வக்கீல்:- வா கவுண்டா என்ன சங்கதி.

 

கட்சிக்காரன்:- எசமான்றுகிட்டதான் ஒரு காரியமாய் வந்தேன்.

வக்கீல்:- என்ன காரியம்.

 

கட்சிக்காரன்:- நான் ஒருத்தருக்கு 1000 ரூபாயும் வட்டியும் கொடுக்க வேண்டும் வாங்கி 2 வருசமாச்சிங்கோ. வாய்தா சொல்லி கடந்தும் ஒரு வருசமாச்சிங்கோ. கடைசியா 2 மாச வாய்தா கேட்டேன் அதுக்குள்ளே பிராது போட்டுட்டானுங்கோ. எசமான்று எப்படியாவது ஒரு இரண்டு மாச வாய்தா வாங்கி கொடுத்தாக்க பணம் கட்டிப்போட்ரனுங்கோ.


வக்கீல்:- இரண்டு மாதம் தானா இரண்டு வருஷ வாய்தா வாங்கிக் கொடுக்கிறேன் கடைசியாய் அவன் உன்னிடம் பணம் வாங்குகிறதையே நான் பார்த்து விடுகிறேன்.


கட்சிக்காரன்:- சாமி சாமி அப்படிச் செய்யாதிங்கோ. அவன் மொதுலுக்கு நானா பிள்ளை. எம் மொதுலை எத்தனையோ பேர் திங்கி ராங்கோ. இரண்டு மாசம் இல்லாட்டா மூணு மாச வாய்தா கிடைத்தால் போரும்.


வக்கீல்:- சரி, பீசு என்ன கொடுக்கறே.


கட்சிக்காரன்:- எசமாங்க சொன்னாச் சரி.


வக்கீல்:- நூறு ரூபாய் கொடுக்கனும் வாய்தா வாங்குகிறது என்றால் விளையாட்டு காரியமல்ல.

 

கட்சிக்காரன்:- 50ரூ. தாரனுங்கோ.

 

வக்கீல்:- வாய்தா வாங்குவதில் உள்ள கஷ்டம் உனக்கு தெரியாது. நான் செய்யும் வேலையினால் முனிசீப்பே 1 வருஷம், 2 வருஷம் வாய்தா கொடுத்தாலும் கொடுப்பார் ஆனதால் பீசு 100-க்கு குறையாது.


கட்சிக்காரன்:- அத்தனை நாள் வாய்தா வாண்டாம். 2, 3 மாசம் கிடைச்சால் போதும்.

 

வக்கீல்:- நீ என்ன பயித்தியக்காரனாக இருக்கிறாய்? கடன் கொடுத்தவன் 2 µ வாய்தா கேட்டதர்க்கு கொடுக்காமல் பிராது போடுவதென்றால் அவனுக்கு அத்தனை ஆணுவமா? அவனை விடக்கூடாது. பீசைப் பற்றி நீ கவலைப்படாதே நான் வாங்கும் வாய்தாவினால் உனக்கு மிச்சமாகும். வட்டியைக் கொடுத்தால் போதும்.

 

கட்சிக்காரன்:- அப்படியானால் எசமாங்கோ கேக்கிரபடி தாரேனுங்க. இந்தாங்கோ இப்ப 50ரூ. வாங்கிக்கோங்க.

 

வக்கீல்:- சரி, என்று குமாஸ்தாவை கூப்பிடுகிறார். றாமச்சந்திரா.

 

குமாஸ்தா:- சார்.

 

வக்கீல்:- இவனிடம் ஒரு வக்காலத்து வாங்கி ஒரு ஸ்டேட்மெண்டு நான் சொல்கிறபடி எழுதி கையெழுத்து வாங்கிகொள்.

 

குமாஸ்தா:- காகிதம் இங்கி பெட்டி பேனாவுடன் வந்து வக்கீல் பக்கம் நின்று கொண்டு வக்கீல் சொல்வதை எழுதுகிறார்.

