சாலையில் நடந்து செல்கிறோம். வழியில் கூரான முள் ஒன்று கிடக்கிறது. தெரியாமல் முள்ளை மிதித்து வழிகிற குருதியைப் பார்த்து புலம்பியவாறு செல்ப வர்கள் ஒரு வகை. முள்ளைப் பார்த்து எச்சரிக் கையாக தாவி குதித்து நல்ல வேளை முள் காலில் குத்தவில்லை என்ற மகிழ்ச்சியுடன் செல்பவர்கள் இன்னொரு வகை. முள்ளைப் பார்த்தவுடன் ஐயோ, இவ்வளவு கூரான முள் பாதையில் கிடக்கி றதே! காலில் குத்தினால் பெரும் காயம் ஏற்படுமே என்ற கவலையுடன் அந்த முள்ளை எடுத்து யாருக்கும் தீங்கு நேராத வகையில் தூக்கி எறிகிற எண்ணம் சமூகத் தில் ஒரு சிலருக்கே இருக்கிற உணர்வாக இருக்கிறது.

எது நடந்தால் என்ன, யாருக்கு நடந் தால் என்ன என்ற உணர்வுடன் பலர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அப்பாவி மக்களுக்கு எதிரான இந்திய அரசின் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து ஒரு பெண்மணி கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் 5 முதல் பட்டினிப் போராட் டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். மணிப் பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படுகிற ஐரோம் சர்மிளா தான் அவர்.

அடக்குமுறைச் சட்டங்கள் இல்லா மல் இந்திய நாடு இல்லை. அடக்குமுறைச் சட்டங்கள்தான் இந்தியாவை நிலைத்து வைத்திருக்கின்றன. புத்தர் பிறந்த பூமி, காந்தி பிறந்த மண் என்று பம்மாத்து வசனங்களை பேசிக் கொண்டிருப்ப வர்கள் காலத்தில்தான் ஐரோம் சர்மிளா வின் பட்டினிப் போராட்டம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1972ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் நந்தாசிங் ஆங்பி---, ----சக்கி தேவி இணையரின் 9ஆவது மகளாக மணிப்பூர் மாநிலத்தின் உபரிக் பகுதியில் ஐரோம் சர்மிளா பிறந் தார். பாட்டி டோன்சிஷா தேவி அரவ ணைப்பில் ஐரோம் சர்மிளா வளர்ந்தார். பாட்டி டோன்சிஷா தேவி சர்மிளா உள்ளிட்ட தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு மணிப்பூ ரின் மகத்தான வரலாற்றை, கிழக் கிந்திய கம்பெனிக்கு மணிப்பூர் அடிமையான வரலாற்றை, மணிப் பூர் பெண்களின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறுகளை கதை களாகச் சொல்லி வளர்த்தார்.

கி.மு. 33 முதல் கி.மு. 1891 வரை நிந்துஜஸ் மரபினர் ஆட்சியில் மணிப்பூர் மிகுந்த செல்வாக்கோடு இருந்தது. மணிப்பூரின் முதல் அர சன் நொங்டா லைரன் பாகேன்பா மற்றும் அரசி லீமா லிசினா முயற்சி யில் இம்பால் பள்ளத்தாக் கில் காங்லா என்ற நகரம் உருவாக் கப்பட்டு காங்லா கோட்டை கட்டி சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். ராணி லீமா லிசினா ஒரு பெண் பூசாரியாக (மைபி) இருந்தவர். போய்ராய் என்ற பழங்குடி மரபைச் சார்ந்தவர். போய்ராய் பின்னர் மைத்தி என்று அழைக்கப்பட்டார் கள்.

1762 இல் ஜெய்சிங் என்ற அரசர் மணிப்பூரை ஆட்சி செய்த காலத்தில் பக்கத்து நாடான பர்மாவுக்கும் (மியான்மர்) மணிப்பூ ருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. பர்மாவிடமிருந்து மணிப்பூரை பாதுகாக்க கிழக்கு இந்திய கம்பெனி யிடம் ஒப்பந்தம் ஒன்று போடப் பட்டது. இதற்கு ஆங்கிலோ- மணிப்பூரி ஒப்பந்தம் என்று பெயர்.

