பெருமாள் கோயில்
குடைக்கம்பு போல்
நீண்ட ஒன்றைக் கொண்டு வருவான்

அதன் உச்சியில்
இரண்டடி உயரம்
பிசின்போல ஒட்டியிருக்கும்
வண்ணக் கலவை

அவன் ஊதுகுழலொலிதான்
எம் பட்டாளத்திற்கழைப்பு

கேட்டவுடன் கடிகாரம் கையில்
கட்டி விட்டவன்
பாம்பு, பூனை, தேள் என
உள்ளங்கையில் ஒட்டிவிட

எல்லாம் மறந்தும்
இன்னும் மறக்காதது
கிழிந்த கால்சட்டைப் பையில்
காசுகளை வாங்கிப்போட்டு
ஏக்கத்துடன் உச்சி பார்க்கும்
அவனின் மகன் முகம்.
- வளவ.துரையன்

Pin It