செம்பருத்தி வீட்டில் உதிரும்
மகரந்தத்தில்
நேசவீடு செய்யும்
குள்ளான் பூச்சிகள்
மனித நம்பிக்கைகளை
கதைகளை தங்களுக்குள் கதையாடுகின்றன
குள்ளான்களை
உள்ளங்கையில் பொதித்து விளையாடும் சிறுமி
கூதலை மீட்டும் நரம்பின் தொடுஉணர்வில்
சிலிர்க்கிறாள்
தங்களின் உணவு எதுயென்கிறாள்
மனித நேசத்தையே
உணவாக்குவதாக சொன்னதோடு அல்லாமல்
இரவில் நிகழும் அவளின்
கதையாடலுக்கும்
உம் கொட்டுகின்றன அவைகள்
பள்ளிப்பாட எழுத்துருக்கள் ஊர்ந்து
ஊர்ந்து உருவம் மாறலில்
கதையில் வரும் முல்லாவையொரு
குள்ளானாக்குகிறாள் அவள்.