வீரத்தமிழன் முத்துக்குமார் ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்து 2009 சனவரி 29ஆம் நாள் சென்னையில் உயிராயுதம் ஏந்தினார். முத்துக்குமார் தமிழ்த் தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டவர். புரட்சிகர இளைஞர் முன்னணியின் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டவர். உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய பண்பான ஆரவாரமில்லாத உழைப்பு, தோழமையான உதவி, விடுதலை அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ளத் தொடர்ந்த வாசிப்பு, சக மனிதர்களை அடையாளம் கண்டு நேசிப்பது, கொள்கையில் நெஞ்சுறுதி - இவையே முத்துக்குமாரின் தனிச்சிறப்பு.

தமிழகம் எத்தனையோ இளைஞர்களின் தீரத்தையும் ஈகத்தையும் போற்றியிருக்கிறது. ஈழத்தில் நடந்த மனிதப் பேரவலத்தைக் கண்டித்துத் தனக்கே எரியூட்டிக் கொண்ட முத்துக்குமாருக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் இதயத்தில் கொடுத்த இடத்தை வேறு எவருக்கும் கொடுக்க வில்லை.

பல நூறு புத்தகங்கள் சேர்ந்து கொடுக்கக்கூடிய சிந்தனை எழுச்சியை முத்துக்குமாரின் இறுதி அறிக்கை கொண்டு வந்தது. இந்த அறிக்கையின் பின்னணியை அறிந்துகொள்ள இனப்படுகொலைக்குப் பின்னால் உள்ள வரலாற்றை ஆய்வது அவசியம்.

ஈழ மக்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதை முத்துக்குமாரின் கடிதம் எல்லாக் கோணத்திலும் விவரிக்கிறது. துரோகம் புரியும், கள்ள மௌனம் சாதிக்கும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கை பார்க்கும் சர்வதேசச் சமூகத்தைக் கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களைப் போர்க்குணமிக்கப் போராட்டத்தைத் தொடங்குமாறு கோரியும், அப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையைச் சுமந்தும் நிற்கிறது முத்துக்குமாரின் இறுதிக் கடிதம்.

"சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால் ஆம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்".

இந்திய ஏகாதிபத்தியம் சிங்கள இனவெறி அரசுக்குத் துணை நிற்பது ஏன்? தெற்காசியாவின் வல்லரசுக் கனவு, இந்திய ஆளும் வர்க்க அரசியல், பொருளியல், இராணுவ ஆதிக்கத்தின் கீழ் இலங்கையை வைத்திருக்கத் துடிக்கும் அதன் பதட்டம், தனக்குக் கீழ் உள்ள தேசிய இனங்களை ஒடுக்குவதன் ஒரு பகுதியாக ஈழத் தேசிய இனத்தை ஒடுக்குவதில் அது கொண்டுள்ள தீவிரக் கொள்கை - இவற்றை யெல்லாம் முத்துக்குமார் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்.

சமூகத்தைப் பற்றிய புரிந்துணர்வும், உலகெங்கிலும் நடை பெற்ற உரிமைப் போராட்டங்கள், அவற்றின் படிப்பினைகள் குறித்துத் துல்லியமான பார்வையும் கொண்டிருந்த முத்துக்குமாருக்குள் உலகில் எங்கும் எப்போதும் நியாயம் தேடும் ஒரு மனிதனின் கோபத் தீ இருப்பதைக் காணமுடியும்.

இந்தி ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவதன் வழி மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம்தான், இந்திய அரசு ஈழப்போரில் தலையிடுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என்றே முத்துக்குமார் கருதினார்.

குழந்தைகளும் பெண்களும் கூட போரில் திட்டமிட்டுக் கொல்லப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முத்துக்குமார் தனக்குத்தானே எரியூட்டிக்கொண்டார். ஆனால் அவர் நினைத்தபடி நம்மால் போரை நிறுத்த முடியவில்லை. சிங்களப் பேரினவாத அரசு தான் நினைத்தபடி வெற்றி கண்டுவிட்டது என்பது நம் முகத்தில் அறைகிற உண்மை. அதன்பின்னாவது நாம் முத்துக்குமார் காட்டிய வழியில்தான் பயணிக்கிறோமா? அவர் கற்றுத் தந்த அரசியல் பாடத்தை நாம் கற்றுக்கொண்டோமா? குறிப்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முத்துக்குமாரின் ஒவ்வொரு நினைவுநாளிலும் நிகழ்ச்சிகளை முன்னெடுக்கத் தவறியதில்லை. அதிலும் விசிக, 'முத்துக்குமார் பாசறை'யே அமைத்திருக்கிறது. இவ்விரு கட்சிகளையும் 'முத்துக்குமார் அரசியலில்' ஊன்றி நின்று மதிப்பீடு செய்வதே எம் நோக்கம்.

