ஒரு நூற்றாண்டுக்கு மேல் பழமையான, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அதனைக் கண்டித்து அக்கல்லூரி மாணவர்கள் பத்து நாட்களுக்கும் மேலாக அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட சில மாணவர்கள் காலவரையற்ற பட்டினிப் போரிலும் ஈடுபட்டு உள்ளனர்.
சட்டக் கல்லூரி பழுதடைந்து போயிருப்பதால், இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது-. கட்டிடத்தைப் பழுதுபார்ப்பது சரியானதுதான். தேவையானதும்கூட. ஆனால் அதற்காக சட்டக் கல்லூரியைத் தலைநகரை விட்டே மாற்ற வேண்டிய காரணம் என்ன? மருத்துவ மனை வளாகத்திற்குள்ளேயே மருத்துவக் கல்லூரிகள் இயங்குவதுபோல, நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே சட்டக் கல்லூரிகள் இயங்குவதுதானே முறையாக இருக்கும்.
மாணவர்களின் போராட்டத்திற்குத் தி.மு.கழகத்தின் பொருளாளர், தளபதி மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பேரவையின் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் எட்வின்ராஜதுரை ஆகியோர் 12.02.2015 மாலை மாணவர்களைச் சந்தித்துப் பேரவையின் ஆதரவைத் தெரிவித்தனர்.
வெல்லட்டும் மாணவர்களின் போராட்டம்.