பயணிக்கும் பாதையோரம்
கைகாட்டி உதவி கோரும்
சிறுவர்களை
என் இருசக்கர வாகனத்தில்
ஏற்றிச் சென்றதில்லை..!
 
வீதியோரம் பசியோடு
மயங்கித் திரியும் மூதாட்டியின்
பசி தீர்க்க முயன்றதில்லை..!
 
சாலையோரம்
அடிபட்ட மனிதனின்
உயிர்கசிய மன்றாடும்
துயரம் தீர்க்க
எப்போதும் துணிந்ததில்லை..!
 
வீழ்ந்திட்ட சக மனிதன்
விழியோடு விழிநோக்கி
நலம் விசாரிக்கும்
நற்பண்பு எனக்கில்லை.!
 
ஆனாலும் நான்
அலுத்து கொள்கிறேன்
எவனுக்கும் இங்கே
மனிதநேயம் இல்லையென்று..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It