1819இல் மணிப்பூரை ஆட்சி செய்த மன்னர் கம்பீர்சிங் காலத்தில் மீண்டும் பர்மா, மணிப்பூர் இடையே சண்டை வந்தது. கிழக் கிந்திய கம்பெனி உதவியுடன் மணிப்பூர் வெற்றி பெற்றது. இதன் மூலம் மணிப்பூர் கிழக்கிந்திய கம்பெனியின் மறைமுக அதிகாரத் தின் கீழ் வந்தது. 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 27இல் கிழக்கிந்திய கம் பெனி மணிப்பூரில் பெரும் தாக்கு தல் நடத்தி தன்னுடைய அதிகாரத் திற்குள்கொண்டு வந்தது. பொம்மை அரசர்களின் மூலம் மணிப்பூரை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி நடத்தியது.

வெள்ளை அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப் பட்ட நிலையில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15இல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது போலவே மணிப்பூருக்கும் சுதந்திரம் கிடைத் தது. அப்போது மணிப்பூரில் போத் சந்திரா என்ற அரசர் ஆட்சியில் இருந்தார். மணிப்பூரில் வெள்ளை யர் கொடி இறக்கப்பட்டு மணிப் பூரின் முதல் அரசர் பாகன்பா முத்திரை பொறிக்கப் பட்ட கொடி ஏற்றப்பட்டது. மணிப்பூருக்கென புதிய அரசியல் சட்டமும் இயற்றப் பட்டது.

1948இல் பொதுத் தேர்தல் நடந்து மக்கள் பேராளர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டார்கள். மன்னரும் இருந்தார். எந்த ஒரு முடிவையும் மக்கள் பேராளர்களைக் கேட் காமல் அரசன் போத்சந்திராவே செய்து வந்தார். 1949ஆம் ஆண்டு மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந் தத்தில் அரசர் போத்சந்திரா கையெழுத்திட்டார். சுதந்திர மணிப்பூர் இதற்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியானது. மணிப்பூருக்கென இயற்றப்பட்ட அரசியல் சட்டம் காலாவதியாகி இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தொடக் கத்தில் மணிப்பூர் 1956இல் யூனியன் பிர தேசமானது. மணிப்பூருக்கு 1972 இல் மாநிலத் தகுதி வழங்கப் பட்டது.

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு மைத்தி கள். சானமகிசம் என்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள். மணிப்பூரில் மைத்திகள் மட்டுமின்றி நாகர்கள், குக்கிகள், பைதெஸ், தாடுஸ், சிம் டெஸ், வைபெய்ஷ், ரால்டெஸ், காங்டெஸ், ஹமார்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வாழ்கின்றனர்.

1949 அக்டோபர் 15 அன்று இந்தியாவுடன் மணிப்பூர் இணைந் ததை ஏற்றுக் கொள்ளாமல் சுதந்திர மணிப்பூரை உருவாக்க பல அமைப்புகள் போராடி வருகின் றன.

மணிப்பூரில் இருக்கும் வெளி யாட்களை மயாங்குகள் என்றழைக் கின்றனர். மணிப்பூரின் வறுமைக்கு இந்த மயாங்குகள்தான் காரணம் என்று போராளிகள் கருதுகின்ற னர்.

பங்கல்கள் என்று அழைக்கப் படும் இசுலாமியர்கள் (மணிப்பூரில் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 7%) மார்வாடிகள், வங்கா ளிகள் என அனைவரையும் மணிப் பூரை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடுகின்றனர்.

காங்கிலிபெக் மக்கள் புரட்சிகர கட்சி 1977 அக்டோபர் 9இல் தொடங்கப்பட்டது. அதன் முதன் மையான நோக்கம் மணிப்பூரி லிருந்து அந்நியரை விரட்டுவது தான்.

