தியாகி சங்கலிங்கனார் மண்ணில் தமுஎகச மாநில மாநாடு

மதுரையில் இருந்து தொடர் வண்டி மூலம் விருதுநகர் சென்று கொண்டிருந்த போது தமுஎகசவை உருவாக்க அரும்பாடுபட்ட ப.ரத்தினம் எங்களோடு பயணித்துக் கொண்டிருந்தார். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு சிறுகுழந்தையைப் போல, ஓடிக்கொண்டிருக்கும் மரங்களுக்கும், ஓடிக்கொண்டிருக்கும் பெட்டியை நோக்கி கையசைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் கையசைவைக் கொடுத்துக் கொண்டிருந்த அவர் ரயிலடியில் இறங்கிய போது குதூலகத்துடன் சொன்னார் : "தோழர்! ஜன்னல் ஓரத்தில் ரயில்பிரயாணம் செய்ய வேண்டும் என்ற நெடுநாள் ஆசை இன்றுதான் நிறைவேறியுள்ளது”.

உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழுக்கு வழங்கிய மிகச்சிறந்த மொழிப்பெயர்ப்பு ஆளுமையின் உள்மனம் குழந்தையின் உலகத்தில் இருந்தது என்ற சந்தோசத்தை தமுஎகச மாநில மாநாடு நடைபெறும் அந்த மண்டபம் செல்லும் வரை உணர முடிந்தது.

தமிழகத்தில் எந்த அமைப்புகள் இலக்கியப் போட்டிகள் நடத்தினாலும் அதில் கட்டாயம் பரிசு பெறும் படைப்பாளிகளைத் தன்னகத்தில் கொண்டு - தவிர்க்க முடியாத சக்தியாய் இலக்கியக் கொடைகளை வழங்கி வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12 வது மாநில மாநாடு செப்டம்பர் 15,16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இளைய படைப்பாளிகள் முதல் இச்சங்கத்தை உருவாக்கிய காலத்தில் இருந்து தனது இலக்கியப்பணியைத் துவங்கியவர்கள் வரை குழுமியிருந்த கரிசல்காட்டு மண்ணான விருதுநகரில் தமிழுக்காக உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் திடலில் எம்.எப்.உசேன் நினைவரங்கத்தில் செப்டம்பர் 15 ம் தேதி கண்காட்சிகள் திறப்பு நடைபெற்றது.

சங்கரன்கோவில் நீ.மணியன், செந்தில்வேல், வள்ளி ஆகியோரின் ஓவியங்களும், ஆண்டனியின் புகைப்படக்கண்காட்சியும், தீக்கதிர் கார்டூனிஸ்ட் வீராவின் கார்ட்டூன் கண்காட்சி, தமுஎகச படைப்பாளிகள் குறித்த கண்காட்சி திறப்புவிழா ஓவியக்கவிஞர் ஸ்ரீரசா தலைமையில் நடைபெற்றது. திரைப்பட எடிட்டர் பீ.லெனின், ஓவியர் தி.வரதராசன் ஆகியோர் கண்காட்சிகளைத் திறந்து வைத்தனர். பண்பாட்டின் அடையாளங்களை உணர்த்தும் வகையிலான படங்கள் ஓவியங்களாக, புகைப்படங்களாக கண்காட்சியை அலங்கரித்தன.

