டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதித் திட்டம் (Dr.Ambedkar Scheme for Social Integration through Inter-Caste Marriages) என்று ஒரு திட்டம் மத்திய அரசால் முடங்கிப் போய் கிடக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக அங்கீகாரத்துக் காகவும் பொருளாதார பாதுகாப்புக்காகவும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சகம் 2013இல் இந்த நிதித்திட்டத்தை உருவாக்கியது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அம்பேத்கர் ஃபவுண்டேஷனிடம் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுவதும் 500 தம்பதிகளைத் தேர்வு செய்து ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதை அம்பேத்கர் ஃபவுண்டேஷன் இறுதி செய்து நிதியுதவியை அளிக்கும். கொடுமை என்னவென்றால், திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை இந்த நிதியுதவியைப்ய பெற்றவர்கள், வெறும் 19 தம்பதிகள் மட்டுமே! ஆந்திராவில் 5, தெலுங்கானாவில் 5, புது டெல்லியில் 3, மேற்கு வங்காளத்தில் 3, ஹரியானாவில் 2, இராஜஸ்தானில் ஒன்று. தமிழகத்தில்? ஒருவர் கூட இல்லை!   யாரெல்லாம் இந்த நிதியுதவியைப் பெறலாம்?

1. சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களில் ஆண் அல்லது பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 2. இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும்.  3. இருவரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 4. திருமணம் முடிந்த உடனே ‘இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955இன் கீழ் திருமணத்தை பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்து ஓராண்டுக்குள் இருக்க வேண்டும்.

என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?    1. கணவன், மனைவியின் சாதிச் சான்றிதழ். 2. இருவரின் வருமானச் சான்றிதழ். 3. திருமணப் பதிவுச் சான்றிதழ். 4. திருமணத்திற்குப் பிறகு சேர்ந்துவாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் தம்பதியினர் இணைந்து 10 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் விரிவான அஃபிடவிட் இணைக்க வேண்டும். அதில் கெசடட் தகுதிபெற்ற அலுவலர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். 5. எம்.பி. அல்லது எம்.எல்.ஏவின் பரிந்துரைக் கடிதம். (மாநிலங்களவை எம்.பி.யிடமும் வாங்கலாம்).

யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?    நேரடியாக Dr.Ambedkar Foundation, 15, Janpath, New Delih-110 001 (தொலைபேசி: 91-11-23320571, 23320576) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரியிடம் நேரடியாகத் தரலாம். கூடுதல் விபரங்களுக்கு: http://ambedkarfoundation.nic.in/html/icmf.pdf

உதவி தேவையா?   இந்திய கலப்புத் திருமண தம்பதிகள் சங்கம், நேரடியாக அம்பேத்கர் ஃபவுண்டேஷனை அணுகி இந்த நிதியுதவியைப் பெற்றுத் தருகிறது. விண்ணப்பிக்கும் நடைமுறை உள்பட மேலதிக தகவல்களுக்கு இந்த அமைப்பின் தலைவர் கே.அழகேசனை அணுகலாம். அவரது அலைபேசி எண்: 9442927157 (‘குங்குமம்’ வார இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.)

Pin It