இந்தியா 247 ஆண்டுகள் 7 மாதங்கள் 15 நாட்கள் 12 மணிநேரம் வரை ஆங்கிலேயர்களிடமும், பிரெஞ்சுக்காரர்களிடமும், டச்சுக்காரர்களிடமும், போத்துக்கீசர்களிடமும் அடிமைப்பட்டு கிடந்தது. அதன் பின்னர்தான் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. இந்தியா என்கின்ற நாடு மட்டும்தான் விடுதலை பெற்றதே ஒழிய இந்தியர்களில் பெரும்பான்மையான மக்கள் இந்த இருபத்தோராம் நூற்றாண்டு வரை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைப்படுத்தப்பட்டு அவர்களை இன்றுவரை விடுதலை செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட இன மக்களை இன்றுவரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓரங்கட்டி அவர்கள் வாழும் பகுதி சேரி எனப் பெயரிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று எண்ணி தீண்டாமை சுவரை எழுப்பி அவர்களை விலக்கி வைப்பது கண்கூடாக காண முடிகிறது. இந்த நூற்றாண்டிலே இப்படி என்றால்? வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கி பயணப்பட்டால் பட்டியலின மக்கள் அனுபவித்த கொடுமைகள் உலகில் வேறு எங்கும், யாருக்கும், நடந்து இருக்காது.

ambedkar 2 350வரலாறு எத்தனையோ பொக்கிஷங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. அதில் இந்தியாவைப் பற்றிய தகவல்களும் ஏராளம்… ஏராளம். அவற்றுள் இந்தியாவில் நடைபெற்ற பட்டியல் இன மக்களுக்கு எதிராக சாதி இந்துக்கள் செய்த கொடும் செயல்களை வரலாற்றுக்கு கூட, இந்த சாதி இந்துக்கள் மீதும் ஒரு மிகப்பெரிய கோபம் ஏற்படும் அளவிற்கு அந்த கொடும் செயல்களை காலத்தால் மறக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இங்கு தங்களை முற்போக்குவாதிகள் என்று பிதற்றிக் கொள்பவர்கள் கூடப் பட்டியலின மக்களின் விடுதலைக்காக உண்மையாக இல்லை. இதில் ஜோதிராவ் புலே, சாகு மஹா ராஜ் உள்ளிட்ட ஒரு சிலர் தான் சாதி இந்துக்களின் வெறுப்புக்கு ஆனாலும் பரவாயில்லை என்று பட்டியலிட மக்களுக்காக சில நன்மைகளை செய்து வந்தனர். குறிப்பாக அவர்களுக்கு கல்விதான் விடுதலைக்கான வழி என்பதை உணர்ந்து சாகு மஹா ராஜ், ஜோதிராவ் புலே அவர்கள் பட்டியலின மக்களுக்கு கல்வியைக் கொடுப்பதற்கு முன் வந்தனர்.

வெள்ளையர்களை எதிர்த்து சாதி இந்துக்கள் விடுதலைக்காகப் போராடுவதில் எந்தவிதமான அருகதையும் இல்லை. சொந்த நாட்டில், சொந்த ஊரில் பிறந்த மக்களை மதத்தையும், சாதியையும் காரணம் காட்டி ஆடு, மாடு, நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்குக் கூட கொடுக்கும் மரியாதையில் கொஞ்சமேனும் இந்து மதத்தில் இணைத்துக் கொண்ட பட்டியலின மக்களுக்கு கொடுக்கவில்லை என்பது வியப்பினும் வியப்பு.

