‘நடராசன்’ கடவுளின் சூழ்ச்சியை - சூது மதியை - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரே இவ்வாறு கூறுகிறார்:

சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சில பேர் அவரது ஆலயத்துக்கு சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள். இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான்.

ஒரு நாள்... மிகப் பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப் போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்? பரமசிவன், தில்லை காளி.

யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப் போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்கள் தான் நடன அசைவுகளிலும், இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள்.

புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையைவிட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும்... தில்லை காளி நடனப்பயிற்சி பெற்றவள். பின் சொல்ல வேண்டுமா?

அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப் போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப் போய்விடுவார்கள்.

இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன. இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும்.

கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.

தொடங்கியாகிவிட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கை விரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.

மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை ஐந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்காரதாண்டவம். இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம்.

காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை.

பார்த்தார் சிவபெருமான். ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா? அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா.. சிவபெருமானை தில்லை காளி ஜெயித்து விட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்....

இனியும் இவளை ஆட விடக்கூடாது என முடிவு கட்டிய சிவன்... தன் இடது காலை சற்றே தூக்கினார். நடனத்தில் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக் கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடதுகால் இன்னும் எழும்பியது. ஆமாம்... இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.

வலது காலை ஊன்றி இடதுகாலை உயர விலக்கிக் கொண்டே போக, சபையே ஒரு கணம் அதிர்ந்தது. ஏன்? வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காகத் தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார் சிவன்.

வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலை குனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக் கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது. ஆனால் சிவபெருமான் தொடர்ந்து தாண்டவமாடிக் கொண்டே இருந்தார். ஆக, சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது.

யவலது காலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை வெளிக் கொண்டு வந்து ஜெயித்து விட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது. இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.

இதை நானாக சொல்லவில்லை. ‘நடராஜ மகாத் மியம்’ என்னும் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன?

ஆணிடம் பெண் போட்டி போடக் கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்து விடக் கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

தோற்றவள் காளி. நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். காளி, ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றை கவனிக்க வேண்டும். “siva is a high class God. But kali is a low class rural God” என்று காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே?

இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.

கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.

அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள் காளி. இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

இவ்வாறு தெய்வங்களுக்கிடையிலேயே ஆண் பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு வர்க்க பேதமும் பின்பற்றப்பட்டிருக்கின்றன.

(‘நக்கீரன்’ வெளியீடான ‘இந்து மதம் எங்கே போகிறது’ நூலிலிருந்து)

Pin It