சென்ற பதிவில் இந்தியாவினை கி.பி காலத்தின் தொடக்கத்தில் விட்டு விட்டு வந்தோம். அப்பொழுது இந்தியாவில் அன்னியர்கள் பலர் இருந்ததாகவும் மேற்கு பகுதிகள் முழுமையாகவே அவர்களிடம் இருந்ததையும் நாம் கண்டோம். இனி கி.பி யில் நடந்தது என்ன என்று காண்போம்.இந்தியாவின் மேற்குப் பகுதியில் பார்தியர்கள் ஆண்டுக் கொண்டு வந்தனர் என்றுக் கண்டோம் அல்லவா. ஆனால் அவர்களின் ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க வில்லை. காரணம் – குஷானர்களின் படையெடுப்பு. நாம் சென்ற பதிவில் கண்டு இருந்தோம் அல்லவா சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து குசானர்கள் துரத்தி அடித்தனர் என்று, அதே குசானர்கள் தான் இப்பொழுது மத்திய ஆசியாவினைப் பிடித்து இந்தியாவின் மேற்கே வந்து இருக்கின்றனர். இவர்களின் முன் தாக்குப் பிடிக்க முடியாது பார்தியர்களின் அரசு வீழ மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய ஒரு சீன நாடோடிக் கூட்டம் ஆகும். அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கோல் இனத்தவரின் முன்னோடிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். ஆயிரம் வருட முன்னோடிகள். அப்பேர்ப்பட்ட இவர்களின் வலிமைக்கு முன்னால் நிற்க முடியாது வரிசையாக மத்திய ஆசிய நாடுகள் வீழ இறுதியில் பார்தியர்களின் அரசும் வீழ்கின்றது.

இந்தியாவின் மேற்குப் பகுதி சீன நாடோடி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது. இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப் பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடோடி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள் கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. சரி இப்பொழுது மீண்டும் குசானர்களிடம் வருவோம்.குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர். ஏன் மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில் சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை ஒரு அளவு கட்டுப்படுத்த முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. இவ்வாறே காலங்கள் ஓட கி.பி மூன்றாம் நூற்றாண்டும் வந்து விடுகின்றது.

இக்காலத்திலேயே குசானர்கள் மற்றும் சாதவாகனர்களின் ஆட்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன. சாதவாகனர்கள் ஆட்சி இந்தியாவின் மேற்கில் குசானர்களின் ஆதரவில் வீற்று இருந்த ஒரு சகர் அரசால் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. குசானர்களின் ஆட்சியோ மேற்கில் மீண்டும் வலுப்பெற்று எழுந்த பெர்சியர்களின் அரசால் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் குசானர்கள் முழு ஆட்சியையும் இழக்கவில்லை. பஞ்சாப் பகுதியினை அவர்கள் அப்பொழுதும் அவர்களின் ஆட்சியில் வைத்து இருந்தனர். மத்திய இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சரித்திரம் ஒரு இருண்டக் காலத்தினுள் நுழைகின்றது. தமிழகம் களப்பிரர்களின் கைகளுக்கு செல்கின்றது. இருண்டக் காலம் என்றுக் கூறுவதன் காரணம் அக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. களப்பிரர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்ன நடந்தது என்று ஆய்வுகள் தான் கூற வேண்டும். சரி இப்பொழுது நாம் மீண்டும் குப்தர்களைக் காணச் செல்வோம்.

குப்தர்கள் ஆட்சி மலருவது கி.பி நான்காம் நூற்றாண்டில். குப்தர்களின் காலம் மீண்டும் இந்தியாவின் ஒரு பொற்காலம். இக்காலத்தில் தான் இழந்த பகுதிகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெறுகின்றது. சந்திர குப்தர், சமுத்திர குப்தர் போன்ற மாபெரும் வீரர்கள் தோன்றுகின்றனர். பெர்சியர்களை வீழ்த்தி மேற்குப் பகுதியில் பெருன்பான்மையான பகுதிகள் மீட்கப் படுகின்றன. கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே இந்தியர்களின் கையில் வருகின்றது. மேற்குப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும் குப்தர்களின் முன் அவை தோற்றே போகின்றன. ஆனால் வலிமையுடன் இருப்பவன் வலிமையாகவே இருக்க முடியுமா. குப்தர்களின் ஆட்சியிலும் அவர்கள் சறுக்கும் காலம் வருகின்றது. இந்த சறுக்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. காரணம் ஹுன்னேர்கள் (Huns). வட ஆசியப் பகுதிகளில் இருந்துக் கிளம்பிய மற்றுமொரு நாடோடி இனத்தவர். இவர்களைப் பற்றி சாதாரணமாக எண்ணி விட முடியாது.

குதிரை வில்லாளிகளையே முக்கிய ஆயுதமாகக் கொண்டு இருந்த இவர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சரி ரோமப் பேரரசுக்கும் சரி தலைவலியாகத் தான் திகழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட இவர்கள் தான் இந்தியாவின் மேற்குக் கதவினை இப்பொழுது தட்டிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனைக் காலம் தான் குப்தர்களாலும் அக்கதவினைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க முடியும். குப்தர்கள் பின் வாங்குகின்றனர். ஹுன்னேர்கள் இந்தியாவின் உள்ளே நுழைகின்றனர். இது நடப்பது கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில்.இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஹுன்னேர்களின் ஆதிக்கம் பெருகுகின்றது. குப்தர்கள் வலு இழக்கின்றனர். பஞ்சாப் முதற்கண்ட பகுதிகளில் ஹுன்னேர்கள் பரவுகின்றனர். இறுதியாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் குப்த வம்சம் பல சிறு சிறு பிரிவுகளாக பிரிகின்றது.