தமுஎகச மாநில மாநாட்டிற்காக மகாகவி பாரதியின் நினைவாக எடுத்து வரப்பட்ட ஜோதியை எஸ்.ஏ.பெருமாள், தியாகி சங்கரலிங்கனார் நினைவு ஜோதியை ப.ரத்தினம், பன்மொழிப்புலவர் மு.கு.ஜெகந்நாத ராஜா புத்தகத் தேரிலிருந்து எடுத்துவரப்பட்ட அவரது படத்தை கு.சின்னப்பபாரதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எந்த ஊர் சென்றாலும் குடையை மறக்காமல் வெற்றுடம்போடு “புரட்சி வாழ்த்துக்கள்” என முழங்கிய மூ.சி.கருப்பையா பாரதி,

சென்னைப்பட்டினத்தின் கடற்கரையோர மக்கள், மீனவ மக்கள் தொடர்பான வாழ்க்கையையும் அவர்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் அவர்களது சொந்த மண்ணின் பண்பாட்டு மொழியிலேயே தமது கதைகளில் எழுதி ஆச்சரியப்பட வைத்த

பா.ராமச்சந்திரன், நாடகக்கலைஞர் கே.பி.பாலச்சந்தர், புதுவையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட இரா.நாகசுந்தரம் ஆகியோரின் படங்களுக்குத் தலைவர்களும், மாநாட்டுப் பிரதிநிதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். மனதை விட்டு நீங்காத அவர்களின் நினைவுகளை எழுத்தாளர் உதயசங்கர் பகிர்ந்து கொண்டார்.

ஓவியக்கவிஞன் வெண்புறாவின் தூரிகையில் அழகுற அமைக்கப்பட்டிருந்த மேடையில் கம்பீரமாய் மிளிர்ந்த காலநிதி கார்த்திகேசு சிவத்தம்பி படத்துடன் கூடிய அரங்கத்தில் இசையுடன் துவங்கியது மாநில மாநாடு. கரிசல் திருவுடையான், கருணாநிதி, வைகறை கோவிந்தன், உமா ஆகியோரின் இனிய பாடல்களைத் தொடர்ந்து தமுஎகச மாநிலத்தலைவர் பேரா.அருணன் தலைமை வகித்து உரையாற்றினார்.

விருதை மண்ணில் மாநாட்டை மிகச்சிறப்பான முறையில் நடத்திட அயராது உழைத்த மாநாட்டின் வரவேற்புக்குழுச் செயலாளர் தேனி வசந்தன், தியாகி சங்கரலிங்கனாரின் தியாகத்தினை நினைவு கூர்ந்து தனது முன்னிலை உரையை வழங்கினார். ஏழை, எளிய மக்கள் கல்விக்காக தொடர்ந்து கரம் கொடுக்கும் மெரிட் எஸ்.சுப்புராஜ், மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராய் இருந்து மாநாட்டை நடத்தியதுடன், வந்திருந்த அனைவரையும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வரவேற்றார்.

“சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுதிக்காக சாகித்யா அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மாநாட்டைத் துவக்கி வைத்தார். செம்மலரில் எனது கதைகளைத் தேர்வு செய்து பிரசுரித்த கே.முத்தையாவை நான் என்றும் மறக்க முடியாது. என் எழுத்தை செம்மைப்படுத்தியவர்களில் அவரும் ஒருவர் எனக்குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், தமுஎகச தொடர்ந்து தன்னைப் பாராட்டி வருவதைக் குறிப்பட்டார். இம்மாநில மாநாட்டைத் துவக்கி வைக்க தன்னை அழைத்ததற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்படுத்துள்ளதாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன்,தற்போது பொறியியல் படிப்பிற்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது குறித்து எந்த படைப்பாளியும் மௌனம் சாதிக்க முடியாது. எழுத்து என்பது நான்கு புறமும் சுடும் நெருப்பு. சாமானிய மனிதனையும், ஜீவராசியையும் நேசிக்காத எதுவும் கலையல்ல. கலை என்பது ஒரு போதும் தீங்கிழைக்காது. சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் எழுத்தல்ல என்று தனது துவக்கவுரையில் அவர் குறிப்பட்டார். முதல்நாள் மாநாட்டில் பங்கேற்று துவக்கி வைத்த நாஞ்சில் நாடன் மாநாடு நடைபெற்ற மூன்று நாளும் அரங்கில் பார்வையாளராக இருந்து பங்கேற்றார். அவரைப் போன்றே மூன்று நாட்களும் மாநாட்டில் பங்கேற்றவர்களில் தமிழகத்தின் மூத்த படைப்பாளி தி.க.சிவசங்கரனும் ஒருவர்.

