ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு, தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே வந்தான் பாலா. ஒரு சேனலில் பாடல் காட்சியில் காதலனும் காதலியும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க நேர்ந்தது. அடுத்த நொடியில், திடீரென ஒரு ஏக்கம் கலந்த சோகம் அவனுள் இழைந்தோடியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்த சோகம் அவனைத் தாக்கியது. இந்த சோகம் அவனுக்குள் அடிக்கடி வராது என்றாலும், இந்த சோகம் அவனுக்குள் இருப்பதை அவன் அடிக்கடி உணர்ந்திருக்கிறான். 

'தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே' என்ற சோகம்தான் அது. தொலைக்காட்சியில் பார்த்துதான் இந்த ஆசையோ சோகமோ அவனுக்கு வந்திருக்க வேண்டும் என்றில்லை. இயற்கையாகவே அது இருக்கிறது என்பதை பாலா உணர்ந்திருக்கிறான். அனைவருக்கும் அப்படித்தான் இருக்கும்' என்றும் அவனுக்குத் தோன்றியது. தொலைக்காட்சி பார்த்தவுடன் சில சமயம் அது நினைவிற்கு வந்து விடுகிறது. அவ்வளவுதான். 

"யாருக்காவது முத்தம் கொடுக்க வேண்டும்; இல்லை, யாரிடமிருந்தாவது முத்தம் பெற வேண்டும்; இல்லை, யாராவது யாருக்காவது முத்தம் கொடுப்பதை நேரிலாவது பார்க்க வேண்டும்" என்று பாலா பல முறை ஆசைப் பட்டிருக்கிறான். ஏங்கியிருக்கிறான். சில சமயங்களில் அவனது கைகளுக்கும் புஜங்களுக்கும் அவனே முத்தம் கொடுத்துக் கொள்வான். அதில் ஏதோ காரணம் சொல்லத் தெரியாத மகிழ்ச்சி அவனுக்கு. அவன் தன் வாழ்க்கையில் நடந்த முத்தப் பரிமாற்றங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். முதலில் "நான் யாரிடம் முத்தம் வாங்கியிருக்கிறேன். . " என்று யோசிக்கத் தொடங்கினான். 

இரண்டு உதடுகளையும, ஒருவர் கன்னத்தில் வைத்து, "ப்ச்ச்" என்ற ஒலியுடன் நடக்கும் ஒரு தொடுதல்தான் முத்தம் என்றும் அது அன்போடும் ஆசையோடும் கொடுக்கப்படும் என்றும் அவன் அறிவதற்கு முன்னால் அவன் நிறையவே முத்தங்கள் வாங்கியிருக்கிறான். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, பக்கத்து வீட்டு அக்காக்கள், அண்ணன்கள், பள்ளிக்கூட ஆசிரியைகள் என்று நிறைய பேரிடம் முத்தங்கள் வாங்கியிருக்கிறான், யாராவது சிலர் "எனக்கு ஒரு உம்மா தா. . . . " என்று கேட்டபோது அவர்களுக்கும் இவன் முத்தம் கொடுத்திருக்கிறான். ஆனால் அவையெல்லாம் "முத்தம்" என்றே அவனுக்குத் தெரியாது. 

பாலா மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு வந்த ஒரு பிறந்த நாளன்று அம்மாவின் காலில் விழுந்து வணங்கினான். அம்மா ஆசீர்வதித்து விட்டு அவனை கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் தந்தாள். அதே பருவத்தில் அவனுக்கு ஒரு முறை ஜுரம் வந்து விட்டது. பாலா அம்மா மடியில் படுத்துக்கொள்ள, அம்மா அவனுக்கு ரசம் சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அம்மா செல்லமாய் ஒரு முத்தம் கொடுத்தாள். அது ஏனோ தெரியவில்லை. அதற்குப் பிறகு அம்மாவோ பாலாவோ ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பமே கிட்டியதில்லை. 

நீண்ட நேரம் யோசித்துப் பார்த்த பிறகும் இந்த இரண்டு முத்தங்கள்தான் அவன் நினைவிற்கு வந்தன. அந்த அறிதலுக்குப் பிறகு அவன் வாங்கிய முத்தங்கள் இரண்டே இரண்டுதான் என்று அப்பொழுதுதான் அவனுக்கும் தெரிந்தது.    அடுத்து "நான் யாருக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். . . . . " என்று சிந்திக்கத் தொடங்கினான். 

