நம்மிடையேயான தனிமை கணங்களின் கண்ணியம் பேச
தேர்ந்தெடுத்த இசைத்தட்டில்
புல்லாங்குழலை ஒலிக்க விட்டு
என்னருகே அமர்கிறாய்
அடர்ந்த கானக இருளில் சிறிய
வெளிச்ச மொட்டு
பறக்கும் ரெட்டைவால் குருவி வாலினைத் தொடர்கிறது,
செங்குத்து உச்சி மலை தொட்டு
சீரான மேகமாகிறது,
பூவினுள் தூங்கும் தேன்துளி
கலக்கும் பனித்துளியாகிறது,
பரந்த வான்வெளி பறந்து
பிறந்த புல்வெளி சுற்றி
இறுதியில்
ஆநிரை மேய்க்கும் அநிருத்தன்
கை குழலாகிறது
பிறக்கும் கானம் கை வளை ஓசை
கலந்து மூங்கில்களை மூழ்கடிக்கிறது