விர்ர்..விர்ர்...
விட்டு விட்டு பறந்து
வட்டம் அடித்து அமரும்
வரிசையாய் மின் கம்பியில்
அணிவகுத்து ஆடும்
முற்றத்தில் காயும்
நெல்மணிகளை
பயமின்றி பற்றிச் செல்லும்
வீடுகளைச் சுற்றி
கூடுகள் கட்டி
கீச்.. கீச்... என
குசலம் விசாரிக்கும்
சுற்றிச் சுற்றி
சொந்தம் கொண்டாடிய
சிட்டுக் குருவிகள்
எங்கே போனது?
காங்கிரீட் கூரை வீடுகள்
கூடுகளை கலைத்துப்
போட்டனவோ....
கால் நீண்ட செல்போன்
பூதங்கள் கவ்விச் சென்றனவோ...
சிட்டுக் குருவிகள்
நினைவில் மட்டும்
எட்டிப் பார்க்கின்றன!
- வரத. இராஜமாணிக்கம்