ஸ்ரீரங்கத்தில் ஒரு பார்ப்பனர், “பிராமணாள் உணவு விடுதி” என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு காவல்துறையிடம் கழக சார்பில் ஒரு பெரும் பகுதி சமுதாயத்தை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் இந்த ‘பிராமணாள்’ பெயரை அகற்ற வேண்டும் என்று புகார் தரப்பட்டது. ஆனாலும், ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக ஆணவத்துடன் பேசி வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருப்பதால் முதல்வர் பார்ப்பனர் என்ற அடிப்படையில் தமக்கு அரசு அதிகாரத்தின் ஆதரவு இருக்கும் என்ற இறுமாப்பில், ‘பிராமணாள்’பெயர்ப் பலகையை அகற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

‘தேவர்’, ‘நாயுடு’ என்ற பெயரில் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் இருப்பதை இந்தப் பார்ப்பனர் சுட்டிக் காட்டுகிறார். இவை சாதிப் பெயர்கள்; இந்தப் பெயர்களுக்கும் தடைப் போட வேண்டும் என்பதே நமது கருத்து. பெரியார் நூற்றாண்டு விழாவின்போது முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாலைகளுக்கு இருந்த சாதிப் பெயர்களை முழுமையாக அரசு ஆணையின் பேரில் நீக்கப் பட்டதை நினைவுபடுத்துகிறோம்.

ஆனால், ‘பிராமணாள்’ என்பது ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக, ‘மனு சாஸ்திரம்’ கூறும் நான்கு வர்ணப் பிரிவில் மேலானவர்கள் ‘பிரம்மா’வால் படைக்கப்பட்ட வர்கள் என்று கூறப்படும் ‘பிராமணர்’ என்ற பிரிவை அங்கீகரிக்கும் சொல். இந்தப் ‘பெருமை’யை ‘பிராமணர்கள்’ கூறிக் கொண்டால், அதனால் மற்றவர்களுக்கு என்ன சங்கடம் என்ற கேள்வி எழக்கூடும். ஒருவன் தன்னை “பிராமணன்” என்று அடையாளப்படுத்துவதன் வழியாக ஏனைய பெரும் பகுதி உழைக்கும் மக்களை “சூத்திரர்கள்” என்று அறிவிக்கிறார்கள் என்பதுதான், இதில் அடங்கியுள்ள முக்கியப் பிரச்சினை.

“வறுமைக் கோட்டுக்குக் கீழானவர்கள்” என்று அரசு, ஒரு புள்ளி விவரம் எடுக்கிறது என்றால், வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி அர்த்தமாகிறதோ அதே போன்றுதான் இதுவும். அரசு கூட மக்கள் தொகையை சாதி வாரியாகக் கணக்கிடுகிறது. அது வேறு. ஆனால், அரசாங்கமே ‘பிராமணர்’, ‘சூத்திரர்’ என்ற வர்ணத்தின் அடிப்படையில் கணக்கிடுவது இல்லை. காரணம், ‘பிராமணன்’, ‘சூத்திரன்’ என்ற வர்ண பேதம் பெரும்பான்மை மக்களான சூத்திரர்களை “பார்ப்பனர்களின் தேவடியாள் மக்கள்” என்று பறைசாற்றுகிறது.

‘மனு சாஸ்திரம்’ என்ன கூறுகிறது? “அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் (செயல்களை) தனித்தனியாகப் பகுத்தார். (அத்தியாயம் 1; சுலோகம் 85)

பிராமனன் முதல் வர்ணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததானாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு. அத்தியாயம் 1 - சுலோகம் 100)

மனு தர்ம அடிப்படையில், ‘பிராமணாள் கபே’ என்று ஒரு ஓட்டலுக்கு பெயர் சூட்டப்படுகிறது என்றால், அதன் பொருள் - ஓட்டல் நடத்தும் அந்த உரிமையாளன், ‘நான் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன். இந்த ஓட்டலுக்கு வந்து காசு கொடுத்து சாப்பிட்டாலும் பிராமணரல்லாதவர்கள் என்றால், அவர்கள், எனது பார்வையில் ‘சூத்திரர்’கள் எனது அடிமைகள். மனுதர்மத்தின் 18வது அத்தியாயம் 122வது சுலோகத்தின்படி என்னுடைய ஓட்டலுக்கு காசு கொடுத்து சாப்பிட வரும் சூத்திரர்கள், நான் ஏற்றுள்ள தர்மப்படி என்னை வணங்க வேண்டியவர்கள். அதே சுலோகத்தின்படி எனது ஓட்டலுக்கு சாப்பிட வருவதே அவர்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

நான் ‘பிராமணரல்லாத’ கீழ் வர்ணக்காரர்களான சூத்திரர்களை மனுதர்மம் அத்தியாம் 8 - சுலோகம் 122-ன்படி கீழ்க்கண்டவாறுஅறிவிக்கிறேன்.

•              போரில் புறமுதுகிட்டு ஓடிவந்த கோழை.

•              இவன் என்னிடம் பக்தி கொண்டு தொண்டு செய்ய வேண்டியவன்.

•              இவன் எனது விபச்சாரியின் மகன்.

•              இவன் என்னால் விலைக்கு வாங்கப்பட்டவன்.

•              இவன் தலை தலைமுறையாக எனது அடிமையாக இருந்து வருகிறவன்.

இதைத்தான் திருவரங்கத்தில் ஓட்டல் நடத்தும் பார்ப்பனர், தனது விளம்பரப் பலகையில் பொறித்து வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் விற்பனைக்காக வசதிக்காக நடத்தப்படுகிற ஒரு வர்த்தக நிறுவனம் தன்னிடம் வாடிக்கையாளர்களாக சாப்பிட வருகிற பெரும்பான்மை மக்களையும் சமுதாயத்தில் உழைக்கும் பெரும்பான்மை மக்களையும்

ஏ, தேவடியாள் மகனே!

ஏ, அடிமையே!

ஏ, புறமுதுகிட்டு ஓடிய கோழையே!

ஏ, என்னை அண்டி வாழக்கூடிய இழிப் பிறவியே!

வா, வா, வந்து காசு கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் போ” என்று பகிரங்கமாக அறைகூவல் விடுப்பதை பக்தித் தமிழர்களே, நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, பா.ஜ.கவிலுள்ள பார்ப்பனரல்லாத தமிழர்களே, இந்த கீழ்மையை சிறுமையை அவமானத்தை அங்கீகரிக்கிறீர்களா?

இது நாத்திக-ஆத்திகப் பிரச்சினையல்ல;

இது இந்துமத எதிர்ப்புப் பிரச்சினையுமல்ல;

நீ, மானமுள்ள, சூடு, சொரணையுள்ள மனிதனாக இருக்கிறாயா என்பதை சோதனைக்குள்ளாக்கும் பிரச்சினை!

ஆமாம், நான் ‘சூத்திரன்’ என்று பச்சை குத்திக் கொள்ளப் போகிறீர்களா?
மானமுள்ள மனிதன் என்று போர்க்கொடி உயர்த்தப் போகிறீர்களா?

Pin It