cuddalore flood

நீயும்கூடவா வானமே
நீயும்கூடவா?
தமிழினத்தை அழித்து வரும்
தீய பகைவரைப் போல
நீயும்கூடவா?
மழைப்படையை ஏவி
உன்பங்குக்கும் எம்மக்களை
உருக்குலைய செய்து விட்டாயே!
வடக்குக் காற்று உன்னையும்
விலைக்கு வாங்கி விட்டதா?

தண்ணீரைப் பருகத் தடுக்கும்
தன்னல மனிதர்கள் மேற்கே!
கண்ணீர் சிந்திய மனிதரைக்
கொல்லும் காடையரோ கிழக்கே!
பேரலையால் நெய்தலைப்
பாலை யாக்கித் தணிந்தது
நேற்றுதான் கடலும்!
நீயும்கூடவா வானமே?
இன்றைக்கு
நீயும்கூடவா?
தமிழ்நாட்டை அழிப்பதென்றால்
அனைவருக்கும்
அவ்வளவு கொண்டாட்டமா?
என்ன பாவம் செய்தோம்
எந்தமிழ் நாட்டையே
இலக்காக்கி யாவரும் மோதுகின்றீர்!

உன்செயலில் ஒன்றை மட்டும்
எண்ணிப் பாராட்டித் தானாக வேண்டும்
நீ வளர்த்திருந்த மண்ணை
உன்படை போகும் தடத்தை
அபகரித்து ஆக்கிரமிப்பு
செய்யபட்ட உன் நிலத்தை
மீட்டுக் காட்டி விட்டாய்!
விடுதலை என்னும் உரிமையை
வெல்லும் ஆறினைத்
தமிழருக்கு நிகழ்த்திக் காட்டி
ஆறு எனும் உன் பெயரை
காப்பாற்றிக் கொண்டாய்!

மனித மரபணுவில்
மனிதம் வற்றிப் போனதோ?
என்று வேதனை யுற்றிருந்தேன்
இல்லை இல்லை
இருக்கிறது என்று
எங்கெங்கெலாமோ இருந்து
சங்கநாதம் முழங்குகிறது!
பல்லாண்டாய் பல்வேறு
புரட்சியாளர் முயன்றும்
மாற்றமுடியாமல் போன
மாச்சரியங்களை
ஒருசில நாட்களிலேயே
மாற்றிக் காட்டிவிட்டாய்!
சாதிமதப்
புனிதங்களும் அய்தீகங்களும்
மறைந்து கொண்டன!;
பிராமணனும் சூத்திரனும்
பணக்காரனும் பராரியும்
ஒரே தட்டில் வைத்துவிட்டாய்!
மானுடம் என்னும் மாமதமே
மதங்கள் அனைத்திலும்
உயர்ந்தது என்பதை
புரிய வைத்தாய் நன்றி.
இதற்காக உன்னை
மன்னிக்கலாம்

உன்னை இனி
எந்தத் துறை புலனாய்வு செய்யுமோ?
எந்த வழக்குறைஞர்கள்
வாதிடுவரோ?
எந்தெந்த நீதி மன்றங்கள்
விசாரிக்குமோ?:
தீர்ப்பு சொல்ல
எத்தனைக் காலம் கடக்குமோ?
எந்தெந்த அரசியலும் சட்டமும்
தடுக்குமோ தெரியாது!
காரணம்……
நீ தமிழ் நாட்டு வானம்!

- குயில்தாசன்

Pin It