அயோத்தியில் இராமன் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக் குறித்து, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி எழுப்பி உள்ள கேள்விகள் ‘தி டெலிகிராப்’ ஏட்டில் வெளி வந்துள்ளது.

“அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததைச் சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.

1856-57இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசிய லமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும்,  தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவரவர்களின் மத சுதந்திரத்தைப் பாது காக்கும் உரிமை உண்டு. அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.

இன்று ஒரு முஸ்லீம் என்ன நினைப்பார்? ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் வர நீதிமன்றம் அனுமதிக் கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யுமா? 

அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்சநீதிமன்றம் மறுக்குமா? 

“அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும்.”

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு முன்பு இருந்தால் உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.

பின்னர், ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில்,  ஒரு பௌத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில், இதுபோன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜித்துகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராம் யார்? வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்சநீதிமன்றம் இந்த முறை கூறியது. மஸ்ஜித்தின் கீழ் கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது.  இப்போது ஒரு மஸ்ஜித்தை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?

500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்காவது தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. 

எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. 

மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை. ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜித்தை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜித்தை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்? ஏன்? மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜித்தை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜித்தும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லி யிருப்பேன்.

நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித் அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்குக் கொடுக்க முடியாது. இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. அவர்கள் எந்த மஸ்ஜிதையும் இன்றோ, பின்னரோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர். இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். 

நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும் பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை.”

நீதிபதி அசோக்குமார் கங்குலியின் கவலைதான் மதச் சார்பற்ற ஜனநாயகக் கோட்பாட்டை விரும்புகின்ற அனைவரது கவலையாகும்!

Pin It