மாநாட்டின் மிக முக்கிய உரையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என்.சங்கரய்யாவின் பேச்சு அமைந்திருந்தது. “இலக்கியம் என்றால் ஒரு இலக்கு இருக்க வேண்டும். இலக்கு இல்லாமல் இலக்கியம் இல்லை. எழுத மட்டுமின்றி நடவடிக்கைகளிலும் நீங்கள் இறங்க வேண்டும். ஜீவா மூலம் கலை இலக்கியப் பெருமன்றம் உருவாக நாம் தான் காரணமாக இருந்தோம். தமுஎகச உருவாகவும் நாம் தான் காரணம். இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்த இந்த இரண்டு கலை இலக்கிய அமைப்புகளும் பண்பாட்டுத்தளத்தில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது செய்வது அவசியமாகும் என்று குறிப்பிட்ட என்.சங்கரய்யா, பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பிறந்த நாளன்று எட்டயபுரம், புதுச்சேரி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் தமுஎகச சார்பில் ஆண்டு தோறும் விழா நடத்த வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன் என்றார். அதில் பல தரப்பட்ட அறிஞர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாணவ, மாணவிளுக்கான பேச்சுப்போட்டி.பாடல் நிகழ்ச்சி நடத்திட வேண்டும்” என்ற ஆலோசனையையும் முன்வைத்தார்.

கேரள புரோகமன கலாசாகித்ய சம்மேளன மாநிலச் செயலாளர் வி.என்.முரளி மாநாட்டில் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். "இந்தியாவில் நாம் என்ன செய்தோம் என சிலர் கேள்வி கேட்கின்றனர். முதன் முதலில் கலையும், இலக்கியமும் மக்களுக்கே என முழங்கியது நாமே. சமூகம் வர்க்கங்களாகத்தான் உள்ளது. எனவே, வர்க்கப் போராட்டம் நடக்கத்தான் செய்யும். என்றைக்கு சுரண்டல் ஒழிக்கப்படுகிறதோ அன்று தான் போராட்டம் நிற்கும். ஒரு காலத்தில் இலக்கியம் என்பது அதிகாரம் செலுத்துபவர்களிடமே இருந்தது. ஆனால், இப்போது நமது அமைப்பால் அடித்தட்டில் உள்ள மக்களின் மனதாய் எழுத்து பேசுகிறது. நாம் ஏழை எளிய மக்களிடம் கலையை கொண்டு செல்ல வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். ஆந்திராவின் எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் கே.அனந்தச்சாரி பேசுகையில், “தமிழகத்தின் பல படைப்புகள் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கு.சின்னப்பபாரதியின் கதைகளுக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு உள்ளது. இலக்கியப்பரப்பிற்கு தமிழகத்தில் தமுஎகச ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச்செயலாளர் இரா.காமராசு மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். “புதுக்கவிதை வந்த போது எழுத்து குழுவினர் மௌனக்குரலாய் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு பாலியலையும், விரக்தியையும் எழுதிக்கொண்டிருந்த போது மனிதம் பாடிய வானம்பாடிகள் முற்போக்கு எழுத்தாளர்கள். தமிழ்நாட்டில் ஒரு மாற்று நடவடிக்கையைக் கொண்டு வந்ததில் தமுஎகசவின் கலை இலக்கிய இரவிற்கு முக்கிய பங்கிருக்கிறது” என எடுத்துரைத்தார். புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தமுஎகச மாநாட்டினை வாழ்த்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

