நலமுறவே உழைப்பவர்க்கு உணவு வேண்டும்

நியாயமிது நியாயமிது நியாயமிதே!

அலவெனவே மறுப்பவர்கள் கடவுளேனும்

அடுத்தகணம் அவர்தலை எம்காலில் வீழும் - கம்பதாசன்.

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும்’ என்ற நூலுக்கு வழங்கிய முன்னுரையில் கம்பதாசனைப் பின்வருமாறு அறிமுகம் செய்வார்:

மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிக் கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர். கவிதை நயமும், கற்பனைச் சுவையும், உவமை அழகும், கருத்தாழமும் புதுமையும் மிளிரும் கவிதைகளையும் குறுங்காவியங்களையும் படைத்துள்ள அவர் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். இசைப் பாடல்கள் எழுதும் திறம் பெற்றிருந்த அவர் நாட்டிய நாடகங்கள் ஆக்கியும் நாடகங்களில் நடித்தும் கலைப்பணி புரிந்தவர். ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் முதலியோரின் வாழ்க்கை நலனில் அக்கறை கொண்டிருந்த அவர் சோசலிஸ்ட் கவிஞராக இந்தியா முழுவதும் அறியப் பெற்றிருந்தார். எனினும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கிச் சிரமப்பட்டு மரணம் எய்தியது வாழ்க்கையின் விசித்திர முரண்களில் ஒன்றேயாகும்.

kambadasanமேற்சொன்ன வல்லிக்கண்ணனின் கூற்று, மிகைப்படுத்தப்படாத உண்மை என்பதனைக் கம்பதாசன் கவிதைகளைப் பயில்வோர் எவராயினும் முழுமனதொடு ஒப்புக்கொள்வர். புதுச்சேரி தமிழுலகத்திற்கு வழங்கிய இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களின் வரிசையில் பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் தமிழ்ஒளி வரிசையில் வைத்துக் கொண்டாடத்தக்க மகாகவி கம்பதாசன் என்பதனைக் காலம் உறுதிசெய்யும் தருணம் இது. யார் இந்தக் கம்பதாசன்?

கம்பதாசனின் பெற்றோர் புதுச்சேரியை அடுத்துள்ள வில்லியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம் கொலு பொம்மைகள் செய்யும் கைவினைத் தொழிலில் தேர்ச்சிபெற்ற குடும்பமாகும். கம்பதாசனின் தந்தையார் பெயர் சுப்பராயன், தாயார் பெயர் பாப்பம்மாள். இவர் புதுச்சேரியை அடுத்துள்ள உலகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். சுப்பராயன் பாப்பம்மாள் தம்பதியரின் ஒரே மகனாக அப்பாவு 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்தார். அப்பாவு என்பதே கம்பதாசனின் இயற்பெயர். அப்பாவுவோடு உடன் பிறந்தவர்கள் ஐவர். ஐவரும் பெண்கள். பெற்றோர்கள் அப்பாவுவைச் செல்லமாக ராஜப்பா என்று அழைத்தனர். கம்பதாசனின் குடும்பம் அவரின் இளம்வயதிலேயே புதுச்சேரியைவிட்டுச் சென்னையிலுள்ள புரசைவாக்கத்திற்குக் குடிபெயர்ந்தது. பின்னாளில் அப்பாவு நாடகங்களில் நடிக்கும் காலங்களில் சி.எஸ். ராஜப்பா என்றும் பாவலனாகப் புகழ்பெற்ற காலங்களில் கம்பதாசன் என்றும் கலையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

நாடக நடிகராகத் தமது கலைப்பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து தம்முடைய இனிமையான குரல்வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனியம் வாசிக்கும் பக்க வாத்தியக்காரராகவும் நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் தமது கலை உலகப் பயணத்தைத் தொடர்ந்தார். திரௌபதி வஸ்திராபரணம், சீனிவாச கல்யாணம் போன்ற படங்களில் நடிகராகத் திரையுலகில் நுழைந்த கம்பதாசன் பின்னர் 1940ஆம் ஆண்டில் வெளிவந்த வாமன அவதாரம் என்ற படத்திற்கு முதன் முதலாகப் பாடல்கள் எழுதினார். அதனைத் தொடர்ந்து வேணு கானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி, ஞானசௌந்தரி, அக்பர், அவன், வானரதம் போன்ற பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியும், சில திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதியும் மிகுந்த புகழ்பெற்றார். அவற்றில் அவன், வானரதம், அக்பர் போன்ற திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்களாக இன்றும் போற்றப்படுகின்றன.

கம்பதாசனின் படைப்புகள்:

  1. கவிதைத் தொகுப்புகள்:

கனவு

 

விதியின் விழிப்பு
முதல் முத்தம்
அருணோதயம்
அவளும் நானும்
பாட்டு முடியுமுன்னே
புதுக்குரல்
தொழிலாளி
கல்லாத கலை
புதிய பாதை
குழந்தைச் செல்வம்
மொழி முத்தம்
இந்து இதயம்
கம்பதாசனின் கவிதைத் திரட்டு

 

2. சிறுகதைத் தொகுதி: முத்துச் சிமிக்கி

3. நாடகங்கள்:

ஆதிகவி

சிற்பி

அருணகிரிநாதர் (இசை நாடகம்)

  4.  கம்பதாசன் திரையிசைப் பாடல்கள்

  5.  கம்பதாசன் காவியங்கள்

கம்பதாசன் ஓர் உண்மையான சோசலிசவாதி. உழைக்கும் மக்களின் துயர்தீர்க்கும் புரட்சிப் படைப்புகளாக அவரின் கவிதைகள் விளங்கின.

கம்பதாசனின் பின்வரும் கவிதைத் தலைப்புகளே சொல்லும் அவரின் சமதர்மச் சிந்தனைகளை:

1. தொழிலாளி 2. செம்படவன் 3. கொல்லன் 4. ரிக்ஷாக்காரன் 5. மாடு மேய்க்கும் பையன் 6. கூடை முடைபவள் 7. ஒட்டன் 8. பிச்சைக்காரன் 9. பாணன் 10. குலாலன் 11. கையேந்திகள்.

