ஆப்பிரிக்காவில் இருந்து உணவு தேடி புறப்பட்ட ஹோமோ சேப்பியன்ஸ் குரங்குக் கூட்டங்களில் சில அப்படியே ‘வந்தாரை வாழவைக்கும்’ தமிழ்நாட்டிற்கும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்தது. அது இங்கு வந்த போது கவுண்டக்குரங்கு, முதலியார் குரங்கு, முக்குலத்தோர் குரங்கு, பார்ப்பன குரங்கு, ரெட்டியார் குரங்கு போன்றவையெல்லாம் இருந்ததா என்று உறுதியாக நமக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் 'வந்தேறிகளுக்கு இடமில்லை' என்று இனவாதம் பேசிய குரங்குகள் எதுவும் அப்போது இல்லை. இருந்திருந்தால் பாவம் அந்த ஹோமோ சேப்பியன்ஸ் குரங்குகள் வந்த வழியே திரும்ப ஆப்பிரிக்காவுக்கே போய் இருக்கும்.

 seeman 257அப்படி போய் இருந்தால் என்னவாகி இருக்கும்? சீமான் போன்ற இனவாதிகளை விமர்சனம் செய்யும் வேலையே நமக்கு இல்லாமல் போயிருக்கும். வந்த குரங்குகள் எல்லாம் இங்கேயே டேரா அடித்திருந்தாலும் பரவாயில்லை. அதுபாட்டுக்கும் எல்லாதிசையிலும் பரவி தமிழ்க்குரங்கு மட்டும் அல்லாமல் மலையாளக்குரங்கு, கன்னடக்குரங்கு, தெலுங்குக்குரங்கு என்று பல மொழிக்குரங்குகளை உருவாக்கிவிட்டது. இப்போது எல்லாக் குரங்குகளும் அதுஅது பாட்டுக்கும் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்க சில குரங்குகள் மட்டும் திரும்ப வால் முளைத்து ஆட்டமாக ஆடிக்கொண்டு இருக்கின்றது.

 உற்பத்தியே இல்லாத சமூகத்தில் மனிதன் உயிர்வாழ்வதே பெரும்பாடாக இருக்கையில் ஒருவரை விலக்கி ஒருவர் வாழ்வது என்பது சாத்தியமற்றது. மனித நாகரிகம் என்பதே மனிதனின் கூட்டு உழைப்பின் விளைபொருளே ஆகும். அப்படி கூட்டு உழைப்பின் மூலமே மனிதன் தனக்கான மொழியையும் உருவாக்கிக் கொண்டான். அந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதனின் சுற்றுச்சூழலுக்கும், தட்பவெட்ப நிலைக்கும் ஏற்றவாறு மொழிகள் மாறுபட்டன. பின் நாட்களில் சமூகத்தின் ஒரு பிரிவு உற்பத்தியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதன் விளைவாக மொழியானது இன்னும் அதிகமான அளவிற்கு செவ்வியல் இலக்கணத் தன்மை பெறுவதற்கு வழி ஏற்பட்டது. ஒரு மொழியின் பயன்பாடு என்பது முதலில் அது அனைத்துவிதமான உழைப்புச் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும். அடுத்து அந்தக் குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்களின் சிந்தனையை அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும். இது இரண்டையும் அந்த மொழி செய்யவில்லை என்றால் அந்த மொழி நிச்சயம் சிதைவிற்கு ஆளாகும். ஒரு மொழியின் பயன்பாடு என்பது இந்த அளவிற்குதான். வேறு அதற்கு எதாவது புனித பிம்பம் உண்டா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் ஒரு பிரஞ்சு மொழியைப் பேசுபவனை பிரஞ்சுக்காரன் என்று நாம் உடனே சொல்லிவிடலாம். ஆனால் தமிழ் பேசுபவனையோ, அல்லது கன்னடம் பேசுபவனையோ நாம் அவ்வாறு சொல்ல முடியாது. காரணம் ஒரு பிரஞ்சுக்காரன் இன்னொரு பிரஞ்சுக்காரனிடம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் வைத்துக் கொள்வான். ஆனால் ஒரு தமிழனோ அல்லது தெலுங்கனோ அவ்வாறு தன்னுடைய சக தமிழனிடமோ, தெலுங்கனிடமோ கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வதில்லை. காரணம் சாதி. படிநிலை வரிசையாக பிரிக்கப்பட்டுள்ள இந்தச் சாதி அதை முற்றிலும் தடை செய்கின்றது. இங்கே ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பையன் ஒரு பிற்பட்ட அல்லது முற்பட்ட சாதிப் பெண்ணை திருமணம் செய்யும் போது ஏற்படும் விளைவுகளை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். நாம் அனைவரும் தமிழன்தானே என்று எந்த சாதி இந்துவும் தன்னுடைய பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனுக்குத் தருவது கிடையாது. மீறி மணம் புரிந்தால் சாதி ஆணவக் கொலையால் அவர்களது காதல் வரலாறு முடித்து வைக்கப்படும். இந்திய சமூகத்தில் சாதியானது அடித்தளமாகவும் செயல்படுகின்றது; மேற்கட்டுமானமாகவும் செயல்படுகின்றது.

