1.             தோழர் இ.எம்.எஸ். அவர்களின் மூத்த சகோதரர் மனவளர்ச்சி குன்றிய குழந்தையாகப் பிறந்தவர். பொதுவாக, அதற்கு அடுத்துப் பிறக்கிற குழந்தையும் மனவளர்ச்சி குன்றிய குழந்தையாகத்தான் பிறக்கும். குறைந்தபட்சம், அந்தக்குழந்தை சற்று சிந்தை மந்தமாகவாவது பிறப்பதுண்டு. ஆனால், அதற்கு அடுத்து பிறந்த குழந்தை அறிவுக்கூர்மையாக அதிகபட்ச ஞானத்தோடு பிறந்தது. இதை Inborn Genius என்று கூட சொல்லலாம். அவர்தான் தோழர்இ.எம்.எஸ்.. அவர் தன் அண்ணனின் அறிவையும் சேர்த்து பிறந்து விட்டார் போலும். இது ஒரு அதிசயமான நிகழ்வு.

2.             குழந்தையாக இருந்தபோது, அவருக்கு பேச்சு சரியாக வரவில்லை. திக்கித் திக்கிப் பேசினார். அக்காலத்தில் நிலவிய சிகிச்சை முறையை, தலைசிறந்த ஆயுர்வேத வைத்தியர்களைக் கொண்டு அவருடைய பெற்றோர்கள் வைத்தியம் செய்வித்தார்கள். கடவுள் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் என்று எவ்வளவோ செய்து பார்த்தார்கள். பலனில்லை. பெற்றோர்களுக்கு இது பெரும் கவலையே. ஆனால், பின்னாட்களில் அவரின் திக்கிப் பேசும் பேச்சுதான் ஆயிரக்கணக்கானவர்களை, லட்சக்கணக்கானவர்களை காந்தம்போல் ஈர்த்தது. அதிலும், ஒரு மேன்மை என்னவென்றால், அவரின் பேச்சு சாதாரண ஏழை, எளிய மக்களை மட்டுமல்ல, கல்வி கற்காத மக்களை மட்டுமல்ல; அறிஞர்கள் கொண்ட குழாமிலும், மிகக் கற்றோர் மத்தியிலும், தத்துவவியலாளர்கள் மத்தியிலும், தலைசிறந்த பேச்சாக அன்னார்களையும் ஈர்த்தது. இது ஒரு பெரிய அற்புதமே.

3              வடதுருவம் தென்துருவத்தை அடைய முடியாது. ஆனால், தோழர் இ.எம்.எஸ். வாழ்க்கையில் அது நடந்தது. ஆசாடபூபதிகளாக, சாஸ்திர சம்பிரதாயங்களைக் கறாராகக் கடைபிடிக்கும் நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்து விட்ட அவர், அந்தப் பழக்கத்தையெல்லாம் விட்டுவிட்டு, மார்க்சிய சிந்தனையாளராக எதிர்துருவம் சென்றடைந்தார். நில பிரபுத்துவ குடுமபத்திலே பிறந்து விட்ட அவர், முதலமைச்சரானதும் அதே வர்க்கத்திடமிருந்து நிலங்களை எல்லாம் பறித்து, நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியதன் மூலம் வடதுருவத்திலிருந்து தென் துருவத்தில் சங்கமமாகிவிட்டார்.

4.             அவருக்கு வயது ஏற, ஏற, நடை தளர்ந்து, கேட்கும் திறன் குறைந்து, பார்வையும் மங்கியது. ஆனால், அவரின் மூளை மட்டும் சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் இயங்கியது. அது கடைசி வரை பட்டுப் போகவே இல்லை. இப்படி அமைவது அபூர்வம். யாரோ சிலருக்குத்தான் இப்படி அமையும். சிலருக்கு தொண்ணுhறு வயதிலும், கண் பார்வை கெடாது. சிலருக்கு ஒரு பல் கூட விழாது. சிலர் அந்த வயதிலும் தடியில்லாமலும், துணை இல்லாமலும் நடப்பார்கள். நம்முடைய தோழர்இ.எம்.எஸ். அவர்களுக்கு மூளை மட்டும் செவ்வனே செயல்பட்டது. அவருக்கு வளர்ச்சியின் தளர்ச்சி இருந்தாலும், முதிர்ச்சியின் வளர்ச்சி வாட்டமுறாது செயல்பட்டது.