                தம்மை ஒரு சோசலிசக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டதோடு அதையே தமது வாழ்வின் இலட்சியமாகவும் கொண்டு வாழ்ந்தவர் கம்பதாசன். வறுமையின் பிடியில் நொந்து துயருற்ற கடைசிக் காலங்களிலும் அவர் கொண்ட கொள்கையில் பிறழ்ந்தாரில்லை. கம்பதாசன் படைப்பாளியாக வலம்வந்த காலக்கட்டம் மிகச்சிக்கலான காலக்கட்டமாகும். இந்தியநாடு விடுதலைபெற்ற முதல் பதினைந்து ஆண்டுகளில் (1947-1962), மிகச் சிக்கலான அரசியல் மாற்றச் சூழலில் ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கம், மறுபக்கம் திராவிட இயக்கம் இரண்டுக்கும் இடையில் தனிப்பெரும் சக்தியாக ஆளுமை நிறைந்த கவிஞராகக் கம்பதாசன் தம்மை உருவாக்கிக் கொண்டார். இதுவே அவரின் பலமும் பலவீனமும் ஆகும். 1960களுக்குப் பிறகு திரையுலகில் அவர் தனித்துவிடப்பட்டதன் அரசியல் பின்னணி இதுவே.

பாவலரின் கடைசிக்காலம் வேதனை மிகுந்தது. வறுமை, காதல் தோல்வி, காசநோய் மூன்றும் வாட்டிவதைக்க சமூகத்தின் புறக்கணிப்பால் தனித்துவிடப்பட்ட கம்பதாசன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் ஓர் அனாதையைப்போல் மரணத்தைத் தழுவினார்.

கம்பதாசனின் மரணத்திற்குப் பின்னர் சிலோன் விஜயேந்திரன் என்ற கவிஞர் கம்பதாசனின் கவிதைகள் மீதுகொண்ட ஈடுபாட்டால் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து அவரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் படைப்புகளையும் ஒருசேரத் தொகுத்துப் பல தொகுதிகளாக வெளியிட்டார்.

1.             கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும்,       அல்லயன்ஸ்,                   (1986)

2.             கம்பதாசன் கவிதைத் திரட்டு,                             அல்லயன்ஸ்,                   (1987)

3.             கம்பதாசன் திரை இசைப்பாடல்கள்,               ஸ்டார் பிரசுரம்,              (1987)

4.             கம்பதாசன் காவியங்கள்,                                       ஸ்டார் பிரசுரம்,              (1987)

5.             கம்பதாசன் சிறுகதைகள்,                                      ஸ்டார் பிரசுரம்,              (1988)

6.             கம்பதாசன் நாடகங்கள்,                                         ஸ்டார் பிரசுரம்,              (1988)

கம்பதாசனைப் போற்றும் அதே தருணத்தில் மறைந்த இலங்கைக் கவிஞர் சிலோன் விஜயேந்திரன் அவர்களையும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

கம்பதாசன் கவிதை:

கம்பதாசன் தாம் படைத்த சிறுகதைகள், நாடகங்கள் முதலான பிற இலக்கிய வடிவங்களைவிடக் கவிதைத் துறையிலேயே தமது முழுவீச்சினை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கவிதைகள் வடிவ நேர்த்தியோடும் சொல்லழகு, பொருளழகுகளோடும் அடுக்கடுக்கான புத்தம்புது உவமைகளோடும் படிப்போர் மனதை ஈர்க்கத்தக்க தனித்தன்மையோடு விளங்கும். காதலைப் பாடும்போதும் சமூக அவலங்களைப் பாடும்போதும் கம்பதாசன் கவிதை என்ற முத்திரை துலங்கும்படி தமது கவிதையைப் படைத்தளிப்பார். பாரதி, பாரதிதாசன் மரபிலே கவிதை படைப்பவர் என்றாலும் உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தமக்கென ஒரு தனிபாணியைப் பின்பற்றி இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் பரம்பரையில் முன்மாதிரிகள் அற்ற புதுமரபை உருவாக்கி வெற்றிபெற்றவர் அவர்.

கம்பதாசன் கவிதைகளுக்குத் தனிஅழகு தருவன, அவர் கையாளும் உவமைகளே. பாடலின் அடிகள்தோறும் உவமைகளை அடுக்கிச் சொல்வதில் அவர் கைதேர்ந்தவர். இதுவரை யாரும் கையாளாத புத்தம்புது உவமைகள் சரளமாக அவர் கவிதைகளில் துள்ளிவிளையாடும். நிலவைப் பாடாத கவிஞர்கள் உண்டா? எத்தனைக் கவிதைகள்! எத்தனை உவமைகள்! காலந்தோறும் கவிஞர்களுக்கு வற்றாத ஜீவநதியாய் கவிதைதரும் நிலவைக் கம்பதாசனும் பாடுகிறார். இதோ:

கவிதை அணங்குவாழ் வெண்மலரோ! - சூறைக்

காற்றுக்கும் அணையாத தீபமதோ!

ரவிதான் எடுத்த புணர்சென்மமோ! - இருள்

ராணி மகுடத்தொளிரும் முத்தோ!

உடலதை ஒளித்து வான்குளத்தில் - முகம்

உந்தியே நீந்தும் ஒளிமங்கையோ!

கடல் நடுவிலொரு வெள்ளித்தீவோ! – எழில்

கந்தர்வர் ஆடிடும் பந்துதானோ!

பொதுவுடைமை முழக்கம் புரிய – கடல்

பொங்கி எழுந்திட்ட வெண்சங்கமதோ!

தாரணி மகிழ்ந்து பூசுதற்கு – நிலா

தங்கிடும் சந்தனக் கிண்ணமதோ!

சாரமுள்ள இளங் காதலர்க்கு – மதன்

தம்பலம் வழங்கும் வெள்ளித்தட்டோ!

கண்ணன் விசும்பதை மோதிடவே – செழும்

கைகொண்டு வீசிய வெண்ணெயதோ!    

(கம்பதாசன் கவிதைத் திரட்டு, பக். 99-100)

கம்பதாசனின் நிலவுப் பாடல், பாவேந்தரின் புரட்சிக்கவி குறுங்காவியத்தில் உதாரன் பாடும் ‘நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து’ என்ற பாடலை நினைவுபடுத்தினாலும் பருப்பொருள் உவமைகளோடு கம்பதாசனின் தனித்துவமான நுண்பொருள் உவமைகளும் இடையிடையே இயைந்துவரக் கவிதை தருகின்ற முருகியல் இன்பம் மிக்குத் தோன்றுவது இவரின் தனித்த முத்திரையாகும். மேலும் சமத்துவம் உண்டாகி உழைக்கும் மக்கள் உரிமைபெறும் செய்தியை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டு பொதுவுடைமை முழக்கம் செய்யக் கடலிலிருந்து தோன்றிய வெண்சங்குதான் இந்த நிலவோ (பொதுவுடைமை முழக்கம் புரிய கடல் பொங்கி எழுந்திட்ட வெண் சங்கமதோ!) என்ற உவமையில் கம்பதாசனின் சமத்துவச் சிந்தனையும் பதிவாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.

