மொழிக்காக சிந்தப்பட்ட
குருதிப் பெருக்கால்
நனைந்து நனைந்து
எம்மொழி
செம்மொழியானது !

ஆதிக்க வன்புணர்ச்சிக்கு
ஆளான தமிழ்த்தாயின்
காயங்கள் ஆறாது!
புகழ்மாலை சூட்டுவதால்
போர்க்குற்றம் மறையாது!

பிள்ளைக்கறி கேட்கும்
பெரும்பசிக்கு இரையான
தமிழ்ச்சாதி
இனி ஒருபோதும் உறங்காது!

ஜனநாயகத்தின்
விலகாத திரைச்சீலைகளில்
ஹிட்லரை மிஞ்சும்
இராஜபக்சப் படுகொலைகள்!

செம்மொழிச் செம்மலே!
சொந்தக் காலில் நிற்க முடியாத
காலத்திலும்
தன் வாரிசுகளின் பதவிக்கு
பந்தக்கால் நடுவதில் நாட்டம் கொள்ளும்
அதிகார வெறியுனக்கு!

தமிழர்களின் நிர்வாணத்தால்
தயாரிக்கப்பட்டது
உன் பதவிப் பொன்னாடை!

நான் என்று சொன்னால்
ஒட்டாதது
உதடுகள் மட்டுமல்ல!
துரோகிகளின் பட்டியலில்
வரலாற்றுப் பிழையான
உன்பெயரும் தான் !

வீழ்வது
நாமாக இருந்தோம்!
வாழ்வது
தமிழின் பெயரால்
பிழைப்பு நடத்தும்
ஈனர்களின் கூட்டம்!

ம‌லிந்த‌ அர‌சியல் ந‌ட‌த்தும்
உன் த‌வ‌றுக‌ளைக்
மன்னிக்கக் கூடும்..!

மன்னிக்க முடியாது..!
பிணங்களின் மீதேறி
நீ நடத்தும்
முடிவற்ற பெருநாடகம்!

- கவிநிலவு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It