விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் அருகில் பள்ளிநேலியனூர் பறையர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை

பள்ளிநேலியனூர் கிராமத்தில் நவம்பர் 11 அதிகாலை 2.30 மணியளவில் நடந்த குடும்ப / சாதி வெறி, திமிர் கொலையில் (கௌரவக் கொலையில்) பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா (வயது 23) என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பவரை காதல் திருமணம் செய்தையொட்டி, கோகிலாவின் பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்றும், அதை தற்கொலை என்று அவர்கள் முடி மறைப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து ஆய்வு செய்ய மாசெஸ் அமைப்பின் சார்பாக, அரங்க.குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம் தலைமையில் மேலும் சில மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நபர்களை ஒருங்கிணைத்து கீழ்க்கண்ட 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1. நிர்மலா (கொற்றவை), நிறுவனர், மாசெஸ் அமைப்பு

2. அரங்க.குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம்

3. தமிழ்மணி, தமிழக சாக்கிய அருந்ததியர் சங்கம்

4. மாறன், மனித உரிமை ஆர்வலர்

5. வழக்குரைஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்

நாங்கள் ஐவரும் டிசம்பர் 2 அன்று சம்பவம் நடந்த பள்ளிநேலியனூர் சென்று கார்த்திகேயனின் தாய் மற்றும் கோகிலாவின் குடும்பத்தார், ஊர் பொதுமக்கள், இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சரவனன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராமமூர்த்தி, இன்றைய தலைவர் தமிழ்குடி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோரைச் சந்தித்தோம். மேலும் கார்த்திகேயன், அவரது சகோதரர் கதிர்வேல், கார்த்திகேயனின் வழக்குரைஞர் லூசி, அவரது சீனியர் வழக்குரைஞர் ஜோஸ் மற்றும் கார்த்திகேயன் நண்பர் இளையரசன் (திராவிடர் விடுதலைக் கழகம்) ஆகியோரையும் சந்தித்துப் பேசினோம். கோகிலாவின் குடும்பத்தார் தரப்பில் பேசிய அவரது சித்தப்பா முருகன், அந்தத் தெருவில் வசிக்கும் அண்டை வீட்டார் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் தெரிவித்த தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. எங்கள் குழுவின் விசாரணை விவரங்கள் பின் வருமாறு:

கோகிலாவின் தந்தை இதை இயற்கை மரணம் என்று சொல்ல, வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இதை தற்கொலை என்று உறுதியாகச் கொல்கிறார். தற்கொலை என்றால் போஸ்ட்மார்ட்டத்திற்கு ஏன் உடலைத் தர மறுக்கிறார்கள் என்ற ஒரு சிறு சந்தேகம் கூட காவல்துறைக்கு வராதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

பின்னணி:

பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா, அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த 9 வருடங்களாகக் காதலித்துள்ளார். பெற்றோர்களுக்குத் தெரியாமல் 1.10.2010 அன்று கடலுரில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கோகிலா வீட்டிற்கு விசயம் தெரிந்து 'சக்கிலியனுக்கு' கட்டிக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி, கோகிலாவின் பெற்றோர் வேறிடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். கார்த்திகேயனுடன் தான் வாழ்வேன் என்று கோகிலா தீர்மானகரமாக இருந்ததால் அவரது பெற்றோர் அவரைக் கடுமையாக அடித்து துன்புறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. பின்னர் 10.11.12 அன்று மாலை 4 மணி அளவில் கோகிலா, கார்த்திகேயனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது தந்தை தங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அடுத்த நாள் (ஞாயிற்று கிழமை) பெண் பார்க்க வருமாறும் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிவிட்டு உறங்கச் சென்றதாகவும், 11.11.12 அன்று அதிகாலை 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக கார்த்திகேயனுக்குத் தகவல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தைராய்ட் நோய் தொந்தரவு முற்றி மூச்சடைத்து இறந்துவிட்டாள் என்று கோகிலாவின் தந்தை நாகராஜன் தெரிவித்திருக்கிறார். வேறு சிலர் அவள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர்.

கோகிலாவின் பெற்றோர் போஸ்ட்மார்ட்டம் செய்ய காவல்துறையினரிடம் பிணத்தை ஒப்படைக்க மறுத்து இடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாலும், கார்த்திகேயன் தரப்பினர் எவரையும் பிணத்தின் அருகே அனுமதிக்காததாலும், கண்களைத்தவிர பிணம் முழுவதுமாக போர்த்தப்பட்டிருந்தது என்பதாலும் தனது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உணர்ந்த கார்த்திகேயன், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து இந்த செய்தி, செய்தித்தாள்கள், வார இதழ்களில் வெளிவந்தது. மேலும் அது சமூக இணையதளங்களின் வாயிலாக கதிர்வேல் அவர்கள் அளித்திருந்த தகவல்களின் ஒலிப்பதிவு மாசெஸ் அமைப்பின் கவனத்திற்கு வந்ததையொட்டி உண்மையறியும் குழு அமைத்து விசாரணைக்குச் சென்றோம்.

1. கலியமூர்த்தி - கஸ்தூரி தம்பதிகளுக்கு 5 மகன்கள். கார்த்திகேயன் கடைசி மகன். அவர் சென்ட்ரிங் எனப்படும் கட்டிட வேலை பார்த்து வருகிறார். 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முதலில் நாங்கள் கார்த்திகேயனின் தாயார் கஸ்தூரியை சந்தித்தோம். கோகிலாவும் கார்த்திகேயனும் ஒன்றாகப் படித்தவர்கள். 9 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அரசல் புரசலாக இந்த காதல் சேதி தனக்குத் தெரியும் என்றும் ஆனால் கோகிலாவின் இறப்பிற்குப் பிறகே திருமண விசயம் தனக்குத் தெரியும் என்று கூறினார். அதன்பிறகு செய்தித்தாளில் வந்த திருமணப் புகைப்படத்தையே தான் பார்த்ததாகச் சொன்னார். கோகிலாவின் தந்தை நாகராஜ் கரும்பு வெட்டும் கூலி வேலைக்குச் செல்பவர். சாதிப் பற்றின் காரணமாக, சக்கிலியப் பையனுக்கு எந்தக் காரணம் கொண்டும் பெண் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி அவர் அந்தப் பெண்ணை அடித்துக் கொடுமை படுத்தியிருக்கிறார்.

11.11.12 அன்று அதிகாலை 3.30 அளவில் கார்த்திகேயன் நண்பர்கள் வந்து கோகிலா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் கோகிலாவின் பெற்றோர் கடும் கோபத்தில் இருப்பதால் கார்த்திகேயனின் பாதுகாப்பு கருதி அவரது நண்பர்கள் அவரை வேறிடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர். அடுத்தநாள் ஈமக் காரியங்கள் செய்ய அவர்கள் பிணத்தை தயார்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர். இதற்கிடையில் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து காவல்துறை போஸ்ட்மார்ட்டத்திற்காக உடலைக் கைப்பற்ற வந்தபோது பெண்கள் எல்லாம் மறித்துக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சிலர் காவல்துறையினரையே நெட்டி, பின் தள்ளினர், வேறு சிலர் உடனடியாக பெண்ணின் உடலை கட்டையில் ஏற்றி பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர்.

அதுமட்டுமல்லாது என் மகளை நான் கொலை செய்வேன், இவன் யார் புகார் கொடுக்க என்று எனது கணவரை மிரட்டியுள்ளார் நாகராஜ். எங்களது வீட்டை இடிக்கப் போவதாகவும், எங்களை சும்மா விடமாட்டேன் என்று நாகராஜ் சொல்லிவருவதாகவும் எனது மகனுக்கு தகவல் கிடைக்க, எங்களை உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு அவன் சொன்னான். நாங்களும் சென்றுவிட்டோம். காவல்துறையினரிடம் தனது மகன், மிரட்டல் குறித்து தெரிவித்து பாதுகாப்பு கோரியதாகவும், அதனால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால் அதன் பிறகு வேறு தொந்தரவுகள் இல்லை. எனவே சில நாட்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பியதாகவும், இரவில் மட்டும் பங்காளி வீட்டில் படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அந்த ஊரில் பொதுவாக பொதுவெளியிலோ அல்லது நடைமுறையிலோ சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார். தங்களது குடும்பத்தில் கூட தனது சொந்த அண்ணன் மகள் ஒரு பறையர் சாதிப் பையனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், கோகிலாவின் தந்தை மற்றும் அவரது அண்டை வீட்டார் சிலருக்கு சாதிவெறி இருந்திருக்கிறது; அருந்ததியர் சாதியில் பெண் கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை; கோகிலாவின் மரணத்தை கொலை என்றே தனது மகன் நம்புவதாகவும், ஊரில் சிலரும் அப்படியே பேசிக்கொள்வதாகவும் தெரிவித்தார். தாங்கள் எந்த விதத்திலும் குறைவில்லை, எல்லா வசதிகளும் வீட்டில் இருக்கிறது, அநியாயமாக ஒரு பெண்ணின் உயிரை இப்படி வாங்கிவிட்டார்களே என்று ஆதங்கப்பட்டார்.

தான் அந்த வீட்டில்தான் இருப்பேன் என்றும் தனக்கு என்ன நேர்ந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.

அந்தத் தெருவில் 3 அருந்ததியர் குடியிருப்புகள் மட்டுமே இருக்கிறது. பறையர் சாதியே பெரும்பான்மை. எதிரில் இருந்த கார்த்திகேயனின் சித்தி கௌரி மற்றும் அவர் கணவரை விசாரித்தோம். ஒரு வாரத்திற்கு முன் பள்ளிக்கூடச் சாலையருகே நடந்துவந்தபோது கோகிலாவின் சித்தப்பா தனஞ்செயன் (தனசேகர் என்பதை தனஞ்செயன் என்று சொல்லிவிட்டார்) தன்னை வழியில் வைத்து அடித்ததாக கார்த்திகேயனின் சித்தப்பா கண்ணீர் மல்கச் சொன்னார்.

