தமிழகத்தைப் பொருத்தவரை அரசியல் என்றாலே சாக்கடை, அது தீண்டத்தகாதது என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக உள்ளது. பல்வேறு கலவரங்களை சந்தித்த பின்பும் முஸ்லிம் சமூகத்தில் இன்னும் அரசியல் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. வெளி நாடுகளுக்கு சென்று, அதிகமாக சம்பாதித்து ஊரில் தன்னை ஒரு பணக்காரனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற பகட்டு வாழ்க்கையின் கதாபாத்திரங்களாகத்தான் பெருவாரியான மக்கள் இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடார் சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் முஸ்லிம்களின் மிக பெரிய அரசியல் ஆளுமையான காயிதேமில்லத் முகம்மது இஸ்மாயில் சாஹிபின் புகைப்படம் தேவைப்படுகிறது, உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் அவருடைய புகைப்படம் இல்லாததால் நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் கூறிய பதில் மிகவும் சிந்திக்க வைத்ததாக இருந்தது.

muslims 360"சார், தப்பா எடுத்திக்காதீங்க. நான் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவன் கிடையாது. என்றாலும் எங்கள் இனத்துக்காக வேண்டி போராடிய காமராஜர், நேசமணி போன்ற முக்கிய ஆளுமைகளின் புகைப்படங்கள் பெரும்பாலான நாடார் மக்களின் வீடுகளில் இருக்கும். உங்கள் சமுதாயத்தின் முக்கிய ஆளுமை சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் உங்கள் சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவர். அவரது புகைப்படம் உங்களது வீடுகளில் இல்லாதது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்.

அவர் கூறிய வார்த்தைகள் என்னை கூனி குறுகச் செய்தன. இதே போன்ற நிலைதான் பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்திலும் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சார்ந்த ஒரு பிரமுகரிடம் கேட்டபோது கூட அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. இதே போன்று முக்கிய இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த அரசியல் ஆளுமைகள் குறித்து இளைய சமுதாயத்திடம் மிகவும் பின் தங்கிய அறிவே உள்ளது. அவர்கள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் இஸ்லாமியர்களின் வீடுகளில் போதிய இடத்தைப் பிடிக்காதது மிகவும் கொடூரமானதாகவே நான் நினைக்கிறேன். அவர்கள் குறித்த வரலாறுகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்லும் முக்கிய கதை சொல்லிகளான தந்தைமார்கள் இஸ்லாமிய சமூகத்தைப் பொருத்தவரை எட்டாகனியாகத்தான் உள்ளனர். வெளிநாடு என்ற சாத்தான் இஸ்லாமிய சமூகத்திற்குள் நுழைந்தது முதற்கொண்டு தந்தைகளிடம் வளர வேண்டிய பிள்ளைகள் தாயின் அரவணைப்பில் மட்டுமே வளரவேண்டிய சூழ்நிலை. இதனால் எந்த ஒரு வரலாறும் தெரியாமல் இளம்பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள்.

வீரன் திப்புசுல்தான், ஹைதர் அலி, பஹதூர் ஷா, அபுல்கலாம் ஆசாத் போன்ற தலைவர்களின் வரலாறுகளும் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் சமூகம் ஆற்றிய வீர தீர சம்பவங்கள் குறித்தும் எனது தாய்வழி உப்பா(தாத்தா) கதையாகக் கூறியது, நாட்டுப்புற பாடலாக பாடியது இப்போதும் எனது காதுகளில் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.இதைப்போன்ற கதை சொல்லிகள் தற்போது இளம்பிள்ளைகளுக்கு கிடைக்காதது அவர்களுக்கு பேரிழப்பு என்றுதான் கூறுவேன். இந்த வரலாற்று நீட்சிகளில் இருந்துதான் சமகால அரசியல் குறித்த ஆர்வம் இளம் தலைமுறையிடம் உருவாகும். ஆனால் அந்த இடம் வெற்றிடமாக இருப்பதால்தான் அரசியல் என்றாலே தீண்டத்தகாத ஒன்றாக முஸ்லிம் இளைஞர்களிடம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் அரசியல் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு சென்றதில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்பம் முதற்கொண்டு இப்பணிகளை சில இயக்கங்கள் செய்து வருகின்றன. ஆனால் அது முழுமையான வெற்றியடையவில்லை என்பது உண்மை. முதன் முதலில் என்பதுகளின் கடைசியில் பழனி பாபா இதற்கான துவக்கத்தைக் குறித்தார். அதன்பின்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், அதன் அரசியல் பிரிவு மனித நேய மக்கள் கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் இந்தக் களத்தில் பாரிய பணிகளை செய்துள்ளன‌ என்பது உண்மை. ஆனால் அதுவும் போதுமானதாக இல்லை.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அதன் அரசியல் பிரிவை ஆரம்பித்த போது முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட எதிர்ப்பலைகள் குறித்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிகவும் கடினமான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் அரசியல் குறித்த கருத்தியலைக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. தற்போது அதில் சிறிதளவு வெற்றி பெற்றதாக அந்த அமைப்பினர் கூறுகின்றனர். தற்போது இவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தால் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் வாக்களிக்கச் செல்வது ஹராம்(தடுக்கப்பட்டது) என்று ஒரு சில மார்க்க அறிஞர்களால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் சேட்லைட் சேனல்கள் மூலம் இந்த கெடுதி வாய்ந்த பரப்புரையை அனைத்து இஸ்லாமியர்களின் இல்லத்திற்கும் கொண்டு செல்கிறார்கள். வாக்குப்பதிவின் முந்திய வாரத்தில் வெள்ளிக்கிழமை ஜும் ஆ உரையின் போது சென்னையில் உள்ள பிரபல மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் சம்சுத்தீன் காஷிமி வாக்களிக்க முஸ்லிம்கள் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் அப்படியே சென்றாலும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் நீங்கள் ஓட்டுப்போடும் வேட்பாளர்கள் மோசமானவர்களாக இருந்தால் அதற்காக மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்று அவர் கூறியது மிகவும் வியப்பாக உள்ளது.

தலைமை இமாமின் கூற்றை இந்துத்துவவாதிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அவர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு வராவிட்டால் இந்துத்துவம் எளிதாக ஆட்சிக்கட்டிலில் ஏறமுடியும். அதுதான் அவர்களின் விருப்பமும் கூட. இந்துத்துவ கருத்தியலுக்கு விளக்கவுரை எழுதி முஸ்லிம் சமூகத்தை மிகவும் பிற்போக்கான சிந்தனையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என மரியாதைக்குரிய தலைமை இமாம் கருதுகிறாரோ என்னவோ?

இந்துத்துவத்தின் வாக்குவங்கியை குறைப்பதற்காக முஸ்லிம்களின் வாக்குசதவீதத்தை அதிகரிக்க இஸ்லாமிய இயக்கங்கள் கடுமையான களப்பணியாற்றி வரும் சூழ்நிலையில் இதே போன்ற பிற்போக்கான கருத்துக்கள் இன்னும் கடினமான களத்தை உருவாக்கி கொண்டேதான் இருக்கும். தற்போதுதான் 1980ற்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு துளிர்விட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதே போன்ற கருத்தியல்கள் இந்துத்துவ கோட்பாடுகளுக்கு ஒத்துப் போவதாகவே பார்க்கப்படுகிறது.

- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It