periyar 221இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு.

பெக்கிங் (சீனா) 100000
கெய்ரோ 40000
காஷான் 40000
லிஸ்பன் 50000
மொராக்கோ 12000
தென் அமெரிக்கா 50000
அலப்போ 20000
தென் இத்தாலி 14000
மென்சோடா 12000
பெரு எக்வாடா 25000
கராகாடோ 37000
ஜப்பான் 30000
இந்தியா 20000
பிரான்சிஸ்கோ, சிசிலி 77000
மத்திய இத்தாலி 30000
கான்சு சினா 300000
ஜப்பான் 220000
சில்லரையாக பல இடங்களில் 100000

ஆக மொத்தம் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களாகும். இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும் தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவகாருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படி புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர்களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில் அவர்கள் அதற்கே பிறந்தவர்கள்.

நிற்க.

வினா - விடை

வினா:- நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்னகாரணம்?

விடை:- நமது மதமும் ஜாதியும்.

வினா: - நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம்.

ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

விடை: - மதமும் ஜாதியும்.

வினா:- நமது பணக்காரக் குடும்பங்கள் வரவர பாப்பராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?

விடை:- வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்து வந்த ‘பாவமானது’ அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜிகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்பராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்.

வினா : - எந்த விதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?

விடை :- வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.

வினா:- கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

விடை: - ஒரு கெடுதியும் இல்லை. ஆனால் மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

வினா:- மகம்மதியானவதில் என்ன கெடுதி?

விடை : - ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.

வினா:- உண்மையான கற்பு எது?

விடை:- தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.

வினா: - போலி கற்பு என்றால் எது?

விடை:- ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனத்திற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக் கற்பு.

வினா : - மதம் என்றால் என்ன?

விடை:- இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்துவதும் தான் மதம்.

வினா:- நாட்டுக் கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?

விடை:- பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டுவது இல்லை என்பதாகும்.

வினா: - தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது.

விடை:- பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.

வினா:- பெண்களை படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

விடை:- அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

வினா:- மனிதனுக்கு கவலையும் பொருப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா:- பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- தலைமயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா:- பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல்சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்திழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா:- எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்.

விடை:- ஒருவனும் தன் தேவைக்குமேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியளவு கிடைத்துவிடும்.

வினா:- பெரிய மூடன் யார்?

விடை:- தனது புத்திக்கும் பிரத்தியக்ஷ அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா:- ஒழுக்கம் என்பது என்ன?

விடை:- ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா:- சமயக் கட்டுப்பாடு, சாதிக் கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை:- மனிதனை தன் மனச்சாக்ஷிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவது தான் சாதி சமயக்கட்டுப்பாடாய் இருக்கின்றது.

வினா:- உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை:- கடவுள் எங்கு மரைந்து போவாறோ என்று பயந்து அவரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா:- இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆக்ஷி கூடாது?

விடை:- இந்தியர்கள் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாத எழுத்து வாசனை கூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.

வினா:- ஜனநாயக ஆக்ஷி என்றால் என்ன?

விடை:- தடி எடுத்தவன் தண்டக்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா:- இந்தியாவுக்கு ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:- அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜன சங்கை பெருகும்.

வினா: - இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை:- இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத் தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா: - இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

விடை:- இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபடமுடியாத அடிமையாய் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுள்களுமேயாகும்.

வினா:- கிருஸ்தவ மதத்தில் சில ஆபாச கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்.

விடை:- கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள் தனமுமான கொள்கைகளும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்களாகிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமுமாகும்.

வினா:- பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை:- மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.

வினா:- ஆண் வியபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோக்ஷத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் தங்கள் வியபசாரத்திற்கு என் செய்வார்கள்.

விடை:- அதற்காக எந்த வியபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அங்கு இந்த விபூதி பக்தர்களுக்கென்றே ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமயல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால் காமதேனு, கற்பக விருக்ஷம் கேட்ட தெல்லாம் கொடுத்துவிடும்.

வினா:- பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது?

விடை:- அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

வினா: - பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்க்ஷத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

விடை:- கடவுள் இருக்கிறார். போறாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

சும்மா சொன்னேன்

வினா:- கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார் தெரியுமோ? அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார்கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்குமென்றுதான்.

விடை:- என்ன அக்கிரமம் என்றா கேட்கின்றீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போராதா?

கார்த்திகை தீபம்
பாலர் பாலுக்கழ
பட்னியால் பலர் மடிய
எத்திசையோரும் இகழும்படி
வெண்ணையும் நெய்யும் கொண்டு
கல்லிலும் நெருப்பிலும் கொட்டும்
கயமையே கார்த்திகை தீபமாகும்

நமது மதமும், தெய்வமும் உர்ச்சவமும் முட்டாள்தனமானதென்றும் அது செல்வத்தைப் பாழாக்குகின்றதென்றும் மக்களுக்கு யாதொரு பலனையுமளிக்கின்றதில்லை என்றும் சொல்லப்பட்டு வருவதற்கு உதாரணம் சமீபத்தில் திருவண்ணாமலையிலும் திருச்செங்கோடு முதலிய ஊர்களிலும் கார்த்திகை தீபம் ( கூம்பு - சொக்கப்பானை ) என்கின்ற உற்சவத்தின் போது குடம் குடமாய் டின் டின்னாய் நெய்யையும், வெண்ணையையும் கொண்டு போய் நெருப்பில் கொட்டப்போகும் முட்டாள் தனமும் வீண் செலவும், அதனால் செல்வம் பாழாவதும் போதாதா என்று கேழ்க்கின்றோம். இதற்கு பார்ப்பன தேசீயப் பத்திரிகைகள் என்ன சமாதானம் சொல்லப் போகின்றன என்பதை கவனிப்போம்.

(குடி அரசு - உரையாடல் - 16.11.1930)

Pin It