 

வக்கீல்:- சொல்வதாவது - இந்த பிராது மோசடியும் சுத்தப் பொய்யுமானது. இந்தப் பிராம்சரி நோட்டு நான் எழுதிக் கொடுக்கவில்லை. இது போர்ஜரி - என்று சொல்லிக்கொண்டு வரும்போது,

 

கட்சிக்காரன்:- சாமி, சாமி அதெல்லாம் எளுதாதிங்கோ. இந்த பாவத்தை எங்கெ கொண்டுபோய் தொலப்பேன். 3 மாசமா நடந்து கை நீட்டி சொளையாட்ட பணம் வாங்கி ஊடு கட்டி கல்யாணம் பண்ணி இருக்கிறேன். இப்படி எளுதினா கண்ணும் வாயும் வெளங்க வாண்டாமா?

 

வக்கீல்:- கோபித்துக் கொண்டு, என்னடா மகா சத்திய கீர்த்திபோல் பேசறே. அப்படியானால் வாங்கின பணத்தை கொடுத்தவன் கேட்டதும் எரிஞ்சு போடரதானே. இத்தினை நாளாயி இன்னும் வாய்தா என்ன.

 

கட்சிக்காரன்:- சாமி சாமி கோவிச்சுக்காதிங்கோ, கைக்கு பணம் வர வாண்டாமா 2 µ த்தில் வந்தரப் போகுது, கொண்டு போய் குடுத்து கெஞ்சிகிட்டு வந்தடப்போரே. அதுக்குள்ளே நான் எழுதிக் கொடுக்கால போரு சரி என்னு எழுதினா நல்லாவாயிருக்கும்.

 

வக்கீல்:-அப்படியானால் வாய்தா கிடைக்காது, உனக்காக வேணுமானால் எழுதி கொடுத்ததை ஒப்புக்கொண்டு வேறே மாதிரியாய் எழுது கிறேன்.

 

கட்சிக்காரன்:- சரி அப்படி எழுதுக்கோ சாமி. நமக்கெனத்துக்கு ஊரா முதலு.

 

வக்கீல்:- றாமச்சந்திரா, அந்த 2வது பாராவை அடிச்சி இந்த மாதிரி எழுது - நான் வாதியிடம் ஒரு கூட்டு வியாபாரம் செய்ய ஜாமீனுக்காக இந்த பிராம்சரி எழுதிக் கொடுத்தேன்.

 

கட்சிக்காரன்:- சாமி சாமி அப்படிக்கூட இல்லெங்கே.

 

வக்கீல்:- கோபித்துக்கொண்டு றாமச்சந்திரா, இத்தனை நேரம் வேலையைக் கெடுத்ததற்கு 15 ரூ. பிடித்துக்கொண்டு அவன் பணத்தை தலையைச் சுற்றி எறிந்துவிடு. இதெல்லாம் கிளித்தெரி. இந்த சத்தியகீர்த்தி சாவகாசம் நமக்குவேண்டாம். இவன் சொல்கிறபடி எழுதினால் நாளைக்கு நம்மிடம் ஒரு கட்சிக்காரன்கூட வரமாட்டேன்.

 

குமாஸ்தா:- கடன் வாங்கினவனுக்கு ஜாடைகாட்டி பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்கச் சொல்லுகிறார்.

 

கட்சிக்காரன்:- சாமி சாமி எசமாங்கோ இப்படி கோவிச்சிக்கலாமா. நாங்கல்லா காட்டாள்தானே? கோரட்டு சங்கதி எங்களுக்கெப்படி தெரியும். எசமாங்கதானே சொல்லிக்கொடுக்கணும். நீங்க என்னமோ எழுதிக் கொங்கோ. நம்மை ஏதாவது சத்தியம் கேட்டுடப்போறாங்கொ. அது மாத்திரம் பாத்துக் கொங்கோ.

 

வக்கீல்:- சரி, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். றாமச்சந்திரா எழுது பிராம்சரியில் கண்டபடி பரிகாரம் பெரவில்லை. கூட்டு வியாபாரக் கணக்குகள் இருக்கிறது. இதை கமீஷன் வைத்து லாப நஷ்டம் பார்த்து முடிவு செய்யவேண்டும்.

 

கட்சிக்காரன்:- சாமி சாமி அப்படி எழுதினா நாளைக்குக் கணக்கு காட்ட வாண்டாமா?