 தமிழ்நாட்டில் உள்ள ஒரு தலித் இந்தியாவின் எங்கு சென்றாலும் தலித்துதான். அவன் நிலைமை எல்லா இடங்களிலும் ஒன்றுதான். சமூகம் அவனை நடத்தும் முறை எங்கும் வித்தியாசப்படுவதில்லை. திண்ணியமாக இருந்தாலும், மாரத்வாடவாக இருந்தாலும் நிலைமை மாறிவிடுவதில்லை. அவன் பேசும் மொழி என்பது எந்த வகையிலும் அவனது சமூக இருப்பை உயர்த்துவதில்லை. அதனால் இந்திய சமூகத்தில் ஒரு மொழி என்பது மக்களை ஒன்றுபடுத்துவதற்கான சாதனமாக ஒரு காலத்திலும் மாற முடியாது என்பதுவே இந்திய சாதி சமூகம் நமக்குக் கற்றுத் தரும் பாடம். நான் ஒரு தமிழன் என்பதிலோ, நான் ஒரு தெலுங்கன் என்பதிலோ எந்தவிதமான பெருமையும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை சாதி இந்துக்களுக்கு அது ஒரு கூடுதல் பெருமையாக இருக்கலாம்.

 இந்த மக்களை ஆண்டாண்டு காலமாக சாதியின் பெயரால் கல்வியை மறுத்தும் அவர்களது பொருளாதாரத்தை ஒட்ட சுரண்டியும் வளமாக வாழ்ந்துவந்த சாதி இந்துக்கள், இன்று மொழியைக் காட்டி நாம் அனைவரும் ஒன்று தான் என்று சொல்லுவது அப்பட்டமான புல்லுருவித்தனமாகும். நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்லும்போதே இன்னொரு பக்கத்தில் தலித்துகளுக்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரங்களைச் செய்கின்றார்கள். இதுதான் இவர்களின் தமிழ்த் தேசியம். என்வீட்டுப் பெண்ணை நீ திருமணம் செய்தால் உன்னை உயிரோடு கொளுத்துவேன், என் முன்னால் நீ செருப்பு போட்டு நடக்கக்கூடாது, தோலில் துண்டு போட்டு நடக்கக்கூடாது, என் தெருவுக்குள் உன் தேர் வரக்கூடாது.மற்ற படி நீயும் நானும் தமிழன். என்னோடு சேர்ந்துகொள் தமிழ்நாட்டை தமிழன் ஆளலாம். இதுதான் தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் சாணக்கியத்தனம்!.