5.             அவர் சிந்தித்ததையெல்லாம் எழுத்து வடிவில் படைத்தார். இது எல்லோராலும் முடிகிற விஷயமல்ல. நாம் கூட எவ்வளவோ சிந்திக்கிறோம். ஆனால் அவைகளையெல்லாம், எழுத்து வடிவில் கொண்டு வர முடிவதில்லை. அப்படி எழுத்தில் கொண்டு வந்தாலோ நாம் சிக்கிக் கொள்வோம். ஏனென்றால், ஆகாததையும் சிந்திக்கிறோம். அவரோ ஓயாது எழுதி எழுதி, காலம் பூராவும் மேடைகளில் பேசி, கமிட்டிகளில் விவாதித்து - இவையெல்லாம் இப்பொழுது புத்தகத்தில் பல பாகங்களாக அச்சிடப்பட்டு வருகின்றன. 100 பாகங்கள் அதாவது ஐம்பதாயிரம் பக்கங்கள் வரும் என்று அறிவிக்கிறார்கள். இந்த அசாதரண சாதனையை எந்த அரசியல்வாதியும் இந்தியாவில் சாதிக்கவில்லை. தோழர் லெனினுடைய பேச்சும், எழுத்தும் 42 பாகங்கள் வந்துள்ளன. ஆனால் அவர் 55 வயதுக்கு முன்னாலே மாண்டு போனார். காரல் மார்க்ஸ் கூட எழுதுவதில் அவர் ஒரு இயந்திரமே. ஆனாலும் கூட, அவர் பல புத்தகங்களைப் படித்து, குறிப்புகள் எடுததிருந்தார். அதுவே, பத்தாயிரம் பக்கங்களாகும். இவைகளையெல்லாம் கடந்து தோழர் இ.எம்.எஸ். எழுத்தில், முன்னோடியாகத் திகழ்ந்தார்.

6.             தோழர் இ.எம்.எஸ். ஓய்வு என்பதையே அறியாதவர். தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் படிப்பது, எழுதுவது, மேடையில் பேசுவது, கமிட்டிகளில் விவாதிப்பது என்பதைத் தவிர பொழுது போகவில்லை என்று கூறி, அவர் ஒருபோதும் ஓய்வு எடுத்ததை யாரும் இதுவரை பார்க்கவில்லை என்கிறார்கள். விதிவிலக்கான அதிசய மனிதர் இவர்.

7.             இரண்டுமுறை முதலமைச்சராக இருந்தார். பதினைந்து ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். ஆனால், இந்த நீண்ட நெடிய வாழ்க்கையில் கடைசி வரை சிறிதும் சொத்தற்றவராக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். தன்னுடைய குடும்ப சொத்தாக வந்த பங்கையும் கட்சிக்கு கொடுத்துவிட்டு, வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். அவரை ஒரு பத்திரிகைக்காரர் எப்படி நீங்கள் வாழ்க்கையை நடத்துகிறீர்கள் என்று கேட்ட போது, கட்சி கொடுக்கும் அலவன்சையும், புத்தகம் எழுதுவதால் கிடைக்கும் ராயல்டியையும் வைத்துதான் குடும்பம் நடத்துகிறேன் என்றார். இன்றைய அரசியல் வாழ்க்கையில் முனிசிபல் கவுன்சிலர்களெல்லாம் ஸ்கார்ப்பியோ கார் வைத்துக் கொண்டு வலம் வருகிற இந்த நாட்களில், இ.எம்.எஸ். ஓர் உண்மையின் உதாரணமாக, நேர்மையின் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்.

