இரவு மணி 10:30, இணையின் தேவை ஏற்படுத்திய இம்சையை சகித்துக் கொண்டிருந்தாள், சந்தியாவுக்கு திருமணமாகி 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. புதிதாக ருசி கண்ட பூனை. ஆனால் ராமு என்னும் ராமச்சந்திரனுக்கு அப்படியில்லை, பொதுவாக ஆணின் வேட்கைதான் அதிகமாக இருக்கும், சந்தியா கூட தனது கல்லூரி காலங்களில் தன் பின்னே சுற்றிய ஆண் பிள்ளைகளை பற்றி வெகுவாக அறிவாள், ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமாக இருந்தான், அந்த கார்த்திக், உற்று பார்க்கும் கூர்மையான பார்வை, தன்பால் கவனத்தை ஈர்க்கச்செய்யும் முயற்சி, மாதக் கணக்காக உற்று பார்த்தபடி இருந்தான், ஆணின் அந்த வேட்கையை, உற்றுப் பார்க்கும் தோரணையை, திருமணமாகி முதலிரவு அன்று ராமுவின் அடக்கி வைக்கப்பட்ட பாலுணார்வின் வெளிப்பாட்டில்தான் கண்டு கொண்டாள். நிச்சயமாக இத்தனை மாதங்களாக, தொடர்ச்சியாக, சலிப்பே இல்லாமல் உற்றுப் பார்க்க வேண்டுமானால் ஊற்றுக்கண் ஒன்று கண்டிப்பாக தேவை, கார்த்திக்கின் ஊற்றுகண் பாலுணர்வு, தேக்கி வைக்கப்பட்ட பாலுணர்வு, யாருக்குத்தான் இல்லை, இந்த ராமு, தேவைப்பட்ட போதெல்லாம் காபி குடிப்பதை போல, தேவையில்லை என்றால் கழற்றி வீசப்பட்ட சாக்ஸ்தான், உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதைத் தவிர பாலுணர்வில் காதலில் ஒன்றுமில்லையா? எனது ஏக்கம் என்ன வெறும் உடல் சார்ந்ததா? அதன் மேல் ஒன்றுமில்லையா?

Betrayal அந்த வித்தியாசமான உணர்ச்சியை முதன் முதலில் கொடுத்தவன் மகேஷ், வாயில் எப்பொழுதும் போட்டு மென்று கொண்டிருக்கும் பான்பீடா, வெள்ளை வெளேர் என்கிற மைதா மாவுத்தோல், உடல் முழுவதும் எப்பொழுதும் பர்பியூம் வாசனை, கண்ணை சொருகிக்கொண்டு அவன் பார்க்கும் பார்வை, (தண்ணியடிப்பான் போல) அவன் எந்த சேட்டுக்கு மகனாக பிறந்தானோ, அப்படித்தான் முடிவுக்கு வர வேண்டியிருந்தது. அவனை பொதுவாக எல்லா பெண்களுக்கும் பிடிக்கும், எனக்குத்தான் ஏனோ பிடிக்கவில்லை, நல்ல கொழுத்த பணக்காரன் தான், ஆனால் என் ஆதர்ஷ ஹீரோ மாதவன் மாதிரி, ஆர்யா மாதிரி, மொழுக்கென்ற மைதாமாவு உடம்பு அல்ல, ஆனால் அவனும், தனக்கும், வீரம் உண்டு என்பதை ஒரு நாள் உணர்த்தி விட்டான்.

கல்லூரி விட்டு செல்லும் கடைசி பேருந்தில், அதாவது அந்த பேருந்து மட்டுமே நேரடியாக என் இருப்பிடம் செல்லக் கூடியது, கொத்து கொத்தாக தொங்கி கொண்டு வரும் கூட்டத்திற்கு நடுவே வழக்கம் போல் பிரயத்தனபட்டு ஏறி நடுவே எனக்கென்று ஒரு இடத்தை நிர்ணயித்துக் கொண்டு, வியர்வை நாற்றம் மற்றும் முடை நாற்றங்களுக்கு நடுவே சிறிதளவே வரும் ஆக்ஸிஜனை சுவாசித்தபடி சிரமபட்டுக் கொண்டிருக்க, யாரோ பின்னே உரசுவது போல இருந்தது, திரும்பி பார்த்தால் மகேஷ் அதே கூர்மையான வில்லத்தனமான பார்வை, திருமணத்திற்கு பின் அந்த பார்வையை நிதம்நிதம் சந்தித்திருக்கிறேன், அன்று மகேஷ் பின்னிருந்து இருக்க அணைத்துக் கொண்டான், எனக்கு அழுகையே வந்து விட்டது. எங்கிருந்து வந்ததோ அவ்வளவு தைரியம், அவன் கன்னங்களை பிராண்டி வைத்து விட்டேன், ஆனால் அது மிக சாதாரணம், அவன் பேருந்தில் இருந்த பயணிகளிடம் வாங்கிய அடிகளோடு ஒப்பிடும் போது, நான் பிராண்டியது ஒன்றுமேயில்லை,