 இதற்காக அவர்கள் கண்டுபிடித்த சொல்தான் ‘வந்தேறிகள்’. தமிழ்நாட்டில் தீண்டாமையைத் தீவிரமாக கடைபிடிக்கும் இந்த சாதி இந்துத் தமிழன்கள் தங்களை இரண்டு வழிகளில் காப்பாற்றிக் கொள்ள இந்த வந்தேறிகள் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஒன்று புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக புதுப் பணக்காரர்களாக மாறிவிட்ட தங்களை அரசியல் தளத்தில் உறுதியாக நிலைநிறுத்திக் கொள்வது. அடுத்து சமூகதளத்தில் சாதி ஒழிப்பை தீவீரமாகப் பேசி தங்களுடைய சாதிய மேலாண்மைக்குப் பேராபத்தாக இருக்கும் திராவிடம் என்ற கருத்தியலை எதிர்ப்பது. இந்த இரண்டையும் சாதிக்க அவர்களுக்கு வந்தேறிகள் என்ற சொல் பயன்படுகின்றது.

 சரி கன்னடம் பேசுபவர்களும், மலையாளம் பேசுபவர்களும், தெலுங்கு பேசுபவர்களும் வந்தேறிகள் என்றால் சுத்தத் தமிழன் என்பவன் யார்?. யாருக்கும், யாருக்கும் பிறந்திருந்தால் அவன் சுத்தமான தமிழன். முற்பட்ட சாதி தமிழ்ப் பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட சாதி தமிழ் ஆணுக்கும் பிறந்தவன் தமிழனா? தமிழ் ஆணுக்கும் மலையாளப் பெண்ணுக்கும் பிறந்தவன் தமிழனா?, தமிழ்ப் பெண்ணுக்கும் கன்னட ஆணுக்கும் பிறந்தவன் தமிழனா? தமிழ் ஆணுக்கும் தெலுங்குப் பெண்ணுக்கும் பிறந்தவன் தமிழனா? என்ன குழப்பமாக இருக்கின்றதா? அப்படித்தான் எனக்கும் இருக்கிறது. நமக்குத் தெரிந்து இங்கே பல தமிழன்களின் உடம்பில் ஓடுவது சுத்தமான தமிழ் இன ரத்தமா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் பெண்கிடைக்காமல் பல சாதி இந்துக்களின் ஆண்கள் கேரளாவிலும், ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் போய் திருமணம் செய்துகொண்டு வருவதை நாம் நேரடியாகவே பார்த்திருக்கின்றோம். தமிழ்நாட்டிற்குள் இனத்தூய்மை, சாதிய தூய்மை பேசும் பல பேர் அங்கு போய் பெண்கிடைத்தால் போதும் என்று வேற்றுசாதியில் கூட திருமணம் செய்துகொண்டு கமுக்கமாக வந்துவிடுகின்றார்கள். அப்படி என்றால் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைத் தமிழன் என்று சொல்வதா? இல்லை வேற்றுமொழி பேசக்கூடியவள் பெற்ற வந்தேறிக் குழந்தை என்பதா? இன்னும் சில பேர் விந்தணு தானம் வாங்கி எல்லாம் குழந்தை பெற்றுக் கொள்கின்றார்கள். அப்படி பிறக்கும் குழந்தைகள் ஒரு தமிழனின் விந்தணுவுக்குத் தான் பிறந்தது என்று உறுதியாக சொல்லமுடியுமா?

 பின்பு எதை வைத்து ஒருவனை தமிழன் என்று முடிவு செய்வது? இன்று சுத்தமான(?) தமிழனுக்குப் பிறந்தவனின் பிள்ளைகள் பல தமிழே பேசத் தெரியாமல் இங்லீசில் பிதற்றிக்கொண்டு திரிகின்றதே அந்த கருமம் பிடித்ததை எல்லாம் என்ன செய்வது? அடித்து, உதைத்து, அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் துரத்திவிடலாமா? தமிழனின் விந்தணுவுக்குப் பிறந்ததாக சொல்லும் பல இனத் துரோகிகள் தமிழ்வழிக் கல்வியைக் கற்பிக்காமல் இங்லீஸ் வழி கல்வியைப் பயிற்றுவிக்கும் பள்ளிகூடங்களை தமிழகம் முழுவதும் திறந்துவைத்து வறிய தமிழ் மக்களிடம் கட்டணக் கொள்ளை அடிக்கின்றார்களே... அவர்களின் ஜீன்களைப் பரிசோதித்து அவர்கள் உண்மையிலேயே தமிழனுக்குப் பிறந்தவர்களா? இல்லை வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவர்களா? என்று தெரிந்து கொள்ளலாமா?

