சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
யமுனா ராஜேந்திரனின் ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்
725 பக்கங்கள்
550 இந்திய ரூபாய்கள்
***
அடையாளம்
1205/1 கருப்பூர் சாலை
புத்தாநத்தம் 621310
திருச்சி மாவட்டம்
இந்தியா
தொலைபேசி : 04332 273444
****
ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், தத்துவம், இதுவரைத்திய தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழ விடுதலைப் போராட்டம் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ஈழப் போராட்டம் நந்திக்கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதனது வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, மானுட சுயதரிசனங்களையும் அரசியல் சுயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கிறது. உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்யும் இக்கட்டுரைகள், இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் எனும் தேடலையும் மேற்கொள்கிறது.
தமிழகம் புகலிடம் எனும் முப்பெரும் பிரதேசங்கள் சார்ந்த எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, பொதுவான எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்துக்குமான விமர்சன அரசியலை அவாவியே இக்கட்டுரைத் தொகுப்பு உங்களின் முன் வருகிறது.
கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் உடன்பயணியாக நான் இருந்திருக்கிறேன். அரை நூற்றாண்டு கால தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்கள், மார்க்சியர்களின் சோசலிச அரசியல் அனுபவங்கள், வேறுபட்ட உலக அரசியல் போக்குகள் ஆகிய சூழலுக்குள் நின்று ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியையும் அனுபவங்களையும் புரிந்துகொள்கின்ற, ஆவண மதிப்பும், கருத்தியல் மதிப்பும், எதிர்கால அரசியல் விவாத மதிப்பும் கொண்ட ஒரு நூலைக் கொணர்வதுதான் எனது நோக்கமாக இருந்தது. அந்த இலக்கை நான் எய்தியிருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன்.
ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக் கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை 'வரலாற்றில் வைத்துப்' பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்' நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன். தொகுப்பின் கணிசமான கட்டுரைகள் குளோபல் தமிழ் நியூஸ், கீற்று, உயிரோசை, தேசம்நெட், பொங்குதமிழ் இணையதளங்களிலும் உயிர்மை மாத இதழிலும் வெளியானவை. நான் எழுத நேர்ந்த எல்லா இடங்களிலும் தங்குதடையற்ற எழுத்துச் சுதந்திரத்தை எனக்கு வழங்கிய ஊடக நண்பர்கள் நடராஜா குருபரன், மனுஷ்யபுத்திரன், கீற்று ரமேஷ், ஜெயபாலன், சிவப்பிரகாசம் சிவரஞ்ஜித் ஆகியோருக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகக் கடினமான பணியான 'சுட்டிகள்' பகுதியைக் கவனமெடுத்துச் செய்தவன் எனது அன்பு நண்பனான கலாநிதி எஸ்.வி. உதயகுமார். நிஜத்தில் அவனுக்கு நான் சொல்லும் நன்றிக்குரிய எல்லா வார்த்தை களும் அர்த்தமிழந்தவை; அவனுக்கான எனது கனிவான ஆரத்தழுவுதலும் முத்தமும்தான் அதனை ஈடுசெய்யும். எம்.எப். ஹுஸைன் குறித்த தனது புத்தக வேலைகளின் இடையிலும், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நூலின் அட்டைப்படத்திற்கென அல்பான்சோ கெனோ மற்றும் பிரபாகரன் ஆகியோரின் சித்திரங்களை வரைந்து கொடுத்த எனது நண்பர் ஓவியர் புகழேந்திக்கு எனது மனம் கனிந்த நன்றி. தொகுப்பைத் திருத்தமாகவும் அழகாகவும் கொணரும் அடையாளம் பதிப்புக்குழுவினருக்கும், கட்டுரைகள் வெளியான வேளைகளில் உடனுக்குடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட எனது அன்பு நண்பர்கள் அசோக் யோகன், மு.புஷ்பராஜன் ஆகியோருக்கும் எனது மனமுவந்த நன்றி உரித்தாகிறது.