இந்தச் சூழலில்தான் வாராது வந்த மாமணியாய் பாபாசாகேப் அம்பேத்கர் மேலைநாடுகளில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு தாய்நாடு திரும்பினார். அவர் இந்த மண்ணில் 65 ஆண்டுகள் இரண்டு மாதங்கள், இரண்டு நாட்கள் பூமிப்பந்தில் வாழ்ந்தார். அவர் குழந்தையாக இருந்த பொழுது அனுபவித்த கொடுமைகள் சொல்ல முடியாத துயரங்களைக் கொண்டவை. அவர் குழந்தையாக இருக்கும்பொழுது அனுபவித்த கொடுமைகளில் எந்தவித மாறுதலும் இல்லாமல் கூடுதலாக சாதியின் கோர முகம் பட்டியல் இன மக்களை இன்னும் தனிமைப்படுத்தி, அவர்கள் மீது வெறுப்பையும், பகை உணர்வையும், அருவருப்பையும் வாரி இறைக்கப்பட்டது. அவர் பெரும் கனவுகளோடு இந்தியா திரும்பிய பொழுது எந்தவித மாற்றமும் இல்லாததைக் கண்டு அவருக்கு ஏற்பட்ட கோபம் மிகப் பெரியது. அதன் பிறகுதான் அவர் முதலில் இந்த நாட்டில் களைய வேண்டிய முதல் பணி,சாதி ஆதிக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.

அந்த வகையில் அவர் வருகைக்குப் பிறகுதான் பட்டியலின மக்களின் வரலாறு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்து மாறியது. ஆனால் இன்றைய சாதி இந்துக்கள் அவரை ஒரு சிமிழுக்குள் அடைக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக அவர் இதுவரை யாரை எதிர்த்து களமாடினாரோ? எதை எதிர்த்தாரோ? அவர்களே அதை வைத்து டாக்டர் அம்பேத்கரை தன்வசப்படுத்த முயல்கின்றனர். அதுமட்டுமல்ல சாதி கலவரத்தைத் தூண்டுவதற்கு அவரின் சிலையே ஆயுதமாக மாற்றுகின்றனர். பாவம் தன் சிலையை உடைக்கும் அந்த மக்களுக்காகவும்தான், அம்பேத்கர் போராடினார் என்பது அறியாமையில் இருக்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் காரணம் இன்னும் போதுமான அளவிற்கு டாக்டர் அம்பேத்கரை படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, போதுமான அளவிற்கு அல்லது சிந்திப்பதற்கு கூட அவர்கள் கல்வியறிவு பெறவில்லை என்பதுதான் வருந்தத்தக்க செயல். இந்த சூழலில்தான் டாக்டர் அம்பேத்கரை சாதியைக் கடந்தும், மதத்தை கடந்தும் அவரை இன்னும்... இன்னும் பொது வெளியில் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதுவரை டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, நான் இந்த செய்தியை சொல்ல விரும்புகிறேன். புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை எந்த ஒரு வரையறைக்குள்ளும் கொண்டு அடக்கி விட முடியாது. அவர் பட்டியல் இன மக்களுக்காகப் போராடினார், அரசியல் வரைவுக் குழு தலைவராக இருந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தை வகுத்தளித்தார், பெண்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு சம நீதி கிடைக்க இந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார், ஒன்றுபட்ட இந்த தேசத்தை சாதியையும், மதத்தையும் காரணம் காட்டி மக்களை பிளவு படுத்தியது இந்து மதம். அதன் ஆணிவேர் வர்ணாசிரம கோட்பாடு மனுஸ்மிருதியில் அடங்கி உள்ளது என்பதை அறிந்து அதை எதிர்த்தார். இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போன்ற வரலாறைக் கொண்டதல்ல, மாறாக அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அது இந்த மண்ணின் மைந்தர்களின் மதமாக இருக்க முடியாது என்று கருதி தன் வாழ்நாளின் பெரும் பங்கை இந்துமதத்தின் வேரறுக்கவே போராடினார்.

