balachandran_380குழந்தையின் குழப்ப பார்வை
அவர்களை புலியாக ஊடுருவியதாம்.

வெறுண்ட அவனது விழிகள்
தமிழீழத்தை உறுத்திக் காட்டியதாம்.

சோர்ந்த அவனது முதுகுக்குள்
வெஞ்சினம் உருட்டப்பட்டிருந்ததாம்.

பால்பூத்த அவனது மேனியில்
ஓயாத அலைகள் மின்னியலைகின்றனவாம்.

அவன் ஒரு வீரிய வித்தாம்
எதிர்வரும் பெரும் போர்களுக்கு அவனது சருமமே சான்றாம்.

அவன் விளையாடும் பாங்கில் நிலவெடி புதைப்பானாம்.

தாய்மடி தேடியவன் கூவினால் தாய்நாட்டு கோசம் ஒலிக்குமாம்.

உணவில் சயனைடும் உடையில் புலியுமாக 
அவன் உறுமித் திரிவதாக அவர்களுக்கு தீக்கனாவாம்..

அப்பாவின் காத்து பட்டால் அவதாரம் எடுப்பானாம்.

அம்மாவை கண்டுவிட்டால் தாய்நாடு மீட்பானாம்.

ஆகவே அவர்கள் நடுங்கும் கால்களுடன் அவன் மார்பில் சுட்டார்கள்

1.. 2.. 3.. 4...5...

- தங்கப்பாண்டியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It