 எதை வைத்து ஒருவனை மண்ணின் மைந்தன் என்றும், மற்றொருவனை வந்தேறி என்றும் முடிவு செய்வது? தமிழ்நாட்டில் பிறந்தான் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவனை மண்ணின் மைந்தன் என்றும், அவன் ஆட்சி செய்தால் தமிழனின் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும் சொன்னால் அது பச்சை அயோக்கியத்தனமாகும். சரி தமிழ்நாட்டை இதுவரை தமிழன் ஆளவில்லை, அதனால் தமிழ்நாடு நாசமாய்ப் போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம். மற்ற மாநிலங்களில் அந்த அந்த மாநிலத்தில் உள்ள மண்ணின் மைந்தர்கள் தானே ஆட்சி செய்கின்றார்கள். அப்படி என்றால் அந்த மாநிலங்கள் எல்லாம் இன்று பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் அல்லவா இருக்க வேண்டும். அந்த மக்கள் எல்லாம் பெற்று சிறப்பாக அல்லவா வாழ வேண்டும். 'மண்ணின் மைந்தன் ஆட்சி செய்ததால் அந்த மாநிலத்தில் பசி, பட்டினிச் சாவு, விவசாயிகள் தற்கொலை, பாலியல் பலாத்காரம், ஊழல், நாட்டின் வளங்களை பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்தல் போன்ற எதுவும் நடக்கவில்லை, எனவே எங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் அதே போல ஆட்சி செய்வோம்' என்று ஒரே ஒரு உதாரணத்தை உங்களால் காட்ட முடியுமா?

 தமிழ்நாட்டில் ஏற்கெனவே இதுபோன்று தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்று ஒருவர் கட்சி ஆரம்பித்தார். அவர் பெயர் சி.பா.ஆதித்தன். தினத்தந்தி நிறுவனர். அவர் ஆரம்பித்த கட்சியின் பெயர்தான் நாம் தமிழர் கட்சி. அப்படி கட்சி ஆரம்பித்த சி.பா.ஆதித்தன், 'தி.மு.க தமிழ் மக்களுக்கு எதிரானது' என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரை தமிழ்நாட்டு மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கடைசியில் வந்தவரை லாபம் என்று 1967-ல் தி.மு.க வில் இணைந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இந்த நல்ல மனிதர் கடைசியாக போக்குவரத்துத்துறையில் டயர்கள் வாங்கியதில் ஆட்டையைப் போட்டு செட்டில் ஆகிவிட்டார். என்ன ஒரு ஒற்றுமை பார்த்தீர்களா...? முதலில் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த சி.பா. ஆதித்தன் 'தி.மு.க தமிழர்களுக்கு எதிரானது' என்று சொல்லிவிட்டு கடைசியில் தி.மு.கவிலேயே சேர்ந்து கல்லா கட்டினார். தற்போது அதே பெயரில் கட்சி ஆரம்பித்த சீமானும் திராவிட எதிர்ப்பு பேசிவிட்டு ஜெயலலிதா காலடியில் விழுந்து, அ.தி.மு.க விற்கு ஆதரவாக தேர்தலில் ஓட்டு கேட்கின்றார். எனவே ‘நாம் தமிழர்’ என்று யாராவது சொன்னாலே தமிழக மக்கள் யாரும் அவர்களுக்கு ‘பெட்ருமாஸ் லைட்’ கொடுப்பதில்லை.