****
பொருளடக்கம்
முன்னுரை: I to XXVIII
விமர்சன-சுயவிமர்சன மரபும் ஈழ விடுதலைப் போராட்டமும்
சர்வதேசச் சூழல் 1
1 எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் 3
2 தேசியம் பாசிசம் சோசலிசம் 23
3 அல்பான்ஸோ கெனோவும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் 45
விடுதலைப் போராட்ட அனுபவங்கள் 63
4 இலத்தீனமெரிக்க விடுதலை இயக்கங்களும் விடுதலைப் புலிகளும் 65
5 மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்: வியட்நாம் மற்றும் பொலிவிய அனுபவங்கள் 79
6 போராளிகளும் வெகுமக்களும் 94
7 கொடுந்துயரின் மீதான நிழல்கள் 106
சாதியமும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையும் 119
8 விடுதலைப் புலிகளின் சாதி 121
9 இலங்கை அரசியல் இஸ்லாம் 144
இலங்கை இந்திய மார்க்சிஸ்ட்டுகள் 167
10 இந்திய-இலங்கை இடதுசாரிகளும் வல்லுநர் குழு அறிக்கையும் 169
11 எஸ்.வி.ராஜதுரையின் சர்வ-தேசியம் 196
12 வாசுதேவ நாணயக்கார: இனவாதியின் சித்திரமொன்றை எவ்வாறு வரைவது? 223
13 தயான் ஜயதிலகவின் அறம் 233
14 தயான் ஜயதிலகவின் மறுவருகை 241
மாற்றுக் கருத்து அரசியல் 247
15 அரசும் புலிகளும்: எங்கிருந்து தொடங்குவது? 249
16 பாலையும் வாழையும்: பின்நவீனத்துவ அடையாளம் – மாற்று அரசியல் - மனித உரிமை 260
17 இணக்க அரசியல் - சரணாகதி அரசியல் - இடதுசாரி அரசியல் 268
18 அ.மார்க்ஸ்: அறத்திற்கு மாற்று அரசியல் சந்தர்ப்பவாதம் 276
19 அரசுசாரா நிறுவன அரசியல் 288
20 கிராம்ஸி - அரசு - சிவில் சமூகம் 296
இலக்கியவாதிகள் 301
21 எல்லாமும் பக்கத்து அறையில்தான் நடக்கிறது 303
22 இலக்கியவாதி - அரசியல்வாதி - அறிவுஜீவி 331
23 சே குவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தொபரின் வீடு 348
இலங்கை அறிவுஜீவிகள் 367
24 ரஜீவ விஜேசிங்க: மகிந்த ராஜபக்சேவின் இலக்கிய முகம் 369
25 ரோஹன் குணரத்ன: காகிதச் சிங்கம் 374
26 பின் லாடன் - பிரபாகரன்: ஒப்பீடுகளின் பின்னுள்ள அரசியல் 383
27 முரளீதரன்: கிரிக்கெட் வீரனின் தேசபக்தி 388
28 மர்வின் சில்வா: டிராகுலாவின் முத்தம் 396
மனித உரிமை விவாதம் 401
29 மகிந்தரின் அந்தரங்க முகம் 403
30 ஏகாதிபத்தியம் - தேசிய விடுதலைப் போராட்டம் - மனித உரிமை 411
31 மன்னிக்கலாம், மறக்க முடியாது 418
32 காலனியமயமாக்கலும் மீள்குடியேற்றமும் 427
33 மரணதண்டனை ஒழிப்பு: அறமும் அரசியலும் 434
தமிழகத் தமிழ்த் தேசியம் 455
34 விடுதலைச் சிறுத்தைகளின் சதுரங்க அரசியல் 457
35 ஒற்றுமை குறித்த ஆற்றாமை 464
36 இந்தியாவின் மீதான நம்பிக்கை அல்ல, தமிழகத்தின் மீதான நம்பிக்கை 474
37 தேசியமும் இனவெறி அரசியலும்: தமிழகத் தமிழ்த் தேசியம் குறித்து 486
38 நாம் தமிழர் கட்சியின் பாசிச தேசியம் 493
ஆவணப்படங்கள் 501
39 இலங்கையின் கொலைக்களம்: சாட்சிகளற்ற போர் குறித்த மூன்று ஆவணப்படங்கள் 503
40 இலங்கையின் கொலைக்களம்: ராஜபக்சேக்களின் ஆபாச நடனம் 517
41 ஒப்புக்கொள்ளக் கோரப்படும் பொய்கள்: கோத்தபயாவின் ஆவணப்படம் 523
42 பிரியம்வதாவின் இனக்கொலை சாட்சியம்: ஹெட்லைன்ஸ் டுடே ஆவணப்படம் 529
43 காட்டுமிராண்டிகளின் காலம்: மிகுயா சௌத்ரியின் கோபம் 534
44 இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் 541
மூன்று அறிக்கைகள் 565