தலைவர்களின் வாழ்த்துரைகளுக்குப் பிறகு பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. பேரா.அருணன், எஸ்.ஏ.பெருமாள், ச.செந்தில்நாதன், என்.நன்மாறன், நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம், நா.முத்துநிலவன் ஆகியோர் தலைமை வகித்தனர். கலை இலக்கிய ஆய்வு அறிக்கையை மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், அமைப்பு அறிக்கையை துணைப்பொதுச்செயலாளர் கே.வேலாயுதம், வரவு செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் இரா.தெ.முத்து ஆகியோர் முன்வைத்தனர். அதன்மீது பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மேலாண்மை பொன்னுச்சாமி தலைமையில் 40 புத்தகங்கள் மற்றும் குறும்பட, ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டன. நூல்களை அறிமுகப்படுத்தி ஆதவன் தீட்சண்யா, ஜீவி ஆகியோர் பேசினர். புத்தகம் மற்றும் ஆவண, குறும்படங்களை உதயநிலா, லிவிங் ஸ்மைல் வித்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

உலகப் புகழ் பெற்ற படங்கள் மாநாட்டு அரங்கில் திரையிடப்பட்டன. நாம் எப்படி திரைப்படங்களை அணுகுவது என்பதுடன் திரைப்படம் எடுப்பது குறித்த நுணுக்கங்களையும் இயக்குநர் எம்.சிவகுமார் எடுத்துரைத்தார்." திரை இயக்கம் என்று நாம் நினைத்து திட்டமிட்டது உலக சினிமாவை,உன்னத சினிமாவை தமிழ்நாட்டின் உள்ளூர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். அதற்காக நாம் மண்டலவாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, திரை இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு ஐந்து மண்டலங்களில் நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் திரை இயக்கம் ஒரு பதிவு செய்யப்பட்ட கழகமாக செயல்பட வேண்டும். இந்த கழகங்கள் இந்த ஊர் மக்களுக்கு முக்கியமான இந்திய உலக திரைப்படங்களை தொடர்ச்சியாகத் திரையிட வேண்டும். திரைப்படங்களை தமிழில் புரிந்து கொள்ள, தமிழில் அறிமுகமும், தேவைப்பட்டால் நேரடி வர்ணனையும் விவாதமும் நடத்தப்பட வேண்டும். இப்பணிகளை செய்ய நம் தோழர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். எஸ்.கருணா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் எடிட்டர் பீ.லெனின் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள புரஜெக்டர் கருவியையும், உலகத்திரைப்பட குறுந்தகடுகளையும் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார். கடந்த மாநாட்டில் ஒரு புரொஜெக்டரை அவர் தமுஎகசவிற்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 18 ம் தேதி தந்தை பெரியாரின் 133 வது பிறந்த நாள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ச.செந்தில்நாதன் தலைமையில் சிறப்புக்கருத்தரங்கு நடைபெற்றது.

“வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் வேலையை ஊடகம் செய்து வருகின்றன. திரைப்படங்களில் மதவாத அரசியல் பரப்பப்படுகிறது. ராமனை முன்னிறுத்தி இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் கம்பன் கழகங்களை இதற்குப் பயன்படுத்துக்கின்றனர். கம்பனுக்கு முகமூடி அணிவித்து ராமனையும், அவனைச் சார்ந்தவர்களையும் இக்கழகம் தூக்கிப் பிடிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஆசிய ஊடக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சசிக்குமாரின் பேச்சு இந்தியா முழுவதும் ஊடகம் பரப்பிய உண்ணாவிரத நாடகத்தை நன்றாக படம் பிடித்துக் காட்டியது. “ இன்றைய நிதிமூலதனக் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கித் தரும் கருவியாக ஊடகங்கள் மாறி நிற்கின்றன. இந்த சூழலில் ஊடக சுதந்திரம் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய திரிபு நிலை வந்ததற்கு என்ன காரணம்? காலந்தோறும் ஊடங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. தொழிற்புரட்சி காலத்தில் முக்கிய சக்தியாக இருந்த ஊடகம் இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்காலத்தில் தீவிர மாற்றமடைந்துள்ளது எனக்குறிப்பிட்டார். ஒரு மிகச்சிறிய வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கக் கூடிய கருவியாக ஊடகங்கள் இன்று செயல்படுகின்றன. பத்திரிகை ’வாசகர்கள்’ தொலைக்காட்சி. ரேடியோ நேயர்கள் என்பதெல்லாம் இப்போது நுகர்வாளர் என்ற ஒற்றைச் சொல்லில் சுருக்கப்பட்டு விட்டனர். ஊடகம் ஒரு சரக்காக மாற்றப்பட்டு விட்டது- இது பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் சசிக்குமார் சுட்டிக்காட்டினார். அவரது ஆங்கில உரையை அ.குமரேசன் மொழிபெயர்த்து வழங்கினார்.