ஈழ விடுதலைக்காகவும் தமிழக உரிமைகளுக்காகவும் ஓய்வின்றிச் செயல்பட்டு வருபவர் வைகோ. தமிழகம் சந்திக்கிற எந்த நெருக்கடிக்கும் காத்திரமான போராட்டங்கள் மூலமாக முகம் கொடுத்து வருகிறார், தன் பேச்சால் தமிழக மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்புகிறார் என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவையும், தனித் தமிழீழக் கோரிக்கையின் நியாயத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எப்போதும் உண்டு. தமிழ்த் தேசியம் எனும் அரசியல் முழக்கத்தை அம்மக்களின் நெஞ்சங்களில் ஊன்றியதும், தொடர்ந்து உச்சரிக்கச் செய்ததும் திருமாவளவன் என்பதும் உண்மை.

முத்துக்குமார் அரசியல் என்பது நேர்மையிலிருந்து இம்மியும் விலகாமல், கொள்கை அரசியலில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், விடுதலை அரசியலை இலட்சியமாய்க் கொண்டு உறுதியோடு செயல்படுவதே! இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தன் இறுதிக் கடிதத்தில் கருணாநிதி மட்டுமல்ல, செயலலிதாவும் தமிழர்களுக்கு எதிரானவர் என்பதை வெளிப்படுத்த அவர் மறக்கவில்லை. வைகோவும் திருமாவும் முத்துக்குமாரின் உயிர் ஈகத்திற்குப் பின்பு கூட இந்திய ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிந்தோ, ஒருங்கே கருணாநிதி, செயலலிதா இரு வரையும் தவிர்த்தோ அரசியலை முன்னெடுக்கத் தயாரில்லை.

இதை நன்கு புரிந்து வைத் திருந்ததாலோ என்னவோ முத்துக் குமார் எந்த அரசியல் கட்சித் தலைவரையும் நம்பிக்கைக்கு உரியவராய்த் தன் கடிதத்தில் இனம் காட்டிவிடவில்லை. சுருக்கமாக, ஓட்டுக் கேட்கும் அரசியலும் முத்துக்குமார் வழிகாட்டும் அரசியலும் இரு வேறு துருவங் கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

பாசிச அதிபராட்சி வேண்டும் என்று பேசிவரும் அத்வானி - வெங்கையா நாயுடு முன்னிலை யில் மாநாடு ஒன்றை நடத்தியது மதிமுக. மாநாட்டுக்குப் பெயர் 'மாநில சுயாட்சி மாநாடு'. இதில் அணிவகுத்து வந்த தொண்டர்களோ வைகோவைக் கண்டால் தமிழில் முழக்கமிடு வார்கள். அத்வானியைக் கண்ட வுடன் 'பாரத் மாதாகி ஜே' போடு வார்கள். முன்னாளில் 'ஊழல் நாயகி ஒழிக' என்று முழங்கிய வர்கள்தான், பிறகு 'புரட்சித் தலைவி வாழ்க' என்று முழக்க மிட்டார்கள்.

ஒபாமாவை உயர்த்திப் பிடித்து, சீமீs, ஷ்மீ நீணீஸீ எனும் தலைப்பில் வைகோ ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டார். ஈழத் தமிழர் இன அழிப்புப் போரில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்குமே இல்லையா? இராக்கிலும் ஆப்கனிலும் அம்மக்கள் மீது அமெரிக்கா நடத்திவரும் கொடிய போருக்கும் ஒபாமாவுக்கும் தொடர்பே இல்லையா? அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரை ஆதரித்துவிட்டு மறுபக்கம் பாசிச ராசபக்சேவின் இன அழிப்புப் போரை எதிர்ப்பது முரண் இல்லையா? தமிழினத்துக்கு எதிரான போரைப் பற்றி ராசபக்சேவிடம் உலகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது 'இராக்கிலும் ஆப்கனிலும் அமெரிக்கா இதைத்தானே செய்தது' எனக் கொக்கரித்தான். ஆக, ராசபக்சேவுக்கு முன்னோடியாக இருப்பது அமெரிக்காவே!

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் என்பது போர்க்குற்றம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும்கூட சிங்கள அரசை - ராசபக்சேவை - தப்பிக்க வைக்கும் முயற்சியாகவே அமைந்ததை மறுக்க முடியுமா? இதற்கும் ஒபாமாவுக்கும் தொடர்பே இல்லையா?