3. கார்த்திகேயன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த அருள் என்பவரிடம், ஒருவேளை கார்த்திக் ஊருக்குள் வந்து அவரை எவரேனும் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், நிச்சயம் தட்டிக் கேட்போம், உதவிக்குச் செல்வோம் என்றார். ஆக அந்த ஊரில் ஒட்டுமொத்த சமூகம், சாதியப் பாகுபாடு போற்றவில்லை என்று அறியமுடிந்தது. எல்லோரும் நட்புறவுடனேயே இருந்திருக்கின்றனர்.

4. கோகிலாவின் பெற்றோரை சந்திக்கச் சென்றபோது அவர்கள் முன் ஜாமீன் வாங்கச் சென்றுள்ளதாக கோகிலாவின் சித்தப்பா முருகன் தெரிவித்தார்.

முருகன் (தனியார் பேருந்து ஓட்டுனர்) கூறியது:

கார்த்திகேயன் - கோகிலா திருமணம் தெரியாமல், எங்கள் வீட்டுப் பெண்ணுக்கு நாங்கள் மாப்பிள்ளை பார்த்தோம். அந்த மாப்பிள்ளையை கோகிலா தொடர்பு கொண்டு, தான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை; தன்னைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். இதைத் தெரிந்து அவளது தந்தை யாரையாவது காதலிக்கிறாயா என்று விசாரித்தபோது, தைராய்ட் பிரச்சனை இருப்பதால் அப்படிச் சொன்னதாக சொல்லியிருக்கிறாள்.

எங்கள் பெண் தைராயிட் பிரச்சனையால் அவதியுற்று வந்தாள்; மூச்சு விட முடியாமல் சிரமப்படுவாள் என்றார். அவர் எப்படி இறந்தார், தற்கொலையா என்று நாங்கள் கேட்டபோது 'ஆம், தூக்கு மாட்டிக் கொண்டாள். தன்னால் வாழமுடியவில்லையே என்று மன உளைச்சலடைந்திருக்கிறாள் போலும். அதான் தற்கொலை செய்து கொண்டாள்' என்றார்.

மதியம் 3 மணியளவில் காவல்துறை வந்தது. கோகிலாவின் கணவர் என்று சொல்லி கார்த்திகேயன் என்பவர் கோகிலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருக்கிறார். காவல்துறை விசாரிக்க வரும்போதுதான் அவர்கள் பதிவுத் திருமனம் செய்து கொண்டார்கள் என்பதே எங்களுக்குத் தெரியும். காவல்துறை வரும் வேளையில் எங்கள் சாதி வழக்கப்படி உடலைத் தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.

கோகிலா எப்படி இறந்தார் என்று நாங்கள் மீண்டும் கேட்டதற்கு, "எந்தப் பெற்றோர் தான் உடனே காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள்? அந்த அடிப்படையில் அவர்கள் கொஞ்சம் கண்டித்திருக்கிறார்கள். அது தவறா? அதற்குள் அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள்" என்றார்.

"கார்த்திகேயன் எங்களை நாடாது நேரே காவல்துறையை நாடியிருக்கிறார். ஒருவேளை காலையிலேயே சென்று புகார் அளித்து, அவர்களும் காலையிலேயே வந்திருந்தால் நாங்கள் உடலை முறைப்படி ஒப்படைத்து, கணவன் என்ற முறையில் அவனே சடங்குகள் செய்யட்டும் என்று அனுமதித்திருப்போம். உடலைக் குளிப்பாட்டி எல்லாம் தயாரான பிறகு உடலை போட்டுவைப்பது தவறு என்பதால் நாங்கள் கொடுக்கவில்லை, ஒருவேளை ஊர்க்காரர்கள் அனுமதித்தால் எடுத்துச் செல்லுங்கள்" என்று சொன்னதாக எங்களிடம் தெரிவித்தார்.

"உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டீர்கள் என்று சொல்லப்படுகிறதே?" என்று  கேட்டதற்கு,  "அது உண்மையில்லை, எங்கள் ஊர் வழக்கப்படி சர்க்கரை கொட்டி, இரப்பர் போட்டுதான் எரித்தோம், அது அவர்களின் வாக்குமூலம்" என்றார்.

"ஓரிரண்டு நாட்கள் அந்தப் பெண்ணை எங்காவது அழைத்துச் சென்று குடித்தனம் நடத்தியிருந்தால் நாங்களும் எங்கள் பெண்ணைக் காணவில்லையே என்று தேடியிருப்போம். எங்களுக்கும் முன்னரே இந்த விசயம் தெரிந்திருக்கும்… இல்லையேல் முன்னரே அவன் காவல்துறை உதவியையாவது நாடியிருந்தால் இந்த அளவுக்கு சென்றிருக்காது" என்றார்.

அப்போது அங்கு பறையர் சாதியைச் சேர்ந்த தெரு மக்களும் கூடியிருந்தனர். அவர்களும் ஊடே இதே கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

"இந்த ஊரில் இதேபோல் சாதி மாறித் திருமணம் நடந்திருக்கிறதே, கார்த்திகேயன் உறவினர்கூட பறையர் சாதியில் பெண் எடுத்திருக்கிறாரே" என்று நாங்கள் கேட்டபோது ஆமாம் என்றார் முருகன். எங்களுக்கும் முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்து வைத்திருப்போம் என்றார். அப்போது, அங்கிருந்த கதிரவன் என்பவர் "யார் அவன், சக்கிலி வூட்டில் பெண் எடுத்தது?" என்று எரிச்சலுடன் கேட்டார்.

திருமணம் செய்து மறைக்கும் அவசியம் ஏன் வந்திருக்கும் என்று கேட்டதற்கு, "கோகிலாவின் தந்தை கோவில் நாட்டாமைக்காரராக இருந்திருக்கிறார், ஊரில் ஒரு பெரிய மனிதர். அதனால் அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம்" என்றார்.

கார்த்திகேயன் சித்தப்பாவை கோகிலாவின் சித்தப்பா அடித்ததாகச் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று ஊர்க்காரர்கள் சொல்ல, முருகன் "பெண்ணின் இறப்பு நடந்த ஓரிரு நாட்களில் கோபம் காரணமாக அப்படி ஏதாவது நடந்திருக்கலாம். ஆனால் அதன் பிறகு ஏதாவது நடந்ததா என்று விசாரித்துப் பாருங்கள்" என்றார்.

அங்கிருந்த ஒரு பெண்மணியும் "எவருக்கும் தெரியாதபோது இப்போது வந்து திருமணம் செய்துகொண்டதாக சொன்னால் என்ன செய்யமுடியும்?. யாராவது சென்று அவர்களை ஏதாவது செய்தால் அவர்கள் இந்நேரம் இங்கிருந்திருக்க முடியுமா? அப்படி செய்யாததால்தான் அவர்கள் அதிகம் துள்ளுகிறார்கள் (ரொம்ப போராங்க)" என்றார்

கோகிலா தைராய்ட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கார்த்திகேயனோடு திருமணம் செய்ய முடியாதிருக்கிறதே என்று தற்கொலை செய்து கொண்டாரா என்று கேட்டதற்கு, முருகன் "அது தன்னால் உறுதியாக சொல்ல முடியாது" என்றார். ஆனால் முன்னர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார். கதிரவன் ஆணித்தரமாக தைராய்ட் பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொண்டாள் என்றார்.

கோகிலா புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டதற்கு "அது எதுவுமில்லை. எல்லாம் கொளுத்திவிட்டார்கள்" என்றார். ஏன் கொளுத்த வேண்டும் என்று கேட்டதற்கு "அதை தான் சொல்ல முடியாது, அவர்கள் அப்பா அம்மா இருந்தால் தான் தெரியும்" என்றார்.

5. முன்னாள் ஊராட்சி தலைவர் இராமமூர்த்தி, ஆசிரியர் ரமேஷ் மற்றும் சில ஊர் மக்களை அங்குள்ள கோயில் மண்டபத்தில் சந்தித்தோம்.

இராமமூர்த்தி கூறியது:

"கோகிலா இயற்கை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு தைராய்ட் பிரச்சனை இருந்தது. அதுதான் இறப்புக்குக் காரணம்."  என்றார். கார்த்திகேயன் தன்னோடு தான் எப்பொழுதும் இருப்பார் என்றும் மாமன் மச்சான் என்று பழகிவந்ததாகவும் திருமணம் செய்து கொண்டதை தன்னிடம் கூடச் சொல்லவில்லை என்றார்.

ஏன் உடலைக் கொடுக்க மறுத்தார்கள் என்று கேட்டதற்கு, "உடலைக் குளிப்பாட்டி எல்லாம் முடித்தபின்னர் ஊர்வழக்கப்படி அப்படி கொடுக்க மாட்டார்கள், அதனால் தான் ஊர்மக்கள் காவல்துறையை தடுத்திருக்கின்றனர்" என்றார்.

ரமேஷ் குறுக்கிட்டு "எங்கள் ஊரில் சாதிப் பிரச்சனையே இல்லை, முன்னர் சக்கிலியர்கள் செருப்பு கூட அணிந்து செல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவும் இல்ல. நாடார், வள்ளுவப் பறையர், உடையார், ரெட்டியார் என்று அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றோம்" என்றார்.

