periyar maniammaiதஞ்சை தேவஸ்தான கமிட்டியார் நாடார்களை தேவஸ்தான கமிட்டி அங்கத்தவர்களாய் நியமிக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அருகதை இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்து அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கின்றார்களாம்! இதை என்ன மாதிரி அயோக்கியத்தனம் என்று சொல்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப் பற்றி எந்த தேசீய பத்திரிகையும் எழுதாமல்: “சைமனே திரும்பிப்போ, எல்லாம் நாங்களே சாதித்து விடுகின்றோம்” என்கின்றன.

சைமனை திரும்பி போக சொல்லும் சில நாடார் வாலிபர்கள் நாளைக்கு யாரிடம் இதைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை. ஒரு கூட்டத்தார் தங்கள் வயிற்று பிழைப்புக்கும் கூலிக்கும் சைமனை பஹிஷ்கரித்தால், மற்றொரு கூட்டத்தார் தங்கள் அறியாமையால் பஹிஷ்கார போலிகளுடைய மாய்கையில் சிக்கி விடுகின்றார்கள். ஐயோ பாவம்!

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.03.1928)

பொய்ப் பெருமை

சென்னையில் சைமன் கமிஷன் வந்து இறங்கிய தினத்தில் வேறு யாருடைய பிரயத்தனமும் இல்லாமல் பொது ஜனங்களாகவே வேலை நிறுத்தம் செய்ததாக, சொந்தத்தில் பெருமை சம்பாதிக்க யோக்கியதை இல்லாதவர்கள் தங்களது பொய்ப் பிரசாரத்தால் பெருமை அடைகிறார்கள். இது அமாவாசை அன்றைய தினம் சந்திரனுக்கு வெளிக்கிளம்பாமல் இருக்கும்படி உத்திரவு போட்ட வீரனின் பெருமைக்கே ஒக்கும். ஏனெனில் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பிராட்வே, சைனா பஜார் முதலிய முக்கிய வியாபார ஸ்தலங்களில் ஞாயிற்றுக் கிழமைய தினம் பெரும்பான்மையான கடைகளை மூடிவிடுகின்ற வழக்கம் உண்டு என்பது தெருப்பொருக்கிக்குக் கூட தெரிந்த விஷயம். அத்தோடு போலீசையும் தடபுடலையும் சென்ற மாதம் 3- தேதி காங்கிரஸ் காலித்தனத்தையும், கண்ட ஆசாமிகள் யாராவது இரண்டொருவர் அன்று வேறு வேலைக்குப் போயிருக்கவும் கூடும்.

உதாரணமாக அனேக வக்கீல்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர்களும்கூட மூன்றாந்தேதி பயத்தினால் 26 தேதி தங்கள் பெண்டு பிள்ளைகளை வேறு ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் கேள்வி. இதுவும் ‘தேசீய வீரர்’களின் பிரசாரம் தான் போலும். இம்மாதிரி பொய்ப் பெருமையால் அரசியல் புரட்டர்கள் எத்தனை நாளைக்கு வாழ முடியுமோ தெரியவில்லை.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.03.1928)

Pin It