குசராத்தில் அப்பாவி இசுலாமியர்கள் ஏறக்குறைய 2000 பேரின் படுகொலைக்குக் காரணமாக இருந்தது பாசக - நரேந்திர மோடி. குசராத் படுகொலையையும் நரேந்திரமோடியையும் நாடாளுமன்றத்தில் வைகோ ஆதரித்துப் பேசியதை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியவில்லை. அதுமட்டுமல்ல, குசராத்துக்கே சென்று நரேந்திரமோடியின் கைத்தலம் பற்றி அவருக்காக வாக்குக் கேட்டது எப்படி பெரியார் - அண்ணா வழி அரசியல் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடிய வில்லை. இந்துத்துவத்திற்கு எதிரான அண்ணாவின் பேச்சும் எழுத்தும் தமிழ்ச் சமூகம் இன்றும் சமத்துவத்திற்கான ஆயுதமாக ஏந்த வல்லவை அல்லவா! திராவிட இயக்க நூற்றாண்டு மாநாடு கூட்டுகிற போதாவது இது குறித்து நேர்மையாக மீளாய்வு செய்யத் தவறுவது சரியா? எல்லாம் பதவிக்காக மட்டுமே என்றால் இன்றும் பதவி அரசியலைக் கைவிட்டு விடவில்லை - இனிமேலும் தமிழ்ச் சமூகத்திற்கு நச்சுப் பரப்பும் கட்சிகளைத் தூக்கிச் சுமக்க நேரிடும் வாய்ப்பு அற்றுப்போய்விடவில்லை என்றால் - இதுதான் முத்துக்குமார் கைகாட்டும் அரசியலா?

விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்காத, பிரபாகரனை இந்தியா கொண்டுவந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன, இலங்கைத் தமிழர்கள் என்று மட்டுமே கவனமாகக் குறிப்பிடுகிற பார்ப்பன ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டுச் சேர்ந்ததை எப்படி நியாயப்படுத்துவது? பார்வதியம்மாளின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 'பார்வதியம்மாவைக் கொன்றது கருணாநிதி' என்றார் வைகோ. ஆனால் அதே நேரடிப் பொருளில் அன்ரன் பாலசிங்கத்தைக் கொன்றது ஜெயலலிதா என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியுமா?

'அடங்க மறு; அத்து மீறு!' என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் வானில், தலித்துகளின் நம்பிக்கை நட்சத்திரமாக எண்பதுகளின் இறுதியில் தன் பயணத்தைத் தொடங்கியவர் திருமாவளவன். தனக்கு அவசியப்பட்ட பதவிகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய சூரப்புலி என்றும், மக்களின் போராட்டத்திற்குப் பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டார் என்றும் முத்துக்குமாரால் சாடப்பட்ட கருணாநிதியோடு அப்போதும் இப்போதும் கைபற்றி இருப்பதும் முத்துக்குமார் பாசறை அமைப்பதும் ஆகப்பெரிய முரண்பாடு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஈழ ஆதரவு அணி ஒன்றை ஏற்படுத்த அழைப்பு விடுத்தும் யாரும் அதற்கு அணியமாக இல்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார் திருமா. திருமாவின் அழைப்பு வரவேற்கத்தக்கதே. அதைச் செவிமடுக்காது அலட்சியப் படுத்திய ஈழ ஆதரவுக் கட்சிகள் கண்டனத்துக்குரியனவே. ஆனால் அதனால்தான் காங்கிரசைத் தாங்கிப் பிடிக்கும் கருணாநிதியோடு கூட்டணி வைத்திருக்கிறேன் என்று அவர் சொல்வதுதான் நமக்கு விளங்கவில்லை. ஆக, திருமாவின் எல்லா முடிவுகளுக்கும் ஈழ விடுதலை அரசியல் அல்ல, பதவி அரசியலே அடிப்படை என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?

ஈழத் தமிழர் அழிப்புக்குக் கருணாநிதி முழு உடந்தை என்பதற்கு முத்துக்குமார் கடிதம் வரலாற்று சாட்சியம். ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் காலில் போட்டு மிதித்து விட்ட கருணாநிதியை, அம்மக்களுக்காக உணர்வெழுச்சியுடன் போராடுவதாகச் சொல்லும் திருமா அண்டியிருப்பது நியாயம்தானா?