8.             அவரின் சுறுசுறுப்புக்கு ஓர் அடையாளர் அவர் இறப்பதற்கு முன்னால் கூட, தேசாபிமானிப் பத்திரிகைக்கு இரண்டு கட்டுரைகளை முடியாத களைப்பிலும், சிரமப்பட்டு எழுதி விட்டுத்தான் மறைந்து போனார். கர்ணன் கழுத்தில் கவச குண்டலத்தோடு பிறந்தான் என்று புராணம் கூறுகிறது. அது உண்மையோ? பொய்யோ? ஆனால், தோழர் இ.எம்.எஸ். கடைசி நாள் வரை பேனாவும், கையுமாகத்தான் வாழ்ந்தார் என்பது முழுக்க முழுக்க உண்மை.

9.             சமூக சீர்திருத்த அமைப்பில் தீவிரமாகப் பணியாற்றிய அவர், சமூக சீர்திருத்தத்தை பிரச்சாரம் செய்யும் நாடகங்களிலும் நடித்துள்ளார். பெண் உரிமையைப் போற்றும் “சமையல் கட்டிலிருந்து அரங்கத்திற்கு” என்னும் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தார் என்பது வியப்பான செய்தியாகும். அவரைப் பற்றி பலர் விரிவாகப் பேசுவதுண்டு. ஆனால், அவர் ஈ.வே.ரா. பெரியார் இயக்கத்தின் பாலும் ஈர்க்கப்பட்டவர் என்பதை நாம் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் தன் வாலிப வயதில் கேரளாவில் இயங்கிய பகுத்தறிவாளர் அமைப்பின் பிரச்சாரத்தைக் கூர்ந்து கவனித்துள்ளார். அந்த அமைப்பு நடத்திய “யுக்தி வாதி” பத்திரிகையையும் வாங்கிப் படித்துள்ளார். தமிழகத்தில் ஈவேரா பெரியார் நடத்தி வந்த பகுத்தறிவு இயக்கம் பற்றியும் கவனித்து வந்ததோடு, அவரின் போதனைகளையும் உள்வாங்கி உள்ளார். மேலும், தேசிய இயக்கம், இடதுசாரிகளின் தர்க்க ரீதியான போக்கு - இவைகளையும் உள்வாங்கிக் கொண்டு மதப்பிடிப்பிலிருந்து அவர் முழுமையாகத் தன்னை துண்டித்துக் கொண்டார் என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார்.

10.          அவர் கேரள முதலமைச்சராக இருந்த போது, டாடா நிறுவன தொழிற்சாலை அமைப்பது சம்பந்தமாக ஏதோ ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது. அது விசயமாக விவாதித்த கட்சியின் மத்தியக்குழு அவரை விமர்சித்ததாம். அவர் அந்த கூட்டம் முடித்துவிட்டு டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது ஒரு பத்திரிகை நிருபர் , நீங்கள் பெரிய தலைவர், கேரள மாநிலத்தின் ஒரு முதலமைச்சர், உங்களை கட்சி விமர்சனம் செய்துள்ளதே அதை நீங்கள் எப்படி ஜீரணித்தீர்கள்? என்று கேட்டார். அவர் அதற்கு சொன்ன பதில் : “என்னை என் கட்சி விமர்சிக்காமல் வேறு யார் விமர்சிக்க முடியும்” என்று கேட்டு, தன்னுடைய கட்சிக்கட்டுப்பாட்டை தெற்றென வெளிப்படுத்தினார். யாருக்கு வரும் இந்த அடக்கம்.

11.          தோழர் இ.எம்.எஸ். தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்வதில் மற்றவர்களுக்கு தலைசிறந்த முன்னுதாரணமாக இருந்தார். அதில் கொஞ்சம்கூட அவர் தயக்கம் காட்டியதேயில்லை. அவ்வாறே மற்றவர்கள் அவரை விமர்சனம் செய்தபோது கூட, அதையும் மிகப் பொறுமையாக ஏற்றுக் கொண்டு, நிதானமாக பதில் கொடுக்கும் வழக்கத்தை கடைப்பிடித்தார்.