கம்பதாசன் என்றொரு மகாகவி:

நாடக நடிகர், திரைப்பட நடிகர், பின்பாட்டுப் பாடகர், ஆர்மோனிஸ்ட், மோல்டர், கவிஞர், கதைவசன கர்த்தா எனப் பல பரிமாணமானங்களைக் கடந்துவந்த கம்பதாசனுக்கு நிலைத்த புகழைக் கொடுத்தது அவரின் கவிதைகளே. அதிலும் குறிப்பாகத் திரைப்படப் பாடலாசிரியராக இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளில் தொடங்கி அறுபதுகள் வரையிலும் சற்றேறக் குறைய இருபதாண்டுகள் தமிழ்த் திரையுலகில் அவர் செங்கோல் ஓச்சினார். கம்பதாசனுக்கு இயல்பாகவே அமைந்திருந்த நல்ல கவிதை வீச்சு மற்றும் இசைப்புலமை இரண்டும் சேர்ந்து அவரின் திரைப்படப் பாடல்களுக்குப் புதிய பரிமாணத்தைத் தந்தன. தமிழ்த் திரையிசை அதுவரை கேட்டிராத புதிய புதிய சொற்கோவைகளும் ஆழ்ந்த தத்துவ விசாரணைகளும் அவரது திரைக்கவிதைகளில் இடம்பிடித்தன. கம்பதாசன் கவிதைகளைப் போலவே அவரது தோற்றமும் வாழ்க்கையும் மிடுக்கானவை. தமிழ்க் கவிஞர்களிலேயே திரைப்படப் பாடல்கள் எழுதுவதற்கு அதிகத் தொகை வாங்கிய முதல் கவிஞர் கம்பதாசனே. கம்பதாசனின் “பாட்டு முடியுமுன்னே” (1952)என்ற கவிதை நூலுக்கு முன்னுரை வழங்கிய ச.து.சு.யோகியார் கம்பதாசனைக் குறித்தும் அவரின் கவிதைகள் குறித்தும் மதிப்பீடு செய்துள்ள வைரவரிகள் பின்வருமாறு:

நண்பர் கம்பதாசனை யாவரும் அறிவர். அவர் கவி. கவிராயனுக்குரிய கவலையற்ற தன்மையும், மிடுக்கும், திமிரும், காம்பீர்யமும் அவரிடம் காண்பது போல் மற்றவர்களிடம் காணமுடியாது. வாழ்வையும் கவிதையையும், காவியக் கனவையும் ஒன்றாக்கிய கவின் அவரது உள்ளத்தின் கனிவு. வறுமையூடும், செல்வத்தூடும் மனங்கலங்காது குலுங்காது அநாயாசமாகப் பறந்து செல்லும் வானம்பாடி அவர்.

இக்கவிதைகளைப் படிக்கும்போது நமக்கு ஷெல்லியின் ஞாபகம் வருகிறது. அவனது கற்பனை அடுக்குகளின் கவின் விளங்குகிறது. டெனிசனின் அமர காவியக் கவிதையான, இன்மெமோரியம் போன்ற அகன்ற தன்மை ஆங்காங்கே ஒளிவிடுகிறது. சங்க இலக்கியமான கலித்தொகையின் கனிவு சிற்சில இடங்களில் கவின் விடுகிறது.

                                                                  (கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும், ப. 22)

கம்பதாசன் தமது அரசியல் சிந்தாந்தச் சமத்துவத்தை வாழ்க்கையிலும் கடைபிடித்தார். யார் உதவி என்று கேட்டாலும் கையில் இருந்தால் வாரிவழங்கும் மனம் கொண்டவர் கம்பதாசன். நாளைக்கு வேண்டும் என்று எதையுமே அவர் சேமித்து வைத்ததில்லை. அதனால்தான் 1961ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்குத் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தபோது வறுமை அவரைச் சூழ்ந்துகொண்டது. கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையின் இறுதிப் பத்தாண்டுகளில் அவர் வறுமையின் பிடியில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். 1969இல் தாம் எழுதிய ‘மொழிமுத்தம்’என்ற நூலின் முன்னுரையில் கம்பதாசன் பின்வருமாறு எழுதுகின்றார்:

இன்று என்னை வறுமையில் ஆழ்த்தி, என் வாழ்வைக் குலைத்த சிறுபகை, நரிகளின் கூட்டம். நான் இவ்வுலகைவிட்டு இறந்த பிறகாவது உண்மைக் கவிஞன், உலக மனிதன் என்று ஏற்குமாகில் இயேசு கிறிஸ்து கூறியது போல், அவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள், அவர்களை மன்னியுங்கள் என்று எனது ஆத்மா சாந்தியடையும்.

  (கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும், ப. 29)

கம்பதாசனின் வரிகளிலிருந்து பகைவனுக்கும் அருளும் அவரின் பண்பட்ட மனது நமக்குப் புலனாகிறது. வறுமையிலும் செம்மையென வாழ்ந்து மறைந்த கம்பதாசன் தம்நிலைமை குறித்து, ‘கவிஞன்’என்ற தலைப்பில் எழுதிய கவிதை வரிகள் இதோ:

நித்தம் வறுமையில் நெஞ்சழிந்து – தன்னை

நேசனெனச் சொல்ல யாருமின்றி

பித்தன் இவனெனக் காட்சிதந்து – உயிர்

பிரிந்தபின் புகழைப் பெறுபவர் யார்?

காற்றினும் சிறந்த தூயநெஞ்சம் - அலை

கடலைப் பழித்திடும் ஆழ்கருத்தும்

ஊற்றைப் பழித்திடும் புத்துணர்வும் - இந்த

உலகினில் வாய்த்திட்ட உத்தமன் யார்?