"ஆனால் கார்த்திகேயன் எங்கள் மேல் காவல் துறையில் புகாரளித்ததோடு லூசியின் தூண்டுதலின் பேரில் ஊரெங்கும் சாதி வெறியன் நாகராஜை கைது செய்! என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார். மன வேதனையாக இருக்கிறது. தலித்தல்லாத லூசி எதற்கு இதில் தலையிடுகிறார், அவர் ஒரு முதலியார்" என்று சாதியைக் குறிப்பிட்டு பேசினார். "இரவு வேளைகளில் காவல்துறை வந்து எங்களைத் தொந்தரவு செய்கிறது. இரவு வேளைகளில் ஊரில் ஆண்களே இருக்க முடியாமல் ஓடி ஒளிகிறோம். இத்தனைக்கும் அவன் தான் காரணம். தொடக்கத்திலேயே அவன் எங்களை நாடியிருந்தால் ஊர்க்காரர்களே அவர்களை சேர்த்து வைத்திருப்போம்" என்றார்.

"காதலித்த காலத்திலேயே நாங்கள் யாரும் கண்டிக்கவில்லையே.  கோகிலாவிற்கு இருக்கும் தைராய்ட் நோய் நீண்டநாள் நோய் என்பதால், அவரைத் திருமணம் செய்வது பயனற்றதது என்று வேண்டுமென்றே பாலியல் வேட்கையைத் தீர்த்துக் கொண்டு கார்த்திகேயன் கைவிட்டிருக்கிறார். இல்லையென்றால் தனது மனைவியை அவர் அழைத்துச் சென்று வாழ்ந்திருக்கலாமே" என்று இராமமூர்த்தி சொன்னர்.

"அவர் தவறு செய்துவிட்டு, எங்கள் மேல் புகார் அளித்து, இப்போது முன் ஜாமீன் பெறுவதற்கு அலையவிடுகிறார். யார் யார் மேல் புகார் அளித்திருக்கிறார் என்று கூட தெரியாமல் ஊரே பயப்படுகிறது" என்றார்.

6. கதிர்வேல், கார்த்திகேயன் சகோதரர்:

"என் தம்பியை அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தூண்டியதே இராமமூர்த்திதான் (அ.தி.மு.க – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்). அப்போது அவருக்கும் நாகராஜுக்கும் பிணக்கு இருந்தது, என் தம்பி எப்போதும் இராமமூர்த்தியுடனே இருப்பார். இது எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான். நீ லவ் பண்ணு, நான் பாத்துக்குறேன் என்றவர், பின்னர் நாகராஜோடு ராசியான பின்னர் என் தம்பியை கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்தார். தனது மாமாவிற்காக எதையும் செய்யத் தாங்கமாட்டேன் என்று சொன்னார். இரண்டு முறை அவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார். மக்களுக்கென்று அவர் எதுவும் செய்யவில்லை. பின்னர் நாங்கள் தமிழ் குடி என்பவருக்கு எங்கள் 12-15 ஒட்டைப் போட்டோம். அவர் செயித்துவிட்டார். அப்போதும் தம்பி அவரோடு தான் இருந்தார். அவருக்குத் தான் ஓட்டு போட்டார். இதற்கு மூலக் காரணமே இராமமூர்த்திதான்.

இரவு 10 மணியவரை கோகிலா தம்பியோடு பேசிக்கொண்டிருந்தார். அதற்கு முந்தைய நாள் அதற்கு இரண்டு நாளுக்கு முன்பு கோகிலாவின் தாய் மாமா வீட்டில் கோகிலாவை பயங்கரமாக அடித்துக் கொண்டு போய் விட்டிருக்கின்றனர். அவள் மனம் மாறும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் அது நடக்கவில்லை. மீண்டும் தங்களது வீட்டிற்கே அழைத்து வந்திருக்கின்றனர். சனிக்கிழமை மதியம் 12 மணி வரை அவரது அம்மா கோகிலாவை நன்கு அடித்திருக்கிறார். தம்பி தனது தொலைபேசியில் அதை ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அதனால் வீட்டை விட்டு ஓடிவிட முடிவெடுத்திருக்கிறார் கோகிலா. இதற்கிடையில் கோகிலாவின் தந்தை கார்த்திகேயனைத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிப்பதாகச் சொல்லி மறுநாள் கார்த்திகேயனை பெண் பார்க்க வருமாறு சொல்லியிருக்கிறார். மகிழ்ந்துபோன கோகிலா உடனே கார்த்திகேயனிடம் தெரிவித்திருக்கிறார். நண்பர்களிடமெல்லாம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதை அம்மாவிடமும் தெரிவித்துவிட்டு தூங்கிவிட்டார்.

இரவு 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. கார்த்திகேயனை பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்கள் அவரது நண்பர்கள். நாங்கள் உடனே வெளியேறிவிட்டோம். அம்மாவும் அண்ணியும் அடுத்த நாள் காலையில் கிளம்பிவிட்டனர். அப்பா மட்டும் இரண்டு நாள்வரை அங்கிருந்தார். மிரட்டல் வரவே அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்."

எப்போது புகார் கொடுத்தீர்கள்? என்று கேட்டபோது.

"11.11.2012 அன்று மதியம் 12 மணிக்கு புகார் அளிக்கச் சென்றோம். கோகிலாவின் பெற்றோர்தான் நம்மை எதுவும் செய்யவில்லையே, பின்னர் எதற்கு புகார் என்று நான் கேட்டேன். கார்த்திகேயனின் நண்பர்கள் 'உனது பாதுகாப்பிற்காகவாவது நீ முதலில் புகார் கொடு. பிணத்தை அடக்கம் செய்துவிட்டு உன்னை நிச்சயம் தாக்குவார்கள்' என்றார்கள். பின்னர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார். புகாரளிக்க 11.30 – 12 மணியளவில் சென்றுள்ளார்கள். காவல்துறையினர் புகாரை உடனே பெறாமல் இழுத்தடித்துள்ளனர். ஒருவழியாக 12.30 மணியளவில் புகாரை ஏற்றுக்கொள்வதாக சொல்லி எழுதத்தொடங்கினர். 1.30 மணியளவில் காவல்துறை ஊருக்குள் சென்றது. 3.30 வரை என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. '3.30 மணிக்கு உடலை எடுத்துச் சென்றார்கள், எங்களிடம் கொடுக்க மறுத்தார்கள், மறித்தார்கள், எரித்துவிட்டார்கள்' என்று சொல்கின்றனர்.

அந்தப் பெண் தூக்கு போட்டுக் கொண்டதாக நினைக்கிறீர்களா? என்ன நினைக்கிறீர்கள் என்றபோது:

"இல்லை. அவரை தூங்கவைத்து தலகாணி வைத்து அழுத்திக் கொன்று தூக்கிலிட்டிருக்கிறார்கள். தானாக தூக்கு போட்டுக்கொள்ளும் அளவுக்கு அவள் இல்லை. வீட்டை விட்டு ஓடிவிடுவாள் என்று தெரிந்துகொண்டதால், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, திட்டமிட்டு கொன்றிருக்கிறார்கள்" என்றார்.

கோகிலா ஏன் வீட்டை விட்டு வர சம்மதிக்கவில்லை என்று கேட்டபோது:

"இல்லை, பெற்றோர் சம்மதத்துடன் கௌரவமாக திருமணம் செய்து ஊரில் வாழவேண்டும், ஒடிப்போய்விட்டால் அப்பா தற்கொலை செய்து கொள்வார், வேண்டாம் என்று தடுத்துவந்தார். நெருக்கடிகள் அதிகமாக 2010 ஜனவரி மாதம் அவர்கள் இரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். எங்களுக்கு எதுவும் தெரியாது. இராமமூர்த்தி தம்பியை பேச அழைத்தபோதுதான் எங்களுக்கு விசயம் தெரியும். சாதி வேற்றுமை காரணமாக சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்பதால்தான் அவர்கள் மறைத்து வந்தனர்."

அவர்கள் காதலித்தது ஊருக்கே தெரியுமே, அப்போது யாரும் தடுக்கவில்லையே என்றபோது:

"இல்லை இல்லை. கோகிலாவின் சித்தப்பா தனசேகர் ஒருமுறை தம்பியை கூப்பிட்டு அடித்திருக்கிறார். அதன் பிறகு தம்பி ஒதுங்கி இருந்தார். கோகிலாதான் அவரை துரத்தி துரத்தி காதலித்தார். இப்போது எங்கள் சித்தப்பாவையும் அடித்தவர் தனசேகர் தான்."

இதில் இராமமூர்த்தியின் பங்கு என்னவாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டபோது:

"என் தம்பியை அழைத்துப் பேசும்போது எனது மாமா (நாகராஜுக்காக) நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்றிருக்கிறார். இதை அரசியல் ரீதியாக கொண்டு சென்று அடுத்த பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடுகிறார்."

நீங்கள் தமிழ்குடிக்கு (விடுத்லை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்) ஓட்டு போட்டதால் அவர் வஞ்சம் தீர்க்கிறார் என்று கருதுகிறீர்களா என்றதற்கு ஆம் என்றார்.

உள்ளூரில் அருந்ததியருக்கும், பறையருக்கும் பிரச்சனை இருக்கிறதா என்று கேட்டதற்கு, "ஆம்! அவர்கள் எங்களை எந்த நேரத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் பெரும் பாகுபாடு ஏதும் பாராட்ட மாட்டார்கள், ஆனால் பெரும் அன்பும் பாராட்ட மாட்டார்கள். விலகியே இருப்பார்கள். நாங்களும் ஒதுங்கியே இருப்போம். எங்கள் தெருவில் அந்த அளவுக்கு கிடையாது. ஆனால் கோகிலா இருக்கும் தெருவில் சாதி வெறி பயங்கரமாக இருக்கிறது" என்றார்.