“மௌனமாய் பெருகும் மதவாத அரசியல்” என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். “தமிழகத்தில் பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்ட தினங்களில் நடத்தப்படும் ஊர்வலங்களில் துவங்கும் மதவெறி கோஷங்கள் மோதலுக்கு பந்தல் கால் ஊன்றி விடுகின்றன. ராணுவ அணிவகுப்பு போல பிள்ளையார் சிலைகள் கரைப்பதற்கு எடுத்துச்செல்லப்படுவதைப் பார்க்கும் போது,

சாதுவாக காட்சி தரும் பிள்ளையாரை இப்படி மததுவேசத்திற்கு பயன்படுத்துகிறார்களே என பலர் வருத்தப்படுகிறார்கள். காதல் தினத்தன்று இந்து முன்னணி அமைப்பினர் தாலிக்கயிறுகளுடன் அலைகின்றனர். தேனி மாவட்டத்தில் காதல் ஜோடியை வழிமறித்த அவர்கள்,அப்பெண்ணின் செல்போனைப் பறித்து அவரது தாயிடம் பேசியுள்ளனர். அப்பெண் வீட்டிற்குச் செல்லும் முன் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கலாச்சார காவலர்கள் போல வேடம் அணியும் இந்துத்துவா அமைப்பினர் பண்டிகைகளையும், திருவிழா நாட்களையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தங்களுடைய அஜெண்டாக்களை தயார் செய்கிறனர்” என மதுக்கூர் ராமலிங்கம் கூறினார்.

“தமிழ் அரசியலின் தடம் பற்றி” என்ற தலைப்பில் சு.வெங்கடேசன் எழுச்சிமிகுந்த உரையாற்றினார். தமிழ் அரசியலை யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் துவக்கி வைத்தார்.சாதி, சமயத்தை முன்னிறுத்திய அவரது வலது மரபிற்கு எதிராக இடது மரபில் தோன்றிய வள்ளலார் பசி,கருணை, ஜீவகாருண்யத்தை கருத்தாய் முன்வைத்தார். இலங்கையில் கோயிலுக்குள் யார், யார் போக வேண்டும் என ஆறுமுக நாவலர் வரையறுத்தார். அவர் கட்டமைத்த அரசியலின் நீட்சி இன்றும் தொடருகிறது. எந்த இனவாதமும் ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லை என்பதற்கு அவர் துவக்கி வைத்த மரபு இன்னும் அடையாளமாய் இருக்கிறது என சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பெருகி வரும் மதவாத அபாயத்திற்கு எதிராக கருத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் மாநாட்டில் ஆற்றிய உரை குறிப்பிடத்தகுந்ததாக அமைந்தது. அவருடைய உரையில் நவீனமயம் என்ற பெயரில் நடக்கும் அழிவைச் சுட்டிக்காட்டினார்.” நான்கு வழிச் சாலைகளுக்காக எண்ணற்ற கிராமங்கள் மறைந்து போய்விட்டன. 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட செலவிட முடியாத நிலையில் இதை நவீனமயம் என்று சொல்ல முடியுமா? ஆனால் இதை நாம் விமர்சிக்கத் தயங்கக்கூடாது. முதலாளித்துவத் தத்துவார்த்தத் தாக்குதல் மிக வலிமையானதாக இருக்கிறது. இந்த சூழலில் நாம் பயன்படுத்தும் முற்போக்கு என்ற வார்த்தை தற்போது முன்வைக்கப்படும் வளர்ச்சி என்பதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ச்சி என்பது ஆங்காங்கே தீவுகளாக தனித்தனியானதாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகப்பெரும்பான்மையான கிராமங்கள், சிறு நகரங்கள் தனித்து விடப்பட்டதாக இந்த வளர்ச்சி இருக்கிறது. இவற்றை உள்ளடக்காத வளர்ச்சி எப்படி உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும்? இதைப் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டும். சந்தை என்பது பண்பாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முக்கிய அம்சமாக மாறிவிட்டது. எனவே இது போன்ற விசயங்களைப் பற்றியெல்லாம் படைப்பாளிகள் படைப்புகளை உருவாக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