பாலாவுக்குக் குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். குழந்தைகளின் சிரிப்பை விட உலகத்தில் ரசிக்கத்தக்கதும் தூய்மையானதும் சந்தோஷம் தருவதும் வேறு எதுவும் இல்லை என்று நினைப்பவன் பாலா. அதனால் குழந்தைகளைப் பார்த்தால் அவன் தூக்காமல் இருக்க மாட்டான். அப்படி தூக்கும் போது குழந்தைகளுக்கு நிறைய முத்தங்கள் கொடுத்துள்ளான். சில வேளைகளில் ஆசையாய் முத்தம் கொடுக்கப் போகும்போது " அய்யோ. . . குழந்தைக்கு எச்சில் தழும்பு வந்துடும். . . " என்று தாய்மார்களால் தடுக்கப்பட்டிருக்கிறான். அதிலிருந்து தாய்மார்களுக்குத் தெரியாமல்தான் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து வருகிறான் பாலா. 

குழந்தைகளைத் தவிர்த்து அவன் உதடுகள் பதித்த மற்றொரு கன்னம் பக்கத்து வீட்டு கங்கா அக்காவினுடையது. இவனை விட ஆறு, ஏழு வயது அதிகம் இருக்கும் அந்த பக்கத்து வீட்டு கங்காவுக்கு. கங்கா தலையில் எப்பொழுதும் மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு, பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். பாலா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, கங்கா அக்காவுடன் பேசத் தொடங்கினான். இரண்டு, மூன்று ஆண்டுகளில் இருவரும் நல்ல சிநேகிதர்களானார்கள். வயது வித்தியாசமே பார்க்காமல் இருவரும் நெருக்கமாகப் பேசிக் கொள்வார்கள். கங்கா அக்காவிற்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று பாலா பல முறை ஆசைப் பட்டிருக்கிறான். ஒருமுறை பாலா, கங்காவிடம் அவளுக்குத் தான் முத்தம் தரப் போவதாகக் கூறினான். கங்கா மறுத்து விட்டாள். கண்டிப்பாக தான் முத்தம் தரப் போவதாக அவளிடம் வேண்டுமென்றே பந்தயம் கட்டினான் பாலா. ஒரு நாள் எதேச்சையாக கங்கா, பாலா வீட்டிற்கு வந்தபோது, பாலா சொன்னவாறே கங்காவிற்கு முத்தம் கொடுத்து விட்டான். இரண்டு நாட்கள் பாலாவிடம் செல்லமாய்க் கோபித்துக் கொண்டு கங்கா மறுபடியும் எப்பொழுதும் போல பேசத் தொடங்கினாள். 

அவன் பள்ளி நாட்களில் அவனுக்குப் பிடித்த இரண்டு பேருக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டிருக்கிறான்; ஆனால் அந்த ஆசை நிறைவேறவே இல்லை. அவர்கள் ப்ளோரா டீச்சரும் ஸ்வேதா என்ற உடன் பயின்ற மாணவியும். இருவரையும் அவன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பான். அடுத்து, அவன் நேரில் பார்த்த முத்தங்களை யோசிக்கத் தொடங்கினான். 

ஒரு முறை, பக்கத்துத் தெரு திண்ணையில் புதிதாகத் திருமணமானவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறான் பாலா. இவன் பார்த்ததை அவர்கள் பார்த்து விட்டனர். ஏதோ திருவிழாக் கடையில் திருடியது மாதிரி இருவரும் விழித்தனர். பிறகு அந்த புதுப் பெண் கணவனைத் திட்டியவாறே உள்ளே கூட்டிச் சென்று விட்டாள். அவர்கள் ஏன் இவனைப் பார்த்ததும் பயந்து போனார்கள் என்று இன்று வரை பாலாவிற்கு புரியவில்லை. "முத்தம் அப்படி மறைக்கப்பட வேண்டிய விஷயமா என்ன?" என்று பாலா அவனையே கேட்டுக் கொண்டான். 