7. பெயர் சொல்ல விரும்பாத நபர்:

"நாகராஜன் சாதி பார்த்ததால், கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தார். கோகிலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். 10.11.12 அன்று மாலை 7 மணியளவில் கோகிலா 'அய்யோ அடிக்குறாங்களே, காப்பாத்துங்க' என்று அலறிக்கொண்டே சாலையில் ஓடிவந்திருக்கிறாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் 'ஏன் பெண்ணை இப்படி அடிக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'எங்கள் பெண்ணை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். உங்கள் வேலையைப் பாருங்கள், இது எங்கள் குடும்பப் பிரச்சனை' என்று கோகிலா அம்மா சொல்லவே எல்லோரும் கலைந்து சென்றுவிட்டனர்.

அடுத்தநாள் அதிகாலை கோகிலா இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். தூக்கு மாட்டிய நிலையில் அவள் உடலை யாருமே காணவில்லை. கண்கள் மட்டுமே தெரியும் வண்ணம் முழுவதும் மறைத்தபடி உடல் கிடத்தப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் ஊராட்சித் தலைவர் தமிழ்குடி என்னவென்று விசாரிக்கச் சென்றபோது, கோகிலாவின் பெற்றோர் அவரை மோசமாகத் திட்டியுள்ளனர்.

11.11.12 அன்று இரவு 12 மணியளவில் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே வந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர்" என்றார். 

8. கோகிலாவின் தோழி தொலைபேசி வழியாக:

"நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். அந்த நிறுவனம் இழுத்து முடப்பட்ட பின்னர் தொடர்பில்லாமல் இருந்தோம். எப்போதேனும் ஒருமுறை தான் பேசுவோம். கோகிலாவும் கார்த்திகேயனும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். திடீரென்று ஒருநாள் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களைக் காட்டினாள் கோகிலா. அவள் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு வீட்டில் விசயம் தெரிந்துவிட்டதால் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று மற்றொரு தோழியிடம் கூறியிருக்கிறாள். ஒருவாரமாக வேலைக்கு வராததால், அந்தத் தோழியின் அப்பா கோகிலாவின் அப்பாவைத் தொடர்பு கொண்டு, என்ன ஆச்சு? ஏன் பொண்ணு வேலைக்கு வரவில்லை என்று கேட்டதற்கு, அவளுக்கு உடம்பு சரியில்லை என்றிருக்கிறார்கள். ஆனால் கோகிலாவை அடித்து துன்புறுத்தி அவளது தாய்மாமா வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கின்றனர். அதன் பிறகும் அவள் மனம் மாறவில்லை என்பதால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.

10.11.12 அன்று சனிக்கிழமை மதியம் அந்த தோழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது, அறைக்குள் வந்த கோகிலாவின் அம்மா அவளைக் கொடூரமாக அடித்திருக்கிறார். 'நான் ஏன் சாக வேண்டும்? வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன்' என்று கதறியிருக்கிறாள். பின்னர் அன்று மாலை தனது தந்தை திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும், கார்த்திகேயன் நாளை பெண் கேட்டு வரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறாள். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் அவள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவள் கோழை இல்லை. எங்களுக்கெல்லாம் தைரியம் சொல்லக்கூடியவள். அவளை இழந்து நாங்கள் தவிக்கிறோம். இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். கார்த்திகேயன் அவளை இழந்து இப்போது கஷ்டப்படுகிறார்" என்றார்.

9. கண்டமங்கலம் காவல்நிலையம் – இன்ஸ்பெக்டர் சரவணன்:

11.11.2012 அன்று மதியம் 2.30 மணியளவில் கார்த்திகேயன் என்பவர் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்க வந்தார். எஃப்.ஐ.ஆர் போடும்போதே நான் எஸ்.ஐ. மற்றும் சில ஏட்டுகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். ஊர் கூடி அவர்களை உள்ளே விட மறுத்தது. நான் கிளம்பிச் செல்லும் முன் அவர்கள் பிணத்தை எரித்து விட்டனர்" என்றார்.

"போஸ்ட்மார்ட்டத்திற்கு காவலரிடம் உடலைக் கொடுக்காதது, பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகியவை ‘offense’ ஆச்சே. அதற்கு நீங்கள் ஏதும் வழக்கு போடவில்லையா" என்றோம். சற்று தயங்கி, "இல்லை உடலைக் கைப்பற்றும் அதிகாரம் இன்ஸ்பெக்டருக்குத் தான் உள்ளது. ஆனால் நான் செல்வதற்குள் எரித்து விட்டார்கள். அதனால்தான் தடயங்களை மறைத்ததற்காக 201 போட்டிருக்கிறோம். அதற்கு முன் 174 மட்டும் தான் போட்டிருந்தோம். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு சிபாரிசு செய்திருந்தோம்.

மேலும் கார்த்திகேயன் 4 மணிக்கு கோகிலாவோடு தொலைபேசியில் பேசியபோது, அவரது தாயார் கடுமையாக கோகிலாவைத் தாக்கியதும், 'நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், நான் ஏன் சாக வேண்டும், அவன் என்ன உங்களிடம் பணம் கேட்டு நிற்கிறானா. வாழ்ந்தால் அவனோடுதான் வாழ்வேன்' என்று கூறியதும் பதிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் 174ஐ மாற்றி தற்கொலையை மறைத்த வழக்கில் 306ம் போட்டுள்ளோம்" என்றார்.

கோகிலாவின் பெற்றோர் மற்றும் இராமமூர்த்தி, ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோகிலாவின் பெற்றோர் முன் ஜாமீன் வழக்கு விசாரணையில் உள்ளது. மற்ற இருவரை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.

வி.ஏ.ஓ. வட்டாரத்தில் விசாரித்தவரை கோகிலா தற்கொலைதான் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.

கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்ததா, வெளியிலா என்று கேட்டபோது, தெரியாது என்றார். 2.30 மணி அளவில் தனியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் அறையைத் திறந்து அவள் தூக்கில் தொங்கிவிட்டாளா என்று பார்ப்பதற்காக அவள் பெற்றோர் கதவைத் திறந்திருப்பார்களா என்று கேட்டோம்…தெரியவில்லை என்றார். 

10. கார்த்திகேயன் (வயது 27), கோகிலாவின் கணவர்:

கடந்த 9 ஒன்பது வருடங்களாகக் காதலித்து வந்தோம். ஒரே வகுப்பில் படித்ததால் சிறுவயதிலிருந்தே காதல். இருவர் வீட்டிலும் சொல்லாமல் இரகசியம் காத்தோம். 'வீட்டில் பெரியவள் ஓடிப்போய் திருமணம் செய்தால் தவறாகிவிடும், அப்பா உயிர் விட்டுவிடுவார், பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வோம்' என்றதால் நானும் சரி என்றேன். நான் தான் தினமும் திரிபுவனத்திலிருந்து வேலைக்கு அழைத்துச் சென்று விடுவேன், கூட்டி வருவேன்.

ஒரு மாதத்திற்கு முன்னர் எங்கள் பதிவுத் திருமண விசயம் எவர் மூலமோ கோகிலாவின் அப்பா தெரிந்துகொண்டார். அந்த ஒரு மாதத்திலேயே 4 மாப்பிள்ளைகள் பெண் பார்க்க வந்துவிட்டனர். எவரையும் தனக்குப் பிடிக்கவில்லை என்று கோகிலா சொல்லிவந்தார். அதற்குக் காரணம் கேட்டபோது கோகிலா உண்மையைச் சொல்லிவிட்டார். அதற்கு அவரது தந்தையார், அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என்று கேட்டிருக்கிறார். அவன் யாராக இருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை, நான் அவனோடுதான் வாழ்வேன் என்று கோகிலா உறுதியாகச் சொல்லியிருக்கிறாள். அதன் பிறகு ஒரு மூன்று நாள் கோகிலாவை வீட்டில் வைத்தே மிகவும் சித்திரவதை செய்துள்ளனர். அக்கம் பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கொத்தாம்பாக்கத்தில் உள்ள தாய்மாமன் வீட்டில் கொண்டு விட்டனர். அங்கு வைத்தும் அடித்து துன்புறுத்தி சொந்தத்தில் உள்ள பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, சரி அவனுக்கே திருமணம் செய்து தருகிறோம் என்று சொல்லி அழைத்துவருமாறு அந்த வீட்டாருக்கு போன் வரவும், 9.11.12 அன்று இரவு 8.30 மணியளவில் தாய்மாமா, கோகிலாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அப்போதே எனக்கு தகவல் சொல்லிவிட்டார் கோகிலா.

இரவு முழுக்க அவளை 'என்ன செய்யப்போகிறாய்' என்று அவரது அப்பா, அம்மா கேட்டதற்கு, 'அவனை திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லித்தானே அழைத்து வந்தீர்கள். இப்போது மீண்டும் பழைய பேச்சை பேசுகிறீர்களே' என்றதற்கு, கோகிலாவின் தந்தை அவரை மீண்டும் அடித்திருக்கிறார். பின்னர் எனக்கு ஃபோன் செய்து கோகிலா இதைச் சொன்னார். இரவு 1 மணி வரை இருந்த தாய் மாமா பின்னர் சென்றுவிட்டார். 10.11.12 அன்று காலை 10 மணிக்கு இராமமூர்த்தி என்னிடம் பேசவேண்டும் என்று நேரில் வரச்சொன்னார்.

'அந்தப் பெண் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். அவளை வேறு யாராவது ஒரு பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நீயே சொல்லு' என்று இராமமூர்த்தி கூறினார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். 'நான் அப்படிச் சொன்னால் அவள் உயிரையே விட்டுவிடுவாள், வாழ்ந்தாள் அவளோடுதான் வாழ்வேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்றேன்.