12.          தோழர் இ.எம்.எஸ். உயர்ந்த நம்பூதிரி பிராமணர் குடும்பத்தில் பிறந்த இவர் சைவராகவே வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அசைவராக மாறி, ஒரிஜினல் அசைவர்களை விட அசைவத்தை விரும்பி ருசித்து சாப்பிடுவார். இந்தப் பழக்கம் அவருக்கு நட்சத்திர ஓட்டல்களில் தலைவர்கள் கொடுத்த விருந்தில் சாப்பிட்டு அசைவராகவில்லை. அந்தப்பக்கம் அவர் போகவே இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் அரசாங்கத்தின் கெடுபிடியால் தலைமறைவாக வாழ்ந்தபோது, மாதக்கணக்கில் மீனவர்கள் வீடுகளிலும், கள் இறக்குவோர் வீடுகளிலும் தங்கிய போது, அவர்களுக்கு கிடைத்த உணவாகிய மீனையும், இறைச்சியையும் அன்போடு கொடுத்த போது, அதைச் சாப்பிட்டுதான் அவர் அசைவர் ஆனார். தலைமறைவாக அவர் வாழ்ந்த காலத்தில் , அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு சன்மானமாக பிரிட்டிஷ் ஆட்சி அவர் தலைக்கு ரூபாய் ஐயாயிரம் என்றும், காங்கிரஸ் ஆட்சி ரூபாய் பத்தாயிரம் என்றும் விளம்பரம் செய்தது அரிய செய்தியே.

12.          சில சந்தர்ப்பங்களில் அவரோடு இருக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந்த அனுபவங்களும் என்னை வியக்க வைத்தது.

                தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரு சமயம் அவர் நெல்லை வந்திருந்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். அந்த நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவர் அவரிடம் திடீரென ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டார் : தாங்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்தீர்கள், அந்தக் கட்சி எந்தெந்தக் காலத்தில் உடைந்தது, எந்தக் காரணங்களுக்காக உடைந்தது, யார் யாரால் உடைக்கப்பட்டது என்ற கேட்டு விட்டார். பத்திரிகை பேட்டி நடந்த அந்தச் சூழ்நிலையில் அது சம்பந்தமில்லா கேள்விதான். தோழர் இ.எம்.எஸ். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். எனக்கும் ஓர் அச்சம் ஏற்பட்டது. எப்போதோ நடந்த நிகழ்ச்சிகளை அவர் எப்படி ஞாபகப்படுத்தி சொல்ல இயலும் என்று இந்தக் கேள்வி இப்போது எதற்கு? என்று எரிச்சலடைந்தேன். ஆனால் அவரோ புன்னகைத்தவாறே வருட கிரமமாக, ஒவ்வொரு பிளவையும் துல்லியமாக சொல்லி முடித்தார். அவரின் ஞாபக சக்தி கண்டு வியந்து போனேன். அபபோது தோழர் கே.பத்மநாபனும் உடன் இருந்தார். பொதுவாக அவரைப்பற்றி கேரளாவில் பேசப்படுவது, அரசியல் விஷயமாக அவரிடம் கேள்வி கேட்டால் விரல் நுனியில் விவரங்கள் வைத்துக் கொண்டு உடனுக்குடன் பதில் செல்லுவார் என்பார்கள். அவரை அரசியல் ‘ரிஷி’ என்றும் சொல்லுவார்கள்.