மற்றபடி அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தந்த முத்தத்தைதான் நேரில் பார்த்திருக்கிறான். இப்பொழுதெல்லாம் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பதைக் கூட குறைத்து விட்டார்கள் என்று தோன்றியது அவனுக்கு. வீட்டில் தன் அம்மா அப்பா முத்தமிட்டுக்கொள்வதைக் கூட அவன் பார்த்ததில்லை. 'ஏன் அனைவரும் இப்படி முத்தமிட்டுக்கொள்ள மறுக்கிறார்கள்' என்று அவனுக்குப் புரியவே இல்லை. 

இதையெல்லாம் தாண்டி அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு முத்தப் பரிமாற்றம் பாலாவிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. அது அவன் தோழி கல்யாணியுடன் நடந்தது. கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே இருவரும் நல்ல நண்பர்களானார்கள். பாலாவிற்கு கல்யாணி என்றால் ரொம்பவும் பிடிக்கும். அவள் மேல் அளவிள்ளாத அன்பு வைத்திருந்தான். கல்யாணிக்கும் பாலாவைப் பிடித்திருந்தது. இருவரும் பரிமாறிக் கொண்ட வார்த்தைகளும் புன்னகைகளும் அளவில்லாதவை. ஒரு நாள் கல்லூரியில் இருந்த ஒரு பெரிய மரத்தின் கீழே அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பாலா அவள் கன்னத்தைக் கிள்ளி ஒரு முத்தம் கொடுத்தான். பிறகு அவள் கன்னத்திலேயே ஒரு முத்தம் கொடுத்தான். கல்யாணியும் அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டாள். பாலாவும் அவளிடம் ஒரு முத்தத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டான். அது கேட்டுப் பெற்ற முத்தம் என்றாலும் உரிமையோடு கேட்ட முத்தம். அன்போடு கேட்ட முத்தம். அதே அன்போடு கொடுக்கப்பட்ட முத்தம். சில நாட்களுக்குப் பிறகு இவன் கேட்டுப்பெற்ற முத்தத்தை, பிரபுவுக்கு கேட்காமலேயே கொடுத்தாள் கல்யாணி. அதற்குப் பிறகு கல்யாணியிடம் முத்தம் கேட்கவோ கொடுக்கவோ பாலா தயங்கினான். இதுதான் அவன் கடைசியாக பெற்ற முத்த அனுபவம். 

அம்மாவிடம் மூன்றாம் வகுப்பில் வாங்கிய இரண்டு முத்தங்கள், கங்கா அக்காவிற்கு கொடுத்த ஒரு முத்தம், கல்யாணிக்கு கொடுத்த ஒரு முத்தம், கல்யாணி பிரபுவுக்குக் கொடுத்த ஒரு முத்தம். ஆக இருபத்தி ஐந்து வருடங்களில் பாலா வாங்கிய, கொடுத்த, பார்த்த முத்தங்கள் இவைதான். முத்தத்தை வாழ்க்கையிலிருந்து ஏன் இப்படி ஒதுக்கி வைக்கிறார்கள்? முத்தம் கொடுத்துக் கொள்ள அனைவரும் ஏன் இப்படி மறுக்கிறார்கள்? முத்தத்தால் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட முடியுமா என்ன? நூறு வார்த்தைகளை விட ஒரு முத்தம் எவ்வளவு வலிமையானது, இனிமையானது என்று யாரும் உணரவில்லையா? முத்தங்கள் சினிமாவில் மட்டும்தான் உள்ளனவா ? நிஜ வாழ்க்கையில் முத்தங்கள் மறைந்து போய் விட்டனவா? எனக்குத் தெரிந்து ஜுரம் கூட எனக்கு ஐந்து தடவைக்கு மேல் வந்துள்ளதே. ஆனால் நான் வாங்கிய முத்தங்களும் கொடுத்த முத்தங்களும் நான்கே நான்குதான். வாழ்க்கையில் ஜுரத்தை விட முத்தம் அரிதாகி விட்டதா?"என்று யோசித்துக் கொண்டிருந்த போதே தொலைக்காட்சியில் ஓடிய பாட்டு முடிந்து போயிருந்தது. 

அசதி மிகுதியால், பாலா அவன் மெத்தையில் வழக்கம் போல் ஒரு தலையணையைப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டான். வறண்டு போன அவன் கன்னத்தையும், வாடிப் போன அவன் மனதையும் ஒரு ஈரம் நனைக்காதா என்று பாலா காத்துக் கொண்டிருக்கிறான். அது முத்த ஈரம். 

- ஞானபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It