45 ஐநா வல்லுநர் குழு அறிக்கை: எமக்கெனத் திறந்திருக்கும் அரசியல் வெளி 567
46 நோர்வே ஆய்வு அறிக்கை: இனக்கொலையின் பின் இந்தியக் கைகள் 582
47 இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை: கொலையாளிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கும் பிறிதொரு கொலைவாள் 598
பின்முள்ளிவாய்க்கால் யதார்த்தம் 613
48 அரசியல் என்பது ஆயுதமற்ற போர் 615
49 22 மார்ச் 2012 ஐநா மனித உரிமைச் சபைத் தீர்மானம்: இதனை எவ்வாறு புரிந்துகொள்வது? 628
50 பிடல் காஸ்ட்ரோவும் மகிந்த ராஜபக்சேவும் 635
51 தமிழர் அரசியலின் சாபம் 638
52 ஏன் நாம் அரசைப் பற்றி அதிகம் பேசுகிறோம்? 643
53 தமிழ் சமூகத்தை ஜனநாயகப்படுத்துதல் 653
54 பிரபாகரனின் மரண பிம்பம்: நிஜங்களின் பாலைநிலம் 659
***
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
யமுனா ராஜேந்திரனின் அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல்
300 பக்கங்கள்
210 இந்திய ரூபாய்கள்
அடையாளம்
1205/1 கருப்பூர் சாலை
புத்தாநத்தம் 621310
திருச்சி மாவட்டம்
இந்தியா
தொலைபேசி : 04332 273444
****
இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி ஆகும். ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி, அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி, காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளன.
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் துனீசியாவில் கிளர்ச்சி தொடங்கிய 2010 டிசம்பர் 17முதல் 2012 அக்டோபர் வரை 20 மாத காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள். இப்போது தொகுத்துப் பார்க்கிறபோது இக்கட்டுரைகளில் கணிசமானவை, கட்சி சார்ந்த தமிழக மார்க்சிஸ்டுகளுக்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரைகளாகவே இருக்கின்றன. காரணம், இவர்கள் அரபுப் புரட்சியை எதிர்மறையாக அணுகினர்; வெறுமனே ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் வகையில் மட்டுமே விலகி நின்று பார்த்தனர். மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் அரபு சர்வாதிகாரிகளுக்கு ஆதரவான பார்வை கொண்டிருந்தனர். இந்தவகைக் கட்டுரைகள் அனைத்துமே தமிழகத்தை மையமாகக்கொண்ட கீற்று இணைய இதழிலேயே தொடர்ந்து எழுதப்பட்டன. அரபுப் புரட்சியின் நெடுங்கால அங்கமான பாலஸ்தீனம் குறித்த இரு கட்டுரைகள் உயிர்மை இதழிலும், நோர்வே சுவடுகள் இதழிலும் வெளியாயின.
பத்தாண்டுகளின் முன் சுவடுகளில் வெளியான ஹனன் ஹஸ்ராவியின் மொழிபெயர்ப்புக் கட்டுரை விதிவிலக்காக, இத்தொகுப்பின் உள்ளடக்க ஒருமை கருதியே சேர்க்கப்பட்டது.
அரபுப் புரட்சியில் மட்டுமல்ல, பொதுவாகவே எதிர்ப்பு அரசியலில் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் கருதி, விக்கிலீக்ஸ் தோற்றுநர் ஜூலியன் அசாஞ்சே குறித்த கட்டுரையும், அரபுப் புரட்சியை உடனுக்குடன் பிம்பங்களாகப் பதிவு செய்த அல்ஜஸீரா ஊடகம் குறித்த கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. கறுப்பின வழித்தோன்றலான பரக் ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது உலகெங்கிலும் அந்நிகழ்வு ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாட்டில் அந்த மாற்றம் எந்த ஆக்கவிளைவையும் ஏற்படுத்த முடியாது என்பதை வலியுறுத்தி அக்கட்டுரை எழுதப்பட்டது.
