அதீத வண்ணத்தில் நிறைந்த முயல்குட்டி
என் மடியில் மீதிருந்த புதினத்தின்
முதல் பக்கத்தில் வந்தமர்கிறது...
பக்கங்கள் மோதும் விளிம்புகள்
ஒவ்வொன்றிலும் தனக்கான இரகசியங்கள்
நிறைந்திருப்பதாய் மெல்ல என்னிடம் சொல்கிறது..
எனையும் பக்கங்களுக்குள் உடனிழுத்து
புதினத்தினுலகில் இருவருமாய் துள்ளித்துள்ளி
பயணிக்கத் துவங்குகிறோம்..
முதலில் ஒரு மாளிகையினுள்ளே
போதிமரமும் திரிசூலமும்
போட்டியிட்டு சிலரை வதைப்பதைக் காண்கிறோம்..
அடுத்து வந்த பக்கங்களில் சங்கும் சக்கரமும்
நந்தவனத்து மலர்களை
நரம்புகளில் தொடுத்துக் கொண்டிருக்கின்றன..
மேலும் செல்கையில் வெள்ளிச்சிலுவை
சதைகளைச் சுமந்தபடி ஆணிகளை நோக்கிப்
பயணிப்பதைக் கண்டு ஓடுகிறேன்...
இப்படியாக இரத்தம்படிந்த எழுநூற்றி எண்பத்தியாறாம்
பக்கத்தின் விளிம்பில் நான்
தனியாக இவ்வுலகிற்கு மீண்டு வருகிறேன்..
நிதமும் புதினத்தைத்
திறந்துவைத்துக் காத்திருந்தும்
இப்பொழுதெல்லாம்
முயல்குட்டி வருவதேயில்லை...

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Pin It