கவிஞர் ஜீவி தலைமையில் நவகவி, நா.வே.அருள், வையம்பட்டி முத்துச்சாமி, இரா.தனிக்கொடி. வெண்புறா, லட்சுமிகாந்தன், ப.கவிதாகுமார், ச.விஜயலட்சுமி, ரத்திகா, கிருஷ்ணவேணி, வில்லியனூர் பழனி, உமாமகேஸ்வரி ஆகியோர் கவிதை வாசித்தனர்.

 மாநாட்டின் நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமுஎகசவின் கௌரவத்தலைவராக அருணன், மாநிலத்தலைவராக ச.தமிழ்ச்செல்வன், மாநிலப் பொதுச்செயலாளராக சு.வெங்கடேசன், பொருளாளராக சு.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், துணைத்தலைவர்களாக எஸ்.ஏ.பெருமாள், என்.நன்மாறன், ச.செந்தில்நாதன், மேலாண்மை பொன்னுச்சாமி, நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம், ஆர்.நீலா ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், இரா.தெ.முத்து, ஆதவன் தீட்சண்யா, சைதை ஜெ, கருணா, ஜீவி ஆகியோரும், துணைச்செயலாளர்களாக டி.தங்கவேல், பிரகதீஸ்வரன், ஸ்ரீரசா, ஈஸ்வரன், அ.குமரேசன், போடி மாலன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்துடன் 18 மாநில செயற்குழு உறுப்பினர்களும், 10 சிறப்பு அழைப்பாளர்களும் என 113 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து இம்மாநாட்டில் 467 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அரசு ஊழியர்கள் 151 பேர், வழக்கறிஞர்கள் 10 பேர், பொறியாளர், மருத்துவர் தலா 4 பேர், தனியார்,கைத்தறி உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த 398 பேர் பங்கேற்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 88 பேர் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்ற செய்தி அரங்கை அதிர வைத்தது. சடங்கு மறுப்பு திருமணத்தை 57 பேரும், இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் 57 பேரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்ற செய்தி சுயவிபரக்குறிப்பு மூலம் அறிவிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடுக எனச்சொல்லி உண்ணாவிரமிருந்து உயிர்நீதித்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் சிலை நிறுவ வேண்டும். அவர் பெயரில் ஆய்வு மையம் ஒன்றை விருதுநகரில் அமைத்திட வேண்டும். மகாகவி பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் அடியொற்றி தமிழ்க்கலை இலக்கிய உலகில் தனது கவிதைகளால் படைப்புகளைப் பங்களிப்புச் செய்தவர் கவிஞர் தமிழ்ஒளி. புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெருமுயற்சியால் புதுச்சேரி அரசு விழவாக தமிழ் ஒளியின் பிறந்த நாளை கடைப்பிடிக்கிறது. தமிழக அரசும் அவருடைய பிறந்தநாளை அரசு விழவாகக் கொண்டாட வேண்டும் என மாநாடு கேட்டுக்கொள்கிறது. அவருடைய படைப்புகளை அரசுடமையாக்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 7 தலித்துகள் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