1980 ஏப்ரல் 13இல் உருவான இயக்கம் காங்கிலிபெக் கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிலிபெக், காசாய் என் பது மணிப்பூரின் பழைய பெயர்கள். வைணவத்தின் தாக்கத்தால் 18ஆம் நூற்றாண்டு முதல் இப்பெயர்கள் மாற்றப்பட்டு மணிப்பூர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வருகி றது. காங்கிலிபெக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியமே மணிப் பூரின் விடுதலைதான். மணிப்பூரின் பழைய பண்பாட்டை மீட்க வேண் டும். இந்தியாவில் இருந்து மணிப் பூரை விடுவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிலிபெக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

மணிப்பூரின் விடுதலைக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கு இந்திய அரசு பல்வேறு அடக்கு முறைச் சட்டங்களைப் பயன் படுத்தி வருகிறது. பதற்றநிலைச் சட்டம் 1976, தேசியப் பாதுகாப்புச் சட்டம் 1980, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958 போன்றவை படிப்படியாக மணிப்பூரில் நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958, இராணுவத்திற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கு கிறது. இராணுவம் யாரையும் எந்த நேரத்திலும் கைது செய்வதற்கும் சுட்டுக் கொல்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தின் மீது மாநில அரசின் சட்டங் களின்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மனித உரிமைக்கு எதிரான இந்தச் சட்டம் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து பயன்படுத் தப்பட்டு வருவதைக் கண்டித்து, இதை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் ஐரோம் சர்மிளா தன்னுடைய பட்டினிப் போராட் டதை நடத்தி வருகிறார்.

2000 நவம்பர் 2 அன்று காலை மாலோம் இராணுவ முகாமில் திடீரென்று ஒரு வெடிகுண்டு வெடித்தது. உடனடியாக இராணுவ வண்டியில் அசாம் துப்பாக்கிப் படை பிரிவின் இராணுவ வீரர்கள் புறப்பட்டனர். மணிப்பூர் தலை நகரம் இம்பாலில் உள்ள துலிகால் விமான நிலையம் அருகே உள்ள மாகோம் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். காலை நேரத்தில் பேருந் துக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். பேருந்துக்காக காத்தி ருந்த அப்பாவிகள் 10 பேரும் துப் பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி னர். 1988இல் குழந்தைகளின் வீரத் திற்கான தேசிய விருது பெற்ற 18 வயது இளைஞர் சினாம் சந்திர மணி என்பவரும் இறந்தவர்களில் ஒருவர்.

கவிதை எழுதுவதில் ஈடுபாடு உடையவராக, மனித உரிமை செயற் பாடுகளில் அக்கரையோடு செயல் பட்டு வந்த சர்மிளாவை மாலோம் படுகொலை சம்பவம் கொதிக்க வைத்தது. பாதிக்கப்பட்டப் பகுதிக் குச் சென்ற சர்மிளா அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டு மென்றால் இந்த அடக்குமுறைச் சட்டத்தை இந்திய அரசு உடனடியாக திரும் பப் பெற வேண்டும். திரும்பப் பெறும் வரை நான் உண்ண மாட்டேன் என்று கூறி பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். 2000 நவம்பர் 5 முதல் தன்னுடைய 28 அகவையில் தொடங்கிய போராட்டம் தொடர்கிறது. கைது செய்யப்படுவதும், பின்பு விடுதலை யாவதும், பின்பு மீண்டும் போராட் டம் நடத்து வதும், மீண்டும் கைது என்று சர்மிளாவின் போராட்ட வாழ்வு தொடர்கிறது.

2004இல் சூலை 11 அன்று அசாம் துப்பாக்கிப் படையினர் 17 பேர் நள்ளிரவில் 30 அகவையுடைய தங்கஜம் மனோரமா தேவி என்ற பெண்ணை தூக்கிச் சென்று பாலி யல் வல்லுறவு செய்து பிணமாக வயலில் தூக்கி எறிந்தார்கள். இந் தக் கொடுமைக்கு எதிராக மணிப் பூரே கொதித்தெழுந்தது. இம்பா லில் நடந்த போராட்டம் மனித உள்ளம் படைத்த ஒவ்வொருவரை யும் பதறச் செய்தது. உலுக்கி எடுத்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட பெண்கள் தங்களது ஆடை களை களைந்து நிர்வாணமாக நின்று இந்திய இராணுவத்தை கண்டித்து முழக்கமிட்டனர்.