'நீங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்ட விசயத்தை அவரிடம் சொல்லவில்லையா?' என்று கேட்டதற்கு,  'இல்லை  எவரிடத்தும் நான் அதைச் சொல்வதில்லை, ஆனால் அவருக்கு விசயம் தெரியாமல் இருந்திருக்காது' என்றார்.

அதற்கு இராமமூர்த்தி, 'சரி இந்த விசயத்தை நான் கோகிலாவின் தந்தையிடம் கூறுகிறேன், ஆனால் அவர் என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்யத் தயங்கமாட்டேன். மாமன் மச்சான் என்று கூடப் பார்க்க மாட்டேன். அவருக்காக எதுவும் செய்யத் தயங்கமாட்டேன்' என்றார். நான் கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டேன்" என்றார் கார்த்திகேயன்.

நீங்கள் காதலித்துவந்தபோது உங்களை யாரும் கண்டிக்கவில்லையா என்றோம்:

"ஒருமுறை கோகிலாவின் சித்தப்பா தனசேகர் எங்களைக் கோவிலில் பார்த்துவிட்டார். 'உன்னை எத்தனை தடவை அடித்தாலும் நீ அடங்கமாட்டேங்குறாய், உன்னை ஏதாவது செய்தால் தான் சரிவரும்' என்று சொல்லி மிகவும் மோசமாகத் திட்டினார்."

"முன்னர் எப்போது அடித்திருக்கிறார்?" என்று கேட்டோம். "அவர் நேரடியாக வந்து அடிக்கவில்லை. திருபுவனையில் ஆட்களை வைத்து அடித்தார்கள். இந்த தொடர் மிரட்டலின் காரணமாகத்தான் பிரித்துவிடுவார்களோ என்று அஞ்சி பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்."

"தாய்மாமன் கிளம்பிய பின்னர் 10.11.12 அன்று என்ன நடந்தது?" என்றோம்.

"அன்று காலை 11 மணியளவில் எனக்கு ஃபோன் வந்தது. என்னை கயிறு மாட்டி தூக்கில் தொங்கச் சொல்கிறார்கள் என்று கோகிலா சொன்னார். உடனே புறப்பட்டு அவர் வீடு வழியாகச் சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது. போன் செய்து கேட்டேன். என்னை உள்ளே வைத்து பூட்டி வைத்திருக்கிறார்கள், சாகச் சொல்லி அடிக்கிறார்கள், புடவையை மாட்டி விட்டு தூக்கு மாட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள் என்றார். அதுபோல் ஏதும் செய்துவிடாதே என்று நான் சொன்னேன். கோகிலா 'இல்லை நான் அப்படிச் செய்ய மாட்டேன், உன்னுடன் தான் வாழ்வேன், என்னை என்ன அடித்தாலும் நான் நாளை வீட்டை விட்டு வந்துவிடுகிறேன். நாம் எங்காவது சென்று விடுவோம்' என்று உறுதியாகக் கூறினார். நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அப்பா, அம்மா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள். அவளைத் தூக்கு மாட்டி தொங்கவிட்டுவிட்டு தாழ்ப்பாள் போட்டுவிட்டு வெளியில் வந்துவிடு…என்று சொல்லி அம்மாவை உள்ளே அனுப்பிவிட்டு, வெளியில் சென்று வருகிறேன் என்று அவர் அப்பா சொன்னார். நான் லைனில் இருந்ததால் எனக்கு அது கேட்டது. ஆனால் அப்போது நான் பதிவு செய்யவில்லை. சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்ததால், உடனே வீட்டிற்குச் சென்று பதிவுத் திருமணம் செய்த சான்றிதழ்களை சேகரித்துக் கொண்டு நண்பருடன் கிளம்பிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் கோகிலாவிற்கு ஃபோன் செய்து விசயத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது மீண்டும் உள்ளே வந்து தூக்கு மாட்டி சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். வெளியே தாழ் போட்டுச் சென்றுவிட்டார்கள். நான் எஸ்.பி அலுவலகம் சென்று புகார் கொடுக்கப் போகிறேன், இதற்கு மேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று  கோகிலாவிடம் போனில் கூறிவிட்டு சென்று கொண்டிருக்கையில், உடனே எனக்கு ஃபோனில் அழைப்பு வந்தது. அம்மா அப்பா மேல் புகாரெல்லாம் அளிக்க வேண்டாம், நாம் தான் நாளை கிளம்பிவிடுவோமே, புகாரெல்லாம் வேண்டாம் என்றார் கோகிலா. அவரது பேச்சைக் கேட்டு நான் வீடு திரும்பிவிட்டேன்.

மீண்டும் மாலை 4 மணி அளவில் கோகிலாவை மிகவும் அதிகமாக அடித்து டார்ச்சர் செய்கின்றனர். உன்னை அடித்துக் கொன்றாலும் கொல்வோமே தவிர, அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்றார்கள். அப்போதுதான் நான் அந்த பேச்சைப் பதிவு செய்தேன்.

பின்னர் மாலை 6.30 மணியளவில் கோகிலாவின் அழைப்பு வந்தது. 'அப்பா சம்மதித்து விட்டார், நாளை பெண் பார்க்க வரச்சொன்னார். நான் (கோகிலா) நம்பமாட்டேன் என்றதற்கு, அப்பா சொன்னார், உன்னிடம்தான் ஃபோன் இருக்கிறதே, நீயே தொடர்பு கொண்டு அவனிடம் சொல் என்றார்' என்று கோகிலா சொன்னார். உடனே எங்கள் நண்பர்களையெல்லாம் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி அழைப்பு விடுத்தேன். பிறகு 8.30 மணி முதல் 10 மணி வரை மிகவும் சந்தோசமாகப் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தோம். 'காலையில் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்துவிடு, காலை எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நான் தான் எழுந்து எல்லா வேலைகளையும் செய்யவேண்டும்' என்றதால், நானும் சரி என்று சொல்லி உறங்கச் சென்றேன்.

இரவு 12 மணியளவில் எனக்கு திடீரென்று உடல் பதறியது. ஏதோ விபரதீமாகத் தோன்றியதால் உடனே எழுந்து அவர் செல்லுக்கு ஃபோன் செய்தேன். சுவிச் ஆஃப் என்று வந்தது. வழக்கமாக செல் சார்ஜ் போடும்போது அதை அணைத்து வைத்துவிடுவார், அப்படிதான் இருக்கும் என்று நினைத்து நானும் தூங்கச் சென்று விட்டேன். 2.30 மணியளவில் நண்பர்கள் தகவல் சொல்ல ஃபோன் செய்திருக்கிறார்கள். நான் நல்ல உறக்கத்தில் இருந்திருக்கிறேன், கேட்கவில்லை. நான் எடுக்காததால், வீட்டிற்கு வந்து தகவல் சொல்லியிருக்கின்றனர். அந்தப் பெண் இறந்துவிட்டாள், அவன் ஏதாவது செய்து கொள்ளப் போகிறான், பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். 2.45 / 3 மணியளவில் என்னை எழுப்பி, பக்கத்து ஊரில் இருக்கும் அண்னனுக்குப் பிரச்சனை நீ உடனே கிளம்பி அங்கே போ என்றார்கள்.

நான் சட்டையை மாட்டிக் கொண்டு வண்டி எடுக்கச் சென்றேன். செல்லை மறந்துவிட்டோமே என்று மீண்டும் வீட்டிற்குள் சென்று செல்லை எடுத்தபோது நண்பர்களின் (பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள்) மிஸ்டு கால் நிறைய இருந்தது. தொடர்பு கொண்டு என்னவென்று விசாரித்தபோது கோகிலா இறந்துவிட்டாள் என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. அங்கு சென்று பார்ப்போமே என்று கோகிலா வீட்டுத் தெரு அருகில் சென்றேன். பெண்களின் அழுகைக் குரல் கேட்டது, அதற்கு மேல் என்னால் தாங்கமுடியவில்லை, அருகில் ரயில்வே கேட் இருந்தது, அதை நோக்கி ஓடினேன், அண்ணன் எல்லோரும் சேர்ந்து தடுத்து, கண்டமங்கலத்தில் கொண்டு சென்று விட்டனர்.

விசயம் அறிந்து நண்பர்கள் எல்லோரும் வந்தனர். 12.11.12 அன்று காலை 7.30 மணியளவில் நாங்கள் 20 பேர் சேர்ந்து எங்கள் வீட்டிற்குச் சென்றோம். உடலைப் பார்க்க வேண்டும் என்றேன். கோகிலா வீட்டருகில் இருக்கும் நண்பர்களிடம் ஃபோன் செய்து விசாரித்தேன். நீ இங்கு வந்துவிடாதே உன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்று சொன்னார்கள். நண்பர்கள் மட்டும் சென்று பார்த்தனர். அங்கிருப்பவர்களிடம் கேட்டதற்கு இரவு 11 மணியளவில் என்னை அடிக்கிறார்கள், சாகடிக்கப் பார்க்கிறார்கள் என்று கதறிக் கொண்டே வீட்டிற்கு வெளியே ஓடிவந்தாள். நாங்கள் சென்று என்னவென்று கேட்டதற்கு, பெண்ணின் அம்மா, இது எங்கள் வீட்டு விசயம் நீங்கள் யாரும் தலையிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அவளது உடல் கண்களைத் தவிர முழுவதும் மூடியிருந்திருக்கிறது. இடது கண்ணின் கீழ் காயம் இருந்தது, வலது கண்ணின் மேல் காயம் இருந்தது என்றனர். நான் சென்று பார்க்க முடியவில்லை.

