periyar 178நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும் மதத்தின் பேராலும் விபசாரித்தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபட வேண்டுமென்பதாக பலர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக சென்னை சட்டசபை அங்கத்தினரும், உபத் தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால் விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக் கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும் அப்படி செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம்.

இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும் அதற்குப் பின்புறம் சிலரிருந்து கொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது. ஏனெனில் அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவாது அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்பு கெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்க முடியாது. ஆனால் அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வை கூட நிலத்தில் விழாமல் மேலாமினுக்காய் இருந்து வாழ்ந்து வரும் மாமாக்கள் என்று சொல்லுகின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும். ஆதலால் அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூலக்கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும் இக் கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும் கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும் நமது மற்றப் பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொடுமையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால் அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கக்ஷியை நியாயம் என்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை தலைமுறையாக தங்கள் பெண்களை உதவி வர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்று கேட்பதுடன் அந்த தேசாபிமானமும் நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம், எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்ற வகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆnக்ஷபனை. அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும் கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆnக்ஷபனை என்று கேழ்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித் தானே ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்துவிட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும் அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது. இப்படி சொல்லுவதானது ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும், கடவுள் சித்தமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும் பெண்களுக்கு காவலும் கட்டுப்பாடும் நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை கற்பு என்று நாம் ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விஷயத்தில் உலகத்திலுள்ள எல்லா மதமும் பழக்கத்தில் அநியாயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால் இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இருபாலருக்கும் சரிசமானமான சுதந்திரமில்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.10.1927)

Pin It