இதுவன்றி மிகமுக்கியமான இரு கட்டுரைகள் அரபுப் புரட்சியை ஒட்டி இரு பெரும் இடதுசாரிச் சிந்தனையாளர்களான தபாஸி, ஜிஸாக் இடையில் மூண்ட கோட்பாட்டு விவாதங்களையும், அரபுப் புரட்சியின் போட்ட வழிமுறையில் பாதிப்புச் செலுத்தியதாகச் சொல்லப்படும் அமெரிக்க அமைதிவழிக் கோட்பாட்டாளர் ஜீனே சார்ப் குறித்த விவாதங்களையும் தொகுக்கும் முகமாக எழுதப்பட்டன. அறுதியாக, அரபுப் புரட்சியின் உலக அளவிலான தாக்கம் குறித்ததான வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் எழுச்சி, இலண்டன் இளைஞர் கலகம் ஆகியன குறித்தும் இரு கட்டுரைகள் தொகுப்பில் இருக்கின்றன.
அரபுப் புரட்சி எழுப்பிய பிரச்சினைகள், தோற்றுவித்த நம்பிக்கைகள், அதனுடைய முரண்கள் என்பதற்கு அப்பால், இதனை எவ்வாறு இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனும் இறுதிக் கேள்விக்கான பதில்தேடலை இந்தத் தொகுப்பின் கடைசிக் கட்டுரை கொண்டிருக்கிறது. இந்த வகைக் கோட்பாட்டுக் கட்டுரைகள் இலண்டன் குளோபல் தமிழ் இணையத்துக்கெனவே பிரத்யேகமாக எழுதப்பட்டன. அரபுப் புரட்சி, அடிப்படையில் வன்முறை வழியிலான புரட்சி அல்ல. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் இலட்சியங்களும் அதற்கு இல்லை. திரட்டிக் கொள்ளப்பட்ட திட்டவட்டமான கொள்கைகள், ஒன்றிணைந்த அரசியல் தலைமை ஆகியவற்றையும் அது கொண்டிருக்கவில்லை. இந்த எழுச்சியைப் புரட்சி எனச் சொல்ல முடியுமா என்ற கேள்வியையும் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். வன்முறையிலான ஆயுதப் போராட்டங்களுக்கு எதிர்காலமில்லை எனும் சூழலில், பயங்கரவாதத்திற்கு எதின போர் முனைப்புப் பெற்றுவிட்ட சூழலில், இந்தக் கருத்தாக்கத்தை கியூபா முதல் சீனா வரையிலான மார்க்சிஸ்ட்டுகளும் ஏற்றுக்கொண்டுவிட்ட சூழலில், வன்முறையற்ற புதிய போராட்டத்திற்கான, தந்திரோபாயங்களுக்கான மக்கள்திரள் பாதையை அரபுப் புரட்சி தோற்றுவித்தது என அதனைக் காண்பாரும் இருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் கடந்த சிவில் சமூகத்தின் எழுச்சியே அரபுப் புரட்சி என மதிப்பிடுவாரும் இருக்கிறார்கள். தமிழகத்தில் தோன்றிய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம், முல்லைப்பெரியாறு எதிர்ப்பு இயக்கம், மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் என்பவற்றில், அதன் மக்கள் திரள் பாதையில் அரபுப் புரட்சியின் தாக்கங்களை அதனுடைய பயிலுநரான என்னால் காணமுடிகிறது. மனித உரிமை, சிவில் சமூக உரிமை, சமூகநீதி, சூழலியல், பெண்ணுரிமை, மூலதன எதிர்ப்பு, நிலத்திற்கான உரிமை போன்றவற்றை முன்வைத்த புதிய சமூக இயக்கங்களே இலத்தீனமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வர வழிசமைத்தன. இன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அந்த இடதுசாரிகளுக்கு அந்த இயக்கங்களே சவாலாகவும் இருக்கின்றன. அதிகாரத்தில் அமர்ந்த இடதுசாரிகள் இன்று இந்தப் புதிய சமூக இயக்கங்களின் கோரிக்கைகளிலிருந்து அந்நியமாகி இருக்கிறார்கள். விலகி நிற்கிறார்கள். பல சமயங்களில் எதிரிகளாகவும் இருக்கிறார்கள். இதற்குக் காரணமாக