13.          மத்தியக்குழு நடத்திய வகுப்பு ஒன்றுக்கு நானும், தோழர்கள் ஏ.கே.பத்மநாபன், வகாப், பி.ராமச்சந்திரன் ஆகியோர் போயிருந்தோம். அந்த வகுப்பிற்கு பல மாநிலத்திலிருந்தும் தோழர்கள் வந்திருந்தார்கள். தோழர் இ.எம்.எஸ். வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென இடைமறித்து மேற்கு வங்கத்தோழர் பிமன் பாசு உரத்த குரலில் இ.எம்.எஸ். வகுப்பை நிறுத்தச் சொல்லி கத்தினார். உடனே அவரும் வகுப்பு எடுப்பதை நிறுத்திவிட்டார். கத்திய தோழர் இன்று பாராளுமன்றத்தில் எல்லா உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள். நம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவில்லை. இது ஏன்? எனக்கு விளக்கம் வேண்டும் என்றார்? மற்ற தோழர்களுக்கு எல்லாம் அவரின் நடவடிக்கை பெரிய எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், தோழர் இ.எம்.எஸ். ஒரு புன்சிரிப்போடு, பதில் கொடுத்தார். பாராளுமன்றத்தில் நடந்த விஷயம் எனக்குத் தெரியாது. மாலையில் அதை விசாரித்து உங்களுக்கு பதில் தருகிறேன் இப்பொழுது அமைதியாக அமருங்கள் என்று பொறுமையாக சொல்லி வகுப்பைத் தொடர்ந்தார். என்னே அவரின் பெருந்தன்மை!

14.          தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டில் அவர் பயணம் செய்த போது, வேலூர் நிகழ்ச்சியில் நான் அவருடன் சென்றேன். கூட்டம் முடிந்து பயணியர் விடுதிக்கு செல்லும் பொழுது, மணி இரவு 12 ஆகிவிட்டது. அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு கிளம்பி குடியாத்தம் போக வேண்டும். நான் காலையில் 6 மணிக்கு எழுந்து அவரை பயணத்துக்கு தயார் செய்யும்படி கேட்க அவர் அறை சென்றேன். ஆனால் அவரோ, ஐந்து மணிக்கே எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, ஆடைகளைத் தரித்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். கூப்பிட்டவுடன் வருவதற்கு தயாராக இருந்தார். நான் தோழரே, நீங்கள் தயாரா? என்று கேட்ட போது, அவர் I am ready, what about you? என்று கேட்டு என்னை அசத்தினார். இவர் இரவில் காலம் கடந்து படுக்கச் சென்றாலும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு எழுதவோ, படிக்கவோ ஆரம்பித்து விடுவார் என்பதும் இதை அவர் கடைசி நாள் வரை கடைபிடித்தார் என்பதும் ஆச்சரியமான விஷயமே.

15.          ஒருமுறை சென்னையில் சட்டமன்ற விடுதியில் அறையில் தங்கி இருந்த தோழர் இ.எம்.எஸ். ஒரு தோழரிடம் சில விஷயங்களை சொல்லச் சொல்ல அவரும் எழுதிக்கொண்டிருந்தார். நான் தற்செயலாக உள்ளே செல்ல முயன்றபோது, எழுதிக்கொண்டிருந்த அந்த தோழர் புகைத்துக் கொண்டே எழுதிக் கொண்டிருந்தார். எனக்கு அதிர்வு ஏற்பட்டது. உடனே ஒரு சிறு கடிதத்தில் னுடிn’வ ளுஅடிமந என்று எழுதி டீ எடுத்துச் சென்ற சிறுவனிடம் கொடுத்து அதைப் புகைப்பவரிடம் கொடுக்கச் சொன்னேன். தோழர் இ.எம்.எஸ். திடீரென்று அந்த துண்டுக் கடிதத்தை வாங்கிக் கொண்டார். எனக்கு மிக சங்கடமாக ஆகி விட்டது. ஆனால் அவரோ, அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, தன் சட்டைப்பையில் போட்டுக் கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் தோழமை உரிமை உண்டு, ஆனால், அந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் தோழர்கள் கவனமாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இ.எம்.எஸ். ஓர் உயர்ந்த மனிதர்தான். அந்த விந்தை மனிதர் விந்திய மலை அல்ல. அவர் ஓர் இமயம்.

- தே. இலட்சுமணன்

Pin It