காற்றும் நுழைந்திடா வானமெனக் - ஒரு

கட்டற்று நிற்போன் கவிஞனன்றோ!              (க.க.திரட்டு, ப. 17)

கவிஞரின் கடைசிப் பத்தாண்டுகளின் நிலைமையை வருணிக்கும் கவிதையாக இதனைக் கருத முடியும். வாழும் காலத்தில் வறுமையும், அன்பு பாராட்ட ஆட்களற்ற வெறுமையுமாய் வாழ்ந்தவனுக்கு மரணத்திற்குப்பின் கிடைக்கும் புகழால் என்ன பயன்? என்ற கவிஞரின் வினா பொருள் பொதிந்தது. தூய நெஞ்சோடும் ஆழந்த சிந்தனைகளோடும் புத்துணர்வோடும் கட்டற்று நிற்கும் கவிஞனின் பெருமைகளை உணர்ந்தவர் யார்? என்ற தொனியில் கவிதை நிறைவு பெறுகிறது.

படைப்பின் நோக்கம்:

கம்பதாசன் தமக்கென ஒரு தனித்த தத்துவப் பார்வையைக் கொண்டவராக விளங்கினார். அவரின் கவிதைகள் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் படம்பிடித்தன. சமூகத்தின் பெருமிதம் உழைப்பில்தான் உள்ளது என்பதனைப் பல கவிதைகளில் அவர் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார். சமத்துவச் சிந்தனையே அவர் படைப்புகளின் அடிநாதமாக விளங்கியது. வாழ்வின் அவலங்களையும் உன்னதங்களையும் பாடுவதே தம் கவிதைப்பணி என்று அவர் கருதினார். குறிப்பாக, பாட்டாளி மக்களின் சோக வாழ்க்கையினையும் அவர் தம் உழைப்பின் அருமை பெருமைகளையும் அவரின் பல கவிதைகள் எடுத்தியம்புகின்றன.

தொழில் இன்றேல் அழிவாகும் அழிவதும் தொழிலே

தொழிலில்லா இடமில்லை, சுதந்திரம் தொழிலே

அழகில்லா ஒன்றினை அழகாக்கும் தொழிலே

அச்சமில்லா உச்சிதத்தின் ஆக்கம் தொழிலே

கழிவில்லாப் பெருமையதன் கருத்துத் தொழிலே

காலத்தால் களங்கமுறாக் கற்புத் தொழிலே

தொழிலாளர் ஓங்கிடுக, அவர்பசி துடைக்கத்

தொண்டாற்றல் நமதுதொழில் கவிதைத் தொழிலே.       (க.க.திரட்டு, ப. 6)

இப்பாடலில் கவிஞர் கம்பதாசன் தொழிலின் பெருமை, தொழிலாளர் பெருமை என்பதாகக் கவிதையை நிறைவு செய்துவிடாமல் தொழிலாளர்களை வாழ்த்தி, அவர் பசி துடைக்கத் தொண்டாற்றுவதே நமது தொழில் என்று பிரகடனம் செய்கிறார். மேலும், தொண்டாற்றல் நமதுதொழில் கவிதைத் தொழிலே என்று சொல்வதன் மூலம் படைப்பாளியின், படைப்பின் உண்மையான நோக்கம் உழைக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தேவைகள் நிறைவுபெறும் வகையில் அவர்களின் பசி தீர்க்கப் பாடுபடுவதே என்பதனையும் தெளிவு படுத்துகின்றார்.

சமத்துவக் கவிஞன்:

                தமிழின் நீண்ட நெடிய இலக்கியப் பரப்பில் ஆயிரக் கணக்கிலான படைப்பாளிகளைக் கண்டு உவந்திருக்கிறோம். இதில் கம்பதாசனுக்கு என்ன தனிச்சிறப்பு? கம்பதாசன் ஒரு சமத்துவக் கவிஞன். சோ~லிசச் சிந்தாந்தக் கவிஞன். சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. ஒரு பக்கம் உழைப்பாளி - சுரண்டப்படுபவன், மறுபக்கம் முதலாளி - சுரண்டுவோன். இந்த இரண்டு வர்க்கங்களில் யார் பக்கம் நின்று இலக்கியம் படைப்பது? தாம் படைக்கும் இலக்கியம் யாருடைய குரலாக ஒலிக்க வேண்டும் என்பதில் கம்பதாசன் மிகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டோடு தம்முடைய படைப்புகளை உருவாக்கினார்.

நீங்கள் சிலபேர் நிலம்படைத்தோர்

நாங்கள் பலபேர் ஏர்உழுவோர்

நீங்கள் சிலபேர் விருந்துண்போர்

நாங்கள் பலபேர் பசித்திருப்போர்

நீங்கள் சிலபேர் மாளிகையில்

நாங்கள் பலபேர் மண்குடிலில்          (க.க.திரட்டு, பக். 68-69)

ஏற்றத் தாழ்வுகள் மண்டிக் கிடக்கும் இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பில் நிலம் படைத்தவர்கள் சிலராகவும் அந்த நிலங்களில் உழைக்கும் மக்கள் பலராகவும் விருந்து புசித்திருப்போர் சிலராகவும் வயிறு பசித்திருப்போர் பலராகவும், மாளிகையில் வாழ்வோர் சிலராகவும் மண் குடிசையில் வாழ்வோர் பலராகவும் இருக்கும் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டியதோடு எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும் ஒரு சமதர்மச் சமுதாயம் உருவாக வேண்டுமெனக் கவிதை பாடியவர் கம்பதாசன்.

மனிதரில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் பொதுவானவை. பசி அனைவருக்கும் பொதுவானது.

மண்பாண்டம் செய்யும் குயவனும் - புது

மனைகட்டித் தந்திடும் கொத்தனும்

எண்ணெய் விளைத்திடும் வாணியன் - சிகை

எழிலுறச் செய்திடும் நாவிதன்

புண்ணைத் துடைக்கும் மருத்துவன் - கல்வி

போதிக்கும் பள்ளியின் ஆசானும்

கண்ணுக்குத் தோற்றம் வேறாயினும் - அவர்

காணும் பசியே சமத்துவம்.                 (க.க.திரட்டு, பக். 62-63)

குயவன், கொத்தன், வாணியன், நாவிதன், மருத்துவன், ஆசிரியன் என எந்தத் தொழிலைச் செய்பவனாய் இருந்தாலும் அவர்களுக்குள் தோற்றம் வேறுபடலாமே ஒழிய, பசி அவர்கள் எல்லோருக்கும் பொதுவானது என்கிறார் கம்பதாசன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’என்ற வள்ளுவனாரின் குறளுக்கு விளக்கம்போல் மேற்கண்ட பாடலைப் படைத்துள்ளார் அவர். சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள குயவன், கொத்தன், வண்ணான், நாவிதன் முதலான ஒடுக்கப்பட்ட மக்களைச் சாதியாக அடையாளப் படுத்தாமல் தொழிலாளி வர்க்கமாகச் சுரண்டப்படும் மக்களாக மட்டுமே அடையாளப்படுத்தி அவர்களின் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் கம்பதாசன் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் சிறப்பானவை. பல பொதுவுடைமை இயக்கக் கவிஞர்களின் குரலோடு கம்பதாசனின் குரலை ஒற்றுமைப்படுத்திப் பார்க்கமுடியும் என்றாலும், நவீன கவிதைக்கே உரிய புதுமையான உள்ளடக்கத்தோடும் மரபுக் கவிதைகளுக்கே உரிய உருவ அழகுகளோடும் திகழ்வதில் கம்பதாசன் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன.

