சென்ற இதழ் வெளியாகி இரண்டு நாட்களிருக்கும் மனுஷ்யபுத்திரன் போன் செய்தார். இதழின் வடிமைப்பு குறித்து மிக விரிவாகப் பேசினார். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டேன். இதழை விநியோகிக்க அவர் உதவுவதாக சொன்னார். நான் அமைதியாக கேட்டுக் கொண்டேன். திடீரென அ.மா.வின் பார்ப்பனக்கோவணம் பத்திப் பற்றி கடுமையாகப் பேசத் தொடங்கினார். ‘பார்ப்பனக் கோவணம் என்கிறாரே மார்க்ஸ் மோந்து பாத்துருக்கிறாரா?’ என்றார். ‘நான் உங்களை போன்று அதற்கான வாய்ப்புகளும் அருகாமைகளும் அவருக்கில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார்’ என்றேன். பார்ப்பனக்கோவணம் ரிசீவரை வைத்துவிட்டது.

சென்ற இதழில் அ. மார்க்ஸ் சுஜாதாவின் தொங்கு சதையாக மனுஷ்யபுத்திரன் மாறிய கதையை எழுதிய பிறகு நிகழ்ந்த கூத்துக்கள் நாமெல்லாம் அறிந்தது தான். பார்ப்பனர் சங்க மாநாட்டில் கலந்து கொண்ட சுஜாதா மார்தட்டிப் பேசிவிட்டு வந்ததும், பின் ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதும் தொடரில் பீற்றி எழுதிக்கொண்டதையும் ஒரு வார்த்தைக் கண்டிக்க யோக்கியதையற்ற ஒரு வியாபாரியை பார்ப்பனக்கோவணம் என்றல்ல பார்ப்பனச்சாணம் என்றுக் கூட அழைக்கலாம். இது ஏதோ அவர் மீதான கோபம் என்றுக் கருதுவதை விட அவர் பத்திரிகையாளராக பயின்ற காலச்சுவடின் பரிணாமத்தோடு பிப்ரவரி ‘உயிர்மை’யில் எழுதியிருந்த தலையங்கத்திற்காகவும் தான் நான் இதை சொல்ல நேரிடுகிறது.

தனக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை காலச்சுவட்டின் பாணியில் போட்டுக் கொடுத்தல் .....டிக் கொடுத்தல் (தாங்ஸ்: தமிழ்முரசு) அவர்களின் கூட்டத்தில் இவர்கள் கலாட்டா செய்யலாம் என்கிற பாணியில் எழுதுவது என்பது சக்கர நாற்காலி அரசியலல்ல அடியாட்களை வைத்துக்கொண்டு நடத்த விரும்புகிற அரசியல். அ. மார்க்ஸின் அசிங்கமான எதிரி ஜெயமோகனை உசுப்பி சுந்தரராமசாமியை சொறியும் தொகுப்பில் அ. மார்க்ஸ் இஸ்லாமியரிடம் காசு வாங்கிக்கொண்டு எழுதினார் என எழுத வைப்பது என்பவையெல்லாம் காலச்சுவடு தொடங்கி வைத்த இதழியல் தர்மம். அதைத் தான் பிப்ரவரி இதழில் தலையங்கம் என்கிற பெயரிலும் மனுஷ்யபுத்திரன் நீட்டி முழக்கியிருந்தார். தான் அழைத்து வராத நடிகைகளை ‘அவனோடு கடலை போட்டா இவனோடு கடலைப் போட்டா’ என எழுதும் துப்பறியும் பத்திரிகை ரேஞ்சிற்கு ‘சுகிர்த ராணியின் கவிதைகள் பிளாட்பார பின் அடித்த புத்தகங்களின் மறுவடிவம்’ என அருவருப்போடு எழுதியிருக்கும் மனுவின் திமிரை என்னவென்பது? இதில் ‘எண்ணற்ற தியாகிகளால் கடக்கப்பட்டு நாம் இன்றைய இடத்தை வந்தடைந்திருக்கிறோம்’ எனச் சிறுபத்திரிகை மரபை தனக்கு கற்பித்துக்கொண்டு வீரவணக்கப் பெருமிதம் வேறு. இந்த இடத்திற்கும் இந்தத் தரத்திற்கும் எழுத ஒரு கழிவறை எழுத்தாளன் போதும். (மன்னித்துவிடு கழிவறை நண்பா)

