புலம்பெயர்வு - மனித சமூக வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வு ஆகும். முதன்முதலில் பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்த யூதர்களின் வாழ்வைக் குறிப்பதற்காகத்தான் புலம்பெயர்வு எனும் கருத்து நிலை தோன்றியது. அது இன்று விரிவான பொருளைப் பெற்று சமூகப் பண்பாட்டு வரலாற்றறிஞர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

உலகின் பல்வேறு இனமக்களும் தமது உள்நாட்டுப் போர் காரணமாகவும், பிறவற்றாலும் தமக்குத் தஞ்சம் தரும் நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் புலம்பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள், புதிய நாட்டின் காலநிலை பண்பாடு, சட்டதிட்டங்களுடன் மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. போரினால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தமது சொந்த நாட்டைப் பிரிந்து வந்த மனஉளைச்சலோடு புதிய சூழலுக்கு தங்களைப் பழக்க வேண்டிய அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் பண்பாட்டு உளவியல் சார்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

புகலிடத் தமிழர்கள் எதிர்கொள்ளக் கூடிய உளவியல் பிரச்சினைகளில் ஒன்று அந்நியமாதல் எனும் நிலைப்பாடாகும். இலக்கியப் படைப்பில் கசப்பான வாழ்க்கைச் சூழலுக்கு ஆட்பட்டும், தன்னால் படைக்கப்பட்ட உலகிலிருந்தும், தன்னிடமிருந்து, சகமனிதர்களிடமிருந்தும் பிரிந்து நிற்கும் மனிதனின் மனநிலை சார்ந்த கோட்பாடே 'அந்நியமாதல்'. அது பெரிதும் மனிதன் தனக்கென ஓர் அர்த்தமுள்ள மனநிலையை உருவாக்கிக் கொள்ள முடியாதபோது தோன்றுகிறது எனலாம். எனவேதான் புகலிட வாழ்வியலில் இரு வேறுபட்ட மனநிலையை 'கிறான் மரமும் கிளுவை வேலியும்' என்ற இளவாலை விஜயேந்திரனின் கவிதை வரிகள் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றன.

"என் வீட்டின் முன்னாலோ
வேலியென நட்ட கிளுவை
பொன் வண்டு சுமந்து
கோடையிலும் பார்த்திருக்கும்
பிறைநிலவின் கதிர்பட்டும்
பொன்னின் துகள்களென
மின்னித் தெரியும்
கோடையிலும் இறவாத
கிளுவைகளா
குளிரிலும் தலை நிமிரும் கிறான் பரமா?
சிறந்ததென்று கேட்டாயோ
துயரம் சுமந்த மனிதரின்
நினைவுகட்கு சுமையாயிருக்கும்
இயற்கையின் விதிகட்கு
விடையில்லை என்னிடம்"

இருவேறான நிலவியல், பண்பாட்டுச் சூழலில் முரண்பட்ட மதிப்புகள் தம் வாழ்வில் எதிர்படுவதால் தன்னிடமிருந்து, சூழலிலிருந்தும் அந்நியப்படுவதையும், இதன் காரணமான இரு மனநிலையை உடையவராகின்றனர் என்பதையும் உணரமுடிகிறது.

'அன்னியம்' என்ற தலைப்பிலான நாடோடியின் கவிதை வரிகள் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள அந்நியமனோக நிலையைச் சித்திரிக்கிறது. மெல்லிய தென்றல் காற்று வேகமாக வீசியதால் மரக்கிளையில் வாழ்ந்த குஞ்சுக்குருவி தவறி நிலத்தில் விழுந்தது. பெயர் தெரியாத, சிறகுகள் முளைக்காத குருவியை என் அறைக்குள் கடதாசிப் பெட்டிக்குள் புற்களை அடுக்கிக் குடியமர்த்தினேன். பசியால் கத்தும் குருவிக்குப் பழஞ்சோற்றுப் பருக்கைகளை ஊட்டினேன். பழக்கமில்லா குருவி துப்பிவிட்டது என்பாத அமைந்துள்ள கவிதை வருமாறு,

"பெயர் தெரியாத
சிறகுகள் முளைக்காத
சின்னக் குருவி
என் சின்ன அறையில்
சின்னஞ்சிறு குருவிக்கிருக்கும்
கூடுகட்டும் தகைமைகூட
எனக்கு இல்லை
சின்னக் குஞ்சு
என்னதான் தின்னுமாக்கும்?
என் அறிவுக்கு எட்டவில்லை
நேற்றுவரை தாயின் கூட்டில்
இன்று அந்நியமாகும்
போன என்னுடன்....
கீக்.....கீ........எனப்
பசியால் கத்தும்
சின்னக் குருவிக்குத்
தின்னக் கொடுக்க
என்ன உண்டு என்னிடம்
பழஞ்சோற்றுப் பருக்கைகளை
எட்டிப் பார்த்தேன்
பழக்கமில்லாத குருவி துப்பி விட்டது
நேற்று வரை
தாயின் கூட்டில்............
இன்று அந்நியமாகிப் போன என்னுடன்
அன்னியமாக..............
பட்டினித் துணையாக
என் சின்ன அறையில்
என்னுடன்"

புலம்பெயர் வாழ்வில் மதி, எண்ணங்கள் அனைத்திலும் அந்நியமான அகதி எனும் உணர்வு நிலை சுட்டி நிற்பதைக் காணமுடிகிறது. இக்கவிதைவரிகள் அனைத்திலும் 'அகதி' என்ற உணர்வும், அது தந்த சோகமும் கலந்து இழையோடி இருப்பதைக் காணமுடிகிறது. இவ்வுணர்வானது ஒரு வகையான தாழ்வுச்சிக்கலையும், புகலிடத் தமிழர்கள் பெரும்பாலானோர்க்கு ஏற்படுத்தி உள்ளதைப் பார்க்க முடிகிறது.

