தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்து வைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ.நா. உயர் அதிகாரிகளைத் தண்டிக்கக் கோரி ஐ.நா. அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம்.

un_war_criminals_640

பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன், தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் மாவீரன் முத்துக்குமார் 'ஐ.நா.வின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது' என்று முன்னறிவித்து நம்மை எச்சரித்தான். ஆனாலும் நாம் இவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் போராட்டத்தினை முன்னெடுக்கத் தவறினோம். ஐ.நா. என்கிற முகமூடியை வைத்துக் கொண்டு, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் சதியால் சர்வதேச நாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக நின்று, இனப்படுகொலையை தடுக்க இயலாமல் செய்தது.

இந்தியாவின் தமிழின எதிர்ப்பு வெறியானது ஐ.நா.வின் முக்கிய அதிகாரிகளை தமது திட்டத்திற்கு துணையாக வைத்து இனப்படுகொலையை செய்து முடித்தது. தற்போது விடுதலை கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், மறுவாழ்வு, நல்லிணக்கம், நல்வாழ்வு-வாழ்வுரிமை என்கிற வாதங்களை ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வைக்கிறது. இதற்கான இலங்கை எதிர்ப்பு நாடகங்களை சர்வதேச அரங்கிலும், ஐ.நா.விலும் இந்த நாடுகளின் கூட்டணி அரங்கேற்றுகின்றன‌. இவற்றினை செய்து முடிக்க இனப்படுகொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கெடுத்த ஐ.நா. அதிகாரிகளான விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ், பான் – கி- மூன் ஆகியோர் உதவுகின்றனர். இந்த அதிகாரிகளை உடனடியாக குற்றம் சாட்டி, விசாரித்து, தண்டித்தல் என்பது நடந்தால்தான் தமிழர்களுக்கு சர்வதேசம் செய்த துரோகத்தினையும், இலங்கை அரசின் இனப்படுகொலை திட்டத்திற்கு செய்த உதவிகளையும் பொதுமக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்த இயலும்.

இந்தக் கூட்டம் தான் தமிழீழப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று பிரச்சாரம் செய்து, தமிழீழத்தின் இறையாண்மையை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. இந்த அங்கீகார மறுப்பே நமது தாய் நிலமான தமிழீழத்தினை இலங்கை அரசின் படைகள் ஆக்கிரமிக்க உதவுகிறது. இலங்கை அரசின் ஆக்கிரமிப்பினையோ, தமிழீழத்தினை சிங்களமயமாக்குவதையோ, தமிழர்களின் அடிப்படை உரிமைகளை, வாழ்வாதரத்தினை அழிப்பதையோ கண்டு கொள்ளாமல் ‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வினை மறுசீரமைப்பில் உலகிற்கே உதாரணமாய் இருக்கிறது' என்று ஐ.நா.வின் மனித நேய மறுகட்டுமான உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஜிங் கடந்த ஆகஸ்டு1, 2012 இல் அறிவித்தார். இந்த அதிகாரிகளின் துணையே ராசபக்சே அரசின் திமிர் பிடித்த பாசிச போக்கிற்கு காரணம். ஆகவே இந்த அதிகாரிகளையும், அதன்பின்னுள்ள அரசுகளையும் அம்பலப்படுத்த போராடுவோம். இதுவே ஈழ விடுதலைப் போராட்டத்தில நமது பங்காக அமையும்.

விடுதலையை நோக்கிய பயணத்தில் இது மிக மிக முக்கிய மைல் கல்லாக அமையும் விதத்தில் நாம் அனைவரும் கைகோர்த்து, அடையாளப் போராட்டங்களை செய்யாமல், போர்க்குணத்துடன், தமிழீழப் போராளிகளின் சளைக்காத தொடர் போராட்டத்தினைப் போல எதிர்களின் கூட்டணியை உடைக்கவும், அவர்களை பின்னடைய வைக்கவும் நாம் செயல்படவேண்டும். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற நகரங்களில் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி 2013 இல் ஐ.நா. அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி, இயக்கத் தோழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதே போராட்டம் ஒரே காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் நடக்கும் பட்சத்தில் ஐ.நா. அதிகாரிகளுக்கும், அவர்களின் பின்னேயுள்ள‌ இந்தியா உள்ளிட்ட அரசுகளுக்கும் கடும் நெருக்கடியை உருவாக்கும்.

சர்வதேச அளவில் தேசிய இனப்போராட்டத்தினை ஒடுக்குவதற்கு துணை நின்ற ஐ.நா.வின் செயலை கண்டிக்கும் விதமாகவும், அம்பலப்படுத்தும் விதமாகவும் ஐ.நா. அலுவலகம் முன் முருகதாசன் தீக்குளித்து உயிர் நீத்தான். அவனது தியாகம் அனைத்துச் சமூகங்களுக்கானது. அதை அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களுக்குமான தினமாக மாற்றி ஐ.நா.வினை எதிர்கொள்வோம். பிப்ரவரி12 இல் உலகம் அதிர, அதிர ஐ.நா. முற்றுகையை நடத்தி நமது போராட்டத்தினை ஆரம்பிப்போம்.

முத்துக்குமாருக்கும், முருகதாசனுக்கும் மற்றும் ஏனைய தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் வீரவணக்கமே இந்தப் போராட்டம். கைகோர்த்து சர்வதேச இனமாக தமிழினம் எழவேண்டும், இது வரலாற்றுக் கட்டாயம். தமிழருக்கு கடைக்கோடியில் இன்னல் நிகழ்ந்தால் உலகெங்குமுள்ள தமிழினம் இவ்வாறு கைகோர்க்கும் என்பதை உலகிற்கு உணர்த்திடுவோம்.

நாம் வெல்வோம்.

- மே பதினேழு இயக்கம், 9600 781111

Pin It