ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவீடு செய்ய வேலை வாய்ப்பும், வேலையின்மையும் பிரதான அளவு கோலாகும். ப.சிதம்பரம் போன்ற முதலாளித்துவ அரசியல் வாதிகளும், முதலாளித்துவ சமூகமும், பொருளாதார வளர்ச்சியை, சமூக வளர்ச்சி, என குறிப்பிடுகின்றனர். அதனால் தான், இந்திய சமூகத்தின் வேலையின்மை, கல்வியின்மை, பட்டினிச்சாவு, தற்கொலைகளின் அளவு, காசநோய், குழந்தைகளின் இறப்பு விகிதம், எடைகுறைந்த குழந்தைகளின் இறப்பு விகிதம், எடைகுறைந்த குழந்தைகள் போன்ற சமூகப் பிரச்சனைகள் முதலாளித்துவ சிந்தனையாளர்களின் கண்களுக்கு தெரியவில்லை. “செலக்டிவ் அம்னீசியா” எனும் நோயைப் போல் (தெரிந்தெடுந்த விஷயங்களை மறந்து விடுவது) இந்த அரசியல் வாதிகளின் கண்கள் “செலக்டிவ் பிளைண்ட்னெஸ்” எனும் நோய்க்கு ஆளாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு விவரம் செய்தித்தாள்களில் உலா வந்தது. “இந்தியாவில் கழிவறை உள்ள வீடுகளை விட,செல்போன் வைத்திருப்போர் அதிகம்’’ என்பதே செய்தியின் சாரம். இந்த செய்தி, மக்களின் அறிவியல் சிந்தனையை வளர்த்திருக்கிறது, என்ற முடிவுக்கு வர முடியுமா? வரமுயும் என்றால் செல்போனைப் பயன் படுத்துவது அறிவியல் வளர்ச்சியா? கழிவறையைப் பயன்படுத்தாமல், திறந்த வெளியில் மலம் கழிப்பது அறிவியல் வளர்ச்சியா? ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்துவது நமது நோக்கமல்ல. அடிப்படையில் கல்வியும், அதைத் தொடர்ந்து நல்ல, சமூகப் பாதுகாப்புடனான «வைலயும் ஒரு சமூகத்தில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியம்,சுகாதாரம் நோய்த்தடுப்பு போன்றவை வளரும். இன்று நமது மக்கள் கல்வி, வேலை தங்கள் தலைமுறைக்கும் வாரிசுகளுக்கும் கிடைக்காததற்கு காரணம், தலை விதி என்று எண்ணிக் கொண்டுள்ளனர்.

 ஒரு சமூகத்தில் வேலையின்மை அதிகரிக்கும் போது, அரசு மீதும் ஆள்வோர்மீதும், அரசியல், ஜனநாயக இயக்கங்களின் மீதும் நம்பிக்கை குறையும். குறிப்பாக இளம் தலைமுறை இது போன்ற நம்பிக்கையின்மைக்கு விரைவில் சென்றடைவர். அத்தகைய இளைஞர்களை அதிதீவிரவாத இயக்கங்களும், மதவெறி அடிப்படை வாதிகளும், சாதிய சக்திகளும் ஈர்த்திடும் வாய்ப்பும் உருவாகும். மதம்,சாதி, இனம், மொழி, பிராந்தியம் என்ற தன்மையிலான உணர்வுகள் தலைதூக்கி, நாட்டின் ஜனநாயகத்திற்கும் மக்களின் நல்லிணக்கத்திற்கும் சவால் விடும்.

இன்று இந்தியாவில் லஷ்கர்இதொய்பா தொடங்கி அனைத்துவித அடிப்படை வாதிகளின் வளர்ச்சிக்கும், அஸ்ஸாமின் தீவிரவாத, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் செயல்படும் பிரிவினைவாத இயக்கங்களின வளர்ச்சிக்கும், மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் இயங்கி வரும் அதிதீவிர இடதுசாரிகளின் செயல்களுக்கும் இந்தியாவில் உள்ள வேலையின்மை, கல்வியின்மை, சமமற்ற வளர்ச்சி ஆகியவை தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? தெலங்கானாப் போராட்டத்தின் தீவிரமும் அதைத் தான் சுட்டிக் காட்டுகிறது.

