இரண்டு தலைபோகும் காரணங்கள்!

என் தம்பிகள், நண்பர்கள் பலரும் “சீமானுக்கு வாக்களியுங்கள்” என்கிறார்கள் என்னிடம். அவர்களுக்கு நான் அளித்த விளக்கத்தை இங்கே பொதுவிலும் வைக்க விரும்புகிறேன்.

நாம் தமிழருக்கு வாக்களிப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. உண்மையைச் சொன்னால், திராவிடம் எனும் கோட்பாட்டுக்கும் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா எனும் தனி மனித ஆளுமைக்கும் இடையிலானதாகவே இத்தனை காலம் இருந்து வந்த தமிழ்நாட்டு அரசியல், சீமானின் வெற்றி மூலம் திராவிடம் – தமிழ்த் தேசியம் எனும் இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலானதாக மாற வேண்டும் என்பதே என் அவா. எப்பொழுது அது நடக்கும் எனக் காத்திருப்பவன் நான்.

Kamal Haasan and Seemanஆனால் இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, எனது கேள்வி ஒன்றே ஒன்றுதான். இந்த முறை நாம் தமிழருக்கு (அல்லது மக்கள் நீதி மய்யத்துக்கு அல்லது அ.ம.மு.க-க்கு) வாக்களித்தால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பதுதான் அது!

தண்ணீருக்குள் விழுந்த நீச்சல் தெரியாதவன் மூச்சுக்குத் தவிப்பது போல, இந்த பா.ஜ.க., ஆட்சியிலிருந்து எப்பொழுது விடுபடலாம் என ஒவ்வொரு நொடியும் நாம் அனைவரும் தவித்துக் கொண்டிருக்கிறோம். நமது பொருளாதாரம், வாழ்வாதாரம், தனி மனித உரிமை, இன – மொழி அடையாளங்கள் என அத்தனையும் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இப்படிப்பட்ட வரலாறு காணாத நெருக்கடியில், மீள்வதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்தப் பாராளுமன்றத் தேர்தல்தான். இந்தளவுக்கு முக்கியம் வாய்ந்த இந்தத் தேர்தலில், எந்தத் தேசியக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லாத சீமானுக்கோ கமலகாசனுக்கோ தினகரனுக்கோ வாக்களித்தால் ஆட்சி மாற்றம் எப்படி வரும் என்பதே என் அச்சம்!

என் இணைய நண்பர்களில் பலர் நா.த.க-யின் வேட்பாளர்களுடைய தகுதி பற்றி எடுத்துரைக்கிறார்கள். உண்மையிலே மிகவும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை, அந்தந்தத் தொகுதியுடைய மண்ணின் மைந்தர்களைக் களமிறக்கி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது நாம் தமிழர்! உச்சி முகர்ந்து பாராட்ட வேண்டிய அணுகுமுறை இது! அதே நேரம், இந்தத் தேர்தலில் நமக்குத் தேவை தகுதியான நாடாளுமன்றப் பிரதிநிதிகளா அல்லது ஆட்சி மாற்றமா என்கிற கேள்வி எழும்பொழுது ஆட்சி மாற்றம்தான் என்பதுதான் நமது தவிர்க்க முடியாத பதிலாக இருக்கிறது! அதற்கு தி.மு.க-காங்கிரசு கூட்டணிக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியே கிடையாது என்பதுதான் கசந்தாலும் உண்மை!

ஏனெனில் சீமானைப் பொருத்த வரையில், அவர் நாற்பது தொகுதிகளிலுமே வென்றால் கூட ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த காங்கிரசுடன் (தமிழர்களுக்கு எதிரான அரசியலையே தொடர்ந்து முன்னெடுத்து வரும் பா.ஜ.க-யுடனும்) கூட்டணி வைக்க மாட்டார்.

மொத்த நாடும் பா.ஜ.க., ஆட்சியைக் கழுவி ஊற்றிய, ஊற்றுகிற நிலையிலும் தொடக்கம் முதலே அவர்கள் விதயத்தில் வழவழ கொழகொழவென்றே பேசி வந்த கமல்ஹாசன் அவர்களுக்கு வாக்களித்தால் வென்றதும் அவர் பா.ஜ.க-யுடன்தான் கூட்டணி வைப்பார் என நான் மட்டுமில்லை, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முதற்கொண்டு உணர்வாளர்கள் அனைவருமே சொல்கிறார்கள்.

தினகரனோ ஏற்கெனவே பல சட்டச் சிக்கல்களிலும் அரசியல் நெருக்கடிகளிலும் தவிக்கிறார். ஆகவே அவர் வென்றால் தேர்தல் முடிவைப் பொருத்து எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கைகோர்க்கலாம். அவர் காங்கிரசுடன் சேர்வார் எனவோ, பா.ஜ.க-யுடன் சேர மாட்டார் எனவோ எந்த உறுதிப்பாடும் கிடையாது. அவர் எந்தப் பக்கம் சேர்ந்தாலும் அதில் யாருக்கும் எந்த வியப்பும் கூட ஏற்படாது.

எனவே மிச்சமிருக்கும் தி.மு.க-காங்கிரசுக் கூட்டணிதான் மோடி ஆட்சியிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுதலை பெற இருக்கும் ஒரே தேர்வு என்பதுதான் இன்றைய கள நிலவரம்!

ஆக, ஏன் நான் சீமானுக்கோ, கமலுக்கோ, தினகரனுக்கோ வாக்களிக்க மறுக்கிறேன் என்பதற்கான முதல் தலைபோகும் காரணம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போகும் என்பது. இரண்டாவது என்னவென்றால், துவக்கத்திலேயே குறிப்பிட்டபடி நான் சீமான் தமிழ்நாட்டு முதல்வராக வர வேண்டும் என உண்மையாகவே விரும்புகிறேன் என்பது!

புரியவில்லையா? சொல்கிறேன் கேளுங்கள்!

இந்த முறை மீண்டும் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் நடந்த கடைசித் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என எச்சரிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வசந்தி தேவி போன்ற பெரும் கல்வியாளர்கள், ‘மூடர் கூடம்’ இயக்குனர் நவீன் போன்ற சமூக அக்கறையுள்ள படைப்பாளிகள், முன்னாள் நீதியரசர்கள், மேனாள் துணைவேந்தர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் என அனைவருமே இப்படித்தான் சொல்கிறார்கள்.

எனவே சீமான் (அல்லது கமல் அல்லது தினகரன்) முதலமைச்சராக அமர வேண்டும் என்றாலே அதற்குச் சட்டமன்றத் தேர்தல் என ஒன்று நடந்தாக வேண்டும். அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் பா.ஜ.க., தோற்றாக வேண்டும். அது நிகழ வேண்டும் என்றால் பா.ஜ.க-க்கு எதிராகத் தேசிய அளவில் போட்டியிடும் ஒரே கூட்டணியான காங்கிரசுக் கூட்டணி இந்த முறை வெற்றி பெற்றாக வேண்டும்!

ஆம்! மோடி மீண்டும் தலைமையமைச்சராக வந்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமில்லை எதிர்காலத்தில் சீமான், கமல், தினகரன் போன்றோர் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த முறை இவர்களுக்கு நான் வாக்களிக்க மறுக்கிறேன்! ஏனெனில் இருப்பது ஒரு வாக்குத்தானே! எனவே நண்பர்களே,

சிந்தித்து வாக்களியுங்கள்!
சிந்தாமல் வாக்களியுங்கள்!
சிதறாமல் வாக்களியுங்கள்!
தவறாமல் வாக்களியுங்கள்!

- இ.பு.ஞானப்பிரகாசன் 

Pin It