அவர்தம் தொழிலாளி வர்க்க மையவாதத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பில் அனைத்தையும் கரைத்துவிடுகிற அவர்களது மரபார்ந்த பார்வைகளையும் காணமுடியும். இச்சூழலில் பின்சோவியத், பின் புட்சிகர, பின்செப்டம்பர் யுகத்தின் பன்னாட்டு அசியல் எழுச்சியாக அரபுப் புரட்சி இருக்கிறது. அது பல்வேறு நம்பிக்கைகளையும், விவாதங்களையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான தேடல்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
இந்த நூலிலுள்ள கட்டுரைகள் அரபுப் புரட்சியின் அத்தனை முரண்பாடுகளுடனும் அதனுடைய கட்டுதளையற்ற சுதந்திர வேட்கையை ஆவணப்படுத்தியிருக்கிறது. வெகுமக்கள் திரள் போராட்ட வடிவங்களை அவாவுகிற எவருக்கும் அரபுப் புரட்சி என்பது பல்வேறு படிப்பினைகளையும், காத்திரமான சிந்தனைகளையும் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நான் திடமாகச் சொல்வேன். மட்டற்ற சுதந்திரத்துடன் எனக்கு எழுத வாய்ப்பளித்த எனது நண்பர்களான கீற்று ரமேஷ், நடராஜா குருபரன், மனுஷ்யபுத்திரன், இளவாலை விஜயேந்திரன் ஆகியோருக்கு இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த காலங்களில் மிகுந்த உற்சாகத்துடன் அவ்வப்போது என்னுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட எனது அருமை நண்பர் லிங்கராஜா வெங்கடேசுக்கு எனது அன்பு. தொகுப்பை நேர்த்தியுடன் அழகுறக் கொணரும்
அடையாளம் பதிப்புக்குழுவினருக்கு எனது அன்பும் நன்றியும் உரியது.
****
பொருளடக்கம்
முன்னுரை : I to XXVIII
பூவாசிசி மூட்டிய பெருநெருப்பு
1 புரட்சியைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடியும் 1
2 பிரமிடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்கிறார்கள் 7
3 கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி 29
4 லிபியா, ஈராக்கோ வியட்நாமோ இல்லை 53
5 ஏகாதிபத்திய எதிர்ப்புச் சொல்லணிகள் 64
6 லிபியா: தமிழ்ப் பனுவல் அரசியல் 71
7 காம்ட் ரங்கராஜனின் அகங்காரம் 80
8 யார் அந்த லிபியக் கிளர்ச்சியாளர்கள்? 91
9 ஞாபகமறதியின் பிறிதொரு கல்லறை 100
10 பாலஸ்தீன விடுதலை எழுச்சி – இன்திஃபாதா அரசியல் பகுப்பாய்வு: ஹனன் அஸ்ராவி 113
11 மிதக்கும் அமெரிக்கக் கனவு 127
12 நாம் அறிந்திட இயலாத போர் 136
13 இங்கிலாந்து வன்முறை: செவிமடுக்க மறுக்கப்பட்டோரின் மொழி 148
14 உலகின் எதிர்ப்பு இயக்கங்கள்: ஸ்லோவாய் ஜிஸாக்கும் ஹமித் தபாஸியும் 162
15 முஅம்மர் கடாபியின் மரணம்: மனித உரிமை விவாதங்கள் 171
16 எனது தெஹ்ரான் விற்பனைக்கு இருக்கிறது 185
17 அமெரிக்காவின் தாஹிரர் சதுக்கம் 192
18 வன்முறையற்ற போட்டங்கள் குறித்த தேடல் 200
19 முச்சந்தியில் அரபுப் புட்சி 213
20 எரியும் பிறிதொரு செப்டம்பர் 223
21 இன்று இடதுசாரியாக இருப்பது என்றால் என்ன பொருள்? 233
பின்னிணைப்பு:
அரபுப் புரட்சி: பின்காலனியத்துவத்தின் இறுதி ஹமித் தபாசியுடன் ஒரு நேர்காணல் 245
***
சென்னை புத்தக கண்காட்சி 11.01.2013 முதல் 23.01.2013 முடிய
நந்தனம் YMCA திடலில்
அடையாளம் புத்தகக்கடை 355 & 356