ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி.....

 21 - ஞாயிறு - யூலை - 2013.

 14.30 மணி தொடக்கம் 20.00 மணி வரை.

 

SALLE POLONCEAU ,  25, RUE POLONCEAU, 75018 PARIS.

மெற்ரோ : LA CHAPELLE

மண்டபத்திற்கு வரும் பாதை: : place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU

சமூக அக்கறைகொண்ட அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றோம்.

 சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு – பிரான்ஸ்.

 அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கம்- பிரான்ஸ்

06 19 45 02 76 , 06 51 26 70 75 , 06 23 60 72 65  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 ***

 உரையாடலுக்கான முன் அவதானிப்பு குறிப்புக்கள்

முதல் அமர்வு

இனப்படுகொலை : ஒரு வரலாற்றுப் பார்வை .

-உரையும் கலந்துரையாடலும்-

வரலாற்று ரீதியில் இனப்படுகொலை எனும் கருத்தாக்கம் எவ்வாறு என்று தோன்றியது? மார்க்சியர்களும், மார்க்சியர்கள் அல்லாதவர்களும் இதனை எவ்வாறு அணுகினர்? யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் பிரச்சினையை உலகம் எவ்வாறு அணுகுகிறது? இனவிடுதலை பெற்ற நாடுகள் எவை? அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இனம், தேசிய அரசு, மற்றமை குறித்த ஒரு வரலாற்று ரீதியிலான ஆய்வுரையின் பின்பான கலந்துரையாடலாக இந்நிகழ்வு இருக்கும். 

இனப்படுகொலை : வெலிக்கடை முதல் முள்ளிவாய்க்கால் வரை.

-உரையும் கலந்துரையாடலும்-

வெலிக்கடைப் படுகொலை முதல் முள்ளிவாயக்கால் பேரழிவு வரையிலும் சிங்கள பௌத்த பேரினவாதக் கருத்தியல் எவ்வாறு இலங்கையில் தன்னைக் கடுமையாகக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறித்த ஆதாரபூர்வமான உரையின் பின்பு ; உரையின் அடிப்படையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறும். புலத்திலும், புகலிடத்திலும் இனிச் செய்ய வேண்டியது என்ன என்பதற்கான தேடலாகவும் இந்தக் கலந்துரையாடல் அமையும். 

மூன்று நூல்களின் அறிமுகம்.

ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்- யமுனா ராஜேந்திரன்- 

ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சபட்ச புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம் , இலக்கியம், தத்துவம் , தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழ விடுதலைப் போராட்டம் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ஈழப் போராட்டம் நந்திக்கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதனது வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி மானுட சுயதரிசனங்களையும், அரசியல் சுயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கிறது. உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்யும் இக்கட்டுரைகள் இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் எனும் தேடலையும் மேற்கொள்கிறது.

 அரபுப் புரட்சி - மக்கள் திரள் அரசியல் : யமுனா ராஜேந்திரன்

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி. ஸ்பெயினின் இன்டிக்னோக்கள் வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும் புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது

தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

நிலம் பிரிந்தவனின் கதை : சுஜந்தன்

 திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் கவிஞ்னின் வாக்கு மூலங்கள். இழப்பிலிருந்து எழும் கவிதை எழுப்புகின்ற வலி பழகிப்போனதாக இருந்தாலும் சுஜந்தன் கவிதைகள் ஏற்படுத்துகின்ற காயங்கள் ஆறாதவையாக இருக்கின்றன.

 ****

இரண்டாம் அமர்வு

இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் எதிர்காலம்..

-உரையும் கலந்துரையாடலும்-

இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தீர்வுக்கான யோசனைகளும், தேடல்களும் அதிகரித்துவரும் இன்றைய காலத்தில் இவ் உரையும், இவ் உரைசார்ந்த உரையாடலும் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ் அமர்வில் இலங்கை தேசிய இனப்பிரச்சனை பற்றிய ஒரு வரலாற்று நோக்குதல், தேசிய இனப் பிரச்சனைக்கு முன்வைக்ப்பட்ட தீர்வுகள் பற்றிய ஒரு பார்வை , முஸ்லீம், மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைககள், தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் மற்றும் சர்வதேச அனுபவங்கள் என இவை சார்ந்து இவ் அமர்வு அமையும்.

 ஆவணத் திரைப்படம் :

வெலிக்கடை இனப்படுகொலையின் சாட்சியம் : டேவிட் ஐயாவுடன் உரையாடல்..

Pin It