தமிழகத்தில் 1995_96 களில் தொடர்ந்து நடைபெற்று வந்த சாதி கலவரத்தின பின்னனியை, தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. தென் மாவட்டங்கள் முழுவதும் பயணம் சென்று விவரம் சேகரித்த நீதிபதி வேலையின்மை, வளர்ச்சியின்மை பிரதானக் காரணம் என்பதைக் கண்டறிந்து அரசிடம் சமர்ப்பித்தார் இந்த பரிந்துரைக்கு முன்னதாக நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின ஒரு பகுதியாக, பட்டினிக்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை இந்தியாவின் எழுத்தாளர்கள் பதிவு செய்து உள்ளனர். ஆனந்த மடம் நாவலின் ஆசிரியர் பங்கிம் சட்டர்ஜி, நிலம் மாடு,வண்டி, வீடு என அனைத்தையும் விற்றாகி விட்டது இனி மனிதர்கள் மட்டும் தான் உயிரோடு இருக்கிறார்கள் என குறிப்பிடுகிறார் இத்தகைய கொடிய நிலையைத் தொடர்ந்தே கொலைகளும் கொள்ளைகளும் நடைபெற்றதாக எழுதுகிறார்.

மதுரையின் வரலாற்றை ஆய்வு செய்த மானுடவியல் அறிஞர்கள் பலரும் சமீபத்தில் வெளிவந்த சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலும் சமூகப் பிரச்சனைகளை முன் வைக்கிறது குறிப்பாக திருமலை மன்னன், “மதுரையைச் சுற்றியிருந்த கள்ளர்கள் களவு செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்களையே காவல்காரர்களாக மாற்றிவிட்டால் களவு நின்றுவிடும் என திட்டமிட்டு மதுரையை காவல் காக்கும் பணியை அவர்களிடம் ஒப்படைக்கிறான் மன்னன் நிலப்பிரபுத்துவ சமூகத்தின பிரதிநிதி என்பதால் தன் கருவூலத்தில் இருந்து நிதி வெளியேறாமல் மக்களிடம் காவல் பணத்தை பெற்றுக் கொள்ளவும் வழி செய்கிறான். இன்றைய நவீன சமூகத்து இளைஞர்களோ வேலை கொடுப்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்தத் தயங்குகிற போது 400 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களுக்கு அரசு ஏன் வேலை தரவில்லை? என்று கேட்கிற விழிப்புணர்வு இருந்திருக்க நியாயம் இல்லை தான்.

 இன்று முல்லைப் பெரியாறு அணை கேரளா, தமிழ்நாடு அரசு மற்றும் மக்களின் சர்ச்சைக்கு உரிய செயலாக மாறி இருக்கிறது. ஆனால் முல்லைப் பெரியாறின் வரலாறு மானுடவியல் அணுகு முறை சார்ந்தது மதுரை, தேனி, திண்டுக்கல்லின் ஒரு பகுதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வாதராரம் சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்த ஆங்கிலேயே அரசு, முல்லைப் பெரியாறு அணை திட்டத்திற்கு வழிவகை செய்தது குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்த ஜனநாயகப் போராட்டம், அணை கட்டி தண்ணீர் பாய்ந்த நிலம், விளைச்சல் காட்டத் துவங்கிய பின்பே எழுந்தது.

குற்றங்கள் குறையவும், ஜனநாயகச் சிந்தனை, வளர்ச்சி ஆகியவை உருவாகவும்,வேலை என்பது அடிப்படை அவசியமாகும். இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி செய்த நேரத்தில் லண்டன் நகரில் இருந்த வேலையின்மையை வறுமையை கார்ல் மார்க்ஸ் சுட்டிக் காட்டுகிறார். ஒரு தாய்க்கும், குழந்தைக்குமான உரையாடலாக இதை படம் பிடிக்கிறார் மார்க்ஸ் குளிர் தாங்க வில்லை அம்மா, கொஞ்சம் பொறுத்துக்கொள், அப்பா வேலைக்கு சென்றவுடன் நம்முடைய வீட்டிட்ல் கரி அடுப்பை எரித்து வெப்பம் உருவாக்கிக் கொள்ளலாம் அப்பா ஏன் வேலைக்கு செல்ல வில்லை? அப்பா வேலை செய்த நிறுவனத்தை மூடி விட்டனர். ஏன் மூடி விட்டனர்? அந்த நிறுவனத்தில் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட கரி விற்பனை ஆகவில்லை? மக்களிடம் கரி வாங்கப் பணம் இல்லை. ஏன் பணம் இல்லை? ஏனென்றால் வேலையில்லை. இந்த உரையாடல் நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டதால் சமூக விளைவை வெளிப்படுத்துகிறது.

கரியும், இரும்பும் இருக்கிறது. கரி தேவைப்படும் குடும்பங்களும் இருக்கிறது. ஆனால் வேலை இல்லாததால் குடோனும் காலியாக வில்லை. அடுப்பும் எரியவில்லை. இப்படி நாய் காத்த வைக்கோல் போராக நமது செல்வம் சிலரிடம் குவிந்தும் பெரும்பான்மையோரிடம் எதுவும் இல்லாமலும் இருக்கிறது. இது வளர்ச்சி அல்ல. யானைக்கால் நோய்.

Pin It