bk palpedha reviewபுத்தகங்களோடு புழங்குவது என்பதும் தேசாந்திரியாக இருப்பதும் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் இரண்டு முக்கியமான சூத்திரங்களாக இருக்கின்றன. எழுத்து ஒரு சமுதாயத்தை இந்த அளவுக்குப் பக்குவப்படுத்த முடியுமா? மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?! என்ற வியப்பு சமீபமாக மேலெழுகிறது. குறிப்பாக, சமகால எழுத்துகளில் சூழலியல் சார்ந்த எழுத்துகள் அதிகம் கவனம் பெறுகின்றன.

இயற்கையின் மொழியை, விளிம்பு நிலை மக்களின் மொழிகளைக் கற்றுக் கொண்டவர்கள் ஆசிரியர்களாக இருந்து தங்கள் எழுத்துகளால் சிலவற்றை இந்தச் சமூகத்திற்குக் கற்பிக்கவும் விட்டுச்செல்லவும் நினைக்கிறார்கள். அப்படியான எழுத்துகளில் ஒன்றுதான் தோழர் சுப்ரபாரதிமணியன் அவர்களுடையது.

ஒரு கூட்டத்தில் பேசும்போது எழுத்து என்றாலும் எழுத்தாளர்கள் என்றாலும் ஒன்றுதான் என்றார் கவிஞர் சுகிர்தராணி. அப்படி எழுத்தாகவே வாழும் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சமீபத்திய தொகுப்பான, “பால் பேத வன்முறையும் பங்களாதேஷ் அனுபவமும்' என்ற கட்டுரைத் தொகுப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இத்தொகுப்பில் டாக்கா நகர பயணத்தினூடான தனது அனுபவங்களை விளிம்பு நிலை மக்களோடு தொடர்புபடுத்தி கட்டுரைகளாகக் கொடுத்துள்ளார்.

பத்துக் கட்டுரைகள் அடங்கிய இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகள் நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பெண்களின் மீதான நேரடியான மற்றும் மறைமுகமான வன்முறைகளைப் பேசுகிறது.

பாலியல் வன்முறை என்பது நேரடியான பலாத்காரமாக இல்லாமல் எப்படியெல்லாம் பால்பேத வன்முறையாக நிகழ்கிறது என்ற கோணத்தில் இவர் குறிப்பிட்டிருக்கும் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. டாக்காவின் ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்திகளில் வெளியான சில சம்பவங்களான சிலவற்றை முன்வைக்கிறார்.

ஜம்காரா பகுதியின் பின்னலாடைத் தொழிலாளியான 20 வயது இளம்பெண் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் அவளது கணவன் ஓட்டுனராகப் பணியாற்றுகிறார். வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பணத்திற்காக கணவனின் முன்பே இந்த வன்முறை நடந்திருக்கிறது.

இதே போல் ராஜாமணி என்ற பெண்ணின் மருத்துவப் பாலிசியில் தன் கணவர், குழந்தைகள் இடம்பெறவில்லை. கேட்டால் கணவரின் பாலிசியில் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடமளிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. மேலும் மேரி என்பவருக்கு அவர் வேலை பார்க்கும் பின்னலாடை நிறுவனத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்படவில்லை.

இன்னும் ஒரு பெண்ணுக்குத் தன் குடும்பச் சூழலுக்காக அதிக நேரம் பணி செய்ய நினைக்கிறாள் பெண் என்பதால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது, என்ற இந்தச் செய்திகளை பாலின பேத வன்முறைக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறார்.

வேலையிடத்து பாலியல் வன்முறை என்ற கட்டுரையில் கால்சென்டரில் பணியாற்றும் பெண்கள், களப்பணியில் ஈடுபடும் நீதித்துறை சார்ந்த பெண்கள், கார்பன் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள், சமையல் பணியில் ஈடுபடும் பெண்கள், இந்தியப் படையில் இருக்கும் பெண்கள், மீடியா துறை சார்ந்த பெண்கள் என்று அந்தந்தத் துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை சார்ந்த அவலங்களையும், பாலியல் நெருக்கடிகளையும், பட்டியலிட்டு பணியிடங்களில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத பெண்களின் ஆரோக்யம் சார்ந்த கழிப்பறை வசதி, புகார் மையங்கள் குறித்து வேதனைக் குரல் எழுப்புகிறார்.

டாக்காவின் பெண்கள் வன்முறை எதிர்ப்புக் கமிட்டியின் பயன்களை அறியாதவர்களாக, முறைசாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை டாக்காவில் கழிக்க விரும்பாதவர்களாக இருக்கிறார்கள் என்கிறார். அதை நிறுவும்படியான தஸ்லிமா நஸ்ரீன் என்ற கவிஞரின்

"டாக்கா
இது என் நகரம் இல்லை
என்னுடையது என ஒரு போதும்
நான் சொல்லிக் கொண்ட மாதிரியான
நகரம் இல்லை இது
குள்ளத்தனமான அரசியல்வாதிகளுடையது இந்த நகரம்"

என்று தொடங்கும் கவிதையைக் குறிப்பிடுகிறார்.

வங்கதேசத் தொழிலாளர் ஐக்கிய அமைப்பின் இயக்குனராக உள்ள கல்போனா அக்டர் என்பவரைப் பற்றிய கட்டுரையில் பின்னலாடைத் தொழில் சார்ந்த பெண்களுக்காக போராட்டங்களின் தேவை மற்றும் தொடரும் அவலங்களைக் குறித்துப் பேசியுள்ளார்.இத்தொகுப்பில் உரைநடையோடு சில கட்டுரைகளைக் கவிதையாகவும் பதிவு செய்துள்ளார்.

மேலும் கொரோனா காலப் பணி இழப்பு, விபத்திற்குப் பிறகு தொழிலாளியின் நிலை, மதுவிற்கு எதிரான பெண்களின் போராட்டம் என டாக்காவின் பெண்களைப் பற்றிப் பேசும் இந்தத் தொகுப்பில் ஓரிடத்தில் டாக்கா மட்டுமல்ல இந்நிலை இந்தியப் பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் என்ற வலிமிகுந்த உண்மையைப் பதிவு செய்வதன் மூலம் பெண்களுக்கான குரலாக இத்தொகுப்பு கவனம் பெறும்.

- அம்பிகா குமரன்

Pin It