திங்கட்கிழமை.

man calmஅன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தொடர் ஆடிட் இருப்பதால் அந்த வங்கி சுறுசுறுப்பாக காணப்பட்டது.

தலைமை அலுவலகத்திலிருந்து ஆடிட்டர் ரங்கராஜன் வந்திருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். எந்தத் தவறைபும் கண்டு பிடித்து விடுவார். அவர் ஆடிட் வருகிறார் என்றால் வங்கி மானேஜர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

ஆடிட் துவங்கியதும் வங்கியின் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்த ரங்கராஜன், மணிகண்டன் என்கிற ஒருவர் மட்டும் தினமும் தவறாது ஆயிரம் ரூபாயை, கடந்த இரண்டு வருடங்களாக, தன்னுடையை அக்கவுண்டில் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

ஒருநாள் தடையில்லாமல் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில்கூட அந்த ஆயிரம் சேர்க்கப்பட்டு அடுத்த நாள் வங்கியில் செலுத்தப்பட்டதை அறிந்து ஆச்சரியமடைந்தார்.

கேஷியரைக் கூப்பிட்டு, “யாருய்யா இந்த மணிகண்டன்? அதெப்படி நாள் தவறாமல் ஆயிரம் ரூபாய் அவர் அக்கவுண்டில் செலுத்துகிறார் என்று யாராவது அவரைக் கேட்டீங்களா?” என்றார்.

“தினமும் பகல் பன்னிரண்டு மணிக்குள் அவர் வந்து விடுவார் சார். . யாரிடமும் எதுவும் பேசமாட்டார். பணத்தை செலுத்திவிட்டு போய்க்கிட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி. அதனால நாங்க யாரும் அவர்கிட்ட வச்சிகிறதில்லை.”

“அவர் என்ன தொழில் செய்கிறார்?”

“தெரியாது சார்.”

“ஏன்யா ஒரு கஸ்டமர் டெய்லி வராறுன்னு சொல்ற....ஆனா அவரப்பத்தி கேட்டா ஒண்ணும் தெரியாதுன்ற...நீ போய் மானேஜர வரச்சொல்லுய்யா.”

மானேஜர் பார்த்தசாரதி ‘கடங்காரன்...இவன் என்னத்த கேட்டு என் உயிர வாங்கப்போறானோ’ என்று முனகிக்கொண்டே வந்தார்.

“என்ன பார்த்தசாரதி, அது யாரு மணிகண்டன்? தினமும் ஆயிரம் ரூபாய் பணம் கட்டிட்டுப் போறாரு....என்ன தொழில்னு கேஷியரைக் கேட்டா, ஒண்ணும் தெரியாதுங்கறாரு, உனக்காவது தெரியுமா?”

“தெரியாது சார்...ஆனா அவர் டாக்குமென்ட் பக்காவா இருக்கு சார். அட்ரஸ் ப்ரூப், போட்டோ ஐடி என நம் வங்கியில் கணக்கு தொடங்கத் தேவையான அவ்வளவு டாக்குமெண்ட்ஸும் நம்ம ரெக்கார்ட்ல கரெக்டா இருக்கு சார்.”

“ஏன்யா நீதான ப்ராஞ்ச் மானேஜர்? ப்ராஞ்ச்சுக்கு வர கஸ்டமர்களைப் பற்றி அக்கு வேறா ஆணி வேறா உனக்கு தெரிஞ்சிருக்க வேண்டாமா?”

“சரி, சரி...நீ போய் உன் வேலையைப் பாரு, நானே கண்டுபிடிக்கிறேன்.”

பார்த்தசாரதி போனதும், கேஷியரைக் கூப்பிட்டு, “நாளைக்கு மணிகண்டன் ஆயிரம் பணம் கட்ட வரும்போது, எனக்கு சொல்லு” என்றார். .

ரங்கராஜனுக்கு இப்படி ஒரு கேரக்டரை தான் சந்திச்சே ஆக வேண்டும் என்கிற ஆவல் அதிகரித்தது.

மறுநாள்.

காலை பத்தரை மணிக்கு மணிகண்டன் வந்தார்.

கேஷியர் உடனே இண்டர்காமில் “ரங்கராஜன் சார், மணிகண்டன் வந்திருக்காரு.” என்றான்.

ரங்கராஜன் உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று, சற்று தள்ளியிருந்தபடியே மணிகண்டனை நோட்டம் விட்டார். அவர் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். மணிகண்டன் இவரிடம் முகம் கொடுத்துப் பேசாது, கையில் அணிந்திருந்த ரிஸ்ட் வாட்சைப் பார்த்துவிட்டு, அவசரமாக வங்கியைவிட்டு வெளியேறினார்.