கம்பதாசனின் புகழ்பெற்ற பாடலொன்று, ‘பிச்சைக்காரன்’ என்ற தலைப்பிலானது. அக் கவிதையில் கவிஞர் ஒவ்வொன்றும் இளைப்பாற ஏதோ ஒரு இடம் கிடைக்கிறது. பிச்சைக்காரர் களாகிய எங்களின் ஆசை, வேட்கை, கவலை, பசி இவைகள் இளைப்பாற எங்கே இடம்? என்று கேட்பதாக அக்கவிதையை அமைத்துள்ளார்:

மழை இளைப்பாறிடக் குட்டையுண்டு – கொடும்

மனதிளைப் பாறிட எண்ணமுண்டு

அழல் இளைப்பாறிட நீருமுண்டு – எங்கள்

ஆசை இளைப்பாறிட உண்டோ இடம்

பாம்பு இளைப்பாறிடப் புற்றுமுண்டு – பட்சி

பறந்திளைப் பாறிட கூடுமுண்டு

வேம்பிளைப் பாறிட காகமுண்டு – எங்கள்

வேட்கை இளைப்பாறிட உண்டோ இடம்

நதியிளைப் பாறிட ஆழியுண்டு – கொடும்

நஞ்சிளைப் பாறிட மருந்துமுண்டு

கதிரிளைப் பாறிட இரவுமுண்டு – எங்கள்

கவலை இளைப்பாறிட உண்டோ இடம்

கண் இளைப்பாறிடத் தூக்கமுண்டு – அற்பக்

கழுதை இளைப்பாறிட துறையுமுண்டு

பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு – எங்கள்

பசி இளைப்பாறிட உண்டோ இடம்.                        (க.க.திரட்டு, ப. 18)

பருப்பொருளும் நுண்பொருளுமாய் அடுக்கி ஒவ்வொன்றும் இளைப்பாறுகிற இடம் என்று பட்டியலிடும் கவிஞரின் (மனது இளைப்பாறிட எண்ணம், அழல் இளைப்பாற நீர், நதி இளைப்பாற கடல், நஞ்சு இளைப்பாற மருந்து, கண் இளைப்பாறிடத் தூக்கம்) கற்பனையும் சொல்லழகும் கருத்தழகும் கவிதையில் போட்டிபோட்டு ஒன்றையொன்று விஞ்சுவதாக அமைந்துள்ளமையைக் கற்போர் உணர்வர்.

உழைப்பின் மேன்மை:

                கம்பதாசனைப் பொறுத்தமட்டில் உலகத்திலேயே சிறந்தது, மேலானது, அழகானவை எவை என்றால், அவை உழைப்பும், உழைப்பாளியும்தாம். அவரின் கவிதைகளின் உள்ளீடாக நோக்குமிடம் யாவும் நீக்கமற நிறைந்திருக்கும் உண்மை இதுவே. கம்பதாசனுக்குச் சூரியனும், உலகும், கடலும், காற்றும், மழையும், நதியும் என இயங்குகின்ற அனைத்து இயற்கைப் பொருட்களுமே தொழிலாளிகளாகத் தெரிகின்றனர்:

சூரியனும் ஒரு தொழிலாளி .. தினம்

சுற்றும் உலகும் தொழிலாளி

வாரி அலையும் தொழிலாளி .. எதிர்

வந்திடும் காற்றும் தொழிலாளி

மாரி நதியும் தொழிலாளி .. இருள்

மலரும் உடுவும் தொழிலாளி

பாரை நடத்தும் தொழிலாளி .. இனிப்

பரமனடா கலைப் பிரமனடா!               (க.க.திரட்டு, பக். 2-3)

தொழிலாளி என்ற தலைப்பில் கம்பதாசன் எழுதிய மேற்சொன்ன கவிதையில் இயற்கைச் சக்திகள் அனைத்தையும் தொழிலாளி என்று பாராட்டிவிட்டுக் கவிதையை முடிக்கும்முன் உலகத்தை நடத்துகின்ற உழைப்பாளித் தோழர்களே! நீங்கள்தாம் கடவுள், நீங்கள்தாம் படைக்கும் பிரம்மா என்று உழைக்கும் மக்களை உவந்துவந்து போற்றுகின்றார்.

                உழைக்கும் தொழிலாளத் தோழர்களின் அடிப்படைத் தேவைகளை இந்தச் சமூகம் நிறைவு செய்கின்றதா! என்று எண்ணிப்பார்த்து உழைப்பவனுக்குப் பசி, உண்ண உணவில்லை என்ற அநியாய நிலைமை இனியும் தொடருமானால் சினத்தீ உமிழக் கவிஞர் சூளுரைக்கின்றார்.

நலமுறவே உழைப்பவர்க்கு உணவு வேண்டும்

நியாயமிது நியாயமிது நியாயமிதே!

அலவெனவே மறுப்பவர்கள் கடவுளேனும்

அடுத்தகணம் அவர்தலை எம்காலில் வீழும்            (க.க.திரட்டு, ப. 2)

உழைப்பவர்க்கு உணவு என்ற நியாயம் மீறப்படுமானால், உணவில்லை என்று மறுப்பவர் கடவுளாக இருந்தாலும் அவர் தலை எம் காலில் வீழும் என ஆவேச முழக்கமிடும் கவிஞரின் குரலில், ‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’என்ற மகாகவி பாரதியின் கோபக்கனல் தெறிப்பதனைக் காணமுடியும். கம்பதாசனைப் பொறுத்தமட்டில் உழைக்கும் மக்கள்தாம் கடவுள், உழைக்கும் மக்கள் நலனுக்கு எதிரானவர் கடவுளாயிருந்தாலும் அவர் தலை துண்டிக்கப்படும் என்பதுதான் அவர்கொள்கை.