அதன் பின்னர் காலை 11 மணிக்கு புகார் அளிக்க கண்டமங்கலம் காவல் நிலையம் சென்றோம். அவர்கள் புகாரைப் பெறவே இல்லை. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ இருவரும் இல்லை, 2 ஏட்டுகள் மட்டும் இருந்தனர். நாங்கள் இந்தப் புகாரைப் பெற முடியாது என்று சொல்லி தவிர்த்து வந்தனர். நாங்கள் 20 பேர் கெஞ்சிக்கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் அலைக்கழித்து 12.30 மணிக்கு புகாரைப் பெற்றனர். பின்னர் எஸ்.ஐ சேதுராமன் வந்தார். புகாரை வாங்கிப் பார்த்தவுடனே அவர் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றார். ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பின்னர் இன்ஸ்பெக்டர் வந்தார், ஒரு அரைமணி நேரத்தில் அவரும் கிளம்பிச் சென்றார். அப்போது 1.30 மணி இருக்கும்.

புகார் வந்திருக்கிறது போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்றதற்கு கோகிலாவின் பெற்றோர் உடலைத் தர மறுத்துள்ளனர். அதனால் அதிரடிப்படையை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார் இன்ஸ்பெக்டர். அதற்குள் பாடையைக் கூட முழுமையாகக் கட்டாமல் எஸ்.ஐ யைக்கூட அடித்து தள்ளிவிட்டு, பிணத்தை உடனடியாக எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். எங்களால் அவர்களைத் தடுக்கவே முடியவில்லை என்று இண்ஸ்பெக்டர் சொன்னதாக கார்த்திகேயன் கூறினார்.

இன்ஸ்பெக்டர் ஊருக்குள் சென்றாரா என்று கேட்டபோது, வழக்குரைஞர் லூசி, 'சப்-இன்ஸ்பெக்டரை தள்ளி விட்டனர், ஸ்குவாட் போகும்போது பெண்களை விட்டு மறித்துள்ளனர்." என்றார். இன்ஸ்பெக்டர் எங்கிருந்தார் என்றபோது இளையரசன் என்பவர் குறுக்கிட்டு, இன்ஸ்பெக்டரும் அங்குதான் இருந்தார். சம்பவ இடத்தில் இருந்த 5 போலீசில் அவரும் ஒருவர். பின்னர் தான் ஸ்குவாட் சென்றது என்றார். தங்களையும் மீறி அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்று என்னிடம் சொன்னதே இன்ஸ்பெக்டர் தான் என்றார்.

உடனே கார்த்திகேயன் குறுக்கிட்டார். அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர் தமிழ்குடி சம்பவ இடத்தில் அப்போது இருந்திருக்கிறார். அவரிடம் இன்ஸ்பெக்டர் ஏம்பா நீ ஊர் பஞ்சாயத்து தலைவர். நீயாவது அவர்களிடம் சொல்லக் கூடாதா என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருக்கிறார்.

தமிழ்குடியை (ஜனார்தனன் என்கிற தமிழ் குடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், வழக்குரைஞர்) பேச அனுமதிக்காமல், இது எங்கள் குடும்ப விசயம் நீங்கள் தலையிட வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார் இளையரசன்.

இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொன்ன தகவலை வைத்துத்தான் எஃப்.ஐ.ஆர் காபியே நாங்கள் கம்ப்ளீட் செய்தோம். எங்களையும் மீறி பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள், எங்களைத் தடுக்கிறார்கள் என்றால் இது கொலைதான் சந்தேகமில்லை, ஆதலால் தடையங்களை மறைக்கிறார்கள் என்கிற அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று காவல் துறையினர் சிலர் கூறினர்.

பிணம் பாதி எரிந்து கொண்டிருக்கையிலேயே, அவர்கள் திரும்பிவிடுகின்றனர். என்ன நடந்தது என்று கேட்டபோது, அது தற்கொலைதான் என்று இன்ஸ்பெக்டர் வலியுறுத்தத் தொடங்கினார். அதற்கு அழுத்தம் கொடுத்தார் என்று இளையரசன் தெரிவித்தார்.

11. வழக்குரைஞர் லூசி கூறியது:

உங்களை சந்திக்கவந்த ஊர் மக்களை நீங்கள் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறதே என்றோம்:

"ஆம், பொதுவாக வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது எதிர் தரப்பினரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் மனித உரிமை இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். வழக்கமாக எஸ்.சி, எஸ்.டி வழக்குகள், பெண்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து எடுத்து போராடி வருகிறோம். வழக்குரைஞர்களுக்கெதிராக செயல்படக்கூடாது என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரீட்டா மேரி வழக்கு எடுத்தது உட்பட அவர்களுக்கு என் மேல் கோபம்.

பலம் உள்ள எதிர்த் தரப்பினர் பெரும்பாலும் மிரட்டவும், சமரசம் செய்யவும் பேச வருவார்கள். அதனால் நாங்கள் அவர்களை சந்திப்பதில்லை. வழக்கு மன்றத்தில் பார்ப்போம் என்று சொல்லி விடுவேன்.

கோதண்டபாணி என்ற வழக்குரைஞர், கோகிலாவின் பெரியப்பா. அவர் என்னைப் பார்த்து 'இது எங்கள் குடும்ப வழக்கு விலகிக்கொள்' என்று சொன்னதற்கு நான் மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து நான் நீதிமன்ற வளாகத்தில் வேலை பார்க்கச் செல்லும்போதெல்லாம் கோதண்டபாணி, பவானி என்ற பெண் வழக்குரைஞரையும் இணைத்துக் கொண்டு மிகவும் ஆபாசமாகவும், ஆணாதிக்க மனநிலையோடும் அவதூறாகப் பேசியதாக சக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். என்னை பாரிலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்றும் பேச்சு நடந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நான் மூத்த வழக்குரைஞரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கோதண்டபாணி, ஒரு கும்பலோடு வந்து அவதூறாகப் பேசியபடி என்னை அடிப்பது போல் பாய்ந்தார். போய்யா என்று சொல்லிவிட்டு என் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்படச் சென்றேன். அப்போதும் துரத்திக் கொண்டே என்னை அடிக்க வந்தார். இளையரசன் அப்போது என்னோடு தான் இருந்தார், ஆனால் அவராலும் ஏதும் செய்ய முடியவில்லை. 'வழக்குரைஞர் என்றால் கோர்ட்டில் பேச வேண்டும், ரோட்டில் பேசக்கூடாது' என்று சொல்லி விட்டுச் சென்றேன். அடுத்த நாள் எங்கள் இயக்கத் தலைவர் ஜோஸிடம் கூறினேன். முறைப்படி புகார் அளிக்கச் சொன்னார்கள்.

கார்த்திகேயனுக்கு ஏன் பாதுகாப்பளிக்கிறாய், ஏன் இதில் தலையிடுகிறாய், விலகிவிடு என்பதே அவர்களது வாதம். இந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் கோதண்டபாணியை சாதிப் பெயர் சொல்லித் திட்டியதாக என் மேல் எஸ்.சி./எஸ்.டி வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னுடைய மற்ற தோழிகளையும் ஆபாசமாக பவானி என்கிற வன்னியர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர் திட்டினார். எங்களுக்குத் திருமணம் ஆகவில்லை என்பதை வைத்து ஆண்களோடு தொடர்புபடுத்தி, கொச்சையான பாலியல் சொற்களைச் சொல்லி ஆபாசமாக ஒன்றரை மணி நேரம் திட்டினார்.

பாருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொன்ன போது, நான் நீதிமன்றத்திற்கெதிராக ஏதும் செயல்படவில்லை என்று சொல்லிச் சென்று விட்டேன்.

கோகிலா எப்படி மரணமடைந்தார் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டபோது, "ஸ்ரீனிவாசன் என்ற அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஒரு நியூஸ் தரகர் எங்கள் ஆலோசனைக் கூட்டங்களுக்கு வருவார். அவரிடமே கோகிலாவின் தந்தை, தான் தான் பெண்ணை அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதற்காக என்னை ஏன் தேவையில்லாமல் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்டிருக்கிறார். கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லி ஏமாற்றித் திட்டமிட்டு அவரை வரவழைத்து அவளை கொலை செய்திருக்கிறார்கள். கார்த்திகேயன் நண்பர்கள் உடலைப் பார்க்கச் சென்றபோது கோகிலாவின் கண்களின் கீழ், புருவத்தின் மேல் காயங்கள் பார்த்திருக்கிறார்கள். உடலை முழுவதுமாக மூடி வைத்திருக்கிறார்கள்" என்றார்.

அப்போது கார்த்திகேயன், "கோகிலாவின் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது" என்றார்.

தொடர்ந்த லூசி, ஊரில் உள்ளவர்கள் 11 மணியளவில் கோகிலா அலறிக் கொண்டு வெளியில் ஓடி வந்ததாகவும், 12 மணியளவில் முன்னாள் தலைவர் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே சென்றதைப் பார்த்ததாகவும் கூறுகின்றனர்.

அப்போது வழக்குறைஞர் ஜோஸ் கூறியது:

தவறேதும் இல்லையென்றால் அவர்கள் ஏன் தடயங்களை மறைக்கிறார்கள். காவல்துறையினரே இந்தக் கேள்வி எழுப்புகிறார்கள்.

தொடர்ந்த லூசி:

"11 மணிக்கு புகார் அளிக்க கார்த்திகேயன் தரப்பு சென்றுவிட்டது. 12.30 மணிக்கு புகாரை வாங்குகிறார்கள். அதன் பிறகு காவல்துறை சம்பவ இடத்தில்தான் இருந்தது. 3.30 மணிக்கு பிணம் எரிக்கப்பட்டிருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்பதே சந்தேகத்திற்குரியது. 