காலனியாதிக்க பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் படிக்கும் பொழுது ரூபாயின் மதிப்பை ஆராய்ச்சி செய்தார். இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெறும் நாளில் அது எல்லோருக்குமான இந்திய தேசமாக இருக்க வேண்டும் என்று கருதினார். இந்தியர்கள் அனைவரும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துடன் இருக்கவே அவர் விரும்பினார். பட்டியல் இன மக்களை இந்து மதம் அடிமைப்படுத்தியபோது அவர்களின் முழு விடுதலைக்கான தீர்வை குறித்து சிந்தித்தார். அதன் அடிப்படையில் 1956 அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் 10 லட்சம் மக்களுடன் பௌத்தம் ஏற்று பண்பாட்டு புரட்சி செய்தார். கண்டவர்கள் எல்லாம் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பாமல் அவற்றுக்கு அறிவியல் ஆதாரத்தை தேடினார். சுதந்திர இந்தியாவின் தொழில்துறை அமைச்சராகவும், சட்ட அமைச்சராகவும் இருந்து அந்த பதவியையே அலங்கரித்தார். நவீன இந்தியாவின் தந்தையாகவும் விளங்கினார். இன்றைக்கு இந்தியாவில் ரிசர்வ் பேங்க் தோன்றுவதற்கு அவரின் முனைவர் பட்ட ஆய்வே துணை நின்றது. பிற்போக்குத்தனமான கருத்துக்களையும்,வஞ்சகத்தையும், வன்மத்தையும் வெளிக் கொண்டுவந்து இந்துமதப் பற்றாளர்களையும், பக்தர்களையும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டார்‌. யாரை தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று எண்ணி அவர்களையும், அவர்களின் கோட்பாடுகளையும் அன்பால், அறிவால், பண்பால்,பாசத்தால் மட்டுமே உயர்ந்தவர்களாக இருக்கமுடியும். மாறாக சாதியால் அல்ல என்ற உயர்ந்த உண்மையைத் தன்னுடைய அறிவால் நிலைநாட்டியப் பெருமைக்குரியவர் ஆவார். கல்வி விரும்பிக் கற்கப்பட்ட போதும் பார்ப்பனர்கள் மட்டும் தான் கற்க வேண்டும், மாறாக சூத்திரர்கள் கற்க கூடாது, தப்பித்தவறி கூட அவர்களின் காதுகளில் கல்வி கற்கும் போது விழுந்து விட்டால் அவர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறியவருக்கு மத்தியில், இதுவரை தன்னுடைய வாழ்நாளில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் நூல்களை படித்த பெருமைக்குரிய தலைசிறந்த தலைமகனாக திகழ்ந்தார். அது மட்டுமல்ல தன் வாழ்நாளில் படித்ததை, உணர்ந்ததை இந்த நாட்டுக்குத் தேவையானதை, அறிந்து இதுவரை 15 ஆயிரம் பக்கங்கள் வரை எழுதி இருக்கிறார்.

அன்றைக்கு இந்தியா அடிமைப்பட்ட போது வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட முன்னணி தலைவர்களைச் சிறையில் வெள்ளையர்கள் அடைத்தனர். ஆனால் சினம் கொண்ட சிங்கத்தை அதன் குகையில் சென்று அச்சங்கத்தின் சினத்தையும், பிடரிமயிரையும் பிடித்து தொங்கியும் சினத்தை சீண்டிப் பார்த்த பெருமை பாபா சாகேப் அம்பேத்கருக்கு உண்டு. குறிப்பாக 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்ட மேசை மாநாடுகளில் லண்டனிலேயே கலந்துகொண்டு அங்கே அவர்களுடைய தாய் நாட்டில் ஆங்கிலேயர்களை இந்தியாவை அடிமைப்படுத்தியது தவறு என்றும், குற்றம் என்றும் கண்டித்த போதும் அவரை ஒரே ஒரு நாள் கூட இல்லை... இல்லை ஒரே ஒரு மணி நேரம் கூட சிறையில் அடைக்க முடியாத அளவிற்கு அவருடைய புகழ் ஓங்கி இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் உலகம் ஒப்புக்கொண்ட தலைசிறந்த அறிவாளிகள் ஏழு பேர் இருந்தனர். அவர்களில் இரண்டாவது பெருமைக்குரிய தலைமகனாக இருந்தவர் தான்.

