1984 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றங்களைக் கலந்தாலோசித்து, மாநிலங்கள் குடும்ப நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டது.

குடும்பத்தில் கணவன், மனைவியரிடையே ஏற்படும் விரிசல்கள், உடலுறவுக்கு மறுக்கும் கணவன் அல்லது மனைவியை சரிக்கட்ட கட்டாயப்படுத்த தொடரப்படும் வழக்குகள், மணவிலக்கு, நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குகள், செல்லுபடியாகும் திருமணமா? செல்லுபடியாகாத திருமணமா? என்பது போன்ற வழக்குகள், குழந்தை பராமரிப்பு, ஜீவனாம்சம், சொத்துரிமைகள் போன்ற குடும்ப விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து இந்த நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன.

குடும்ப நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, ஊடல் கொண்ட இருதுருவங்களாக விலகி நிற்கும் கணவன் மனைவியரிடையே சமரசத்தை ஏற்படுத்துவதுதான். குடும்ப நீதிமன்ற நீதிபதி, பெரும்பாலும், நடுவரைப் போல் சமரச அதிகாரியைப் போல், இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தவே பாடுபடுகிறார். தேவைப்பட்டால் குடும்ப நீதிமன்றம் உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி குடும்ப வழக்குகளில் சமரசம் செய்து வைக்க முயலுகிறது. இருதரப்பிற்கும் உடன்பாட்டை உருவாக்க ஆலோசகர்களையும் நீதிமன்றம் நியமிக்கிறது.

வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஏதாவதொரு கட்டத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் சமரசம் ஏற்படும் என்பதற்கான அறிகுறி தோன்றுமானால், சமரசம் உருவாவதற்காக தேவையான அளவிற்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து விட்டு, கணவனும், மனைவியும் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.

குடும்ப நீதிமன்றங்களில் சட்டப்படி, கணவனோ அல்லது மனைவியோ வழக்கறிஞர் வைத்து வழக்கை நடத்தக்கூடாது. நீதி நிலைநாட்டப்படுவதற்கு அவசியமென்று குடும்ப நீதிமன்றம் கருதுமானால் சட்டநிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.

வழக்கில் சம்பந்தப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ விரும்பினால், குடும்ப நீதிமன்ற விசாரணை ரகசியமாக நடத்தப்படும். குடும்ப நீதிமன்ற நீதிபதி அவரது உசிதப்படி, அவசியமென்று கருதினால் ரகசியமாக (இன்கேமரா) விசாரணையை நடத்தலாம்.

Pin It