‘மூடு
டாஸ்மக்கை மூடு’
கடலோசையும் விஞ்சிக்
காற்றில் தீமூட்டிய
இந்தப் பாட்டோசை
கொடநாட்டுக்
குளிரையும் குடைந்து
அம்மா காதுகளைக்
கிழித்தது!
கோவனைக்
கொண்டுபோய்ச்
சிறையில் அடைத்தது!
ஒரேநாளில்
காந்தி அளவுக்கு
உயர்ந்துவிட்டார்
தோழர் கோவன்!
காரணம்
‘இபிகோ 24ஏ தான்
இருவர்மீதும் பாய்ந்தது
தள்ளாட்டம் தொலைத்துத்
தமிழகம் எழுந்தது!
‘மகஇக’வின் பெயர்
கல்வெட்டானது
மக்கள் மனங்களில்!
கட்சிகளெல்லாம்
ஓரணி திரண்டதைக்
காணப்போவது
எந்தக் கணங்களில்!
இன்னும் பொறுத்தல்
இழிவெனக் கருதி
முன்னாள் ‘நீதி’களும்
முட்டி தூக்கிவிட்டனர்
சாராய விற்பனைத்
தரகர்
ஆற்றுமணற் கொள்ளை
அரம்பர்
தாதுமணல் தாதாக்கள்
கொள்ளையடிக்கும்
நேரத்தில்
கோவன் தேசத்துரோகக்
குற்றத்தில்!
புயலும் வெள்ளமும்
தமிழகத்தையே
புரட்டிப் போடுகிறது!
இவற்றையெல்லாம் கடந்த
உச்சிக்கேறும்
அம்மாவின் சீற்றச் சினம்
உச்சநீதிமன்றம் வரை
ஓடுகிறது!
கட்டாயம் -
மக்கள் அதிகாரம்
மலரும்!
தங்கைகள் அதிகாரம்
தவிடுபொடி யாகும்!