வரலாற்று எல்லாக் காலத்திலும், எல்லோரையும் நினைவில் வைத்து கொண்டு இருக்காது. மாறாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளையும், முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளையும் மட்டும்தான் வரலாறு அறிந்து வைத்திருக்கும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மாமனிதர் தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்? உலகில் எண்ணற்ற மனிதர்கள் நாள்தோறும் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், வாழ்கிறார்கள், மடிக்கிறார்கள் ஆனால் அவர்களை எல்லோரையும் வரலாறு ஞாபகம் வைத்திருக்க வில்லை. இங்கு வரலாறு என்பது இந்த உலகம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியையோ அல்லது மனிதனையோ குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்றைக்கு உலகில் அதிக சிலைகளை கொண்டவர்கள் பெருமைக்குரிய மாமனிதர்கள் இருவர். அதில் ஒருவர் பகவன் புத்தர். இரண்டாமவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். அவருடைய அறிவைக் கண்டு வியந்து தான் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அவர் படித்த அந்த இடத்திற்கு Dr Ambedkar study Circle என்றும், லண்டனில் படிக்கும்போது அவர் தங்கியிருந்த வாடகை வீட்டை லண்டன் அரசாங்கம் அதை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியில் அதை அருங்காட்சியகமாக அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல அந்த லண்டன் மாநகரில் உள்ள மியூசியத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டுள்ளது என்ற பெருமைக்குரிய நிகழ்வு. உலகில் வேறு யாருக்கும் கிடைக்காத பேரும் புகழும் ஆகும்.

தலைசிறந்த வழக்கறிஞராக இருந்தும், பாராட்டத் தகுந்த பேராசிரியராகவும் இருந்தும் தன் சொந்த சம்பாத்தியத்தில் கிடைத்த வருமானத்தை வைத்து கல்வி கற்க முடியாத ஏழை எளியோருக்கும், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்காகவும் சித்தார்த்தா கல்லூரியை நிறுவி கல்விப் பணியையும் செய்த பெருமைக்குரிய மனிதர் அவர். இந்த உலகமே போற்றுகின்ற அளவிற்கு உயர்ந்த தகைசால் பெருந்தகைக்கு இந்திய அரசாங்கம் 1990ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைக் கொடுத்து இந்தியா பெருமைத் தேடிக்கொண்டது.

யாரை படிக்கக்கூடாது, யாரைப் பார்க்கக்கூடாது, யார் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சேரியில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதர் தான், இன்றைக்கு உலகமே வியக்கும் அளவிற்கு தன்னுடைய அறிவாலும், தன்னுடைய உழைப்பாலும், தன்னுடைய கடுமையான போராட்டத்தாலும், வியந்து பார்க்கபடுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மனிதர்கள் யார்? என்பதை ஆய்வு செய்து நூறு நபர்களை தேர்வு செய்தார்கள். அந்த நூறு நபர்களில் முதலில் இடம் பெற்றவர் தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். இது இந்திய திருநாட்டிற்கு அவரால் கிடைத்த பேரும் புகழும் ஆகும். ஆனால் இதை எந்த அரசாங்கமும், எந்த அரசியல் கட்சியும் பெயரளவிற்கு கூட முணுமுணுத்தது இல்லை. எங்கோ கடல் தாண்டி வாழும் மக்களும், அறிவுஜீவிகளும் பாபாசாகேப் அம்பேத்கரின் புகழை அறிந்திருக்கிறார்கள். ஆனால் சொந்த ஊரில், சொந்த நாட்டில் அவரை தினம்... தினம் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல இன்றைக்கு இந்தியாவில் வெறுத்து ஒதுக்க கூடிய ஒரு மனிதராக சாதி இந்துக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் இங்கு நிலவிய வர்ணாசிரமக் கோட்பாட்டை, சாதி முரண்பாட்டை, இங்கு நிலவிய ஏற்றத்தாழ்வுகளை கண்டித்த பெருமை அவருக்கு உண்டு. எத்தனையோ மகாத்மாக்கள் இருந்தபோதும் பெருமை தேடித் தந்தது இல்லை. ஏன் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் என்று கூறும் இன்றைய மதவாத சக்திகள் கூட அவருக்குப் பெருமை சேர்க்கும் அளவிற்கு 3,000 கோடி ரூபாய் செலவு செய்து சிலை வைக்க வில்லை. மாறாக பட்டேலுக்காக மட்டும்தான் சிலை வைக்கப்பட்டார்கள். இதிலிருந்தே அவர்களின் உண்மை முகம் அறியமுடிகிறது.