ஊரில் விசாரித்தபோது, வழக்குரைஞர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடலைத் தர மறுத்துள்ளனர். வேறு இருவர் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்துள்ளனர். கோகிலாவின் தந்தை அதை ஊற்றி எரித்திருக்கிறார். அவர் கையிலும், மாமாவுக்கு முகத்திலும் காயம் இருக்கிறது.

பெண்களை வைத்து மறித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறை நினைத்திருந்தால், எரியும் நிலையிலேயேகூட பிணத்தை மீட்டிருக்கலாம். அவர்கள் அதைச் செய்யவில்லை. அதிரடிப்படை 3 குழுக்களாக இறக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலானோரை கண்டமங்கலம் எல்லையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். சிலர் மட்டும் தான் ஊருக்குள் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏன்? அ.தி.மு.க கவுன்சிலர் கண்ணா என்பவர் அந்த காவல்நிலையத்திற்கு எதிரில்தான் வசிக்கிறார். அவரை மீறி இங்கு எதுவும் நடக்காது. அதிரடிப்படையும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

11.11.12 அன்று மாலை 4 மணியளவில் இன்ஸ்பெக்டர் சரவணன் என்னிடம் தொலைபேசியில் பேசினார். என்ன மேடம் உங்களுக்குத் தெரியாதா, இந்த வழக்கெல்லாம் எப்படி நிற்கும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், உடலைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள், மறித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் எஃப்.ஐ.ஆர் போடுங்கள், ஃபாரன்சிக்கிற்கு உடனடியாகத் தகவல் தெரிவியுங்கள் என்று சொன்னேன்" என்று லூசி தெரிவித்தார். 

எமது பார்வைகள், கேள்விகள், பரிந்துரைகள்:

1. கோகிலா தைராய்ட் பிரச்சனையால்தான் இறந்தார் என்று அவரின் தந்தை நாகராஜன் 5.12.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். கோகிலாவின் மாமா முருகனோ, அவர் மன உளைச்சல் தாங்காமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்கிறார். இக்குடும்பத்திற்கு உறவினரான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராமமூர்த்தி அது இயற்கை மரணம் என்கிறார். இப்படி குடும்ப உறவுகளே வெவ்வேறு தகவல்களைத் தருவது கவனத்திற்குரியது. ஆகவே கோகிலாவின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது.

2. ஒருவேளை கோகிலா தற்கொலை செய்து கொண்டார் என்றிருந்தாலும், அதை காவல்துறையினருக்குச் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள்? தடயங்களை ஏன் மறைத்தார்கள்? உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு தர மறுத்தது, மேலும் பெண்களை ஒன்று திரட்டி காவல்துறையினரை மறித்து, வழக்கத்திற்கு மாறாக பெட்ரோல் ஊற்றி எரித்தது ஆகிய செயல்கள் கூடுதல் சந்தேகத்தை எழுப்புகின்றன.

3. முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்துவைத்திருப்போம், காலையிலேயே கார்த்திகேயன் வந்து உடலைக் கேட்டிருந்தால் தந்திருப்போம் என்று சொல்லும் அவர் மாமன் முருகனோ அல்லது கோகிலாவின் குடும்பத்தாரோ, கார்த்திகேயன், அதாவது கோகிலாவின் கணவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவோ, கணவன் என்ற முறையில் சடங்குகள் செய்யவோ ஏன் அழைப்பு விடுக்கவில்லை? இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவர் வீட்டிற்குச் சென்று கார்த்திகேயனையோ, அவரது பெற்றோரையோ  அழைக்காமல், உடலைக் காட்டாமல் அவசர அவசரமாக ஏன் எரித்தார்கள்?

உடலை எரித்த பின்னர் ஒரு சம்பிரதாயமாகவேனும் சாம்பல் கணவனிடம் ஒப்படைக்கப்படவில்லை.

4. சடங்கு, சம்பிரதாயம் என்று சொல்லி உடலைக் கொடுக்க மறுத்த அந்தத் தெரு அண்டைவீட்டார், ஏன் கணவன் வந்து முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை? ஏன் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை?

5. இயற்கை மரணமோ, தற்கொலையோ…. இராமமூர்த்தி, கார்த்திகேயன் தன்னோடு மிகவும் நெருக்கமாக இருந்ததாக ஒப்புக்கொள்கிறார், அந்த உறவின் அடிப்படையில் அவராவது கோகிலாவின் உடலை முறைப்படி கார்த்திகேயன் காண வழிசெய்திருக்க வேண்டும். செய்யவில்லை. அதுமட்டுமல்லாது, கோகிலா இறந்ததற்கு முந்தைய நாள் அவர் கார்த்திகேயனைக் கூப்பிட்டு மனம் மாறிவிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார், நாகராஜனுக்காக எதுவும் செய்யத் தயங்க மாட்டேன் என்று அவர் சொன்னதும், மரணம் நிகழ்ந்திருக்கும் நள்ளிரவு 12 மணியளவில் அவர் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றதைப் பார்த்ததாக வரும் தகவல்களும் பெரும் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஆளும் கட்சிப் (அ.தி.மு.க,) பிரமுகராக இருப்பவருக்கு சட்டம் நன்றாகத் தெரிந்திருக்கும். அத்தோடு அவருக்கு காவல்துறையினரிடம் செல்வாக்கு இருந்திருக்கும். அப்படியிருக்க அவர் நினைத்திருந்தால் சடங்கு செய்ய, உடலை ஒரு முறை பார்க்க, கார்த்திகேயனுக்கு உதவியிருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை என்பது அவர் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் கோகிலா தன்னை அடித்துத் துன்புறுத்துகிறார்கள் என்று அலறிக்கொண்டு இரவு 11 மணி அளிவில் வீட்டிற்கு வெளியே ஓடிவந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் 12 மணி அளவில் இராமமூர்த்தி அந்த வீட்டை விட்டு வெளியில் சென்றதை பலரும் பார்த்துள்ளனர். இரவு 2.30 மணிக்கு கோகிலாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர். போஸ்ட்மார்ட்டம் செய்யாததால் கோகிலா எத்தனை மணிக்கு இறந்தார் என்பதை உறுதியாக அறியமுடியவில்லை. இரவு 11 முதல் 12 மணி வரை ஏதோ நடந்திருக்கிறது என்பதும் இராமமூர்த்திக்கும் அதில் தொடர்பிருக்கலாம் என்பதும் கார்த்திகேயன் குடும்பத்தார் மற்றும் ஊர்மக்கள் சிலரின் சந்தேகமாக இருக்கிறது. உடலைத் தரமறுத்தது இதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

மரணத்தில் சந்தேகம் என்று வந்தபின்னர் – கோகிலாவின் உறவினர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஆளும் கட்சிப் பிரமுகர் என்கிற செல்வாக்கில் இராமமூர்த்தி உடலை மீட்டு, போஸ்ட்மார்ட்டத்திற்கு கொடுக்க வழிவகை செய்திருக்கமுடியும்.

இப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் குடி மீது அவர் கடும் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் கார்த்திகேயன் குடும்பத்தார் அவர்களுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைத்துவிட்டார்கள் என்பதில் அவர்கள் மீதும் கோபத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் ஒரு முறை தமிழ்குடியை அடித்ததாகவும் சொல்கிறார்கள். தொடக்கத்தில் கோகிலாவைக் காதலிக்க கார்த்திகேயனைத் தூண்டியவரே இராமமூர்த்திதான். பின்னர் அரசியல் ஆதாயங்களுக்காக நாகராஜனுக்கு ஆதரவாக மாறிவிட்டார். நாகராஜனுக்காக எதுவும் செய்வேன் என்று இராமமூர்த்தி சொல்லியிருப்பது கூட அடுத்த தேர்தலில் செயித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில்தான். 12 மணியளவில் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றார் என்பதை வைத்துப் பார்க்கும்போது கொலையிலும் அவருக்குப் பங்கிருக்கிறது என்று கார்த்திகேயன் அண்னன் கதிர்வேலின் கருத்து கவனிக்கத்தக்கது.

6. புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசிரியர் ரமேஷும் இராமமூர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர், இரமமூர்த்திக்காக மிகவும் பரிந்து கொண்டு பேசினார். மேலும் வழக்குரைஞர் லூசி மீது கடும் கோபமான சொற்களைப் பிரயோகித்தார். 'அவர் தலித்தல்லாதவர், முதலியார். இந்தப் பிரச்சனையில் அவருக்கு என்ன ஆர்வம்' என்று சொன்னபோது அவருடைய சாதி வெறுப்பை எங்களால் உணரமுடிந்தது. ஒரு பெண்ணின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்ட விஷயத்தில், மனித உரிமையில் அக்கறையுள்ள யாரும் தலையிட உரிமையுள்ளது. இதில் தலித் உயிர், முதலியார் உயிர் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. லூசியை சாதி ரீதியாக தனிமைப்படுத்திவிட்டால் வழக்கு இல்லாமல் செய்யலாம் என்றே ரமேஷ் கருதுகிறார்.

7. கோகிலாவின் வீட்டருகே உள்ளவர்களின் பேச்சுக்களிலும் சாதிப் பற்றை காண முடிந்தது.

8. கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை உடனே வாங்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்கள். ஆனால் எங்களிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் 2.30 மணிக்குத்தான் அவர்கள் வந்தார்கள், உடனே புகாரைப் பெற்றுக் கொண்டு தன் சகாக்களை அனுப்பியதாகவும், தான் செல்லும் முன்னரே பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்றும் சொன்னார்.

மாறாக 5.12.12 தமிழக அரசியல் நாளிதழில் “கோகிலாவின் உடலை எடுக்கச் சென்றபோது எடுக்க விடாமல் கோகிலாவின் குடும்பத்தினர் என்னைத் தடுத்தனர். நாங்கள் செய்த விசாரணையில் அந்தப்பெண் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்கொலையை மறைத்தது தவறு. அதற்காக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறியிருக்கிறார். 

