழர். செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்
- ச.இளங்கோவன், 98844 68039, செய்தி தொடர்பாளர், இளந்தமிழகம் இயக்கம்