தவிரவும் “எங்களை மாதிரி உங்களால நின்னுகிட்டு ஒன்னுக்கு போகமுடியுமா?’’ என பெண்களிடம் கேட்பது (விக்ரம் படம்) ‘இங்கெல்லாம் நெல்லிக்காய்தான் கிடைக்கும் ரங்கநாதன் தெரு போனா பறங்கிக்காயே கிடைக்கும்’ (பாய்ஸ்) என வசனம் எழுதி பிழைக்கும் பொறுக்கியின் புத்தகத்தை விற்று பிழைப்பதை விட சுகிர்தராணியின் கவிதைகள் எந்த வகையில் குறைந்தவை?

உயிர்மை நிகழ்ச்சியில் நடந்ததாக அவர் கட்டவிழ்த்துள்ள கதைகளை படிக்கும்போது இவ்வளவு பலகீனமான முதலாளியை, எதை விற்றேனும் எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா என தனது சந்தையை காப்பாற்றிக் கொள்ள முயலும் ஒரு நபரை சிறுபத்திரிகை உலகம் சந்தித்திருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது.

உயிர்மை நிகழ்ச்சியில் புத்தகம் வெளியிட்டு முடித்து எஸ்.ராமகிருஷ்ணன் மேடை யிலிருந்து கீழிறங்கி வரும் போது பெண்கள் கேள்வியெழுப்பியதை நல்லக்கண்ணு வெளியிட பெற்றுக்கொண்டு உரையாற்ற யுவன் வந்தார் எனத் திரிப்பது பச்சை அயோக்கியத்தனம். எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பிய பெண்களுக்கு முதலில் வாய்ப்புத் தர முடியாது என்று தான் லில்லி மறுத்தார். பெண்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், ராம கிருஷ்ணன் மேடையேறி ‘அதை நான் எழுதல அதுக்கு எந்த உள்நோக்கமுமில்லை’ எனச்சொன்னதும் அதற்கு பெண்கள் எதிர்ப்புத் தெரிவிக்க பார்வையாளர் மத்தியிலிருந்த யுவன் எழுந்து ஓடிவந்து மைக்கை பிடித்துக் கொண்டு வெறித்தனமாக கத்தவும் கூட்டத்திலிருந்த யுவனின் கட்டளைக்காக காத்திருந்தது போல இரண்டு மூன்று அள்ளக்கைகள் பெண்களை நோக்கி எகிறவும் தான் நான் தலையிட நேர்ந்தது. அப்பவும் நான் நிதானமிழக்காமல் ‘பார்வையாளர்கள் தான் ஜனநாயகமா நடந்துக்க பழகணும்’ என அள்ளக் கைகளை அமைதிப்படுத்திவிட்டு வெளியேற்றப்பட்ட பெண்களோடு நானும் வெளியேறி கீழே வந்து நின்றேன்.

தனது நூலை வெளியிட்டு முடிந்த கையோடு ராமகிருஷ்ணன் வெளியேற அப்போதும் தோழர் குட்டிரேவதி ‘என்ன ராமகிருஷ்ணன் நாங்க கேட்டதுக்கு பதில் சொல்லாம போறீங்க?’ எனக்கேட்க அவர்களைக் கண்டுக்கொள்ளாத திமிரோடும் தேவர்மகன் சிவாஜியின் கம்பீரத்தோடும் வெளியேறிய ராமகிருஷ்ணன் தான் தப்பியோடி வந்ததாக அபாண்டமாய் தமிழ்முரசில் புளுகியிருந்தார். சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சியை தமிழ்முரசு இதழுடன் சேர்ந்து தமிழகத்தின் மாபெரும் நிகழ்ச்சியாக மாற்றிக்காட்டி தனது உயிர்மை பதிப்பகத்திற்கு புத்தக சந்தையையொட்டி விளம்பரம் தேடிக்கொண்டு அதன்மூலம் போட்டுவைத்திருந்த ராமகிருஷ்ணன் ஸ்டாக்குகளை விற்றுக்காசு பார்த்துக் கொண்டதை விட வெட்ககரமான செயலை மனுஷ்யபுத்திரனைத் தவிர வேறு யாராலும் சாதித்துக் காட்ட முடியாது.

