பிராமணர்கள் தங்கள் பின்னால் திரியும் பிராமணரல்லாதாரிடம் வைத்திருக்கும் மதிப்பு

சென்ற மாதத்திற்கு முன்மதுரையில் நடந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கூட்டம் முடிந்து எல்லோரும் திரும்பி ரயிலுக்கு வரும்போது ரயில்வே மேடையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருடைய சட்டைப்பையிலிருந்த சிறு பணப்பை காணாமல் போய்விட்டதாம். இதற்காக வேண்டி அவர்களுடன் சென்ற இரண்டு முக்கியமான பிராமணரல்லாதாரின் மூட்டையையும் மடியையும் சோதனைப் போட்டுப்பார்த்ததாக ஒரு நிரூபர் எழுதியிருக்கிறார். இதை நாம் கேட்கும் போது நமது காதில் நாராசம் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. அவ்விரண்டு பிராமணரல்லாதாருள் ஒருவர் 5,6 வருஷமாய் காங்கிரஸிலுழைத்துவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர். மற்றொருவர் செல்வாக்கும் மதிப்புமுள்ள பிரபலஸ்தர்.

இவர்கள் இருவரும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பணப்பைக் காணாமல் போனதற்காக எந்தக்காரணத்தைக் கொண்டானாலும், தங்கள் மூட்டையைப் பிரித்துக் காட்டினதற்கு நாம் மிகவும் வெட்கப்படுகிறோம். அல்லாமலும் இந்தப் பிராமணர்களுக்கு இவர்களைப் பரிசோதனை செய்யும்படியானதோர் தைரியமேற்பட்டதானது பிராமணரல்லாதாரின் நிலையை இகழ்ந்து காட்டுகிறது. இன்னும் சிலருக்கு எந்த சமயத்தில் என்ன மரியாதைகள் கிடைக்குமோ கடவுளுக்குத்தான் தெரியும்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 25.04.1926)

Pin It