நேற்று

கடற்கரைக்கு சென்றிருந்தேன்..
உன் நினைவுகளோடு
அலைகள்
உன்னைக் கேட்ட போது
நீ முன்னைவிட அதிகவேலையில்
இருப்பதாக சொல்லி
அவ்விடம் விட்டு நகர்ந்து
மணலில் அமர்ந்தேன்.
மணல் துகள்கள்
உன்னை கேட்ட போது
நீ இப்போதெல்லாம் அதிகம்
பேசுவதில்லை என்று
எழுந்து நிலவொளியில் நடந்தேன்.
நிலவு
உன்னைக் கேட்ட போது
நீ முன்னைப் போல
சந்திக்க வருவதில்லை என்றேன்
திடீரென காற்று வந்து
முன்னைப் போல அவன்
உன்னை நேசிக்கிறானா? என்றது
பதிலிறுக்க முடியாமல்
தடுமாறிய தருணத்தில்
உன்னிடமிருந்து அழைப்பு வந்தது
என்னை சந்திக்க விரும்புவதாக சொல்லி..
அருகிருந்த காற்று
நீ இப்போதும் என்னை விரும்புவதாக
அலையிடமும் நிலவிடமும்
மணலிடமும் சொல்லி குதூகலித்தது.
அவற்றின் மகிழ் கணங்களை
கலைக்க விரும்பாமல்
நமக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு
புறப்பட்டேன்..
காற்றும் அறியாது என்
துளிக் கண்ணீரை விழுங்கியபடி..

Pin It