உலக வரைப்படத்தில் கண்ணீர் துளிப்போல காட்சியளிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் துன்ப துயரம் இன்னமும் நீடிப்பது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை நியமித்த ஆய்வுக்குழுவே கூறியுள்ளது. இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட இந்தப்படுகொலைகளை மனித உரிமை மீறல்களை தமுஎகச 12 வது மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப்படுகொலைகள்,மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான சர்வதேச தரத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் உடனடியாக மீள்குடியமர்த்த வேண்டும்.தமிழர்களின் பகுதியிலிருந்து ராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து அதற்கு அதிகபட்ச சுயாட்சி அதிகாரம் அளிக்க அந்த நாட்டு அரசு முன்வரவேண்டும். அண்டை நாடு என்ற முறையிலும். சார்க் கூட்டமைப்பில் முக்கியமான நாடு என்ற வகையிலும் இலங்கை அரசை ராஜ்யரீதியாக இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் நிறைவு நாளான செப்டம்பர் 18 ல் மாநாட்டு வளாகத்திலிருந்து கலைப் பேரணி துவங்கியது. பேரணியை கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி தப்பிசையை முழங்கி துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சிவப்புத் துண்டை வானில் சுழற்றி பேரணியை உற்சாகப்படுத்தி உடன் வந்தார்.

பேரணியில் திண்டுக்கல் சக்தி போர்ப் பறையின் தப்பாட்டம். மதுரை சுடர் கலைக் குழு, திருப்பூர் லெஜிம், திருவில்விப்புத்தூர் புயல் தப்பாட்டம் உள்ளிட்ட கலைக் குழுக்கள் பங்கேற்றன. முடிவில் தேபந்து மைதானத்தில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. அபிராமி உணவுக் குழுமத்தின் சுப்பாராமன் தலைமையேற்றார். வரவேற்புக்குழு செயலாளர் தேனிவசந்தன் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூர், மாவட்ட ஆட்சியர் மு.பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கலைஇரவை துவக்கி வைத்து மாநில துணைத் தலைவர் என்.நன்மாறன் பேசினார். மேடையில் திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, புயல் தப்பாட்டம், பாப்பம்பட்டிஜமா, புதுகை பூபாளம் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நந்தலாலா, பாரதி கிருஷ்ணகுமார்,கு.ஞானசம்பந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசி, சுசீந்திரன், வசனகர்த்தா பாஸ்கர் சக்தி ஆகியோரிடம் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சினிமாத்துறைக்கும், எழுத்துத்துறைக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய கேள்விகளை எழுப்பினார். அதற்கு அவர்கள் உற்சாகமாக பதிலளித்தனர்.பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சுவாரஸ்மான நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளை தமிழ்செல்வன் எழுப்ப அதற்கு இயக்குநர்கள் பதிலளித்தனர் .

கின்னஸ் சாதனை புரிந்த கலை இயக்குநர் மார்த்தாண்டம் ராஜசேகருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. புதியகோணம் என்ற சினிமா வலைத்தள இதழும் கலைஇரவில் வெளியிடப்பட்டது. கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடையான், கருணாநிதி, ஈரோடு ராஜேஸ்வரி, வைகறை கோவிந்தன் உள்ளிட்ட பலர் பாடல்கள் பாடினர். நிகழ்ச்சிகளை கவிஞர்கள் மதுக்கூர் ராமலிங்கம், ஜீவி, எழுத்தாளர் ம.மணிமாறன் ஆகியோர் தொகுத்து வழங்கினார். முடிவில் ஜே.ஜே.சீனிவாசன் நன்றி கூற மாநில மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

Pin It