இக்கவிதையில் தாயகச் சூழலில் இருந்து பிய்த்தெறியப்பட்டு அந்நியமாகிப் போனவனுக்குத் துணையாகச் சின்னக் குருவி மட்டும் உடனிருக்கிறது என்பதினூடான அவனுடைய தனிமைச்சூழல் குறியீடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 'பழஞ்சோற்றுப் பருக்கைகளைப் பழக்கமில்லாத குருவி துப்பிவிட்டது' என்பதாக அமைந்துள்ள கவிதை வரிகள் தாயகம் குறித்த ஏக்கத்தின், உச்சகட்ட விரக்தியின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன.

"ஆயுர்வேதமும் அகதிமனிதனும்' என்ற தலைப்பிலான சுகனின் கவிதை 'கிராமம்' என்ற கட்டமைப்பின் சூழலில் இருந்து போர் எனும் அரக்கனின் கொடூரக் கரங்கள் ஒரு சமூகத்தை சிதைத்து தான் சார்ந்த மண்ணிலிருந்து அந்நியமாகிப் போகும் அகதிகளின் நிலையை உணர்த்துகின்றது.

"மரத்திலிருந்தும் வேரிலிருந்தும்
ஒவ்வோர் அங்கத்திலும்
நான் பிரிக்க முடியாதவனாய்க்
குப்பை மேனியும் வெட்டொட்டியும்
நாயுருவியும் பிரண்பையும்
எனது சூழலில் எது முளைத்தாலும்
என்னோடு வளர்ந்தன
எனக்கு மருந்தாக இருந்தன
எதுவுமே அழிந்தொழியவில்லை

......................................................

நான் எதுவுமற்ற
இரும்பு நகரத்திற்கு
வர நேர்ந்தது

...................................

முல்லையும் திருவாதிரையும்.
வில்வமும், நெல்லியும்
தெய்வ மரங்களும், தெய்வீக மனிதரும்
எங்கோ இருக்க
காத் ஓரெஞ் மனிதராய்
எனது இயக்கம்
காத் ஒரெஞ்சுகளோடு
மனிதர்கள் சந்திக்கின்றனர்
காத் ஓரெஞ்சுகளோடு
மனிதர்கள் தூங்குகிறார்கள்"

– பிரான்சின் மாதந்தப் பிரயாணச்சீட்டு.

கிராமம் என்ற கட்டமைப்பிலிருந்து அந்நியமாகப் போகும்போது, அச்சமூகத்தில் படைப்பு மனோநிலை கொண்ட ஒருவர் அதை எதிர்கொள்ளும்போது, எழுவேண்டிய போராட்ட குணத்தைத் தாண்டியும், சுயசிதைவைத் தன் இருப்பினூடாக எதிர்கொள்கின்ற ஒரு மனிதனின் உள்மனக் குரல்களாகத்தான் இக்கவிதை வரிகளை நோக்க வேண்டியுள்ளது. இதைத்தான் கி.பி. அரவிந்தனின் நேர்காணலும் சுட்டிக்காட்டுகிறது.

"புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். புலம்பெயர்ந்து எங்கோ சென்ற நிலையில்தான் சொந்த நாட்டின் தாக்கத்தை மனத்தில் ஏற்படுத்தி இருக்கும். ஆதிக்கத்தை உணரமுடிகிறது. கலாச்சார தேடல் இருக்கிறது. வெயிலில் நிழலைத் தேடுவது போல எங்களுடைய தேடல் நீடிக்கிறது."

புலம்பெயர்ந்து வாழ்தல் பற்றியும் அதன் குழப்பீடுகள் பற்றியும் கி.பி.அரவிந்தனின் நேர்காணலில் உணரமுடிகிறது. இவ்வரிகளில் தாய்நிலத்தை இழந்த வலி முக்கியமடைந்துள்ளது. இவ்வரிகள் முகம் தொலைத்து மனிதம் சீரழிந்து அந்நியமாகி வாழ்கின்ற அகதி வாழ்வின் கொடுமைச் சூழலை உணர்த்தி நிற்கின்றன.

அகதி வாழ்வதில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொண்டு வருகின்ற ஏளனப் பார்வைகளையும் அதிலிருந்து தப்பி வாழ அகதிகள் அடையும் துயரையும் புகலிடக் கவிதைகளின் வழி கண்டுகொள்ள முடிகிறது.  தங்களுடைய வேர்கள் அறுந்து, உலகின் திசையெங்கும் வீசியெறியப்பட்ட தமிழர்களின் வாழ்வியலில் 'அந்நியமாதல், அகவாழ்க்கையிலும், உளவியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் இந்த அந்நியமாதலின் விளைவாகவே மனநோய் உருவாக்கமும் நிகழ்ந்தேறி வருகிறது என்பதையும் அவர்களின் கவிதைகள் வழி உணரமுடிகிறது.

இக்கவிதை வரிகள் தன்னைச் சுற்றியுள்ள உறவுகள், நேசித்த மண், இனம், மொழி, மதம், பண்பாடு போன்ற பல்வேறு காரணிகளில் இருந்து வேறுபட்டு முழுவதும் மாறுபட்ட தேசத்தில் வாழநேர்ந்த அவலநிலையினை பலமாக ஒலிக்கிறது.

Pin It