periyar 355சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர்களும் புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர்களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரசாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களையும் பற்றி, இரண்டொரு நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றோம்.

பார்ப்பனர்களை எந்தக் காரணங்கொண்டும் நம்புவதென்பதோ, அவர்களோடு ஒத்துழைப்பதென்பதோ, அவர்கள் கலந்துள்ள கூட்டங்களில் சேர்வதென்பதோ, தேர்தல்களில் அவர்களுக்கு ஓட்டுச் செய்வதென்பதோ முதலாகிய காரியங்கள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றது.

கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் பூஜைகள் அபிஷேகங்கள் உற்சவங்கள், புதுக்கோயில்கள் கட்டுதல் ஆகிய காரியங்களில் அலக்ஷியம் காட்டப்பட்டு வருவதுடன், பல கோயில்கள் அரைகுறை வேலையில் இருந்தவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

பண்டிகைகள், விரதங்கள், சடங்குகள் முதலியவைகள் அநேகமாக, சில இடங்களில் அடியோடு விடப்பட்டும், சில இடங்களில் மிக்க அலக்ஷியமாக ஏதோ நிர்பந்தத்திற்கு நடத்துபவைகளாகவும் காணப்படுகின்றன.

விதவைகள் மணம் என்பதும், கலப்பு மணம் என்பதும், தினம் தினம் நடக்கும் விஷயங்களும், நடத்தத் தேவை விளம்பரங்களும் வெளியான வண்ணமாய் இருந்து வருகின்றன.

ஜாதி வித்தியாசம் ஒழித்தல், தீண்டாமை ஒழித்தல் முதலிய வித்தியாசங்கள் குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பயன்கொடுத்து வருகின்றன. அதாவது தினமும் மக்கள் மகமதியராவதும், கிறிஸ்தவராவதுமான செய்திகள் வெளியாகின்றன. கோயில் பிரவேசம் பல இடங்களில் நடக்கின்றன. புரோகித விலக்கு சங்கங்கள் புதிது புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன.

மதத்தைப் பற்றிய புரட்டுகள் வெகுதாராளமாய் வெளிப்படுத்தப் படுவதோடு மதப் புரட்டர்கள் எல்லாம் மூலையில் முக்காடிட்டு ஒடுங்கி உட் கார்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டன.

அன்றியும் அவர்களின் உண்மையான தோல்வியைக் காட்ட அறிகுறி என்னவென்றால் தாங்கள் வாய் திறக்க யோக்கியதை அற்றுப்போய், புத்தியில்லாத பாமர மக்களை ஏவிவிட முயற்சியில் இறங்கியிருப்பதேயாகும்.

இந்துமதப் புரட்டு தேசமெல்லாம் பரவி வருவதுடன், அடுத்த ஜனகணித்தில் ஒவ்வொருவரும் இந்தியன் அல்லது இந்துவல்லாதவன் என்று சொல்ல வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் ஜாதியையும், ஜாதிப் பட்டத்தையும் சொல்லக் கூடாதென்றும், நூற்றுக்கணக்கான சங்கங்களும் மகாநாடுகளும், தீர்மானங்கள் செய்தனுப்புவதுகளுமேயாகும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், தேசத்துரோகம், தேசியத்திற்கு விரோதம் என்று எவ்வளவோ தூரம் பார்ப்பனர்களும் அவர்களது வால்களும், கத்தியும் இப்போது சட்டசபையிலும், சர்க்கார் உத்தியோகத்திலும் ஏற்பட்டு நிலைத்து அனுபவத்திற்கு வந்துவிட்டதோடு, பார்ப்பனர்களே தங்கள் வகுப்புக்குள்ள உரிமையை கெஞ்சி கேட்கவேண்டிய அளவுக்கு, தைரியமாய் வெளியில் வந்து விட்டார்கள்.

உதாரணமாக சர்க்கார் மதுவிலக்குப் பிரசார ஜில்லா கமிட்டிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்ப்பனர் என்கின்ற கணக்கு வைத்து நியமிக்க வேண்டும் என்று திவான்பகதூர் திரு. ராமச்சந்திரராவே முயற்சி எடுத்துக் கொண்டதோடு தேவஸ்தானக் கமிட்டிகளில், பார்ப்பனர்களுக்கு உண்டான பங்கு ஏன் கொடுக்கவில்லை? என்று சட்டசபையில் திரு.சத்தியமூர்த்தியே பல கேள்விகள் கேட்கவும், இந்தக் கேள்வியை திரு.சத்தியமூர்த்தி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை ஒப்புக்கொண்டு கேட்கின்றாரா? என்று திரு.சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் கேட்கவும் சர்க்காரார் ஆம் என்று பதில் சொல்லவுமான நிலைமைக்கு வந்துவிட்டது.

மற்றும் ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம்பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் “சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனி வரும்படி எதிர்பார்க்க முடியாது” என்று காணப்பட்டிருக்கின்றது.

மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாக்கா வருஷாந்திர ரிபோர்ட் ஒன்றில் “இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கலியாணங்களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரர்களை நியமிக்க வேண்டும்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

வைதீகக் குடுக்கைகளுக்கும் புராண அழுக்கு மூட்டைகளுக்கும் வருணாச்சிரம புராணங்களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்துவிட்டது.

காஞ்சீபுரம் சங்காராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் “தீண்டப்படாத”வர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது.

சென்னை பச்சையப்பன் காலேஜில் ‘தீண்டப்படாதவர்களை’ சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக்கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது.

திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பள்ளிக்கூடத்தில் பார்ப்பனரல்லாதார்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமாய் சர்க்கார் உத்திரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.

பெண்களுக்கு மூன்றாவது பாரம் வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப் படி அமுலிலும் வந்துவிட்டது.

பெண்களுக்குப் போதனா முறை பாடசாலைகள் முக்கிய தாலூக்காக்கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.

விதவைகள் ஆச்சிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றது.

இவ்வளவும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக் கிணறுகளில் “தீண்டப்படாதார்” உள்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம் என்றும் யாராவது ஆஷேபித்தால் ஆஷேபிப்பவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகி விட்டது.

ஜில்லா போர்டு, தாலூக்கா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கல்யாணம் செய்யக் கூடாது என்றும் பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. விதவைகள் சொத்துரிமைக்கும் பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.

சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரிகளாக்கப் பட்டுவருவதை நிறுத்த சட்டங்கள் செய்யப்பட்டுவிட்டன. பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்க சட்டம் செய்யப்படுகின்றது.

இப்படியாக இன்னும் அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல் தினத்திற்குதினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதை கண்ணில் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.

இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத்தில், சில விஷயங்களுக்கு சத்தியாக் கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம்.

அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்குமானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.11.1929)

Pin It