                கம்பதாசனின் ‘கலைத்தேவி’ என்றொரு கவிதை, அந்தக் கவிதையில் கலைத்தேவியாகிய சரசுவதியே கவிஞனிடம் நேரில் பேசுகின்றாள். அந்தக் கவிதையில், கலைத்தேவியின் திருவடியைக் காணக் கவிஞன் காத்திருக்கின்றான். கலைத்தேவி வெண்முகில் ஆடையுடுத்து, தென்றல் வீணை பண் சொல்ல, விடியற் பொழுதில் தாமரை மலர் போன்ற கரங்களால் அபயம் தந்து, “கவிஞனே! என் உண்மை உருவைக் காண வேண்டுமா?” என்று கேட்டு உழைக்கும் மக்களின் வியர்வையைக் காட்டி, “உழைக்கும் மக்களின் உழைப்பில்தான் நான் ஒளிர்வேன்” எனச் சொல்லி மறைகிறாள். கவிதை இதோ:

முத்தைநிகர் பனித்துளியில் முறுவல் செய்து

முளரிநிகர் அங்கையால் அபயங் காட்டி

கத்துகுயில் நிகர்கவிஞா, என்றன் உண்மைக்

கவின்வடிவம் காட்டுகின்றேன் காண்க! என்றே

விம்முமலைத் தோள்குலுங்கப் பழனம் தன்னில்

வேளாளர் நுதல்சிந்தும் வேர்வை காட்டி

என்வடிவம் இதுவேயாம்! உழைப்போர் செய்கை

எதிலுமே யான் ஒளிர்வேன், என மறைந்தாள்.        (க.க.திரட்டு, ப. 27)

வயிலில் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபடும் பாட்டாளியின் வியர்வைத் துளிகளைச் சுட்டிக்காட்டி இப்படி உழைக்கும் மக்களின் உழைப்பு எதுவாயினும் அதிலே நான் ஒளிர்வேன் என்று கலைத்தேவி கம்பதாசனிடம் சொல்லுவதாகப் புனையப்பட்ட இக்கவிதை உழைப்பின் உன்னதத்தை மிகச்சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

                ‘ரிக்ஷாக்காரன்’ என்றொரு கவிதை, சக மனிதர்களை மாடுகளைப் போல் ரிக்~h இழுக்க வைத்துவிட்டு நல்ல உடையில்லாமல் போதிய உணவில்லாமல் அவர்களை மரணக்குழிக்கு அனுப்பும் ஈவு இரக்கமற்ற சமூகம் அகிம்சை என்று பேசுவதில் என்ன நியாயம் உள்ளது என்று கேட்பதோடு உண்மையில் இந்தச் சமூக முரண்தான் கீழான புலைச்செயல் என்று கேலியும் செய்கின்றது:

கந்தை உடைதான் இடையிலுண்டு – கையில்

கைதியைப் போலவே வில்லையுண்டு

சந்து முனையிலே நாய்களைப் போல் - என்றன்

சகாக்களின் கூட்டமும் நிற்பதுண்டு

வயிறாம் அடுப்பினில் பசித்தீயுண்டு – விழி

வழங்கும் உயிர்த்துளி சமைப்பதற்கு

உயிர்தளும்பும் உடல் பானையுண்டு – தங்கி

உண்டிட சாவாம் விடுதியுண்டு

மனிதனை மாடாய் ஆக்கிவிட்டு –என்னை

மரணத்தின் வழியில் ஓடவிட்டு

புனிதமாய் அகிம்சையைப் பேசுகின்றார்! அன்னோர்

புலைச்செயல் போக்கிடும் நாள்வருமோ.                  (க.க.திரட்டு, ப. 8)

சந்து முனையினிலே நாய்களைப் போல் என்றன் சகாக்களின் கூட்டம் என்று எழுதும்போது கவிஞரின் தோழமைக் கரங்கள் அந்தத் தொழிலாளிகளை நோக்கி நீள்வதனை நாம் உணரமுடியும். சமூகம் எதைஎதையோ புலைத்தொழில் என்று சொல்லி மனிதர்களைப் பேதப்படுத்துகிறது. உண்மையில் புலைத்தொழில் எது தெரியுமா? வெளியே அகிம்சை என்றும் ஜீவகாருண்யம் என்றும் பேசுகிற மனிதர்கள் பலர் சக மனிதர்களை நடத்தும் இத்தகு இழிநிலைதான் புலைத்தொழில் என்று கவிஞர் புதிய விளக்கம் தருகின்றார்.

                கவிதை எங்கே இருக்கிறது. அழகான பொருளிலா? உன்னத உணர்விலா? பாடப்படும் பொருளிலா? பாடுவோன் மனத்திலா? இயற்கையிலா? செயற்கையிலா? எங்கே இருக்கிறது கவிதை? கவிமணியைப் பொறுத்த மட்டில், உள்ளத்து உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை. ஒவ்வொரு கவிஞனுக்கும் கவிதை ஒவ்வொரு இடத்தில் தட்டுப்படும். கம்பதாசனுக்கோ கவிதை, நிலவில் இல்லை, மலரில் இல்லை, கடலில் இல்லை, வானவில்லில் இல்லை, தென்றலில் இல்லை, பின் எங்கேதான் இருக்கிறது?

                குலைவீசும் பசியினிலே ஏரை ஓட்டும்

குடியான மக்களிடம் கவிதை கண்டேன்.                 (க.க.திரட்டு, ப. 8)

ஒட்டிய வயிறும் ஓயாப் பசியுமாய்க் கலப்பை பிடித்து ஏர் ஓட்டுகிறானே ஏழைக் குடியானவன், அவனிடம்தான் கவிதை உள்ளது என்கிறார் கம்பதாசன். அப்படியென்றால் நிலவை, மலரை, கடலை, வானவில்லை, தென்றலைப் பாடுவதில் கவிதை முழுமை பெறுவதில்லை, உழைக்கும் ஏழை எளிய மக்களைப் பாடுவதில்தான் கவிதை முழுமை பெறுகிறது என்று பொருள். இதே தொனியில் எது அழகு? எங்கே அழகு? என்ற வினாவுக்கு விடைசொல்லும் கம்பதாசன் கவிதை ஒன்று, ‘புதுமையடா!’என்ற தலைப்பிலானது.

