தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை மிக அபாயகரமான வேகத்தில் அதிகரித்து வருவதை, அண்மையில் வெளியான மக்கள் தொகை கணக் கெடுப்பு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
 
இந்திய அரசு இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதற்கு முன்னர் 2001 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அடுத்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 2011 மார்ச் 31 நள்ளிரவு 12 மணிவரை உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கு இறுதி அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
 
கடந்த 2011 ஏப்ரலில் முதல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு அதற்குப் பிறகு துல்லியமான கணக்கீடுகள் முடிந்து இப்போது இறுதி அறிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி 2011 மார்ச்சு முடிய தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,47,030 (7 கோடியே 21 இலட்சத்து 47 ஆயிரத்து முப்பது) ஆகும். அனைத்திந்திய மக்கள் தொகை சுமார் 121.02 கோடி ஆகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை 97 இலட்சத்து 46 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 15.6 விழுக்காடு கூடியுள்ளது.

ஆனால் இந்த மக்கள் தொகை உயர்வை ஆய்வு செய்தால் இது தமிழர்களின் இயல்பான பிறப்புத் தொகை கூடியதால் வந்த பெருக்கமல்ல, மாறாக வெளிமாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் தமிழ் நாட்டில் வந்து குவிந்ததால் நிகழ்ந்துள்ள வீக்கம் என்பது புலனாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 15.3 (15.3/1000) என்ற அளவில் உள்ளது. இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 7.6 நபர்கள் (7.6/1000) என்ற வகையில் இருக்கிறது. நிகரமாகப் பார்த்தால் ஆயிரத்துக்கு 8.6 பேர் என்ற வகையில் பிறப்பு பெருக்கம் உள்ளது.

இதன்படி கணக்கிட்டால் இயல்பான பிறப்பு விகிதம் காரணமாக தமிழ்நாட்டில் கூடியுள்ள மக்கள் தொகை 53 இலட்சம் பேர்தான் ஆனால் மீதியுள்ள சுமார் 44 லட்சம் பேர் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை ஆகும். அதாவது தமிழர்களின் இயல்பான பிறப்பு விகிதத்தால் உயர்ந்துள்ள மக்கள் தொகை 54.6 விழுக்காடு ஆகும். வெளிமாநிலத்தவர் திபு திபு என்று புகுந்து விட்டதால் வீங்கியுள்ள மக்கள் தொகை 45.4 விழுக்காடு ஆகும்.

இது மிக மிக அபாயகரமான நிலைமையை குறிக்கிறது.

6 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை விகிதத்தை ஆய்வு செய்தால் இந்த ஆபத்து எதிர்காலத்தில் இன்னும் தீவிரம் பெறும் என்பது புரியும். 2001-ல் 6 வயதுக்கு கீழிருந்த தமிழ்நாட்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அன்றைய மக்கள் தொகையில் 15.59 விழுக்காடாக இருந்தது. அந்த வகை குழந்தைகளின் எண்ணிக்கையானது இன்றைய மக்கள் தொகையில் 9.56 விழுக்காடாக குறைந்துள்ளது. அதாவது தமிழர்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது.
 
துல்லியமாகச் சொன்னால் எதிர்காலத்தில் தமிழர்களின் மக்கள் தொகைப் பெருக்கம் குறையப்போகிறது. இந்தச் சூழலில் வெளி மாநிலத் தவரின் நுழைவு இப்போதுள்ள வேகத்தில் நீடித்தால் கூட மிக விரைவில் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இல்லாமல் கலப்பினத் தாயகமாக மாறிவிடும் என்று பொருள்.

1971 - 81இல் அன்றையத் தமிழ்நாட்டு மக்கள்தொகைப் பெருக்கத்தில் வெளிமாநிலத்தவர் நுழைவால் ஏற்பட்ட பெருக்கம் 0.2 விழுக்காடுதான். அதனை இன்றுள்ள 45.4 விழுக்காடு என்ற அளவோடு ஒப்பிட்டுப் பார்த் தால் ஏறத்தாழ 23 மடங்கு வெளி மாநிலத்தவர் பெருக்கம் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. என்பது புரியும்.