அத்தருணத்தில் தான் வரதர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். சிதறிக் கிடக்கும் பிரிவுகளை ஒன்றிணைத்து ஹுன்னேர்களை எதிர்க்கின்றனர். ஆனால் எவ்வாறு இறுதி மௌரியப் பேரரசன் சதியினால் வீழ்த்தப்பட்டு இறந்தானோ அவ்வாறே இறுதி வரத மன்னனும் சதியினால் இறக்கின்றான். அவனை கொள்பவன் அவனது அமைச்சன். அவனுடன் சேர்ந்தே அவனது இரு மகன்களும் கொல்லப்பட வரத அரசும் அதன் முடிவுக்கு வருகின்றது. இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு. எவ்வாறு பிரகதரத்தன் மரணத்தோடு மௌரியப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்ததோ. அதேப்போல் இறுதி வரத மன்னனான ஹர்ஷ வரதனின் (Harsha vardhan) மரணத்தோடு வட இந்தியாவில் இந்தியர்களின் இறுதிப் பேரரசும் ஒரு முடிவுக்கு வந்தது. அவனே இறுதியாக வட இந்தியாவினை ஆண்ட ஒரு உண்மையான இந்திய அரசன்.அவனின் மறைவுக்குப் பின் வட இந்தியா ஒரு குழப்பமான நிலைக்குச் செல்கின்றது. பெரிய அரசர்களோ அரசுகளோ இல்லாத ஒரு நிலை வட இந்தியாவினில் இருக்கின்றது. தெற்கே அப்பொழுது தான் பல்லவர்கள் நிலைப்பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாய் ஒரு பெயரினை வைத்துக் கொண்ட சிறு குழுக்கள் வட மேற்குப் பகுதியில் இருந்து தோன்றுகின்றன. இனி வட இந்தியாவினை அடுத்த ஐநூறு ஆண்டுகள் ஆளப்போவது இந்த குழுவினரே. இக்குழுக்களின் பெயர்களை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். அட அது என்ன பெயர் அப்படின்னு கேட்கின்றீர்களா? அது தான் ராஜ்புட்ஸ் (Rajputs). இன்றைய வட இந்தியாவிலும் பிரபலமான ஒரு பெயர். வட மேற்கில் பல காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவிலேயே தங்கி இருந்த சகர்கள், குசானர்கள் மற்றும் ஹுன்னேர்கள் போன்றவர்களே ஒன்றிணைந்து, குழப்பம் மிக்க அன்றைய இந்திய அரசியலிலில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்க ராஜ்புட்ஸ் என்ற பெயரில் வருகின்றனர். அரச வரதனின் மரணத்துக்கு பின் இவர்கள் வலு பெற்று வெளியே வருவதை வைத்து அரச வரதனின் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்றே அறிஞர்கள் எண்ணுகின்றனர். அதுவும் குறிப்பாக அக்காலம் தொடங்கி இசுலாமியர்களின் படையெடுப்பு வரை வட இந்தியாவின் காலம் ராஜ்புட்ஸ் காலம் என்றே அழைக்கப் பெருவதும் இங்கே கவனிக்கத் தக்கது.

"ராஜ்புட்ஸ் என்பவர்கள் இந்தியா வந்து அங்கேயே தங்கிய சகர்கள், ஹுன்னேர்கள் மற்றும் குசானர்களின் வம்சாவளியினரே ஆவர். காலப்போக்கில் முற்றிலுமாக இந்திய மக்களுள் அவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் தனித்தன்மையை இழந்து விட்டனர்." என்கின்றார் கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில.மேலும் இன்றும் உள்ள ராஜ்புட்டுக்களின் இன வரலாற்றினை ஆராய்ந்தோம் என்றால் அவை நம்மை சகர்களுக்கோ அல்லது ஹுன்னேர்களுக்கோ அல்லது குசானர்களுக்கோ .. ஏன் கிரேக்கர்களுக்கு கூட நம்மை இட்டுச் செல்லும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில ராஜ்புடுக்களின் இனமே 'ஹுனா ஜட் (Huna Jat)' என்று இருக்கின்றது...ஹுன்னேர்களுக்கு சாட்சியாக. நிற்க.இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் ஒரு அரசியல் குழப்பமான தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள் ராஜ்புட்ஸ் என்ற பெயரில் ஒன்று சேருகின்றனர்.

நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள் கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு தோதாக இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில் அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர். அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம் தொடங்கப்பெருகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.

சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.

வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.

சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.

என்பதே அந்தப் பிரிவுகளின் அர்த்தம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு கால ஆண்டுக் காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் அர்த்தங்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.

சற்சூத்திரர் - ஆரியருக்குத் துணை போனவர்கள்.

சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.

பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.

மலைச் சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு துணை போகும் பல விடயங்களில் ஒன்று தமிழர்கள்/இந்தியர்கள் உருவாக்கிய சமசுகிருத மொழியும் அவர்கள் உருவாக்கிய சைவ வைணவ சமயங்களுமே. பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப் பரப்புவதற்கு தோதாக அனைத்து மொழிகளையும் கலந்த ஒரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர் என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய்ப் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது போல் கி.பி நூற்றாண்டுகளிலேயே அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமசுகிருத படைப்புகள் நமக்கு கிடைக்கின்றன. மேலும் சமசுகிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின் கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமசுகிருதத்தில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது இது அந்த மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும் என்றும் நாம் கருத வழி செய்கின்றது. சரி... இம்மொழியினை தங்களுக்கு உதவுமாறு ஆரியர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை நாம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.எனவே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் தான் ஆரியர்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

Pin It