போராடிய பெண்களின் உணர்வு என்பது அன்றைக்கு முற்றமுழுக்க தாங்கள் அவமதிக்கப்பட்டதின் எதிர்ப்புணர்வாக மட்டுமே இருந்தது. அதற்குப் பின்னணியைக் கற்பிப்பது மகா அயோக்கியத்தனம் (ஆனால் உயிர்மையை வீழ்த்த காலச்சுவடுவிற்கு அவ்விஷயத்தில் ஒரு ஈர்ப்பும் எதிர்பார்ப்பு இருந்ததும் உண்மை) காலச்சுவடிற்கும் உயிர்மைக்கும் பார்ப்பனக் கழிவை விற்றுக் காசாக்குவதில் போட்டியிருப்பது கண் கூடான விஷயமாகும். கருப்புபிரதிகளை தனக்குப் போட்டியாக மனுஷ்யபுத்திரன் கற்பிப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. கெட்டி அட்டைபோட்டு சுஜாதாவினுடையதை விற்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் முழுக்க முழுக்க இந்துத்துவ எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு இலக்கியப் புத்தகங்கள் என இயங்கிவரும் கருப்புப் பிரதிகளையும் என்னையும் எதிரியாக நிறுத்துவதின் மூலம் யாரைத் திரட்டிக் கொள்ளும் போபியா அரசியலை மனுஷ்யபுத்திரன் செய்கிறார்?

காலச்சுவடாகட்டும் உயிர்மை ஆகட்டும் பத்திரிகையைத் திறந்தவுடன் அவர்களுடைய ‘கேட்லாக்கைத்தான் முதலில் வாசகர்கள் படிக்கவேண்டும். வேல்சாமி கட்டுரையாகட்டும், தமிழ்ச்செல்வன் பத்தியாகட்டும் தனது கேட்லாக் விற்பனைக்கு உதவிகரமான விஷயங்கள் தான். நாங்கள் வெளியிட்டு வருகிற ‘உயர்கல்வி பற்றிய வெளியீடு, போபால் பிரகடனம், பெரியார் குறித்த பிரசுரம், பாடநூல்களில் பாசிசம்’ என காத்திரமான அரசியல் பிரசுரங்களின் ஓரம் கூட வரமுடியாத இந்த டாலர் புத்தக வியாபாரிகளுக்கு நாங்கள் எப்படி போட்டியாகமுடியும்?

இறுதியாக மனுவின் பட்டியலில் யார் யார் கூட்டத்தில் யார் யார் கலாட்டா செய்யலாம் என்கிற பெயர்களை படித்தபோது மனுஷ்யபுத்திரன் சமீபகாலத்தில் எழுதிய தலையங்க அரசியலின் நேர்மையும் அம்பலப்பட்டுப்போனது நல்லவிஷயம் தான். குஷ்பு பிரச்சினையில் எங்கள் கைக்காசைப் போட்டு துண்டறிக்கை வெளியிட்டு அதனால் திருமாவளவனின் ஆட்களால் தாக்கப்பட்டதைத்தான் அவர் நக்கலுடன் எழுதியுள்ளார். தொடர்ந்து எங்களின் கூட்டத்தில் திருமாவளவன் ஆட்கள் கலாட்டா செய்யலாம் எனப் பரிந்துரைக்கவும் செய்யும் மனுஷ்யபுத்திரன் குஷ்பு பிரச்சினையின் போது தலையங்கங்களின் வாயிலாக தாண்டிக் குதித்தவையெல்லாம் போலித்தனம் தான் என்பதை நிரூபிக்க உயிர்மை அரங்கில் பெண்கள் நிகழ்த்திய எதிர்க்கலாச்சார நடவடிக்கை உதவிகரமாக இருந்தது. இதற்கு பெண்களுக்கு மட்டுமல்ல தன்னை அப்பட்டமான அசிங்கமான வியாபாரியாக அம்பலப்படுத்திக் கொண்ட மனுஷ்யபுத்திரனுக்கும் நன்றியைச் சொல்லித் தானாக வேண்டும்.

Pin It