சுதந்திரம் பெற்ற இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக காந்தியடிகள் மாற்றுவதற்கு முயற்சித்தார். அதே சிந்தனைக் கொண்ட நாதுராம் கோட்சே என்கிற பார்ப்பனரால் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்டார். இதிலிருந்து ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது. காந்தியடிகள் தன் நாட்டுக்காகவும் உண்மையாக இல்லை. தன் மக்களுக்காகவும் உண்மையாகவும் இல்லை. ஏன் தனக்கே அவர் உண்மையாக இருந்தாரா? என்பது ஒரு வினாவாக மாறியுள்ளது. தவறான நோக்கத்தில் உதாரணமாக சொல்ல விரும்பவில்லை. மாறாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும்தான் போராடினார், அம்மக்களின் விடுதலைக் குறித்து தான் சிந்தித்தார் என்ற கற்பித்தால் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை சேதப்படுபவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வருணாசிரம கோட்பாட்டில் பிராமணர்களின் இடத்தை கேள்விக்கு உட்படுத்தியது மட்டுமல்ல இந்த வர்ணாசிரம கோட்பாடே தவறு,. அதை போதிக்கும் மனுவும் தவறு. உழைக்கக்கூடிய மக்களுக்குத் தான் முதலிடம் கிடைக்க வேண்டும்,. இந்த நாட்டை காப்பாற்ற கூடிய மக்களுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். உடல் உழைப்பை கொண்டு செயல்படக்கூடிய தொழிலாளிகளை மதிக்க வேண்டும்.

சாதி எல்லாம் ஒன்றும் இல்லை. அனைவரும் சமம். அனைவரும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தால் ஒற்றுமையாக வாழவேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் எல்லோரும் இந்த வர்ணாசிரம கோட்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே எல்லோரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதுவரை படிநிலையில் உள்ள பார்ப்பனர் அல்லாதவர்களும் முன்னேற வேண்டுமென்றால் அவர்களுக்கு போதுமான அளவிற்கு இட ஒதுக்கீடு வழங்கி அவருடைய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இது அவர்களுக்கு கிடைக்கக்கூடியது சலுகை அல்ல. மாறாக அவர்களுடைய உரிமை. அவர்கள் முன்னேறும் வகையில் இந்த இட ஒதுக்கீட்டு முறையை கையாள வேண்டும். அனைவரும் பார்ப்பனர் போல அறிவிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்து விட்டால், அன்றைக்கு இந்த இட ஒதுக்கீடு சிந்தனை முறை வேண்டாம் என்று போராடியவர். எல்லா துறைகளிலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் முன்னேறி வருவதற்கும் பாபாசாகேப் அம்பேத்கரின் இட ஒதுக்கீட்டு முறை ஒரு காரணம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கூட இட ஒதுக்கீட்டு அடிப்படையில் 18 + 1 என்ற 19 சதவீதம் ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்து முன்னேற்றம் கண்டவர் டாக்டர் அம்பேத்கர். அவரை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாதவர்களும், முறையான கல்வியறிவு இல்லாதவர்களும் மட்டும் தான் அவரை தவறாக உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்.

இதை பாபாசாகிப் அம்பேத்கர் மொழியில் சொல்வதென்றால் உள்ளங்கையால் சூரியனை மறைப்பதற்கு சமமானது, அதுபோன்றே வணிக வண்டிகள் தொடர்ந்து செல்லும் பொழுது நாய்கள் குறைத்துக் கொண்டு தான் இருக்கும்.

- பேரா. எ.பாவலன்

Pin It