விரைந்து தொழில் வளர்ச்சிப் பெற்றுவரும் மாவட்டங்களில் தான் இந்த வெளியார் வீக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
 
சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1991 - 2001க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட 19.15 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2001-- 2011 ஆகியப் பத்தாண்டு காலத்தில் இரண்டு மடங்கையும் தாண்டி 38.6 விழுக்காடாக உள்ளது.

சென்னையை அடுத்துள்ள இன்னொரு மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 2001--2011 இடைப்பட்ட காலத்தில் 35.25 விழுக்காடு தாவியுள்ளது. இதற்கு முந்தையப் பத்தாண்டுகளில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 23.06 விழுக்காடு இது இருந்தது.

தமிழகத்தின் நடுப்பகுதியிலுள்ள கடலோர மாவட்டமான கடலூரில் இப்போதைய பத்தாண்டுகளிலும் மக்கள் தொகை பெருக்கம் 13.80 விழுக்காடு எட்டியுள்ளது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் 7.66 விழுக்காடாக இருந்தது.

தென் தமிழக மாவட்டங்களில் இதே போக்கு வளர்ந்து வருகிறது. எடுத்துக்காட்டாக சிவகங்கை மாவட்டத்தில் 1991-2001 பத்தாண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் 4.74 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2001--2011 காலகட்டத்தில் ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்து 16.09 மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

மதுரையில் 1991 - 2001இல் மக்கள் தொகைப்பெருக்கம் 7.41 விழுக்காடாக இருந்தது இது 2001 - 2011 பத்தாண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்து 17.95 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 4.25 ஆக இருந்தது 13.69 விழுக்காடாக இருந்தது.

இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகிற உண்மை என்ன? கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை மிகை வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதாகும். இன்னொன்று இந்த வெளியார் நுழைவு சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் கோவை திருப்பூர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்கள் என தமிழகத்தின் எல்லா திசைகளிலும் அதிகரித்து வருகிறது என்பதாகும்.

வெளிமாநிலத்தவரின் இவ்வாறான மிகை நுழைவு தமிழர்தாயகத்துக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகம் குற்றமயமாகி வருவதை இது அதிகரிக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் கடுமையாக வெட்டிக்குறுக்கு கிறது.

உலகமயப் பொருளியல் கொள்கை தீவிரப்பட்டதிலிருந்து இந்த வெளியார் மிகை நுழைவு அதிகரித்துள்ளதையும் காணலாம். இந்தியாவில் யாரும் எங்கும் சென்று பணியாற்றலாம். தொழில் தொடங்கலாம் குடியிருக்கலாம், என்ற இந்தியமயம் இந்த வெளியார் மயத்துக்கு உற்ற கருவியாக இயங்குகிறது. 

உலகமயம் - இந்திய மயம் - வெளியார் மயம் என்ற ஆக்கிரமிப்பு அச்சு ஒரு புள்ளியில் இயங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது. வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை தமிழர்கள் தீவிரப்படுத்தாமல் போனால் மிக விரைவான எதிர்காலத்திலேயே தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அனாதையாகும் சூழல் உள்ளது.

உடனடிக் கோரிக்கையாக வெளிமாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது என்றக் கோரிக்கையையும் தமிழர்கள் அழுத்தமாக முன்வைத்து போராட வேண்டும். தவறுவோமேயானால் தமிழ்நாடு கலப்பினத் தாயகமாக மாறி தமிழர்கள் தங்கள் தாயகத்தை இழக்க நேரிடும்.

தமிழீழத்தில்துப்பாக்கி முனையில் சிங்களமயம் செய்ததை உலக மயத்தோடு இணைந்து இந்தியமயம் தமிழ்நாட்டில் செய்கிறது.

தாயகமற்ற ஒரு இனத்து மக்கள் தங்களது மண்ணில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளையோ வர்க்கச் சுரண்டல்களையோ எதிர்த்துப் போராடி வெற்றிப் பெறமுடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம். தாயகம் இருந்தால்தான் சமத்துவ வாழ்வு.

Pin It