ஆனால் ரங்கராஜனுக்கு எப்படியாவது மணிகண்டனிடம் பேசிப் பழகி அவர் ஏன் தினமும் சரியாக ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்துகிறார் என்று கண்டுபிடித்தேயாக வேண்டும் என்கிற வெறி தலைக்கேறியது.

மூன்றாவது நாள்.

மணிகண்டன் வந்ததும் விரைந்து சென்று, “ஐயாம் ரங்கராஜன், ஆடிட்டர் வித் திஸ் பேங்க். வெரி ஹாப்பி டு மீட் யூ” என்று கை குலுக்கினார்.

மணிகண்டனும் புன்னகைத்து “மீ டூ” என்று மரியாதை நிமித்தம் பதிலுக்கு கை குலுக்கிவிட்டு, மேற்கொண்டு பிடி கொடுக்காமல் நழுவிச் சென்றார்.

நான்காவது நாள், ரங்கராஜன் வங்கிக்கு கார் ஓட்டி வரும்போது, வழியில் மணிகண்டன் ஸ்கூட்டர் பழுதாகி சாலையில் நிற்பதைக் கண்டார். காரை நிறுத்தி அவரை ஏற்றிக் கொண்டார். இருவரும் சற்று சகஜமாக பேசத் தொடங்கினர். மணிகண்டன் நிறையச் சிரித்து, ஏராளமாக நன்றி சொன்னார்.

அடுத்த நாள் வங்கிக்கு வந்த மணிகண்டனிடம் “நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது என்னிடம் சொல்லுங்க, எதுக்கு தினமும் பாங்க்ல ஆயிரம் ரூபாய் போடுறீங்க? வருமானம் வர என்ன தொழில் செய்யறீங்க? இல்ல ஏதாவது வேண்டுதலா?”

“சார் நான் வேலையெல்லாம் பாக்கலை, எந்தத் தொழிலும் செய்யலை. ஆனா தினமும் பந்தயம் கட்டுவேன். அதுல தினமும் எப்படியாவது ஆயிரம் ஜெயிச்சுருவேன். அந்தப் பணம்தான் சார் அது.”

ரங்கராஜனுக்கு நம்ப முடியவில்லை. அதெப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில் ஜெயிக்க முடியும் ! இந்தாளு கண்டிப்பா பொய் சொல்றான் என்று எண்ணிக் கொண்டார். அவரது முக மாற்றத்தை கண்ட மணிகண்டன், “சார் இதுக்குத்தான் நான் யாரிடமும் இந்தப் பந்தய மேட்டரை சொல்வதில்லை...ஐ கீப் டிஸ்டன்ஸ் வித் ஆல்” என்றான்.

ரங்கராஜன் உடனே சமாளித்துக்கொண்டு, “சரி நாம ரெண்டுபேரும் இப்பவே ஒரு பந்தயம் போடலாம், நீங்க ஜெயிச்சுக் காட்டுங்க பார்க்கலாம்” என்றார்.

“என்ன பந்தயம்?”

“நீங்களே அதையும் சொல்லுங்க, ஜெயிச்சுக் காட்டுங்க” குரலில் எகத்தாளம்.

“சரி, வரும் புதன்கிழமை காலை பத்தரை மணிக்கு, பின்பகுதி இடுப்புக்கு கீழ உங்க பட்டெக்ஸ் ரெண்டும் மஞ்சள் கலரா மாறிடும். ஒரு மாம்பழம் போல் மஞ்சளாகக் காணப்படும்.”

“யோவ் என்னய்யா நீ சொல்ற, ஏதாவது நடக்குற கதையா சொல்லு..”

“பந்தயத்துக்கு வரீங்களா இல்லையான்னு மட்டும் கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்....எனக்கு வேற வேலை நிறைய இருக்கு.”

‘என் பட்டெக்ஸ் எப்படி எனக்குத் தெரியாமல்..அதுவும் மாம்பழ மஞ்சளில்!?’

ரங்கராஜன் கடுப்பாகி “சரி”ன்னு ஒத்துக்கிட்டார்.

“புதன்கிழமை காலையில் உங்க கேபினுக்கு ஒரு டாக்டருடன் வருவேன். உடனே பேன்ட அவுத்து உங்க மஞ்சள் பம்மை எனக்கு காட்டுங்க. ஆயிரம் ரூபாய் எடுத்து வைங்க..புரியுதா?”

“அது சரி, டாக்டர் எதுக்கு உன் கூட?”

