அருந்தமிழ்ப் பாவரங் கணிசெயுந் தலைவ !
இருந்தமிழ்ப் பாவலீர் ! பொருந்தவை யமர்ந்த
அறிஞரீர் ! பெரியீர் ! அன்புறு தாய்க்குலச்
செந்தமிழ் உணர்வீர் ! செயல்வல் இளமையீர் !
தோழமை சான்ற தூயநல் லுளத்தீர் !
ஆழன் பார்ந்தே அனைவரை வணங்கினேன் !
அண்ணா நூற்றாண் டணிதிகழ் நிறைவில்
எண்ணிப் பாவரங் கெளிமையில் அமைத்தனர் !
‘பாவலர் நெஞ்சில் பேரறி ஞர் ’என
மேவுறு தலைப்பில் பாவளி என்றனர்! -10
அண்ணா ! அட,ஓ ! எண்ணம் இனிக்கும்
வண்ணத் திருப்பெயர் ! ஈரா யிரமாண்(டு)
இழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை ஈர்த்தவர் பெயரிது !
ஆரையும் விடவும் ஆரிய அராவை
நேருறத் தாக்கி நிலைகெடக் கிடத்திய
ஒருதனிப் பெரும்பணிப் பெரியார் தேர்ந்தசெந்
தெருள்தெளி மாணவர் தீந்தமிழ்ப் பெயரிது !
மூடுற்ற தமிழினப் பீடு விளக்கிய
ஈடிலா அறிஞரின் சூடெழும் பெயரிது ! -20
தாய்நிலந் தன்னைத் தமிழ்நா டென்றே
வாய்மகிழ்ந் தழைக்க வைத்தவர் பெயரிது !
ஆட்சியில் கல்வியில் காட்சியில் இசையில்
நீட்சி தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி
நலங்களைச் சிதைத்தோர் கலக்குற துலக்கமாய்ச்
சொலல்வல் திறத்தரின் சுருக்கப் பெயரிது !
செத்ததை விலக்கிய செந்தமிழ்த் திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர் !
பிறப்பிற் பிரிவினை இறக்கங் கூறிய
சிறப்பிலா ஆரிய மாயை செகுத்தவர் ! -30
தமிழர் உணர்வுத் தழல்தீப் பரவவும்
இழிவொழித் திவ்வினம் ஏற்றமுற் றிடவும்
அயரா துழைத்த வயவரி யாரவர் !
பெயராப் பெரும்புகழ்ப் பேற்றில் நிலைத்தவர் !
இராசாசி சூழ்ச்சியில் நேரு தட்சிண
இராச்சியம் கொணர இங்கதற் கெதிராய்
மொழிவழி அரசுகள் வழிவழி அமைய
கழிபெரு மாற்றலாய்க் கடுங்குர லார்த்தவர்!
இந்திய தேசிய மெதிர்த்தா ராயினும்
நந்தமி ழினநல நாட்டமிக் கிருந்தும் -40
தெரிந்தே திராவிடத் தேசியம் பேசி
அருந்தமிழ்த் தேசியம் பொருந்திடா தெதிர்த்தமை
ஒப்போலை அரசியல் தப்பதே! சறுக்கலே !
இப்பிழை யிவர்புகழ் இறக்கிட வில்லை !
செந்தமிழ்ச் சீருரை தந்திடும் வெற்றியால்
எந்த நிலையையும் சந்தித்த திவர்நா !
அடுக்கு மொழியுடன் அண்ணா தமிழை
ஒடுக்கம் உடைத்தே உலாவரச் செய்தார் !
இருமொழி போதும் இந்திவேண் டாவென
மருட்டலாய்த் திட்டம் மறுத்துக் கொணர்ந்தார் ! -50
அறிஞர் இவரென பெர்னாட் சாவென
அறிவித் தேத்தினார் அண்ணாவைக் ‘கல்கி’ !
ஆங்கிலந் தனிலிவர் பாங்குற ஆற்றிய
ஓங்குரை நேருவின் உளங்கவர்ந் தீர்த்தது !
ஈழத் தமிழர் இன்னலைத் தீர்க்க
ஆழவு ணர்ந்தே அன்றவர் முயன்றார் !
ஓர்வோம் அண்ணா உயிர்த்திருந் தாரேல்
ஓரிலக் கம்பேர் சூருற மடிவரோ ?
இன்றுமூ விலக்கம் இழிவினி லின்னலில்
குன்றி யங்கவர் நின்றிட விடுவரோ ? -60
தன்னலந் தன்னுடை இன்குடும் புறுப்பினர்
நன்னலங் கருதா செந்நலத் தொண்டர் !
ஒருமுறை அண்ணா உரோமிற்குப் போனார்
திருவுறை போப்பிடம் தேர்ந்திவர் கேட்டதோ
விடுதலை மறவர் இரானடே விடுதலை
வடுவறுந் தொடுப்பில் எடுப்புற அடுக்கி
அண்ணா கேட்டதா லவர்விடு பட்டார் !
எண்ணிய வெல்லாம் நன்மாந்த நேயம் !
பெரிதுபெரி தண்ணா பெரும்புகழ் விரிக்க!
உரிமைபெற் றிங்குநாம் உயர்வுறற் கெனவே -70
ஆர்த்தார்; உழைத்தார்; அதன்வழி
சீர்த்திசால் தமிழினங் காத்தனர் அவரே!
----------------------------------------------------------------------------------------------------------
- தமிழநம்பி