இன்று வரை பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன். கணவனின் கட்டியணைத்தலுக்கும், கயவனின் கட்டியணைத்தலுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க, கடவுள் என்கு ஒரு வரம் கொடுக்க விரும்புவாரானால், இதைத்தான் கேட்பேன் என் கணவனின் கட்டியணைத்தலில் சிறிது காதலையும், நம்பிக்கையும், மதித்தலையும் கொடு என்று, எனக்கு வித்தியாசம் தெரிய வேண்டும், கட்டியணைப்பது கணவனா கயவனா என்று, ஆனாலும் எனது பாலுணர்வுத் தேவை என்னவோ காய்ந்தமாடு.............எக்ஸட்ரா எக்ஸட்ரா,

இப்பொழுது என் விரல்களில் நகங்கள் கிடையாது, ஏன் தெரியுமா என் கணவனின் முகத்திலும் முதுகிலும் அத்தனை தழும்புகள், என் நகங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா என்ன? மகேசுக்கும், ராமுவுக்கும், ஒரு வேளை என் உடலிலேயே சற்று நேர்மையுடன் நடந்து கொண்டது, என் நகம் மட்டும் தானா?, ஒரு பெண் தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள ஆயுதமாக தன் நகங்களை கூட பயன்படுத்திக் கொள்ளலாம், இந்த வாக்கியம் நகைச்சுவையாக மாறியது எனது கணவனின் முதுகில் வலிந்த ரத்த துளிகளை டியூப்லைட் வெளிச்சத்தில் பார்த்த பொழுதுதான், என் நகங்கள் அப்பொழுது ஆயுதமாக இருந்ததா?, இல்லையென்றால்.........., இப்பொழுது யோசித்து பார்க்கும் பொழுது அது போலியாக என்குள் நானே உருவாக்கிக் கொண்ட ஆயுதமா?, கேள்விக்கு யார்தான் விடையளிப்பார்கள், கேள்விகள் புதுக்கேள்விகளை மட்டுமே உருவாக்கித் தொலைக்கின்றன,

செத்துப்போன வாழ்க்கைக்கு நடுவே சற்று பிரகாசமாக புத்துணர்ச்சியை தருவது எனது பாலுணர்வு மட்டுமே, இப்பொழுதெல்லாம் ஆண்களுக்கு அலுவலகம் தான் முதல் மனைவிபோல, உடல் களைப்பை போக்க சிறிது மனைவி, ஏஃசி, பிரிட்ஜ் , டீ,வி, பிரட்டோஸ்ட், நீச்சல்குளம், நாய்க்குட்டி, ம் , நாய்க்குட்டி என்றதும் தான் நியாபகம் வருகிறது, சந்துரு, அந்த நாய்க்குட்டியை வாங்கித் தந்தவன் அவன்தான், என் ஆதர்ஷ ஹீரோ ஆர்யாவேதான், என் கணவனின் அலுவலக தோழர், அவனைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது இது தான், திருமண விஷயத்தில் நாம் அவசரப்பட்டு விட்டோமோ, அந்த நாய் குட்டியை தடவிக் கொடுக்கும் பொழுதெல்லாம் அவன் தான் நியாபகம் வருகிறான், கண்களில் அத்தனை கவர்ச்சி, எப்பொழுதும் சிரித்த முகம், நேர்த்தியான தலைக்கேசம், பற்பசை விளம்பரங்களில் இவனை ஏன் நடிக்க கூப்பிடவில்லை அப்படி ஒரு பளீர் சிரிப்பு, ஜீன்ஸ், டி.சர்ட்டுக்குள் இருகிப்போன உடம்பு, (பிட்னெஸ் சென்டர் போவான் போல).