“உங்க மஞ்சள் பம்மை உடனே க்யூர் பண்ணத்தான்.”

சென்று விட்டான்.

ரங்கராஜன் அரண்டு விட்டார். ‘இவன் எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுகிறான்’ என்று ஒரே ஆச்சரியம். ‘ஒரு வேளை ஏதாவது செய்வினை, கிய்வினை வச்சிருவானோ! இல்ல மந்திரவாதியோ!’ என்று பயந்தார்.

முதல் வேலையாக பாத்ரூம் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். மெதுவாக தனது பேண்ட்டை அவிழ்த்து தன் பட்டெக்சை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டார். அது எப்பவும்போல் கறுப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அரைமணிக்கு ஒருதரம் பேன்டை அவிழ்ப்பதும், பட்டெக்ஸ் பார்ப்பதும், மறுபடியும் பேன்ட் போடுவதுமாய் இருந்தார்.

பந்தய தினம் வரையில் இதை வங்கியிலும், வீட்டிலும் தொடர்ந்தார். அக்கவுண்ட்ஸ் ஆடிட் ஒழுங்காக நடந்ததோ இல்லையோ....தன் பட்டெக்சை ஒழுங்காக ஆடிட் செய்து கொண்டிருந்தார் ரங்கராஜன்.

அன்று புதன்கிழமை. பந்தைய தினம்.
.
விடிந்ததும் முதல் வேலையாக ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்து லுங்கியை தூக்கிப் பார்த்தார். இப்பவும் அப்படியே நிறம் மாறாது இருந்தது. சந்தோஷத்துடன் நம்ம பட்டெக்சாவது மஞ்சள் கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக் கொண்டு, வறட்டுத் தன்மை போவதற்காக சிறிது தேங்காய் எண்ணை தடவி தேய்த்துக் குளித்தார். சீக்கிரமே வங்கிக்கு கிளம்பிச் சென்றார்.

பத்து மணி வங்கிக்கு ஒன்பது மணிக்கே வந்துவிட்டாலும், பத்து நிமிடத்துக்கு ஒருமுறை போய் போய் பார்த்து மீண்டும் மீண்டும் உறுதி செய்தபடியே இருந்தார். இன்னிக்கி அவனை ஜெயித்து ஆயிரம் ரூபாயை வாங்கிடணும் என்று ஆவலோடு காத்திருந்தார்.

சொல்லி வைத்தாற்போல் அவனும் டாக்டரும் சரியாய் பத்தரை மணிக்கு அவர் கேபினுக்குள் வந்தனர். ரங்கராஜன் உற்சாகத்துடன் தன் சீட்டிலிருந்து எழுந்து போய் கேபின் கதவைச் சாத்தினார். உடனே திரும்பி நின்று தனது பேன்டை கழட்டி, “இந்தா நல்லா பார்த்துக்கோ மணிகண்டா, மஞ்சளும் இல்ல கிஞ்சளும் இல்ல....எடு ஆயிரம் ரூபாயை.” என்றார்.

மணிகண்டன் மரியாதையாக ஆயிரம் ரூபாயை எண்ணிக் கொடுத்தார்.

இருவரும் அமைதியாக வங்கியைவிட்டு வெளியே வந்தனர்.

பேஸ்மென்ட் கார் பார்க்கிங்கில் மணிகண்டன் தன்கூட வந்தவனிடம், “என்னமோ பேங்க் ஆடிட்டர் பெரிய மனுஷன், அப்படியெல்லாம் அவுத்துக் காண்பிக்க மாட்டாருன்னு இந்தாளை நம்பி பணம் கட்டினே, இப்ப என்ன சொல்ற? எடு இரண்டாயிரம் ரூபாயை... உனக்கு டாக்டர் பில்டப்பு வேற.” என்றான்.

வந்தவன் பந்தயத்தில் தோற்றதினால், இரண்டாயிரம் கொடுத்தான். அதில் ஆயிரம் ரூபாயை மணிகண்டன் தவறாது வங்கிக்குள் சென்று தன் கணக்கில் சேர்த்தான்.

அவன் திரும்பி வந்து அன்றும் ஆயிரம் ரூபாய் கட்டியதை விஷயம் புரியாது, ‘ங்கே’ என்று வேடிக்கை பார்த்தார் ரங்கராஜன்.

குறிப்பு:  இதனால் நாம் அறியும் நீதி என்னவெனில்: அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கணும், அடுத்தவன் வேலையிலே தலையிடக்கூடாது.

- எஸ்.கண்ணன்

Pin It