சோதி பெருக்கியே மோதிருள் துடைக்கும்

சூரியனே எழிலா?

வீதி பெருக்கிடும் தோட்டியின் கையினில்

வீற்றிருப்பது எழிலா?

நானிலத் தழுக்கை வாரியில் வெளுக்கும்

நதியதுவே எழிலா?

மானிடர் கறையுடை மதிபோல் சலவைசெய்

வண்ணானின் கை எழிலா?

பொறிகள் கலங்கிடப் புதுமின் இடிகாட்டிப்

பொழியும் மழை எழிலா?

தறியினில் நூலிட்டுச் சகத்தின் மானம் காக்கும்

சாலியன் கை எழிலா?

பிறர்க்கு உதவிடும் பெற்றியுள்ள நெஞ்சம்

பேசரும் பேரெழிலாம்

இறவாத அவ்வெழில் புரக்கும் தொழிலாளர்கை

இருப்பது புதுமையடா!             (க.க.திரட்டு, ப. 22)

இருள் துடைக்கும் சூரியனைவிட, உலகின் அழுக்கை வெளுக்கும் நதியைவிட, பொழியும் மழையைவிட மேலானது, அழகானது, தோட்டியின் கை, வண்ணானின் கை, நெசவாளனின் கை. ஏனெனில் பிறர்க்கு உதவும் மனமே உண்மையில் அழகானது அந்த அழகான மனத்தை உடையவர்கள் தோட்டியும் வண்ணானும் நெசவாளனும். எனவே அவர்களின் உழைக்கும் கரங்களே அழகானவை, புதுமையானவை என்று உழைக்கும் மக்களிடம் கவிதையைக் கண்டு இன்புற்றதைப்போல் இந்தப் பாடலிலும் உழைக்கும் மக்களின் கரங்களில் அழகைக் கண்டு இன்புறுகிறார் கவிஞர் கம்பதாசன்.

உழைக்கும் மக்களின் உரிமைக்குரல்:

உழவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் பண்ணை ஆண்டைகளின் கொடூரத்தையும், ஆலைத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டைபோல் உறிஞ்சும் புதிய முதலாளிகளின் சுரண்டலையும்; கண்டு மனம் கொதித்தார் கம்பதாசன். பாட்டாளி மக்களின் உள்ளக் குமுறலைப் ‘புதுக்குரல்’என்னும் தலைப்பில் ஒரு கவிதையாக, கவிதைப் போர்வாளாக வடித்துத் தந்தார் அவர்:

பயமுடனே இத்தனைநாள் கைகள் கட்டிப்

பட்டிட்ட துயரங்கள் போதும்! போதும்!

வயலுழுதோம் வீதியிட்டோம் வீடமைத்தோம்

வாழ்விற்குத் தேவையெலாம் வழங்கி நாங்கள்

புயமலுத்தோம் பசித்தீயில் பெண்டு பிள்ளை

புழுப்போலத் துடிதுடித்து வேகுதய்யோ

அயர்விலாப் புதுவிழிப்பு கொண்டுவிட்டோம்

அச்சமில்லை பழிக்குப் பழி வாங்க வந்தோம்!

அமைதியுடன் இருந்திட்ட ஆகா யத்தில்

அதிர்இடியும் மழைப்புயலும் தோன்றி விட்டால்

சுமைசுமையாய் விறகிட்டுக் கொளுத்தி னாலும்

சுட்டிடுமோ! ஒற்றுமையால் சூழ்ந்து வந்தோம்

நலமுறவே உழைப்பவர்க்கு உணவு வேண்டும்

நியாயமிது நியாயமிது நியாயமிஃதே!

அலவெனவே மறுப்பவர்கள் கடவுளேனும்

அடுத்தகணம் அவர்தலை எம்காலில் வீழும்           (க.க.திரட்டு, ப. 22)

உழைக்கும் மக்களின் அயர்விலாப் பெருவிழிப்பை அச்சமற்ற வீரத்தைப் புதுக்குரல் கவிதையிலே படைத்துக் காட்டுகின்றார். இத்தனைநாள் பயத்தோடு கைகள் கட்டி வாய்பொத்தி நின்றிருந்த பாட்டாளி மக்களின் குரலாகக் கவிதை முழங்குகிறது, முதலாளிகளின் வாழ்க்கை வசதிகளுக்காக வயலுழுது, வீதி சமைத்து, வீடமைத்து அவர்களின் தேவைகளுக்கான அனைத்தையும் எங்கள் உடல் உழைப்பால் உண்டாக்கித் தந்துவிட்டோம். உழைத்து உழைத்து எங்கள் கைகள் சோர்ந்தன, போதிய ஊதியமில்லாமல் பசித்தீயில் எங்கள் குடும்பத்துப் பெண்களும் குழந்தைகளும் வெந்து போனோம், இனி, பொறுப்பதில்லை தோழர்களே! விழித்துக் கொண்டோம்! அச்சம் நீங்கினோம்! நியாயம் கோருகிறோம்! உழைப்பவர்க்கு உணவு வேண்டும். இதுதான் நியாயம். உழைப்பவனுக்கு உரிய நியாயத்தை வழங்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும், அது கடவுளாகவே இருந்தாலும் அவர்தலை எம்காலில் வீழும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோலக் காலமெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றவன் வெகுண்டெழுந்தால் துரோகம் சாய்க்கப்படும் என்பதனை உழைக்கும் மக்களின் குரலாகவே கவிதை படைத்துள்ள கம்பதாசனின் படைப்புஉத்தி பாராட்டத்தக்கது.

                உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாகத் தமது கவிதைகளைப் படைத்தளித்த கம்பதாசன் தமது சமத்துவ அரசியலின் கொடியினையும் உயர்த்திப் பிடிக்கத் தவறவில்லை. செங்கொடியும் தொழிலாளர் எழுச்சியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். எப்பொழுதும் உழைக்கும் பாட்டாளி மக்களின் பக்கம் நின்று அவர் வாழ்வின் அவலங்களையும் மீட்சிக்கான சிந்தனைகளையும் தம் கவிதைகளின் வழி வழங்கிவரும் கம்பதாசன், அவர்கள் உயர்த்திப் பிடிக்கவேண்டிய செங்கொடியின் புகழினையும் பாடத் தவறவில்லை. தொழிலாளர் கரங்களில் மட்டுமல்ல, காணும் இடந்தோறும் கவிஞருக்குச் செங்கொடிகளாகத் தெரிகின்றன:

காலைச் செழுஞ்சுடரில் - மாலை

கவியும் செக்கரினில்

சீலத் தொழிலாளர் - ஏந்திடும்

செங்கொடி ஓங்குது பார்

அத்தி மீதுபாயும் - வீரஞ்சேர்

அரியின் பிடரியிலே

சித்தங் கலங்காத – தொழிலாளர்

செங்கொடி ஓங்குது பார்

கத்தி கட்டிப்பாயும் - சேவல்

கவின்மிகு கொண்டையிலே

செத்தவர்க்கு உயிரளிக்கும் - தொழிலாளர்

செங்கொடி ஓங்குது பார்

குருதிச் சகதியிலே - இடிநிகர்

குண்டுகள் மத்தியிலே

திருபிறை நிகர்அரிவாள் - சுத்திசூழ்

செங்கொடி ஓங்குது பார்      (க.க.திரட்டு, ப. 25)

காலை இளம் பரிதியிலே, மாலைச் செக்கர் வானத்திலே, சிங்கத்தின் பிடரியிலே, சேவலின் கொண்டையிலே என எங்கெல்லாம் சிவப்பு வண்ணம் ஒளிவீசுகிறதோ அங்கெல்லாம் தொழிலாளர் தம் கரங்களில் ஏந்திடும் செங்கொடி தெரிகிறது என வருணிக்கும் கம்பதாசனின் கவிதை வரிகளில் அவரின் துணிச்சலும் நேர்மையும் பளிச்சிடுகின்றன.

                கம்பதாசனின் திரைப்படப் பாடல்கள் அறிமுகமான அளவிற்குக்கூட அவரின் கவிதைகள் தமிழ் இலக்கிய உலகிற்கு இன்னும் அறிமுகமாகவில்லை. கம்பதாசன் போன்றதொரு மகாகவியைக் காலம் மறந்து விட்டாலோ மறைத்து விட்டாலோ அது மகாகவிகளின் குற்றமன்று!

                கம்பதாசன், ராஜ வாழ்க்கை வாழ்ந்தபோதும், வறுமையில் உழன்று நோயில் நொடிந்து பாயில் கிடந்தபோதும் ஒரே தத்துவம், ஒரே சிந்தாந்தம், ஒரே கொள்கை என்று வாழ்ந்தவர். அவரின் பிற்பாதி வாழ்க்கைச் சோகங்களுக்குப் பலரும் பல காரணங்களைச் சொல்லுகிறார்கள். மதுவும் மங்கையுமே கவிஞரின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் என்பார் பலர். அக்கூற்றில் உண்மையும் இருக்கலாம். அவர் சார்ந்திருந்த திரைப்படத் துறையும் அவரின் வாழ்க்கை முறையும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். ஆனால் 1961இல் மொகலே ஆசம் என்ற பெயரில் இந்தியில் வெளியாகிச் சாதனை படைத்த திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அக்பர் என்ற பெயரில் வெளியானபோது இந்தியாவின் மிகச்சிறந்த இசைமேதை நௌஷத்தின் உன்னத இசைப்பாடல்களுக்கு அற்புதமாகத் தமிழில் பாடல்கள் எழுதிக் கொடுத்து தமிழ்த் திரைப்பட இரசிகர்கள் அனைவரின் ஏகோபித்த பாராட்டுதல்களுடன் புகழின் உச்சியில் நிலைத்திருந்த கம்பதாசன் திடுமென வாய்ப்புகளை இழந்தது ஏன்? என்ற கேள்விக்கு இன்று நம்மால் விடைகாண முடியவில்லை. ஆனால், கவிஞர் 1969இல் தமது மொழிமுத்தம் நூலில் எழுதிய வரிகளைத்தான மீண்டும் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்:

இன்று என்னை வறுமையில் ஆழ்த்தி, என் வாழ்வைக் குலைத்த சிறுபகை, நரிகளின் கூட்டம். நான் இவ்வுலகைவிட்டு இறந்த பிறகாவது உண்மைக் கவிஞன், உலக மனிதன் என்று ஏற்குமாகில் இயேசு கிறிஸ்து கூறியது போல், அவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள், அவர்களை மன்னியுங்கள் என்று எனது ஆத்மா சாந்தியடையும்.

ஆக, கவிஞரின் வீழ்ச்சிக்கு மது, மங்கை மட்டும் காரணமல்ல. பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், குழிபறிப்பு முதலான மனித பலவீனங்களும்தான். இவை போதாதென்று அரசியல் பகைமை. கம்பதாசனின் வீழ்ச்சிக்கு இப்படி எத்தனை எத்தனையோ அகப் புறக் காரணங்கள்.

                கவிஞர் கம்பதாசன் பாவேந்தர் பாரதிதாசனாரிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். அடிக்கடி புதுவை வந்து பாரதிதாசனாரை அவர் சந்திப்பதுண்டு. பாவேந்தருக்குப் பொற்கிழி வழங்க நிதி திரட்டியபோது அந்தக் காலத்திலேயே மிகப் பெருந்தொகை ஒன்றைப் பாவேந்தருக்கு வழங்கி அவரை கௌரவித்தவர் கம்பதாசன். பாவேந்தரைக் குறித்துக் கம்பதாசன் எழுதிய கவிதையின் ஒருபகுதியை இங்கே மேற்கோள் காட்டுவது பொருத்தமாயிருக்கும்

தொட்ட இடமெல்லாம் தமிழ்மணக்கும் - அதில்

சுதந்திரக் காதல் குரல்கேட்கும்

சட்டமொடு சாதி பேதத்தையும் - பொய்ச்

சாமித் தலையையும் தாரணிமேல்

வெட்டிப் பிளந்திட்ட வாள்மொழிகள் - அதில்

விடுதலை ஜோதி பளபளக்கும்

கட்டுமரம் போல அவர்கவிதை – பெரும்

காலவெள் ளத்தையும் நீந்திடுமே.                  (க.க.திரட்டு, ப. 25)

கம்பதாசன் பாவேந்தருக்குச் சொன்ன, “கட்டுமரம் போல அவர்கவிதை பெரும் கால வெள்ளத்தையும் நீந்திடுமே” என்பதை நாம் கம்பதாசனுக்குச் சொல்வோம். கட்டுமரம் போல் கம்பதாசன் கவிதை அது எல்லாக் கால வெள்ளத்தையும் நீந்திவரும்.

-              முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It