'போரை நிறுத்து!' என்ற கோரிக்கை முழக்கத்தோடு உண்ணா நிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் திருமா. அந்நேரம் துணிந்து தன்னையே பணயம் வைத்தது போற்றுதலுக்குரியது. அப்போராட்டத்தை முடிக்கிறபோது 'இனி எக்காலத்திலும் காங்கிரசுக் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்காது' என்றும் 'தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியைப் புல்பூண்டு தெரியாமல் அழிப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் வேலை' என்றும் முழங்கினார்.

ஒட்டுமொத்தத் தமிழகத்தின் போர்நிறுத்தக் கோரிக்கையின் அடையாளமாக அன்று திருமா திகழ்ந்தார். அந்த உண்ணாநிலைப் பந்தலில் முத்துக்குமாரும் நம்பிக்கையோடு அமர்ந்திருந்தார் என்பது பின்னர் நாம் அறிந்துகொண்ட செய்தி. அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் பலரும் குண்டர் தடுப்புச் சட்டங்களில் தளைப்படுத்தப்பட்டு பிணை கிடைக்காமல் சிறையில் கிடந்த ஈகத்தையும் நாம் மறக்கவில்லை. அந்த இளைஞர்கள் அனைவர் நெஞ்சிலும் காங்கிரசு மீதான வஞ்சினம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

அடுத்து வந்த தேர்தலில் 'திமுகவோடுதான் கூட்டணி; காங்கிரசுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி கிடையாது' என்றார் திருமா. 'காங்கிரசும் திமுகவும் கூட்டணி அமைத்துக் கொண்டது பற்றி எனக்குக் கவலையில்லை' என்றார். இதுதான் திருமாவின் நிலைப்பாடு என்றால் தங்கபாலுவிடம் சமாதானம் பேச வேண்டி வந்தது எதற்கு என்பதை விளக்க முடியுமா? போர் நிறுத்தத்திற்காகப் போராடினீர்கள் சரி; ஆனால் சோனியாவும் மன்மோகனும் போர்க்குற்றவாளிகள் என முழங்க முடியாமல் போனதே ஏன்? காங்கிரசின் மிரட்டலுக்கு அஞ்சி டெசோ மாநாட்டில் தனித்தமிழ் ஈழக் கோரிக்கைத் தீர்மானம் இல்லை என அறிவித்து விட்டார் கருணாநிதி. அந்த மாநாட்டில் திருமாவும் பங்கேற்க இருக்கிறார். இப்போதும் திமுகவோடுதான் கூட்டணி என்றால் காங்கிரசுக்கு அஞ்சும் கருணாநிதியோடு திருமாவை உலகத் தமிழர்கள் ஒப்பிடுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு, இந்திய இறையாண்மைக்குப் பங்கமின்றி, கொலைகாரனிடம் கொலைக்கான நியாயம் வேண்டி அரசியல் செய்வதன்று முத்துக்குமார் வழி! இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுக்கக் களம் அமைப்பதே இன அழிப்புச் செய்த இந்தியத்துக்கு நாம் தரும் தண்டனை. அதுவே முத்துக் குமாருக்கு நாம் செலுத்தும் மெய்யான அஞ்சலி. ஈழத்துக்கு அமைந்ததுபோல் நம்மிலிருந்தும் ஒரு தலைவன் போராட்டத்தின் வழி உருவாவான் என்றால் தமிழ்த் தேசிய விடுதலைக்கான தலைவன் உருவாவான் என்பதே அதன் பொருள். முத்துக்குமாரின் உயிரற்ற உடலருகில் நின்றபோது கூட தமிழ்த் தேசியம் நெஞ்சில் கனன்று எழவில்லையெனில் பிறகு எப்போது...?

இளைஞர்களை, மாணவர்களை தேர்தல் கட்சிகளிடம் சிக்கிக் கொள்ளாமல் தமிழ்த் தேசியத்தின் பக்கம் ஈர்ப்பதே நம் முதற்பணி. இதைத்தான் தன் அறிக்கையின் மூலம் அறிவித்தார் முத்துக்குமார். முதலில் நாம் இந்தியர் என்ற மாயையிலிருந்து விடுபட்டுத் தமிழன் என்ற நிலையை அடைய வேண்டும். ஒரே நேரத்தில் இந்தியனாகவும் தமிழனாகவும் இருக்கவே முடியாது.

முத்துக்குமாரை நெஞ்சில் ஏந்தியிருக்கும் இளைஞர்கள் பாட்டாளி வர்க்க, போர்க்குணம் கொண்டு தன்னிழப்புத் துணிவுடன் தமிழ்த் தேசியக் களம் காண வேண்டும்.

ஆம்! நம்மிலிருந்துதான் தலைவன் உருவாவான்!

Pin It