இந்த இரண்டு தகவல்களிலும் முரண் இருக்கிறது. உடலைக் காணாதபோது, ஊரே கூடி உடலைத் தர மறுத்து, போஸ்ட்மார்ட்டமும் நடக்காதபோது ஒரு காவல்துறை ஆய்வாளராக அது கொலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொள்வதே யதார்த்தம். ஆனால் இவர் தற்கொலைதான் என்று அழுத்தமாகச் சொல்வதின் பின்னணி என்ன என்று ஆய்வு செய்ய வேண்டும்.

உடல் எரிக்கப்பட்டிருந்தாலும் தடயவியல் துறைக்கு தகவல் சொல்லுங்கள் என்று வழக்குரைஞர் லூசியா சொல்லியும் இதுவரை தடயவியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை, ஆய்வு செய்யப்படவுமில்லை.

காவல்துறையினர் பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக சம்பந்தபட்ட ஊர் மக்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவுமில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இராமமூர்த்தியையும், ரமேஷையும் நாங்கள் எளிதாக பார்த்துப் பேச முடிந்தபோது அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அகப்படவில்லை, அதனால் கைது செய்யமுடியவில்லை என்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் தெரிவித்தது வேடிக்கையாக இருந்தது.

கோகிலா தூக்கில் தொங்கிய அறையில் அவள் எப்போதும் தனியாகவே தூங்குவாள் என்று சரவணன் தெரிவித்தபோது, அப்படியென்றால் அதிகாலை இரவு 2.30 மணிக்கு என்ன காரணத்திற்காக கோகிலாவின் பெற்றோர் அந்தக் கதவைத் திறந்து பார்த்திருப்பார்கள் என்று கேட்டதற்கு இன்ஸ்பெக்டரிடம் பதில் இல்லை. மேலும் உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததா, வெளிதாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததா என்ற கேள்விக்கும் அவரிடத்தில் பதில் இல்லை. ஆனால் விசாரணையில் அவள் தற்கொலைதான் செய்து கொண்டதாகத் தெரிகிறது என்று எங்களிடமும் உறுதியாகக் கூறினார். அப்படியென்றால் இதுபோன்ற அடிப்படை கேள்விகளைக் கூட கேட்காமல் அவர் என்ன விசாரணை செய்திருப்பார் என்பது கேள்வியாக இருக்கிறது. 

9. கோகிலாவின் பெற்றோர் அடித்து துன்புறுத்தியிருப்பதாக எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் தன்னை சாகச்சொல்வதை எதிர்க்கும் கோகிலாவின் பேச்சும் தொலைபேசியில் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தாய் மாமன் வீட்டிலிருந்த கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்துவைப்பதாகச் சொல்லி வரவழைத்திருக்கின்றனர். அதன் பிறகும் கோகிலாவை அடித்து, துன்புறுத்தியிருக்கின்றனர்; தற்கொலைக்கும் தூண்டியுள்ளனர். இந்த முரண்பட்ட செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போதும், சக்கிலியப் பையனுக்கு கட்டிக் கொடுப்பதா என்ற அவர்களின் பேச்சைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு சாதி வெறி இருந்திருப்பதைக் உணரமுடிகிறது.

இந்த சாதி வெறிக் கொலையில் சாதியத்தின் பங்கும், வர்க்க அரசியலின் ஆதிக்கமும்

பரந்த அளவில் சாதி மறுப்பை பேசுபவர்கள் கூட ஆண் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்தால் பெண் கொடுப்பதை விரும்புவதில்லை. பெண்ணை அடக்கி வைப்பதன் மூலமே பல்லாண்டு காலமாக சாதிகள் கட்டிக் காக்கப்பட்டுள்ளன. அந்த உளவியல்படி பார்த்தால் மேல் சாதியில் (அப்படி வகுக்கப்பட்ட) உள்ள ஆணை காதலித்தால் ஏற்றுக் கொள்ளும் மனம் தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள ஆணை ஏற்றுக் கொள்வதை அவமானமாகவே கருதுகிறது. சாதிய அடுக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கும் இருசமூகத்திற்குள்ளும் (பறையர்-அருந்ததியர்) இத்தகைய ஒரு சாதியப் பற்றே வெளிப்படுகிறது. அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி என்ற ஒரே காரணம் ஒரு பெண்ணின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

பள்ளிநேலியனல்லூரில் கார்த்திகேயன் வசிக்கும் பகுதியிலும் ஊரின் மற்ற பகுதிகளிலும் பொதுவாக சாதிய பாகுபாடு வெளிப்படையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றபோதிலும் கோகிலாவின் தாய், தந்தை சாதி பார்த்ததால் தான் கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவரை சித்திரவதை செய்திருக்கிறார்கள். இன்று அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இத்தனை நாள் பதுங்கியிருந்த சாதியப் பூனை இப்போது வெளிவந்திருப்பதாகவே தோன்றுகிறது, ஏனென்றால் அந்த தெருவே சேர்ந்து (பறையர் பெரும்பான்மையினர்) உடலை எரித்திருக்கிறது. விசாரணைக்கு சென்றபோதும் ஒன்று கூடி நாகராஜன் குடும்பத்தாருக்கு சாதகமாகவே பேசுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவரும் வெளிப்படையாக பேசமுடியாத அளவுக்கு வர்க்க செல்வாக்கையும், அதே சாதியைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின் ஆதிக்கத்தையும் காண முடிகிறது. தங்களின் சாதியைச் சேர்ந்த ஒரு நபரை காக்கும் பறையர் பெரும்பான்மையினரின் முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது.

தருமபுரி தலித் கிராமங்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பெரும் ஆர்ப்பாட்டங்களைச் செய்த அமைப்புகள், கட்சிகள் அருந்ததியினர் இன மக்கள் ஒடுக்கப்படும்போதும் அப்படிப்பட்ட ஆர்பாட்டங்களைச் செய்கிறார்களா என்பது ஒரு கேள்வியாக வைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த விவேகானந்தா கல்லூரி மாணவி காயத்திரி மர்மமான முறையில் இறந்து போனார். அப்போதும் அருந்ததியர் அமைப்புகளும், பெரியார் திராவிடர் கழகமும், எஸ்.எஃப்.ஐ போன்ற மாணவ அமைப்புகளும் சிறு சிறு போராட்டங்களை நடத்தின. ஆனால் தர்மபுரி தலித் கிராமங்கள் தீக்கிரையான பிரச்சனையில் கூட்டியக்கங்கள் வரை அமைத்து நீதி கேட்டுப் போராடும் அமைப்புகள் ஏன் காய்த்திரி பிரச்சனையில் முழுவீச்சான ஒரு போராட்டத்தை முன் எடுக்கவில்லை என்ற கேள்வி அருந்ததியர் மத்தியில் எழுகிறது.

பரிந்துரைகள்:

1. காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரணை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்.

2. புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடயங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தாமத நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வரதட்சணைக் கொடுமைக்கெதிராக அல்லது குடும்ப வன்முறைக்கெதிராக பெண்ணின் கணவரோ அல்லது உறவினரோ செய்யும் துன்புறுத்தலுக்கெதிராக ஐ.பி.சி 498 ஏ என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் சாதி மறுப்பு காதலைத் தொடர்ந்து, பெண்கள் மீது பெற்றோர் நிகழ்த்தும் குடும்ப வன்முறைக்கெதிராக ஏதும் கடுமையான சட்டங்கள் இல்லை. ஆகவே பெற்றோர், பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறைக்கெதிராக உடனடியாக அரசு ஒரு முழுமையான, கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும். அதில் உடல்ரீதியாக, மனரீதியாக தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதன் கீழும் கோகிலாவின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும்.  

4. உடலைத் தர மறுத்து, மறித்து காவல்துறையை பணியாற்றவிடாமல் செய்த ஊர் மக்களை ஐ.பி.சி பிரிவு 353 படி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். (Section 353 of the Indian Penal Code for causing obstruction in discharge of official duty which was applied in Koodankulam )

5. கோகிலாவின் பெற்றோர் கார்த்திகேயனை சக்கிலியப் பையன் என்று வசை பாடியிருப்பது தெரிகிறது. இந்த சாதியப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

6. கார்த்திகேயனை மிரட்டியவரும், அவரின் சித்தப்பாவை அடித்தவருமான சித்தப்பா தனசேகர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சாதி மறுப்பு திருமணங்களுக்கெதிராக பிரச்சாரங்கள் செய்து வரும் கட்சிகளும், அமைப்புகளும் இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு மறைமுக காரணங்களாகக் கருதப்பட வேண்டும். அக்கட்சிகள் மேலும் அத்தகைய மக்கள் விரோதப் பிரச்சாரங்களைச் செய்யாமல் இருக்க அரசு உடனே தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய சாதிக் கட்சிகளை, சங்கங்களை, பேரவைகளை தடை செய்ய வேண்டும்.

8. கௌரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை அரசு பரவலாக மேற்கொள்வதோடு. இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் துணை தேடும் உரிமை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. மாநில பெண்கள் ஆணையம் இது போன்ற கொலைகள் நடந்தவுடன், அவ்விடங்களுக்கு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். அவர்களின் தகவல் அறிக்கைகள் பொதுத் தளங்களில் பதியப்பட வேண்டும்.

10. இவ்வழக்கை கையாளும் லூசியா மற்றும் அவரது மூத்த வழக்குரைஞர் ஜோஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். லூசியாவை அவதூறாகப் பேசிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. கார்த்திகேயன் மற்றும் தற்போது அவருக்கு உதவியாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். 

Pin It