“இந்திய இராணுவமே, எங் களை பாலியல் பலாத்காரம் செய்! இந்திய இராணுவமே! எங்களைக் கொல்லு, எங்கள் சதையையும் எடுத்துக் கொள்!” என்று முழங்கினர். இதற் குப் பிறகும் இச்சட்டம் முழுமை யாக திரும்பப் பெறப்படவில்லை.

மணிப்பூர் தலைநகரம் இம்பா லில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற கைதியாக ஐரோம் சர் மிளா உள்ளார். மூக்கில் சொருகப் பட்டக் குழாய் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. மனம் தளரா மல் சர்மிளா போராடுவதற்கு அடிப்படைக் காரணம் மணிப்பூர் வரலாற்றில் தடம் பதித்த போராட் டங்களைப் பற்றி அவருடைய பாட்டி சொன்ன வரலாறுகள்தான்.

ஐரோம்சர்மிளாவின் வாழ்க்கை வரலாறு குறித்து கவிதா ஜோசி என்பவர் ஆவணப் படம் ஒன்றை எடுத்துள்ளார். இப்படத் திற்கு தலைப்பு ‘எனது உடல், எனது ஆயுதம்’ என்பதாகும். சர்மிளாவை நோக்கி கவிதா ஜோசி இப்படி ஒரு கேள்வியினை இப்படத்தில் எழுப்பு கிறார். “உங்களுடைய போராட் டத்தை அரசு தற்கொலை முயற்சி என்று கூறுகிறது. அது சட்டப்படி தவறு என்று கூறுகிறதே?” இதற்கு சர்மிளா “அவர்கள் அப்படி நினைக் கலாம். ஆனால் தற்கொலை செய் யும் எண்ணம் எனக்கு இல்லை. நான் அப்படி ஒரு தற்கொலை விரும்பியாக இருந்திருந்தால் இப்படி நாம் இருவரும் பேசிக் கொண்டிருக்க மாட்டோம் அல்லவா, எனது உண்ணாவிரதத் திற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது” என்று பதில் அளித்தார். எனது போராட்டம் மணிப்பூர் மக்களுக் கானது. சொந்தப் போராட்டம் அல்ல. இது ஒரு குறியீடு, உண்மை யின் குறியீடு; அன்பின் குறியீடு. அமைதியின் குறியீடு என்று சர்மிளா கூறுகிறார்.

இந்திய அரசின் அடக்குமுறைச் சட்டத்தை திரும்பப்பெற வலியு றுத்தி ஐரோம் சர்மிளா தன்னு டைய உடலையே ஆயுதமாக ஏந்திக் களத்தில் நிற்கிறார். இந்திய அரசு இவரது குரலுக்கு செவிசாய்க்காமல் உள்ளது. இதே வகையில்தான் இந்த இந்திய அரசு நம்முடைய திலீபன் போராட்டத்திற்கும் காரணமாக இருந்தது. திலீபனை துடிக்கத் துடிக்க சாகடித்ததும் இந்திய அரசுதான்.தன்னுடைய உட லையே ஆயுதமாக ஏந்தி 1987, செப்டம்பர் 15 தொடங்கி சொட் டுத் தண்ணீர்க் கூட அருந்தாமல் 1987 செப்டம்பர் 26இல் திலீபன் இறந்தார்.

மனித உரிமைகளுக்கான ஐரோம் சர்மிளாவின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும். அவரு டைய ஒவ்வொரு அசைவும் உலகுக்கு ஒரு செய்தியை சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அர்ப் பணிப்பு உணர்வுடன் நடக்கும் போராட்டத்தை இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?

Pin It