எனக்கு பல வருடங்களாக இந்த பயிற்சி உண்டு, அதாவது. ஒருவன் பார்க்கும் பார்வை எத்தகையது என்பதில், சந்துரு அன்று மிகவும் சிரமப்பட்டான், என் மீதிருந்த அந்தப் பார்வையை தவிர்ப்பதற்காக, அவன் என் வயிற்றுக்கு நடுவே இருந்த ஒற்றைப் புள்ளியை பல சமயங்களில் பார்த்து விட்டு பார்வையை விலக்கிக் கொண்டான், எனக்கு என்னவோ அதை மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை, அவன் என்னை அந்த சமயத்தில் மதித்திருந்தான், ராமுவை போல் அல்ல, என்னில் உள்ளது மதிக்கப்பட்டது அவனால், எனக்கு அப்படித்தான் தோன்றியது, தோன்றுகிறது , ராமுவுக்கு, அதுவும் காபி குடித்துவிட்டு தூக்கியெறியப்பட்ட டம்ளர் இரண்டும் ஒன்றுதான், கலாச்சாரம் நிர்ணயிக்கப்பட்ட பொழுது நான் அங்கு இல்லாமல் போய்விட்டேன், இருந்திருந்தால் என் வாதத்தை நான் எடுத்து வைத்திருப்பேன், இன்று மனதில் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருந்திருப்பேன், சந்துரு என்னை மன்னித்து விடு , நாம் கலாச்சாரத்துள் இருக்கிறோம், நமக்கு நாம் கொடுக்கும் மரியாதையை விட நிர்ணயிக்கப்பட்டவைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை மிக முக்கியம், மீண்டும் ஒரு முறை என்னை மண்ணித்து விடு.

மணி 11:00 தொலைக்காட்சியில் அஜித்தும் சிம்ரனும் ‘நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டிவை “ பாடிக் கொண்டிருந்தார்கள், ஸ்பிலிட் ஏஃசி தனது ஜில்லிப்பை தோல்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது, மெலிதான உடை, மெத்தைமேல் சந்தியா. நேரம் கடந்து கொண்டிருந்தது,

நள்ளிரவு நேரத்தில் பச்சைத்தண்ணீரை மொத்தமாக உடல் மேல் ஊற்றிக்கொள்வதை சில சினிமாக்களில் பார்த்திருக்கிறேன், உடலில் அப்படி என்னவொரு வேட்கை உந்தித்தள்ளுகிறதோ, திருமணத்திற்கு பிறகுதான் இப்படியொரு அதீதமான வேட்கை, தண்ணீர் கிடைக்காத மரம் காய்ந்து விடுவதை போல நானும் காய்ந்து போவேனோ என்று அவ்வப்பொழுது பயம் தோன்றுகிறது, சந்துரு (நாய்க்குட்டி) என் மடியில் படுத்து தூங்கி கொண்டிருக்கிறான், அதற்குள்; அவனுக்கு தூக்கம் வந்து விட்டது, இதற்கு மேல் காத்திருப்பது வீண், அப்படியே வந்தாலும் குறட்டை ஒலியை தவிர வேறொன்றையும் எதிர்பார்க்க முடியாது, காதல் செத்துவிட்டது, அதன் உதவியாளன் காமமும் செத்துவிட்டான், கல்யாணம் என்கிற குண்டுவெடிப்பில், பலியான நாணோ, நிர்ணயிக்கப்பட்டவைகளின் மந்தைக்குள் புத்தம் புதிய ஆடாய் திருதிருவென பார்த்தபடி, உள்ளுக்குள் ஒரே ஆதரவு, ஏற்கனவே நிறைய பேர் இங்கிருக்கிறார்கள் என்பதே, தப்பிச்சென்ற ஆடுகளை பார்க்கும் பொழுது பொறாமையாகவும் உள்ளது,

மணி 11:30, கதவு தட்டப்பட்டது, சந்தியா கதவை திறந்தாள், வெளியே ராமு, சந்துரு, போதையென்றால் போதை அப்படியொரு போதை கிட்டத்தட்ட சுயஉணர்வே இல்லாத அளவிற்கு, ராமுவை தாங்கிபிடித்திருந்தான் சந்துரு, சந்துருவின் சட்டை முழுவதும் வாந்தி எடுத்து வைத்திருந்தான். சந்தியாவின் உதவியோடு படுக்கையில் படுக்க வைத்தான், பாத்ரும் எந்த பக்கம் என்று கேட்டுவிட்டு சட்டையை கழுவிக் கொள்ள சென்றான், சந்தியாவிற்கு கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது, அவனது சட்டை பட்டன்களை தளர்த்திவிட்டாள், ஷூவை கழற்றி எறிந்தாள், தனது அறைக்குள் ஓடிச்சென்று குப்புறபடுத்துக் கொண்டு அழுதாள்,

சட்டையை துடைத்துக் கொண்டு வெளியே வந்த சந்துரு, அறைக்குள் சந்தியா அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்றான். அவள் குப்புறப்படுத்துக் கொண்டு குழுங்கி குழுங்கி அழும் தோற்றத்தை பார்த்து சிறிது தடுமாறிப் போனான், மனதை திடப்படுத்திக் கொண்டு அருகே சென்றான், சமாதானம் கூறினான் , அவள் அழுகை பெரிதாக வெடித்தது, அவன் மார்பிள் சாய்ந்து கொண்டாள், தன் முகத்தை அவன் நெஞ்சினில் புதைத்துக் கொண்டாள், விஷயம் விபரீதத்தை நோக்கி போக ராமுவின் இடத்தில் சந்துரு...