 தமிழ்நாட்டில் வாழும் மற்ற மொழிபேசும் மக்களை சீமான் வந்தேறி என்கின்றார். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மற்ற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் குறிப்பாக மலேசியா(10%), சிங்கப்பூர்(7%), தென் ஆப்பிரிக்கா(2%) , மொரிஷியஸ்(8%), பிஜீத்தீவுகள்( 5%), ரீயூனியன்(33%) போன்றவற்றில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் . இவர்களில் பல பேர் அந்த நாடுகளின் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை எல்லாம் அந்த அந்த நாடுகளில் வாழும் ‘சீமான்’களுக்குப் பயந்து தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டால் நிலைமை என்னவாவது? சீமானுக்கு என்ன கற்பகத் தருவாக அ.தி.மு.கவும், புலம் பெயர்ந்த காஸ்ட்லி தமிழ்ர்களும் இருக்கின்றார்கள். சாமானிய மக்கள் பாடுதான் படு திண்டாட்டம்.

 மண்ணின் மைந்தர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சீமான் அடம் பிடிக்கின்றார். நாமும் யார்ரா அது மண்ணின் மைந்தர்கள் என்று தேடிப் பார்த்தோம். புறநானூற்றின் 335 வது பாடல் இப்படி குறிப்பிடுகின்றது.

அடல் அரும் துப்பின்…..
குரவே தளவே குருந்தே முல்லையென்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விளங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

 குரவம் , தளவு ,குருந்தம், முல்லை ஆகிய நான்கு வகைப் பூக்களே முதன்மைப் பூக்கள் ஆகும். வரகு, தினை, கொள், அவரை போன்றவையே முக்கிய உணவுப் பொருளாகும். அது போல துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய நான்கு குடிகளே சிறந்த குடிகள் ஆகும் என்று மாங்குடி கிழார் குறிப்பிடுகின்றார். சீமான் இந்தச் சிறந்த குடிகள் பட்டியலில் வருவாரா என்று தெரியவில்லை. இன்று தமிழ்த் தேசியம் பேசும் பலரும் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள் என்பதுதான் உண்மை. அப்படி என்றால் இவர்களை வந்தேறிகள் என்று நாம் முடிவு செய்து விடலாமா? அப்படி எல்லாம் கேவலமாக சொல்வதற்கு நாம் என்ன சீமானா!

 தமிழர்களையும் மற்ற மொழி பேசும் மக்களையும் ஒன்றாக வாழ விடமாட்டேன் என்று சீமான் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றார். ஆனால் சீமானின் வந்தேறிகள் அரசியலை அறியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத பழங்குடி இன மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். எடுத்துக் காட்டாக நீலகிரியில் காட்டு நாயக்கர், கசபர், கொச்சுவேலன், கோத்தர், சோளிகர், சோளநாயக்கர், பனியர், அரநாடன், இருளர், ஊராளி என்று பல பழங்குடியின மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் பல பேர் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் கிடையாது. கன்னடம், மலையாளம், தமிழ், கசபர், இருள என அனைத்து மொழிகளையும் கலந்துதான் பேசுகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் வந்தேறி என்று கூறி வெட்டிக் கொண்டும், குத்திக் கொண்டும் சாவதில்லை. மனித மனங்களில் வெறுப்பை விதைக்கும் சின்ன புத்திக்காரர்கள் அவர்கள் மத்தியில் எப்பொழுதும் தோன்றியது கிடையாது. ஏனென்றால் அவர்கள் மத்தியில் அதிகார வெறியும், பதவி வெறியும் எப்பொழுதும் இருந்தது இல்லை. எங்கு அதிகார வெறியும், பதவி வெறியும் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு இனவெறியும், மொழிவெறியும் தூண்டி விடப்படுகின்றது. அதைத் தூண்டி விடுவதற்கு சீமானைப் போன்ற சில பச்சோந்திகள் எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றனர்.

- செ.கார்கி

Pin It