 

வக்கீல்:- அதெல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன். நம்மிடம் எத்தனையோ கணக்குகள் இருக்கிறது. குமாஸ்தாவைப் பார்த்து டீ.ளு. 43-க்கு காட்டினமே அந்த கணக்கு புஸ்தகங்கள் எல்லாம் நம்மிடம் இருக்கிறதல்லவா.

 

குமாஸ்தா:- ஆம். அதுவும் இருக்கிறது, வேறு கேசுகளுக்கு வந்த கணக்குகளும் இருக்கிறது.

 

கட்சிக்காரன்:- சாமி சாமி இதெல்லாம் நமக்கு எப்படி ஒதவுமுங்கோ.

 

வக்கீல்:- அடப்பயித்தியக்கார ஏதோ இரண்டு மூட்டை கணக்குகளை கொண்டுபோய் திடீரென்று முனிசீப்பு முன்னால் போட்டால் பயந்து கொள்ள வாண்டாமா? நம்ம முனிசீப்பு கணக்கு மூட்டையை கண்டதும் 6 µ வாய்தா தானாகவே கொடுத்து விடுவாhர்.

 

கட்சிக்காரன்:- அய்யோ சாமி கணக்கை தொறந்து பாக்க மாட்டாங்களா? கம்மிசனர் நேமிக்கமாட்டாங்களா? அப்பரம் சிக்கிக்கிட்டாக்க.

 

வக்கீல்:- அது என் வேலையல்லவா. அப்படி பாக்கரதாயிருந்தால் மூட்டையை பிரிக்க 2 மணி நேரமாகும். அதுவும் மிஞ்சி அதைப் பிரித்தாலும் அந்தக் கணக்கை பார்த்து என்ன கணக்கு யாருடைய கணக்கு என்று கண்டு பிடிக்கவே முடியாது. இன்னும் எத்தனையோ வழி இருக்கிறது. கமிஷனர் ஏற்பட்டாலும் அவரையும் சரிபண்ணிக்கொள்ளலாம். அதைப்பற்றி நீ கவலைப்படாதே. கமிஷனர் ஏதாவது தகரார் பண்ணினால் அவர் கேசுகளில் நான் கமிஷனரா வந்தா அவரை இழுத்து விட்டு விடுவேன். எதிர் வக்கீலுக்கும் இப்படியெல்லாம் செய்யாவிட்டால் கோர்ட்டுக்கு கேசே வராதென்று தெரியும். அவரும் இப்படி எத்தனையோ தடவை செய்திருப்பார். முனிசீப்பும் ரம்ப நல்லவர் அவரும் வக்கீலாயிருந்து வந்தவர்தானே. இத்தெல்லாம் வாய்தா வாங்க சகஜம்தான் என்று அவருக்கும் தெரியும். உனக்கு எப்படியானாலும் 2 வருஷத்திற்கு கம்மியில்லாத வாய்தா பாத்துக்கோ. அதற்குள் கடன் கொடுத்தவன் அசலில் 100, 200 தள்ளிக் கொண்டாவது கொடு என்று உன் காலை வந்து பிடிக்கிறான் பார்த்துக்கோ. ஒன்றுக்கும் பயப்படாதே.


கட்சிக்காரன்:- அய்யய்யோ, அதல்லாம் வாண்டாஞ் சாமி கொடுத்த வனுக்கு நல்ல பிள்ளையாய் போகணும். நீங்க என்னமோ எழுதிக்கோங்க எனக்கெல்லாம் இரண்டே மாசம் வாய்தா போதும்.

 

வக்கீல்:- சரி எழுதப்பா. பாக்கி டீ.ளு. 21-க்கு ஸ்டேட்மெண்டு எழுதி னோமே அதைப்பார்த்து எழுதி கையெழுத்து வாங்கிக்கொள். கோர்ட்டுக்கு வரும் போது பாக்கி பணத்தையும் கொண்டு வரச்சொல்லு.

 

கட்சிக்காரன்:- சாமி நாளைக்கு பாக்கி பணங்கொண்டாரனுங்கோ.

 

(குடி அரசு - உரையாடல் - 23.08.1925)

Pin It