மறு நாள் காலை ராமு வழக்கம் போல் மன்னிப்பு கேட்டான். வழக்கம் போல் சத்தியம் செய்தான் ( இனி குடிக்கமாட்டேன் என்று) வழக்கம் போல் பறக்கும் முத்தத்தை தந்து விட்டு ஆபிஸ் சென்று விட்டான். சந்தியா எந்த உணர்வும் அற்று, எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்று தெரியாமல், நீண்ட நாள் கழித்து கிடைத்த நிறைவு மற்றும் முதல் குற்ற உணர்வு இவற்றிற்கு நடுவே பதில் தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

என்னை மீறி எழும்பி வரும் குற்ற உணர்ச்சியை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எதனால் இப்படிபட்டதொரு அடக்க முடியாத குற்ற உணர்ச்சி, என் மனதளவில் கெட்டுப் போன பொழுது இந்த குற்ற உணர்ச்சி தோன்றவில்லை அப்படியானால், மனதளவில் கெட்டுபோனது உண்மையில் கெட்டுபோனது இல்லையா?, இல்லை, அப்படியில்லை, நிச்சயமாக அப்படியில்லை, மனதளவில் கெட்டுப் போனாலும் கெட்டு போனது தான், உண்மை என்னவெனில் அது யாருக்கும் தெரியாது, நன்றாக வேஷம் போடலாம் அவ்வளவுதான் விஷயம், ஆனால் உடலளவில் கெட்டுப்போனதோ, தண்ணீருக்கடியில் தங்கமுடியா காற்று, அப்படியானால் இது குற்ற உணர்ச்சி அல்ல பயம், என்னிடம் இருந்தது பயம் மட்டுமே.

கார்த்திக் , மகேஷ் , இவர்களெல்லாம் என்னை பயமுறுத்தியிருக்கிறார்கள், அவ்வளவுதான். தற்காப்புக்காக அ;வர்களை எதிர்த்திருக்கிறேன், ஆனால் இந்த சந்துருவிடம் மட்டும் எந்த பயமும் இல்லையே, ஆம் எனக்கு இப்பொழுது தைரியம் வந்துவிட்டது போல, பிரச்சனை தைரியம் தான் என்றால் நிர்ணயிக்கபட்டவைகள் எல்லாம் எதற்காக, எதற்காக ஒரு பெண்ணுக்கான இத்தனை கட்டுப்பாடுகள், தன்னுடைய இணைக்கு மனக்கஷ்டத்தை கொடுக்கக் கூடாது என்கிற நல்லுணர்ச்சிக்காகவா?, அப்படியானால் ராமுவிடம் அது தேiவியல்லை. மனக்கஷ்டம் என்றால் அது நான் ராமுவுக்கு கொடுத்ததைவிட, ராமு எனக்கு கொடுத்ததுதான் அதிகம். அவர் என்னை ஒரு அலங்கார பொருளாக்கி விட்டார்,

சே, எனக்கும் ஒரு பிராஸ்டிடியூட்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம், எனக்கு தேவை செக்ஸ்தான் என்றால் இந்த தாலியை கழற்றி போட்டுவிட்டு வெளியில் சென்று ஊர் மேயலாமே. எனக்கு எதற்கு ஒரு கணவன், வீடு, நாய்குட்டி, கார் எல்லாம். நான் ஏமாற்றி விட்டேன், ராமு என்னை மன்னிச்சுடுங்க, உங்களுக்கு உண்மையா நடந்துக்க ஒரு வாய்ப்பு கொடுப்பிங்களா?, ராமு, நீங்க என்னதான் என்னை துச்சமா நினைச்சாலும், எனக்கு துரோகம் பண்ணதில்லை, உங்க சாப்பாட்டையே சாப்ட்டுட்டு உங்க வீட்லயே உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன், மண்ணிச்சிருங்க ராமு, என்னை மன்னிப்பிங்களா,? மன்னிப்பிங்களா?

மனதிற்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தாள். செல்போன் அடித்தது, அந்த ரிங்டோன் அது ராமுவினுடையது, வந்து விட்டாரா, தனது அறையை விட்டு ஹாலுக்குள் சென்று பார்த்தாள், செல்போனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார், எடுத்தாள், அதில் பிரீத்தி என்றிருந்தது, அவளது முகம் மாறியது, எடுத்தாள், ஆன் பண்ணினாள், பேசட்டும் என்று மௌனமாக இருந்தாள்.

‘ஹாய் டார்லிங், (குரலில் கொஞ்சல்) நான் பிரித்தி......, உங்களுக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்றது...........ஹலோ, .........ஹலோ..........”

- சூர்யா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It